புத்தாண்டே! நீ வாழ்க! வருக!

புத்தாண்டே வாழ்க! வருக!

இன்னுமோர் ஆண்டு! புத்தாண்டு!
புத்தாண்டே! உனக்கு வயது எப்பொழுதுமே
ஒன்றுதான்.
வயது ஒன்றானதும் மீண்டும்
வந்து பிறக்கின்றாய். ஆனால்
அந்தவோராண்டினுள்தான் நீ
எத்தனை எத்தனை மாற்றங்களை இப்புவியில்
ஏற்றி விடுகின்றாய். உருவாக்கி விடுகின்றாய்.

இன்பமும் , துன்பமும்
இருப்பின் இயற்கையென்பதை
எடுத்துக்காட்டி நிற்கின்றாய்.
உணர்ந்து பின் மீண்டும்
உறுதியுடன் இருப்பினை எதிர்நோக்கத்தானோ
நீ
மீண்டுமொரு பிறப்பினை
மறு வருடத்திலேயே எடுக்கின்றாய்?

இன்று புதியாய்ப்பிறந்தோமென்று நீ
இங்கு வந்து மீண்டும் பிறப்பதற்கு
எடுக்கும் காலமோ ஒராண்டு!
உன் வழியில் நாமும் மீண்டுமிங்கு
உதிப்போம்; உரமுடன்
உலகத்தை உள்வாங்கி எதிர்கொள்வோம்.

உலகைச் சீரழிக்க மாட்டோம்.
உலகைச் சீரமைப்போம் என்றோர்
உறுதி எடுப்போம். அதையும்
உணர்வுபூர்வமாகவே எடுப்போம். இவ்வுலக
உயிரனைத்துமெம் உறவுகளென்றெண்ணி
உண்மை உணர்ந்து இம்மண்ணை
இன்பப்பூக்காடாக்குவோம். இதற்காக
இணைந்து எழுவோம்; உயர்வோம்.

புத்தாண்டே! நீ வாழ்க! வருக! இப்
புவிதனை நீ
புத்துணர்ச்சியால்,.
பேரின்பத்தால்
பொங்க வைப்பாய்.
மகிழ்ச்சிக்கடலால்
மூழ்கடிப்பாய்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 357: கவிதை – தேவதைகளுக்கு வயசாவதும் இல்லை. – – அருண்மொழிவர்மன் –

எழுத்தாளர் அருண்மொழிவர்மன்எழுத்தாளர் அருண்மொழிவர்மன் அண்மையில் தான் முன்னர் யாழ் உதயன் பத்திரிகையில் தனது யாழ்ப்பாண டியூசன் நிலையங்கள் பற்றி எழுதிய கட்டுரையினை முகநூலில் பகிர்ந்திருந்தார். அக்கட்டுரையின் இறுதிப்பந்தியின் வரிகளை கவிதையாக அடுக்கி அதற்கு ‘தேவதைகளுக்கு வயசாவதில்லை’ என்று தலைப்புமிட்டுள்ளேன். அதனையே இங்கு பகிர்ந்துள்ளேன். கட்டுரையின் இறுதி வரிகளிலுள்ள கவித்துவமே என்னை இவ்வாறு வரிகளைக்கவிதையாக அடுக்கத்தூண்டியது.


உண்மைதான் தலைமுறைகள் மாறினாலும் தேவதைகளுக்கு வயசாவதில்லைதான். 🙂 உங்களில் பலருக்கு அருண்மொழிவர்மன் பகிர்ந்துள்ள கட்டுரையின் இறுதி வரிகள் பழைய பதின்ம வயது நினைவுகளைக் கிளறி விட்டிருக்கக் கூடும்; கிளறி விடக்கூடும். வயசாகாத உங்கள் தேவதைகளை மீண்டும் நினைவுக்குக்கொண்டு வந்திருக்கக்கூடும் 🙂


