வாசகனை கட்டிப்போடும் `சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ ஓர் அறிமுகம்

வாசகனை கட்டிப்போடும் `சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’  ஓர் அறிமுகம்எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர்`சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ – கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் தனது 25 வருட நிறைவை முன்னிட்டு, 2019 ஆம் ஆண்டு நடத்திய சர்வதேச சிறுகதைப்போட்டியில் தேர்வான சிறுகதைகளின் தொகுப்பு. இனிய நந்தவனம் பதிப்பகத்தினால் இவ்வருடம்(2020) இத்தொகுப்பு வெளிவந்திருக்கின்றது.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தற்போதைய தலைவர் குரு அரவிந்தன் இந்தக் கதைகளைத் தொகுத்திருக்கின்றார். இவர் ஏற்கனவே மகாஜனக்கல்லூரி 100வது ஆண்டு விழாவை முன்னிட்டு, அகில இலங்கை மாணவர்களுக்கான சிறுகதைப்போட்டியொன்றை வெற்றிமணி இதழ் மூலம் நடத்தியிருந்தார். கனடாவில் சிறுகதைப் போட்டி மூலம் தமிழ் பெண்கள் எழுதிய `நீங்காத நினைவுகள்’ என்ற  முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர். இணையத்தின் செயலாளர் ஆர். என். லோகேந்திரலிங்கம் உதயன் பத்திரிகை மூலம் பல சிறுகதைப் போட்டிகள் வைத்து ஊக்குவிக்கின்றார். இவர்களது அனுபவங்கள் தான் இந்தத் தொகுப்பு வெளிவருவதைச் சாத்தியமாக்கியிருக்கின்றன.

மொத்தம் 16 சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பின் முதல் பரிசு பெற்ற கதை ‘தாள் திறவாய்’. கதாசிரியர் எஸ்.நந்தகுமார் (நந்து சுந்து), சென்னை. நல்லதொரு சிறுகதைக்குரிய பல அம்சங்கள் கொண்டது இக் கதை. வாசகரை உள்ளே இழுத்துப் பிடித்து நகரவிடாமல் செய்கின்ற நடை. ரஞ்சனி நீதி நேர்மை நியாயம் கொண்டவள். மற்றவர்களிடமும் அவற்றை எதிர்பார்ப்பவள். தனது கணவன் பிள்ளையுடன் மதுரைக்குப் புறப்படுவதற்காக பஸ் ஸ்ராண்டில் நிற்கின்றாள். கணவன் கிருபாகரன் பயந்த சுபாவம் கொண்டவன். அவர்களது இரண்டுமாதக் குழந்தைக்குப் பசி வந்துவிட்டது. தாய்ப்பால் குடுக்க வேண்டும். புட்டிப்பாலும் எப்போதாவது குடுப்பாள். மறைவான இடம் தேடி அலையும்போது `தாய்மார்கள் பாலூட்டும் அறை’ தென்படுகின்றது. ஆனால் அது பூட்டிக்கிடக்கின்றது. அதைத் திறந்துவிடும்படி பொறுப்பானவர்களிடம் கேட்கின்றாள் ரஞ்சனி. அவர்களிடம் திறப்பு இல்லை. தட்டிக் கழிக்கின்றார்கள். குழந்தை வீரிட்டு அழுகின்றது. கணவனிடம் குழந்தைக்கு புட்டிப்பாலைக் குடுக்கும்படி சொல்லிவிட்டு அவர்களுடன் போராடுகின்றாள். அப்போது மதுரைக்குப் புறப்படும் பஸ் புறப்படவே கணவன் அவளை வந்து ஏறும்படி சொல்கின்றான். ரஞ்சனி பஸ்சிற்கு முன்பாகக் குந்தியிருந்து போராட்டம் நடத்துகின்றாள். விறுவிறுப்பாக நகரும் கதை அவளது பிரச்சினைக்குத் தீர்வு காண்பதுடன், எல்லாத் தாய்மார்களுக்குமான முடிவு ஒன்றைக் காண்பதுடன் நிறைவுக்கு வருகின்றது. சமுதாயத்துக்கு நல்லதொரு கருத்தைச் சொல்லிச் செல்லும் சிறப்பான கதை இது. ஆனால் கதையின் இறுதிப்பகுதியில் கிருபாகரன் என்ற கணவன் பாத்திரத்தை மறந்துவிடுகின்றார் கதாசிரியர். அல்லது வேண்டுமென்றே தவிர்த்து விடுகின்றார்.

