(மீள்பிரசுரம்) விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி

- சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா -விஞ்ஞானம், பொறியியல் துறைகள் மட்டுமே உலக நாடுகளில் செல்வம் கொழித்து முன்னேற ஆக்க வினைகள் புரிந்துள்ளன! அந்த நாடுகளைப் போல் விஞ்ஞானம், பொறித்துறை ஆகியவற்றை விருத்தி செய்தே, இந்தியாவும் செல்வீக நாடாக முன்னேற வேண்டும்.

முதல் பிரதம மந்திரி, ஜவஹர்லால் நேரு

முன்னுரை: கடந்த ஐநூறு ஆண்டுகளாக இலக்கியங்கள் வளர்ந்து காவியங்கள் பெருகினாலும், தமிழகத்தில் விஞ்ஞானத் துறைகள் தலை தூக்கியதாகவோ, தமிழ்மொழியில் சிறப்பான விஞ்ஞான நூல்கள் படைக்கப் பட்டதாகவோ அறிகுறிகள் எவையும் காணப்பட வில்லை. அதே சமயம் ஐரோப்பாவில் விஞ்ஞானத் துறைகள் செழித்தோங்கி, தொழிற் புரட்சி ஏற்பட்டு, ஐரோப்பிய மொழிகளும் அவற்றை நூல்களில் வடித்து எதிரொலித்தன. வானியல், கணிதத்தில் முன்னோடி யான இந்தியா, பனிரெண்டாம் நூற்றாண்டிலிருந்து 500 ஆண்டுகள் மொகாலாயர் கைவசப்பட்டு, அடுத்து பிரிட்டன் பதினேழாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டின் பாதி வரை ஆதிக்கம் செலுத்தி, அடிமைத் தேசமாக அகப்பட்டுக் கொண்டதால், தமிழ்மொழி உள்பட மற்ற அனைத்து இந்திய மொழிகளும் விஞ்ஞான வளர்ச்சிகளை நூல் வடிவில் காட்ட முடியாமல் போயின. ஆங்கில மொழியைப் பிரிட்டன் முதன்மை மொழியாக்கி, முறையான கல்வித்துறை நிறுவகங்களை நாடெங்கும் நிறுவினாலும், தேசம் விடுதலை அடைந்த பிறகுதான் இந்தியாவில் மூலாதார விஞ்ஞானத் துறைகள் பெருகவும், விஞ்ஞான நூல்கள் தோன்றவும் வாசற் கதவுகள் திறக்கப்பட்டன.

இந்திய விஞ்ஞானத் தொழிற்துறையின் பொற்காலச் சிற்பி

பாரத கண்டத்தைச் சாணி யுகத்திலிருந்து [Cow Dung Age] அணுசக்தி யுகத்திற்கும், அண்டவெளி யுகத்திற்கும் இழுத்து வந்து, தொழிற் துறைகளைத் திறந்து வைத்த அரசியல் மேதை, பண்டித ஜவாஹர்லால் நேரு. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் விஞ்ஞானப் பொறித்துறைப் பாதையில், மேலை நாடுகள் போல் முன்னேறத் தொழிற் சாலைகள், மின்சக்தி நிலையங்கள், அணுசக்தி ஆராய்ச்சி, அண்டவெளித் தேர்வு போன்ற துறைகள் தோன்ற அடிகோலியவர் நேரு. டாக்டர் ஹோமி ஜெஹாங்கீர் பாபாவைக் [Dr. Homi Jehangir Bhabha] கண்டு பிடித்து, நேரு 1954 இல் பம்பாயில் அணுசக்தி நிலைப்பகத்தைத் [Atomic Energy Establishment, Trombay] துவக்கச் செய்தார். விண்வெளி ஆராய்ச்சியைத் துவங்க, விஞ்ஞானி டாக்டர் விக்ரம் சாராபாயைக் [Dr Vikram Sarabai] கண்டு பிடித்து, தும்பா ஏவுகணை மையத்தை [Thumba Rocket Launching Centre] நிறுவி, அவரைத் தலைவர் ஆக்கினார். இப்போது இந்தியா ஆசியாவிலே அணுவியல் ஆராய்ச்சியிலும், அண்டவெளி ஏவுகணை விடுவதிலும் முன்னணியில் நிற்கிறது. அப்பெரும் விஞ்ஞானச் சாதனைகளை மற்ற நாடுகளுடன் ஒப்பு நோக்கினால், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியைப் இந்திய விஞ்ஞானத் தொழிற் துறையின் பொற்காலம் என்று வரலாற்றில் அழுத்தமாகச் செதுக்கி வைக்கலாம்! பண்டித ஜவஹர்லால் நேரு பாரதத்தின் பொற்காலச் சிற்பி எனப் போற்றப்படும் முற்போக்குச் சிந்தனையாளர்.

Continue Reading →

‘மெய்யியல் கற்றல் கற்பித்தல்!