அருண்மொழிவர்மனின் இப்பதிவை வாசித்தபோது பல வருடங்களுக்கு முன்னர் எழுத்தாளர் வ.அ.இராசரத்தினம் எழுதிய சிறுகதையொன்றின் ஞாபகமெழுந்தது. தன் நினைவுகளில் வயசாகமலிருந்த தன் பாடசாலைப்பருவத்து இனியவளை மீண்டும் சந்தித்தபோது முதுமையின் தளர்வுடன் கோலம் மாறியிருந்த, வயதுபோய் விட்டிருந்தது கண்டு திகைப்படையுமொருவன் பற்றிய கதையது. வயதாகிவிட்ட அவனது தேவதை பற்றிய கதையது.


புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பசீரும் ‘பால்ய காலத்து சகி’ நாவலில் தன் தேவதையை மீண்டும் சந்திக்கும் ஒருவன் அடையும் உணர்வுகளை, அனுபவங்களை வெளிப்படுத்தியிருப்பார்.

Continue Reading →

சிறுகதை : வானத்தை தேடும் வானம்பாடிகள்

ஶ்ரீராம் விக்னேஷ்தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்திலேறி அதிலே தொங்கிக்கொண்டிருந்த உடலைக் கீழே தள்ளிய கதைபோல, ராதாவுடன் மூன்று தடவைகள் பேசியும் மனதுக்கு ஒவ்வாமல், நான்காவது தடவையாக மீண்டும் என் மொபைல்போனை எடுத்தேன்.

எனது நம்பரைப் பார்த்ததும், மிகவும் கடுப்பானாள் அவள்.

“சரியாப் போச்சு…. உருப்பட்ட மாதிரித்தான்…. யேப்பா…. நான் உனக்கு என்ன பாவம் பண்ணினேன்…. ஏதோ சின்ன வயசிலயிருந்து நாம ரண்டு பேரும் ஒண்ணாவே படிச்சோம், வளந்தோமேங்கிறதுக்காக, என் கேசைக் கொண்டுவந்து ஒங்கிட்ட குடுத்தேன்…. உன்னயவிட பெரிய லாயர்மார் இருந்துங்கூட, ஒன்னோட ஆர்கியூமெண்டில நம்பிக்கை வெச்சுத்தான் இந்தக் கேசைத் தந்தேன்…. ஆனா, நீ அப்பப்ப புத்திமாறிப் போயி, செட்டில்மெண்டாய் ஆகிடுன்னு அட்வைஸ் பண்ணிக்கிட்டு வர்ரே…. நீ வக்கீல் வேலைக்கு வர்ரதை விட்டு, பேசாம கல்யாண தரகர் வேலைக்கு போயிருக்கலாமில்ல…. சீ….”

வெறுத்துப்போய் பேசினாள் ராதா.

நான் கோபப்படவில்லை. எனக்கு அவள்மீது அனுதாபமே நிறைந்து நின்றது.

காரணம் : எனது பால்யகால பள்ளித் தோழி அவள். பள்ளிக்குச் செல்லும்போதும், திரும்பி வரும்போதும் நான் அவளுக்கு வழித்துணையாய் சென்று வருவேன். அன்று அரும்பிய பாசம்….. இன்றும் தொடர்கிறது

நான் விடவில்லை. தொடர்ந்தேன்.