இலங்கையில் நாட்டுப் பிரச்சினைகள் உக்கிரமடைந்திருந்த காலம். மலருக்கும்(வயது 18) ரஞ்சித்திற்கும் (22) திருமணம் நடக்கின்றது. மூன்று வருடங்களாக அவர்களுக்குக் குழந்தைப் பாய்க்கியம் இல்லை. பின்னர் அவள் கருவுற்றபோது, கடவுளுக்கு நன்றி சொல்வதற்காக கோயிலுக்குப் போகின்றான் ரஞ்சித். போனவன் போனதுதான். அப்புறம் வரவேயில்லை. இப்போது மலரின் மகளுக்கு 13 வயது ஆகின்றது. மலர் வேலைக்குப் போய் மகளை நல்ல நிலையில் வைத்துப் பார்க்கின்றாள். ஆனால் ஊர் மக்கள் அவளைப் பற்றி வேறுவிதமாகக் கதைக்கின்றார்கள். இதைப் பொறுக்கமுடியாத அவளின் நண்பி ராணி, மகளின் நன்மை கருதி மலரை மறுமணம் செய்யும்படி வற்புறுத்துகின்றாள். அதற்கு மலர் தரும் விளக்கம் தான் கதையின் உச்சம். காணாமல் போனவர்கள் பற்றிய தொடரும் கதைகளில் இதுவும் ஒன்று. டலின் இராசசிங்கம் இந்தக் கதையை எழுதியிருக்கின்றார். நல்ல தெளிவான நடை. ஆவலைத் தூண்டும் கதை.

Continue Reading →

யூலிசஸ்ஸை நினைவுபடுத்தும் நீர்வை பொன்னையன் ! அவர் நம்மோடு வாழ்ந்த ஹோமர் படைத்த யூலிசஸின் குணாம்சமுடையவர் !!

நீர்வை பொன்னையன்- பேராசிரியர் மெளனகுரு -இலியட் ஒடிஸி எனும் கிரேக்க காவியத்தில் ஹோமர் படைத்த பாத்திரம் யூலிசஸ். ஹெலன் எனும் அரச குமாரியை மீட்க பத்து ஆண்டுகள் கிரேக்கத்தில் நடை பெற்ற போர் பிரசித்தமானது. கிரேக்க மக்களின் பண்டைய வீரயுக வாழ்வோடு அது சம்பந்தமாக எழுந்த கதைகள் பின்னிப் பிணைந்தவை. பத்து ஆண்டுகள் போரிலும் பத்து ஆண்டுகள் பிரயாணத்திலும் கழித்தவன் யுலிஸஸ்.  ஓய்வு என்பதே அறியாதவன், சும்மா இருக்கத் தெரியாதவன். புதிய, புதிய அனுபவங்களைத் தேடுபவன். புதிய புதிய திசைகளை நோக்கிச் செல்ல விரும்புவன். தேடல் நோக்கு அவனோடு பிறந்த ஒன்று. கிழப்பருவமெய்திய யூலிசஸ் நாட்டுக்கு மீள்கிறான்.

இளமைப் பருவத்தில் துடிதுடிப்போடு ஓடி ஆடித் திரிவதைப் போல இப்போது இருக்க அவன்முதுமை உடல் இடம் தருவதாயில்லை. எனினும் நாடுவந்து. ஓய்வு பெற்ற அவனால் எல்லோரையும் போல உண்டு, உடுத்து உறங்கி வறிதே இருக்க முடியவில்லை. சுறுசுறுப்பான அவன் மனம் அதற்கு இடம் தரவில்லை. மற்றவர்கள் “சும்மா” வாழ்வது அவனுக்கு வறிதாகத் தெரிகிறது. தெனிசன் பாடிய இலியட் ஒடிசியில் வரும் யூலிசஸ் கூற்றை மொழி பெயர்த்துத் தந்துள்ளார் விபுலானந்த அடிகளார். சும்மா இருப்பதை வெறுத்த யூலிசஸ், “ பெறுபயன் சிறிதே, பெறுபயன் சிறிதே வறிதிங்குறையும் மன்னன் யானே “ எனத் தன்னைத்தானே விமர்சித்துக் கொள்கிறான். விளைவு குன்றிய களர் நிலமும் புகைபடிந்த சாப்பாடும், மூப்பு வந்து சேர்ந்த மனைவியும் வந்து சேர, எதுவும் செய்யாமல் வறிதேயிருப்பது அவனுக்கு வாழ்க்கையில் அலுப்பையே தருகின்றது.

Continue Reading →

சிறுகதை: மேரி

- செ.டானியல் ஜீவா -வானம் இலவம் பஞ்சுக் கூட்டத்தால் நிறைந்து கிடந்தது. சுற்றிலும் ஆள் அரவமற்ற தனிமையின் சூழலை உணர்ந்தேன். மனம் ஒரு நிலையற்றுத் தாவித்தாவி அலைந்தது. ஏனோ என் நினைவுகள் எங்க ஊர் கடற்கரையை நோக்கி நகர்ந்தது. கொடியில் காயப்போட்ட ஆச்சியின் சேலையைப்போல் பரவைக்கடல் பரந்து விரிந்து உறக்கமற்று என்னைப்போல் கிடந்தது.

