கவிதை: இருப்புமென் தாரகமந்திரமும்!

கவிதை: இருப்புமென் தாரகமந்திரமும்!
அன்பே!

அன்றொருநாள் நீ கூறினாய்

கத்தி முனையில் நடப்பதைப்

போன்றதிந்த இருப்பு என்று.


கத்திமுனை இருப்பில்

கவனத்துடன் நடப்பதிலுமோர்

களிப்பு குவிந்துதானிருக்கின்றது.

இருப்பில் இவ்விதம் இருப்பதிலுமோர்

இன்பம் இருக்கத்தான் இருக்கிறது.

இருப்பென்பது இவ்விதச் சவால்களையும்

உள்ளடக்கியுள்ளதுதானே.

இருப்பென்பதே இன்பம்தானே!

இன்மையிலிருப்பில்லை!

இருப்பிலின்மையில்லை.


இன்று புதிதாய்ப்பிறந்தோமென்று

இருப்பதிலுமோரின்பம்

இருக்கத்தானிருக்கின்றது.


இருக்குமிருப்பில் இருக்கும்வரை

இன்புற்றிருத்தலே என் இ(வி)ருப்பு.

இதுவேயென் தாரக மந்திரம்.


விரிவெளியில் பயணிக்குமிந்தக் கோளின்

வேகமென்னே! எதிரில் எது எதிர்ப்படினும்

எம் கதி அதோ கதி!

இருந்தும் இருப்பின் இப்பயணம்

தொடர்கின்றது நம்பிக்கையுடன்.

அதில் சிறு ஆறுத லெனக்கு.


இருப்பிலின்பமுனைச் சீராட்டி

இருந்திடட்டும்

அன்பே!
ngiri2704@rogers.com