“ராதா…. இனிமேலைக்கு நான் இதைப்பத்தி பேசப்போறதில்லை.. ஏன்னா, உனக்கே தெரியும்…. இன்னிக்கு உன் கேஸ் பைனல் ஆகப் போறது…. உனக்கும் பொன்னரசுவுக்கும் டைவர்ஸ் கிளியராகப் போவுது…. நான் ஒரு வக்கீலா இருந்து, இந்தக் கேசை உனக்காக ஆஜராகி நடத்தினது வாஸ்தவம்தான்…. ஆனா, உள்ளூர என் மனசாட்சியோ ஒரு குடும்பத்தைப் பிரிக்க உதவுறமாதிரி உறுத்திக்கிட்டிருக்கு…. இப்பகூட ஒண்ணும் கெட்டுப் போகல்லை…. உன்கூட சேந்து வாழுறதாயும், இனி எந்தத் தப்புமே பண்ணமாட்டேன்னும் பொன்னரசு கோர்ட்டில அழுதது எனக்கே சங்கடமாயிருந்திச்சு…. அதனாலதான் சொல்றேன்…. நீ செட்டில்மெண்ட் ஆகிப் போறதாயிருந்தா இதை ஒரு கடைசி சந்தர்ப்பமா எடுத்துக்க…. இதை நான் உன்னோட லாயராக சொல்ல வரல்லை…. உன்னோட பால்ய சிநேகிதனா சொல்றேன்…. மூணு வயசில உனக்கும் ஒரு குழந்தை இருக்கு…. ஆம்பிளை துணை இல்லாம அதை வளக்கவோ, இல்ல ஒரு பாதுகாப்பா வாழவோ முடியும்னு எப்பிடி நெனைக்கிறே….”

Continue Reading →

சிறுகதை: சேணமற்ற அவசரம்

- ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா -உதிர்தலும் ஓர் அழகுதான்.

அவளுக்குள் எழுந்த அந்த ரசனை, நா. முத்துகுமாரின் ‘மலர் மட்டுமா அழகு, விழும் இலை கூட ஒரு அழகு’ என்ற பாடல்வரிகளை அவளுக்கு நினைவுபடுத்தியது. இலைகளை உதிர்க்கத் தயாராகியிருந்த அந்த மரங்களின் கிளைகளின் இடுக்குகளுக்கிடையே ஊடறுத்துச் சென்ற சூரியஒளிக் கீற்றுக்கள், ஓவியன் ஒருவன் கவனமாகப் பார்த்துப்பார்த்து வர்ணமிட்டதுபோலத் தோற்றமளித்த அந்த இலைகளுக்கு மேலும் அழகுசேர்த்தன. காற்றில் சலசலத்த இலைகளில் சில காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அண்ணாந்து பார்த்த அவளின் முகத்தை மெல்லத் தொட்டுப் போயின. ஒரு கணம், அவளின் மனம் ஒரு குழந்தையைப்போல ஆர்ப்பரித்துக்கொண்டது.

மரங்களின் கீழே குவிந்திருந்த இலைகளின்மேல் மெதுவாகக் காலடிவைத்து, அவை சரசரக்க அவள் நடந்தாள். விழுந்திருக்கும் இலைகளைக் கூட்டிக்குவிப்பதும் பின் அவற்றின் மேலேறிக் குதிப்பதும், விதம் விதமான வடிவங்களில் உள்ள இலைகளைச் சேகரிப்பதுமாக அம்மாவுடன் அந்தக் காலத்தில் அவள் விளையாடிய விளையாட்டுக்கள் அவளின் நினைவுக்கு வந்தன. அப்படியே சின்னப் பிள்ளையாக, அம்மாவின் ஒரு குட்டித் தேவதையாக, உறவுகளில் எந்தச் சிக்கலுமில்லாத ஒரு சிறுமியாகவே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாகவிருந்திருக்கும், நினைப்பில் அவள் கண்கள் கசிந்தன.