சிந்தையில் ஏதேதோ நினைவுகள் வந்து மனதை அலைக்களித்தது. கடந்துவிட்ட என் வாழ்க்கையில் வந்துபோன உறவுகளின் நினைவுகள் ஏக்கத்தைச் சுமந்தும், ஒருசில வலிகளைச் சுமந்தும் இதயத்தை வருடிச் சென்றன. அந்த நினைவுகளில் நட்புக்கு முதலிடம் இருந்தது. காதலுக்கும் அதில் இடம் இருந்தது. என் காதல் ஒருதலைக் காதலானதால் மனதுக்குள் புதைந்தே கிடந்தது. தமிழனின் வாழ்வை புரட்டிப்போட்ட ஈழப்போர், என் வாழ்க்கையின் திசையையும் மாற்றியது. நெருக்கடியான நேரத்தில் என் கூடவே இருந்த நண்பன் ‘எமில்’ என் நினைவுக் கண்ணில் வந்து வட்டமிட்டான்.

என் நண்பன் எமிலுக்கும், மேரிக்கும் இடையில் காதல் தொடங்கிய காலகட்டம். முதலில் காதலைச் சொன்னது மேரிதான். ஆனால் எமில் அதை உடனும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவன் மறுப்புக்குக் காரணம் இருந்தது. சின்ன வயதிலிருந்தே தன்னை எடுத்துவளர்த்த வீட்டிற்கு மருமகனாகப் போவது அவனுக்கு உறுத்தலாக இருந்தது. ஆனால், மேரி தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சியால் அவனைத் தன் வழிக்கே கொண்டு வந்துவிட்டாள். அவளுடைய விடாப்பிடியான அன்பு அவனை ஆட்கொண்டது. எமில் காதலை ஏற்றுக்கொண்டதிலிருந்தே மேரிக்கு அவன்மேலிருந்த பிரியம் முன்னைவிட பலமடங்காகியது.

மேரியின் அப்பா சூசையப்பர் நல்ல உயரமானவர். சிவலையாக இருப்பார். அவருடைய முகம் மேலிருந்து கீழாக ஒடுங்கி ஏசுவின் முகம் போல் இருக்கும் .மேரியின் அம்மாவைக் காதலித்தே திருமணம் செய்தவர். சாதுவானவர், கபடமற்றவர் என்று ஊரில் பலர் அவரைப் பற்றிப் பேசிக் கொள்வார்கள். அவர் கதைக்கும் பொழுது அவருடைய பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்கத் தோன்றும். மனைவி, பிள்ளைகள் மீது தீராத அன்பு கொண்டவர். யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் கடையொன்றில் வேலை செய்கிறார். அவரது மீசையைப் பார்த்து “அப்பா உங்கட மீசை பாரதியின் மீசை போல இருக்கிறது” என்று கிண்டல் செய்வாள் மேரி.

Continue Reading →

துயர் பகிர்வோம்: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்

காலம் விரைந்து கொண்டே இருக்கிறது என்பதை எமக்குத் தெரிந்தவர்கள் எங்களை விட்டுப் பிரியும் போது மீண்டும் நினைவூட்டுகின்றது. கொரோனா வைரஸ்ஸின் பாதிப்பால் உலகமே உறைந்து போயிருக்கும் இச்சந்தர்ப்பத்தில்,…

Continue Reading →

அஞ்சலி: மூத்த எழுத்தாளர் நீர்வைபொன்னையன் நேற்று கொழும்பில் மறைவு! முற்போக்குச்சிந்தனைகளிலிருந்து தடம் புரளாதவர்!

நீர்வை பொன்னையன்இலங்கையின் மூத்த எழுத்தாளர் நீர்வைபொன்னையன் நேற்று  ( மார்ச் 27 ஆம் திகதி)  வியாழக்கிழமை மாலை கொழும்பில் தமதில்லத்தில் மறைந்தார். உலகெங்கும் கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், இலங்கையிலும் ஊரடங்கு உத்தரவு  நடைமுறையிலிருக்கும் இக்காலப்பகுதியில் நீர்வை பொன்னையன் அவர்களின் மறைவும் எதிர்பாராமல் நிகழ்ந்துள்ளது. நாளை மறுதினம் 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இறுதி நிகழ்வுகள் நடைபெறவிருப்பதாக அறியப்படுகிறது.

இம்மாதம் 24 ஆம் திகதிதான் நீர்வைபொன்னையன் தமது 90 வயதையும் பூர்த்திசெய்திருந்தார்.  இறுதியாக அவர் எழுதி முடித்திருந்த நூலொன்றும்  அச்சாகி வெளிவரவிருந்தது. கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலின் பதட்டமான சூழ்நிலையினால் தமது புதிய நூலையும் பார்க்கமுடியாமல் நிரந்தரமாக கண்களை மூடிக்கொண்டார். இனி எம்மிடம் எஞ்சியிருக்கப்போவது நீர்வை பற்றிய நினைவுகள் மாத்திரமே.  அவர் பற்றி முன்னர் நான் பதிவுகளில் எழுதிய குறிப்புகளை கீழே பார்க்கவும்.


திரும்பிப்பார்க்கின்றேன். அறுபது ஆண்டுகாலமாக அயர்ச்சியின்றி எழுதிவரும் இலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வை பொன்னையன்.

இலங்கையில்  தமிழ்  கலை,  இலக்கிய  பரப்பில்  மாவை,   வல்வை, கரவை,    சில்லையூர்,  காவலூர்,  திக்குவல்லை,  நீர்கொழும்பூர், நூரளை,    நாவல்  நகர்,  உடப்பூர்,  மாத்தளை   முதலான  பல  ஊர்கள் பிரசித்தமாவதற்கு   அங்கு  பிறந்த  பல  கலைஞர்களும் படைப்பாளிகளும்   காரணமாக  இருந்துள்ளனர். ஊரின்  பெயரையே   தம்முடன்  இணைத்துக்கொண்டு இலக்கியப்பயணத்தில்   தொடரும்  பலருள்  நீர்வை   பொன்னையனும்   ஒருவர்.   இலங்கையில்  மூத்த இலக்கியப்படைப்பாளியான   அவர்  சமீபத்தில் அவுஸ்திரேலியாவுக்கு   வருகை  தந்து  சிட்னியில்  தமது  புதல்வியின்   குடும்பத்தினர்களுடன்  தங்கியிருப்பதாக  தகவல் கிடைத்து   அவருடன்  தொடர்புகொண்டேன். வடபுலத்தில்    நீர்வேலியில்  1930   ஆம்  ஆண்டு  பிறந்த  நீர்வை பொன்னையன்,    தமது    ஆரம்பக்கல்வியை    நீர்வேலி    அத்தியார் இந்துக்கல்லூரியில்    ஆரம்பித்து   பின்னர்    மட்டக்களப்பு  – கல்லடி சிவானந்தா   கல்லூரியிலும்  தொடர்ந்து  பயிற்றப்பட்ட  ஆங்கில ஆசிரியராக   கிழக்கிலங்கையில்  சம்மாந்துறை   முஸ்லிம் பாடசாலையில்    பணியாற்றிவிட்டு    இந்தியாவில்   கல்கத்தா பல்கலைக்கழகத்தில்   பயின்று  பட்டதாரியாக  தாயகம்  திரும்பினார்.

Continue Reading →

அஞ்சலி: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்

நீர்வை பொன்னையன்எழுத்தாளர் நீர்வை பொன்னையனின் மறைவு பற்றி முகநூற் பதிவுகள் மூலம் அறிந்துகொண்டேன். எழுத்தாளர் நீர்வை பொன்னையன் என்றால் முதலில் நினைவுக்கு வருவது அவரது ‘மேடும் பள்ளமும்’ சிறுகதைத்தொகுதிதான். தனது இருபத்தேழாவது வயதிலிருந்து எழுத்துத்துறைக்கு வந்தவர் எழுத்தாளர் நீர்வை பொன்னையன். அவர் தான் எழுதிய முதலாவது சிறுகதை வெளிவந்த ஆண்டு  1957 என்று அண்மையில் ஆதவன் தொலைக்காட்சியில் நடைபெற்ற நேர்காணலொன்றில் கூறியிருக்கின்றார். அது வெளியானது ஈழநாடு வாரமலரில் என்றும் கூறியிருக்கின்றார். அதனைப்பாராட்டி அப்போது ஈழநாடு ஆசிரியராகவிருந்த இரா. அரியரத்தினம் தனக்குக் கடிதமொன்றினை எழுதியதாகவும் அந்நேர்காணலில் அவர் கூறியிருக்கின்றார். அதே சமயம் 1961ஆம் ஆண்டு வெளியான தனது முதலாவது கதைத்தொகுதியான ‘மேடும் பள்ளமும்’ தொகுதிக்கான முன்னுரையில் அவர் தான் முதலாவதாக எழுதிய சிறுகதை ‘புயல்’ என்று குறிப்பிட்டிருக்கின்றார். மேலும் அத்தொகுதியி;லுள்ள சிறுகதைகளை வெளியிட்டதற்காக தேசாபிமானி, தினகரன், வீரகேசரி, கலைமதி, தாமரை, தமிழன், கலைச்செல்வி ஆகியவற்றில் வெளிவந்தவை என்றும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருக்கின்றார். அங்கு அவர் ஈழநாடு பற்றியெதுவும் குறிப்பிடவில்லை. இக்குழப்பம் எனக்கு அண்மையில் அவர் நேர்காணலைக் கேட்டதிலிருந்து ஏற்பட்டதொன்று. ஏனென்றால் அவரது ‘மேடும் பள்ளமும்’ சிறுகதைத்தொகுதியைப் பல வருடங்களுக்கு முன்னர் வாசித்ததிலிருந்து அவரது முதற்கதை ‘புயல்’ என்றே எண்ணியிருந்தேன். ஒரு வேளை அவர் அத்தொகுதி வெளியானபோது ஈழநாடு பற்றிக் குறிப்பிட மறந்திருக்கலாம். முதற்கதை ‘புயல்’ என்று தவறுதலாகவும் குறிப்பிட்டிருக்கலாம். 1957 ஆம் ஆண்டுக்குரிய ஈழநாடு வாரமஞ்சரிப் பிரதிகளைப் பார்த்து முடிவு செய்ய வேண்டிய விடயமிது.