இயற்கை எப்போதுமே அழகானதுதான். பருவகாலத்து மாற்றங்களை ஆவலுடன் வரவேற்பதும், அவற்றுக்குள் அமிழ்ந்து குதூகலிப்பதும், பருவத்துக்கேற்ற வகையில் விளையாடுவதும்கூட எவ்வளவு இனிமையானவையாக இருக்கின்றன. ஆனால், அதே உதிர்தல்கள், விலகல்கள், விரிசல்கள் வாழ்க்கையில் ஏற்படும்போதுமட்டும் அவற்றை ஏற்றுக்கொள்ளமுடியாமல் மனசு மிகவும் வலிக்கிறது. ஒவ்வொரு புதுத்தளிரையும், ஒவ்வொரு புதுஅரும்பையும் பார்க்கும்போது உருவாகும் பரவசமும் சிலிர்ப்பும், உறவுகள் உருவாகும்போது இன்னும் அதிகமாகவே வந்து மனதை நிறைத்துவிடுகிறது, ஆனால், அதே உறவுகள் விலகும்போது மட்டும் அதே லயிப்புடன் பார்க்கமுடிவதில்லை என்ற ஒப்பீடு அவளின் கண்களை மீளவும் நனைத்தது.

மகிழ்ச்சிதரும் ஆரவாரிப்பும், இழப்புத்தரும் வேதனையுமின்றி, Giver என்ற நாவலில் வரும் மனிதர்களைப்போல உணர்ச்சி என்றே ஒன்றில்லாமல் வெறுமன கடமையை மட்டும் செய்துகொண்டு வாழமுடிந்தால், இந்த உலகத்தில் பல பிரச்சினைகள் குறைந்துவிடும் … பெருமூச்சு ஒன்று அவளிடமிருந்து வெளியேறியது.

“அன்பு செய்யுங்கள், அன்பே தெய்வம், அன்பு செய்வது பலவீனமல்ல, அன்பை வெளிப்படுத்தத் தயங்காதீர்கள் … எல்லாமே கேட்க நல்லாத்தானிருக்கு. ஆனா எதிர்பாப்பில்லாமல் அன்புவைக்கிறது எண்டது … ம், ஐயோ என்னாலை முடியாதப்பா. உதவிசெய்யிறது வேறை, அன்பு வைக்கிறதெண்டது வேறை … சரி, அன்பு எண்டது சுயநலமும் கலந்ததுதான், இருக்கட்டுமே, எனக்கெண்டு நேரமொதுக்கேலாத, என்ரை உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காத அன்பு ஒண்டும் எனக்கு வேண்டாம்,” வாய் விட்டே அவள் சொல்லிக்கொண்டாள்.

“குளிர்வர முதல் மரங்களெல்லாம் தங்கடை இலையளை உதிர்க்கிறதும் சுயநலத்திலைதானே. இலையளை வைச்சிருந்தா தாங்க பிழைக்கேலாது எண்டுதானே அதுகளை உதிர்க்குதுகள். பின்னையென்ன, சீ பாவம் அந்த இலையள் குளிரிலை கருகிப் போடுமெண்டு நினைச்சே அதுகளை உதிர்க்குதுகள் … உறவுகளும் ஒரு வகையான addictionதான் எண்டு பிரேம் அண்டைக்குச் சொல்லேக்கே அவனும் இப்பிடித்தான் நினைச்சிருப்பான். என்னோடை தொடர்புகளை அவன் குறைச்சது அவனையும் அவன் முக்கியமெண்டு நினைக்கிற உறவையும் காப்பாத்துற ஒரு முயற்சியாத்தானிருக்கும்…” அவளின் உள்மனம் அவளுடன் பேசியது.

Continue Reading →

ஆய்வு: முல்லைப் பாட்டில் பண்பாட்டுப்பதிவுகள்

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

உண்மை! உழைப்பு! வெற்றி!’ என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் ‘தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி’யின் தமிழாய்வுத்துறையும் , ‘அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்’ என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் ‘பதிவுகள்’ பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். பதிவுகள்


முன்னுரை

பொதுவாகப் பண்பாடெனப்படுவது ஒருவகையில் வாழ்வியல் முறைகளைக் குறிப்பதாக அமையும். மனிதர்களது நடத்தைகள். அவர்களது நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றின் தொகுப்பாக இது காணப்படுகின்றது. அவ்வாறே இலக்கியங்கள் என்பனவும் மனித சமுதாயத்தைப் பண்படுத்தும் நோக்கில் அமைந்தவையே. மனித இனத்தையும், மனத்தையும் பண்படுத்துவதில் முல்லைப்பாட்டு சிறப்பு பெறுகின்ற தெனலாம். இவ்விலக்கியம் பண்பாட்டு பதிவுகளை இனங்காண்பதற்கு ஆதாரமாக அமைவது குறிப்பிடத்தக்கது.