இருந்தாலும் ‘மேடும் பள்ளமும்’ அவரது முதற்கதையோ இல்லையோ அவரது ஆரம்பக் கதைகளிலொன்று. 1930ஆம் ஆண்டு பிறந்த அவர் தனது இளமைப்பருவத்திலேயே சிறுகதைகள் எழுதத்தொடங்கி விட்டார். எனக்கு நீர்வை பொன்னையன் என்றால் முதலில் நினைவுக்கு வருவது அவரது முதற் சிறுகதைத்தொகுதியான ‘மேடும் பள்ளமும்’தான். அதிலுள்ள ‘மேடும் பள்ளமும்’ சிறுகதைதான். அவரது ஆரம்ப சிறுகதையே அவரை நினைவு படுத்தும் சிறுகதையாக அமையும் வகையில் சிறப்பாக எழுதியிருப்பது அவரது எழுத்தாற்றலுக்குச் சான்று. ‘மேடும் பள்ளமும்’ சிறுகதையின் கரு இதுதான்:  அக்கிராமத்தின் உயர்குடி நில உடமையாளன் ஒருவனிடமிருந்து நிலத்தை குத்தகைக்கு எடுத்து நெல் விளைவித்துக் கொண்டிருந்தான் ஒரு தொழிலாளி. அவன் சமூகத்தின் அடிமட்டத்தைச் சேர்ந்த தாழ் குடிகளில் ஒருவன். பயிருக்குப் பயன்படாது என்ற நிலைலியிருந்த மேட்டு நிலத்தை எடுத்து நெல் விளைவித்தான் அவன். கடந்த இரு வருடங்களாக அவனுக்கு நட்டத்தை ஏற்படுத்திய அந்த மேட்டு நில வயல் அவ்வருடம் அவனுக்கு நல்ல விளைச்சலைக் கொடுத்தது. வழக்கமாக விளைச்சலைக் கொடுக்கும் அந்நில உடமையாளனின் பள்ள நில வயல் அம்முறை பெய்த பெரு மழை ஏற்படுத்திய அழிவினால் பாதிப்புற்றிருந்தது. இதனால் மனம் புழுங்கிய அந்நில உடமையாளன் அத்தொழிலாளியை உடனடியாகவே குத்தகைப்பணப் பாக்கியைக் கட்டும்படி வற்புறுத்தினான். அவ்விதம் கட்டாவிட்டால் அவனது விளைச்சலைத் தானே சாகுபடி செய்யப்போவதாகப் பயமுறுத்தி இறுதியில் அவ்விதமே செய்கின்றான். அத்தொழிலாளியையும் அடித்துப் பள்ள வயலின் மூலையில் போட்டு விடுகின்றான். இதனால் வெகுண்டெழுந்த தொழிலாளர்கள் ஒன்று அந்நில உடமையாளனுக்குக்கெதிராகத் திரண்டு எழுகின்றார்கள். அம்மேட்டு நிலத்தை நோக்கி, தாழ் நிலத்து வயலில் அடிபட்டுக் காயமடைந்து கிடந்த அந்தத்தொழிலாளியையும் சுமந்தபடி மேட்டு நிலத்தை நோக்கிச் செல்கின்றார்கள். இதுதான் கதை. இச்சிறுகதையினை நீர்வை பொன்னையன் அவர்கள் சிறப்பாகவே எழுதியிருக்கின்றார். இதுவொரு குறியீட்டுக் கதை. வர்க்கமற்ற சமுதாயத்துக்கான போராட்டத்துக்குத் தொழிலாளிகள் திரண்டெழுவதை விபரிக்கும் குறியீட்டுக்  கதை.

Continue Reading →

உலக இலக்கியம் (சிறுகதை): ஒரு உண்மைக் கதை (வார்த்தைக்கு வார்த்தை நான் கேட்டவாறே)

- மார்க் ட்வைன் -முனைவர் ஆர்.தாரணிகுறிப்பு: ஆப்ரிக்க-அமெரிக்க எழுத்தாளர்களின் அடிமைக் கதைகூற்றுகள் (Slave Narratives) அமெரிக்காவின் சரித்திரத்தில் அடிமைகள் அனுபவித்த பல கொடுமைகளை அடிமைகளாக இருந்தவர்கள் வாயிலாகவே விளக்கும் ஒரு வகை இலக்கியம். தற்போது அடிமைத்தனம் என்பது முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டாலும், தற்போதைய ஆப்ரிக்க -அமெரிக்க எழுத்தாளர்கள் மனதிலும் அவர்களின் முன்னோர்கள் மனதிலும் உடலிலும் பட்ட காயங்களின் வடுக்கள் மிச்சம் இருக்கத்தான் செய்கிறது.