முல்லைப்பாட்டு
தமிழ்ச் சான்றோர்களால் இயற்றப்பெற்ற சங்க காலத்துத் தமிழ் நூல்களாகக் கருப்பெறுவன பாட்டும் தொகையுமாகும். இவ்விருவகை நூல்களும், அளவாலும் திறத்தாலும் பொருளாலும் காலத்தாலும் வகைப்படுத்தப்பெற்றன என்பர். இவ்விருவகை நூல்களும் தமிழ்மக்களின், நாகரிகம், பண்பாடு, பழக்க வழக்கங்கள், சமய, சமுதாய நம்பிக்கைகள், அகம் புறம் ஆகிய வாழ்க்கை நெறிகள் ஆகிய எல்லாவற்றையும் பொதிந்து வைத்திருக்கின்ற பேழைகளாக விளங்குவன.

Continue Reading →

ஆய்வு: பாலைக்கலியின் பண்பாட்டுப் பதிவுகள்

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

உண்மை! உழைப்பு! வெற்றி!’ என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் ‘தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி’யின் தமிழாய்வுத்துறையும் , ‘அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்’ என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் ‘பதிவுகள்’ பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். பதிவுகள்


முன்னுரை:
சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள பண்டைத் தமிழர் தம் வாழ்வில், மொழியின் வாயிலாக வாழ்க்கை முறையினை எடுத்துக்காட்டும் இலக்கியக் கலையைக் கொண்டுள்ளனர். அதனை, இன்றைய வரையில் நம் முன்னோர் எண்ணங்களாகவும் உயரிய நோக்கங்களாகவும் அழியா செல்வமாகவும் போற்றுகின்றனர்.

மனிதனின் செயல்பாடுகள் செயற்பாடுகளுக்கான சிறப்புத் தன்மைகள், அதன் முக்கியத் துவத்தை கொடுக்கும் குறியீடாக அமைகிறது. ஒரு தனி மனிதனைச் சார்ந்தும், மக்களைச் சார்ந்தும் அறிய வேண்டிய பண்பாடு என்பது கற்கப்படுவது. குறியீட்டு நடத்தை முறையாக அமைவதுதான்.  சமூகத்தின் ஒரு உறுப்பினராக இருந்து நாம் கற்கும் பிற திறமைகளிலும், பழக்கவழக்கங்களிலும் அடங்கி இருக்கும் தொகுதியாகதான் நம் பண்பாடு உள்ளது. ‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்’ என்று கலித்தொகையும் கூறும்.  பரந்த பொருளுடன் பயன்படுத்தப்படும் ஒரு சொல்.  மேலும் பண்பாடு என்னும் அமைப்பு பல வடிவங்களில் மனித சமுதாயத்தில் செயல்டுகிறது.  சமூகத்தில் உயர்ந்த பண்புகளை நிலைநிறுத்தி, அதன்மூலம் மக்களை நல்வழிபடுத்தவும் செய்கிறது. அத்தகைய பண்பாட்டுக் கூறுகள் எங்ஙனம் பாலைக்கலிப் பாடல்களில் பதிவாகியுள்ளது என ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாக உள்ளது.