இந்தச் சிறுகதையும் அடிமைத்தனத்தின் ஒரு கொடூர முகத்தை விளக்கும் விதமாக இருந்தாலும், இதன் ஆசிரியர் மார்க் ட்வைன் கறுப்பினத்தவர் அல்லர். அவர் ஒரு அமெரிக்கர் . எனினும், இக்கதையில் அவர் ஒரு பாத்திரமாகவே மாறி (மிஸ்டோ சி) தன் வீட்டின் கறுப்பின மூதாட்டிப் பணிப்பெண்ணின் கதையைக் கேட்டு தான் அதை வார்த்தைக்கு வார்த்தை விவரிப்பதாக தலைப்பிலேயே குறிப்பிடுகிறார். மேலும், கதை முழுதும் ஆசிரியர் மார்க் ட்வைன் ஆப்ரிக்க -அமெரிக்கர்கள் (கறுப்பினத்தவர்) பயன்படுத்தும் பேச்சு வழக்கு வகையை சிறப்பாக பயன்படுத்தி உள்ளது இந்தக் கதையின் தனித்தன்மை

இந்த சிறுகதை பல கல்லூரிகளில் பாடபுத்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கதையை வகுப்பில் எடுக்கும்போது மட்டும் கண்டிப்பாக என் கண்களில் தூசு விழுந்து விடும். கண்ணீர் சொரியும். ஒரு ஆசிரியராக, ஒரு மனுஷியாக என்னை மிகவும் பாதித்த கதை. மொழிபெயர்த்தல் மூலம் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும் என்பது எனது விருப்பம். –


அது ஒரு கோடைகால அந்திவேளை. நாங்கள் அனைவரும் மலையின் உச்சியில் அமைந்திருக்கும் எங்களின் பண்ணைவீட்டின் முகப்பு வாயிலில் அமர்ந்திருந்தோம். நாங்கள் அத்தை என அன்புடன் அழைக்கும் எங்களின் பணிப்பெண்ணான ரேச்சல் கறுப்பினத்தவர் மற்றும் பணிப்பெண் என்ற காரணத்தினால் நாங்கள் அமர்ந்திருந்த முகப்புப்படிகளில் ஒருபடி கீழ் இறங்கி மிகவும் பவ்யமாக அமர்ந்திருந்தார். மிகவும் வலிமையான உடலும் , எடுப்பான தோற்றமும் கொண்டவர் அவர். அறுபது வயதாகி இருப்பினும் அவரது கண்களில் உள்ள ஒளி சிறிதும் குன்றாமலும், மன உறுதி குறையாதவராகவும் என்றுமே காணப்படுவார். மனநிறைவோடு கூடிய உற்சாகம் ததும்பி வழியும் மனுஷியான அவருக்கு சிரிப்பு என்பது ஒரு பறவை கீதம் இசைப்பதைப்போன்றே மிகவும் இலகுவான விஷயம்.

எப்போதும் போலவே அன்றைய நாளின் முடிவில் எங்களின் வார்த்தைத் தாக்குதலுக்கு ஆளாகி அன்றும் அமர்ந்திருந்தார். அதாவது எங்களின் கொஞ்சம் கூட கருணை காட்டாத விளையாட்டுத்தனமான கேலிக்கும் கிண்டலுக்கும் இலக்காகினாலும், அதை மிகவும் இலகுவாக எடுத்துக்கொண்டு ரசித்தவாறே இருந்தார். சுவாசத்திற்க்கான காற்றைக் கூட தொடர்ந்து வெளியிட இயலாத அளவுக்கு, உரத்த சிரிப்பொலியை தொடர்ந்து அலை அலையாய் எழுப்பிய அவர், அந்த இன்ப அதிர்வலை கொடுத்த அசைவின் காரணாமாக தனது முகத்தை இரு கரங்களிலும் தாங்கியவாறே அமர்ந்திருந்தார். அவ்வாறான ஒரு தருணத்தில் என் மனதில் திடீரென உதித்தது அந்த எண்ணம். நான் கூறினேன்:

“ரேச்சல் அத்தை! அறுபது வருட கால உங்கள் வாழ்வில் எவ்வித துயரையும் நீங்கள் எதிர்கொள்ளவே இல்லையா?”