Continue Reading →

சிறுவர் இலக்கியத்தில் மொழிநடைச் சிக்கல்கள்

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

உண்மை! உழைப்பு! வெற்றி!’ என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் ‘தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி’யின் தமிழாய்வுத்துறையும் , ‘அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்’ என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் ‘பதிவுகள்’ பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். பதிவுகள்


இலக்கியப் படைப்பாக்கம் என்பது வாசகரை மையமிட்டு அமைவது. அவ்வகையில் சிறுவர்களை மையமிட்டு இயற்றப்பெறும் சிறுவர் இலக்கியங்கள் சிறுவர்களுக்கானவையாகவும், சிறுவர்களைப் பற்றியவையாகவும் இருவேறு கோணங்களில் அமைகின்றன. தமிழ் இலக்கியப் பரப்பில் சிறுவர்களைப் பற்றிய இலக்கியங்கள் சிறந்த சிறுவர் இலக்கியங்களாக ஏற்றுக்கொள்ளப்பெற்றுள்ளன. சிறுவர்களைப் பற்றிய இலக்கியங்கள் பெரும்பாலும் அவர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பனவாக உள்ளன. இந்நிலையில் சிறுவர்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்துவனவாகச் சிறுவர் இலக்கியங்கள் அமைய வேண்டும் என்ற கருத்தாக்கமும் உள்ளது. இந்நிலையில் சிறுவர்களின் மனம் எத்தகையது? அவர்கள் பெரியவர்களிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார்கள்? சிறுவர்கள் இப்பிரபஞ்சத்தோடு கொள்ளும் உறவுநிலை எத்தகையது? என்பன போன்ற குறிப்பிட்ட சில கேள்விகளுக்குப் பதில் கூறும் வகையில் சிறுவர்களைப் பற்றிய இலக்கியங்கள் அமைகின்றன. இப்போக்கை அடியொற்றிய படைப்புகளைச் சிறுவர் இலக்கியங்கள் என்று ஏற்றுக்கொள்வது சிக்கலுக்குரியது. காரணம், சிறுவர்களின் மனத்தை அறிந்து கொள்ளாதவர்கள் பெரியவர்கள். சிறுவர்களைப்; பெரியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காகப் படைக்கப்பெறுபவை. ஆனால், இதனைப் பெரும்பாலான படைப்பாளர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. படைப்பாளர்களின் நிலை இத்தகையது எனில் வாசகர்களின் மனநிலையைச் சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எனவேதான், கு.அழகிரிசாமியின் அன்பளிப்பு, புதுமைப்பித்தனின் மகாமசானம், கி.ரா.வின் கதவு போன்ற சிறுகதைகள் சிறந்த சிறுவர் இலக்கியப் படைப்புகளாக இன்றுவரை கருதப்பெற்று வருகின்றன.

Continue Reading →

ஆய்வு: அந்தோனியா கிராம்சியின் சமூகவியல் சிந்தனைகள்

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?சமூகவியல் என்பது ஓர் ஆய்வுமுறை என்பது மட்டுமல்லாமல், அது சமூகத்தைப் பற்றியும், அதன் அமைப்பைப் பற்றியும், அதன் அசைவியக்கத்தினைப் பற்றியும், பௌதீக நெறி நின்று விளக்கும் அறிவியல் துறையுமாகும். மக்கள் குழும உணா்வுடன் தங்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்துகொள்வதற்கும் தமக்கான ஒருவிதப் பாதுகாப்பைப் பெறவும் உருவாக்கிக் கொண்டதே சமூக அமைப்பாகும். இது பல்வேறு அலகுகளாலும் பற்பல அடுக்குகளாலும் கட்டமைக்கப்பட்டதாகும். இத்தகைய சமூகக் கட்டுமானங்களைப் பகுப்பாய்வு செய்வதுடன் அதன் தோற்றம் மற்றும் வளர்ச்சி நிலைகளை அறுதியிடவுமான அறிவுத்துறையாகவும் சமூகவியல் விளங்குகிறது.

சமூக இருப்பை உணர்தல் என்பதான தத்துவார்த்த தேடல் வரலாற்றுக் காலந்தொட்டே மனித சாராம்சத்தின் ஒரு பகுதியாக இருந்துவந்த போதிலும்     கி.பி. 19-ம் நூற்றாண்டில்தான் சமூக வாழ்வு பற்றிய அறிதலும் வாழ்நிலை சார்ந்த புரிந்துணர்வும் விஞ்ஞானரீதியில் முழுவதுமாகத் துளக்கமுறத் தொடங்கின. சமூகத்தில் மனித இருத்தலைப் பற்றிய புதிர்கள் தெளிவுறுத்தப்பட்டன.

இச்சமூகவியல் என்னும் அறிவுத்துறையின் தோற்றத்திற்குக் காரணமானவா் பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஆகஸ்ட் கோண்ட் ஆவார். இவரே சமூகவியல் என்ற பெயரோடு இந்த அறிவுப் பயணத்தைத் தொடங்கி வைத்தார்.1 சமூகம் தொடர்பான இயற்கைவழி விஞ்ஞானம் ஒன்றினைக் காண்பதே கோண்டின் பிரதான இலக்காக இருந்தது. இது மனிதகுலத்தின் கடந்தகால வளர்ச்சியை விளக்குவதுடன் வருங்காலம் பற்றி மதிப்புரைப்பதாகவும் இருந்தது. ஆகஸ்ட் கோண்ட்டைத் தொடர்ந்து பல்வேறு அறிஞர்கள் சமூகவியல்சார் சிந்தனைகளை வளர்த்தெடுத்துள்ளனர்..

சமூக நடத்தை விதிகளை ஆராய்வதும் அதற்கான காரண-காரிய தொடர்பை விளக்குவதும் சமூகவியலின் சிறப்பம்சமாக விளங்குகிறது. இது பிற சமூக அறிவியல்களோடு நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது. சமூக அறிவியலாளர்கள் கண்டறிந்த மூலங்களிலிருந்தும் பல்வேறு  தரவுகளைச் சமூகவியல் பயன்படுத்திக் கொள்கிறது. வரலாற்றியல், மானுடவியல், மொழியியல், பொருளாதாரவியல், இனவரைவியல், அரசியல், அறவியல், உளவியல் போன்ற பல்வேறு அறிவாய்வுத் துறைகளும் சமூகவியலுக்குப் பங்களிப்பைச் செய்துள்ளன.

Continue Reading →

திருப்பூர் இலக்கிய விருது” ( பெங்களூர் எழுத்தாளர்கள் மட்டும் –மற்றவர்களுக்கான பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்)

 - சுப்ரபாரதிமணியன் -

25/12/19 ” திருப்பூர் இலக்கிய விருது”  ( பெங்களூர் எழுத்தாளர்கள் மட்டும் –மற்றவர்களுக்கான பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்)

சாகித்ய அகாதமி பரிசு பெற்ற பெங்களூர் இறையடியான் ( மொழிபெயர்ப்புக்காக ) அவர்களூம் திருமதி ஜெயந்தி சாகித்ய  அகாதமி பெங்களூர் அலுவலரும், மொழிபெயர்ப்பாளருமான ஜெயந்தி அவர்களும் திருப்பூர் இலக்கிய விருதை பெங்களூரில் நடைபெற்ற கன்னட – தமிழ்  கவிஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் வழங்கினர். எழுத்தாளர்கள் குறித்து கன்னட பேராசிரியரும் மொழிபெயர்ப்பாளருமான மலர்வதி அறிமுகப்படுத்தினார். சாகிதய அகாதமியின் கவுரவ இயக்குனர் ( மொழிபெயர்ப்பு ) விஜய் சங்கர், சுப்ரபாரதிமணியன், நந்தவனம் சந்திரசேகர் . சாகிதய அகாதமியின் யுவபுரஸ்கார் விருது பெற்ற  ஸ்ரீதர பனவாசி., பேரா. மா.தா கிருஷ்ண்மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். RT நக்ர, பால்பவ்னில் 25/12/19 அன்று நிகழ்ச்சி நடைபெற்றது

Continue Reading →