அக்கணமே சிரிப்பலையின் அதிர்வை சடாரென நிறுத்தினார். ஏனோ சிறிது தயங்கினார். அங்கே மெல்லியதாய் ஒரு மௌனம் தேவையற்று நிலவியது. தன் தோள்பட்டையின் மேலாக தனது முகத்தைத் திருப்பி, என் பக்கம் நோக்கி குரலில் சிறிதளவு சிரிப்பு கூடதென்படாமல் கூறினார்:

Continue Reading →

வாசிப்பும் யோசிப்பும் 361: சஞ்சிகை அறிமுகம்: தேனருவி

தேனருவி சஞ்சிகைஅருண்மொழி தேவன் (அருண்மொழி) இவர் ஓர் எழுத்தாளர்; நாடக நடிகர். சஞ்சிகையொன்றினை 1962- 1964 காலகட்டத்தில் நடத்தியிருக்கின்றார். இவ்விதழின் உதவி ஆசிரியராகவிருந்தவர் பா.மகேந்திரன். இவரே பின்னர் தமிழ்த்திரையுலகில் புகழ் பெற்ற இயக்குநரும் , ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திரா என்று , இப்பதிவுக்கான முகநூல் எதிர்வினையொன்றில் பிரபல கலை,இலக்கிய விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன் சுட்டிக்காட்டியிருந்தார். அவருக்கு என் நன்றி.

அக்காலகட்டத்தில் வெளியான மேற்படி சஞ்சிகையின் நான்கு இதழ்களையே நூலகம் எண்ணிம நூலகத்தில் காண முடிந்தது. அவற்றைப் புரட்டிப்பார்த்தேன். எனக்கு மிகவும் வியப்பாகவிருந்தது. காரணம்? இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த இலக்கியத்தின் பல்துறைகளையும் நேர்ந்த படைப்புகள் (கதை, கட்டுரை, கவிதை போன்றவற்றை அவ்விதழ்களில் என்னால் காண  முடிந்தது. ஆனால் இதுவரையில் நானறிந்த வரையில் இதழாசிரியரைப்பற்றியோ அல்லது சஞ்சிகை பற்றியோ எங்கும் வாசித்ததாக நினைவிலில்லை.. கலாநிதி சி. மௌனகுரு, கலாநிதி சித்திரலேகா மெளனகுரு & கலை,இலக்கிய விமர்சகரும், கவிஞனுமான எம். ஏ. நுஃமான் ஆகியோர் இணைந்து எழுதிய ‘இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம்’ என்னும் நூலிலும் தேடிப்பார்த்தேன். தேனருவி பற்றியோ அதன் ஆசிரியர் அருண்மொழி தேவன் (அருண்மொழி)  பற்றியோ தகவல்கள் எவற்றையும் அறிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை இவர்களுக்கெல்லாம் தேனருவி பற்றியோ அதன் படைப்புகள் பற்றியோ தெரிந்திருக்காமல் இருக்கக்கூடுமோ என்றெண்ணியவாறு ‘தேனருவி’ சஞ்சிகையையின் சேமிக்கப்பட்டிருந்த இதழ்களைப் புரட்டியபோதுதான் அதன் இலக்கியப் பங்களிப்பினைப் புரிந்துகொண்டேன். அப்பொழுது எனக்கு எழுந்த முக்கியமான கேள்வி இதுதான்: “எதற்காக? எதற்காக ‘தேனருவி’ சஞ்சிகையும், அதன் ஆசிரியரும் கலை, இலக்கிய  விமர்சகர்களாள் இருட்டடுப்பு செய்யப்பட்டார்கள்? இத்தனைக்கும் இளஞரான  நுஃமானின் ‘எச்சில் எனினும்…’ என்னும் காதற் சிறுகதை கூடத் ‘தேனருவி’ இதழொன்றில் வெளியாகியுள்ளது.  

அருண்மொழிதேவன் அவர்கள் ‘தேனருவி’ சஞ்சிகையை மிகவும் சிரமங்களுக்கு மத்தியில் வெளியிட்டுள்ளார். பலருக்குக் களமமைத்துக்கொடுத்துள்ளார். * தேனருவி சஞ்சிகையின் ஆசிரியரான அருண்மொழி  தேவன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரென்று கலை, இலக்கிய விமர்சகரான கே.எஸ்.சிவகுமாரன் இப்பதிவுக்கான தனது முகநூல்எதிர்வினையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.  அவருக்கு நன்றி. உண்மையில் அருண்மொழி தேவன் (அருண்மொழி) இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்புகள் பலவற்றை வெளியிட்டு ஆக்கபூர்வமான பங்களிப்பினைச் செய்துள்ளார். ‘வானொலி நாடகக்  குழு’ நாடக அமைப்பினருடன் இணைந்து தமிழ் நாடகத்துறைக்கும் பங்களிப்பு செய்துள்ளார். அவை பாராட்டப்பட வேண்டியவை. ஆய்வுகளில் ஆவணப்படுத்தப்பட வேண்டியவை.

இவ்விதமான இருட்டடிப்புகளுக்கு முக்கிய காரணங்களிலொன்று. கலை, இலக்கிய விமர்சகர்கள் பாரபட்சமாகச் செயற்படுவது. இவர்கள் எழுதுவதன் அடிப்படையிலேயே ஏனையோரும் ஆய்வுகள் செய்வதால் இவர்களால் தவற விடப்படும் எழுத்தாளர்கள், சஞ்சிகைகள், படைப்புகள் பல தொடர்ந்தும் இவை பற்றி ஆய்வு செய்யும் ஏனையவர்களாலும்  தவறவிடப்படுகின்றன. ஆனால் இன்று இணையத்தின் வருகையும், எண்ணிம நூலகங்களின் உருவாக்கமும் இவ்விதம் தவற விடப்பட்டவர்களையெல்லாம் இனங்காண்பதற்கு மிகவும் உதவியாகவிருக்கின்றன. ‘நூலகம்’ என்னும் எண்ணிம நூலகத்தில் இவ்விதழ்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதால்தானே என்னால் இவற்றைப்பற்றி அறிய முடிந்தது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 360: அறிமுகம்: ‘அமிர்த கங்கை’

சஞ்சிகை அமிர்த கங்கை; ஆசிரியர்: செம்பியன் செல்வன் -

‘நூலகம்’ தளத்தில் சஞ்சிகைகள் பகுதியை மேய்ந்துகொண்டிருக்கையில் கண்களில் பட்ட சஞ்சிகை ‘அமிர்த கங்கை’. எழுத்தாளர் செம்பியன் செல்வனை கெளரவ ஆசிரியராகக்கொண்டு வெளியாகிய சஞ்சிகையின் 12 இதழ்கள் ( ஜனவரி 1986 தொடக்கம் ஜூன் 1987 வரையிலான காலகட்டத்துக்குரிய) சேகரிக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஏப்ரில் 1986, செப்டெம்பர் 1986, டிசம்பர் 1986, ஜனவரி 1987, பெப்ருவரி 1987 ஆகிய இதழ்களைக் காணவில்லை. ஜனவரி 1986 வெளியான இதழே முதலாவது இதழ்.


இதழில் சிறுகதைகள், தகவல்கள், குட்டிக்கதைகள், செம்பியன் செல்வனின் உருவகக்கதைகள், ஓவியர் ரமணியின் ஓவியங்களுடன் கூடிய ‘ரமணி’என்னும் சிறுவர் பகுதி, கட்டுரைகள், செங்கை ஆழியானின் ‘தீம்தரிகிட தித்தோம்’ தொடர் நாவல், புதுமைப்பித்தனின் பேஸிஸ்ட் ஜடாமுனி (பாஸிச வரலாறு) என்னும் தலைப்பிலான முசோலினி பற்றிய தொடர், சத்ஜித்ரேயின் வங்காள நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பின் (லீலா றே மொழிபெயர்த்தது) தமிழ் மொழிபெயர்ப்பு ‘பக்திக் சந்த்’ தலைப்பில் வெளியான தொடர், கேலிச்சித்திரங்கள் இவற்றுடன் சஞ்சிகையின் இறுதிப்பகுதியில் சோதிடம் (இராசி பலன்) ஆகியவை காணப்பட்டன. சத்ஜித்ரேயின் தொடரைத் தமிழாக்கம் செய்தவர் எழுத்தாளர் சொக்கன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading →

கவிதை: பேதுருவுக்கு எழுதிய புதிய திருமுகம் அல்லது சர்க்கரைக் கிண்ண முத்தம்

கவிதை: கவிதை: பேதுருவுக்கு எழுதிய புதிய திருமுகம் அல்லது சர்க்கரைக் கிண்ண முத்தம்- செல்லத்துரை சுதர்சன் -

கியூபாவின் பிடல் காஸ்ரோ மருத்துவக் குழு இத்தாலியில் மரணமீட்புக்காய்த் தரையிறங்கிய நாள்  23.03.2020. இக்கவிதையை எழுதிய கலாநிதி செ. சுதர்சன் இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். கவிஞரும் விமர்சகரும் ஆய்வாளருமாகிய இவர் பல நூல்களின் ஆசிரியர்

உயர் பசிலிகாவின் கீழறை உறங்கும்,
முதுபெரும் ரோமின் பேதுருவே!
லத்தீன் சிலுவையுருவப் பேராலயத் திருக்கதவுகள்
இறுக மூடிக்கொண்டன!
ரைபர் ஆறும் ஜனிக்குலம் குன்றும்
மௌனித்துப் போயின…!
அரவணைக்கும் கரம்கொண்ட
நீள் வட்ட வெளி முற்றம் என்னாயிற்று…!
‘என் ஆடுகளை மேய்’ எனும் போதனையும்
எர்மோன் மலையடிவார வாசகமும்
தொலைந்து போயின காண்…!
பேதுருவே தொலைந்து போயின காண்…!

கலைகொழிக்கும் முதுபெருந்தாய் மடியில்
உறங்குவோய் இது கேள்….!
ஐராப்பிய ஒன்றியக் கதிரையிலமர்ந்து
உன் மக்கள் கழுகுக்காய் உயர்த்திய கைகளும்…
பட்டினி விரித்தவை, குருதி பெருக்கியவை,
பிணங்கள் குவித்தவை, நிலங்கள் கவர்ந்தவை,
விடுதலை மலர்களை நிலமிசைப் புதைத்தவைதாம்.

Continue Reading →