- ஆதவன் கதிரேசர்பிள்ளை (பிரான்சு) -- ஆதவன் கதிரேசர்பிள்ளை (க.ஆதவன்) -ஆதவன் கதிரேசர்பிள்ளை என்னும் பெயர் க.ஆதவன் என்னும் பெயரில்  தமிழ் இலக்கிய உலகில், குறிப்பாக ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறிமுகமான பெயர்களிலொன்று. பேராதனைப்பல்கலைக்கழகப் பட்டதாரியான இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் மெய்யியற் துறையில் நிரந்தர விரிவுரையாளராக , 1981-1983 காலகட்டத்தில் பணி புரிந்தவர். கவிதை, நாவல், சிறுகதை, கட்டுரை, நாடகம், சினிமா, தத்துவம் எனப்பல்துறைகளிலும் தன் பங்களிப்பினைச்செய்து வருபவர். தீர்த்தக்கரை, புதுசு எனச் சஞ்சிகைகள், பத்திரிகைகள் மற்றும் இணைய இதழ்களில் இவரது பல்வகைப்பட்ட படைப்புகள் வெளியாகியுள்ளன. நோர்வேயிலிருந்து வெளியான ‘சுவடுகள் ‘ சஞ்சிகையில் வெளியான இவரது ‘மண்மணம்’ புகலிடத் தமிழ் இலக்கியத்தில் வெளியான முக்கியமான நாவல்களிலொன்று. தத்துவம் பற்றிய இவரது கருத்துகளைத் தாங்கிய  ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளிவந்த ‘மெய்யியல் கற்றல் கற்பித்தல்’ என்னும் சிறு தொடரும் முக்கியமான இவரது பங்களிப்புகளிலொன்று. அத்தொடர் முழுமையாக இங்கே தரப்படுகின்றது.


மெய்யியலை எவ்வாறு கற்பிக்கலாம்? சரி, பிரச்சனைகளிலிருந்து ஆரம்பிக்கலாம். உங்களுக்குத் தெரிந்த…உங்களால் -பிரச்சினை-  என்று கருதப்பட்ட ஏதேனும் ஒன்றைச் சொல்லுங்கள். மறந்தும் -என்றால் என்ன?- என்கிறதும், -எங்கே?- என்பதுமான கேள்விக்கு விடையளிக்க எத்தனிக்க வேண்டாம். நீங்கள் இத்தகைய கேள்விகளுக்கு விடையளிக்க எத்தனிக்கும் போதே.. அக்கணத்தில் மூளைச் சலவை செய்யப்பட்டுவிட்டீர்கள் நீங்கள் அறியாமலேயே.

உதாரணம்:

1. புவியீர்ப்பு என்றால் என்ன?  2. கடவுள் எங்கே இருக்கிறார்?.

உதாரணம் இரண்டிலிருந்து ஆரம்பிக்கலாம். கடவுள் எங்கே இருக்கிறார் என்ற கேள்விக்கு விடையளிக்க எத்தனிக்கும் போதே .. நீங்கள் கடவுள் இருக்கிறார் என்று ஒத்துக் கொண்டுவிட்டீர்கள். அதாவது…ஒன்றின் -இருப்பு- நீங்கள் அறியாமலே -இருப்பு- உங்கள் மேல் சுமத்தப்பட்டது.

Continue Reading →

கணினி வழி தமிழ் கற்றல் ,கற்பித்தல்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்-பாரதி.

அமிழ்தினும் இனிய தமிழ்மொழி கணினியிலும், இணையப் பயன்பாட்டிலும் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தப்படினும், தமிழ்மொழி தரவுகள் முழுமையாகப் பாதுகாக்கப்படாதநிலை காணப்படுகிறது. இந்நிலை மாற்றம் பெறுவதற்கு தமிழ்வழிக்கல்வி பயிலும் மாணவர்களைத் தமிழ்க்கணினி இயக்குவதில் தேர்ச்சி பெற்றவர்களாக மாற்றம்பெற வைக்கவேண்டும். தொழில்வசதிகள் பெருகிட தாய்மொழிக்கல்வி மிகவும் இன்றியமையாததாகும். இதற்குப் பள்ளிக்கல்வியில் கணினிவழி தமிழ் கற்பித்தல் அவசியம் என்பதை இவ்வாய்வுக்கட்டுரை விளக்குகிறது.

முக்கியக் குறிப்புகள் – ஆங்கிலவழிக் கல்வியின் தாக்கம், தமிழ்வழிக் கல்வி, தமிழ்க்கணினி, குறுஞ்செயலிகள், அறிவியல்கருவிகளில் தமிழ்மொழி

இன்றைய ஆங்கிலவழிக் கல்வி பணிவாய்ப்பினை முழுமையாகப் பெற்றுத் தருவதால் மக்கள் ஆங்கிலவழிக் கல்வி முறையினைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், பெரும்பான்மையான மாணவர்களிடம் முழுமையான  ஆங்கிலவழிக்கல்வி இருப்பினும் அவர்களால் தாய்மொழியில் புரிந்து படிக்கும் அளவு  படைப்பாற்றல் திறனை வெளிக்கொணர முடிவதில்லை. இதனால், மனப்பாடம் செய்து பயிலும் முறை பெரும்பான்மையான மாணவர்கள் மத்தியில் காணப்படுகிறது. இத்தகைய சூழ்நிலை காணப்படுவதால் படைப்பாற்றல்திறன் குறைவாக அவர்களிடம் காணப்படுகிறது. தாய்மொழியில் கல்வி பெறும் மாணவர்களிடம் தமிழ்வழிக் கணினிக் கல்வியை முழுமையாக அளித்திடும்போது படைப்பாற்றல் திறனுடன் பல மென்பொருட்களையும், சமுதாயத்திற்குப் பல சாதனைகளையும் அளிக்க இயலும். தமிழ்க்கணினி என்பது வெறும்இலக்கியம், உரைநடை, கட்டுரை, கடிதங்கள், பண்பாடு போன்றவற்றை மட்டும் கற்றுத் தருவதன்று.

Continue Reading →

பார்வைக் குறைபாடுகளும், தீர்வுகளும்!

பார்வைக் குறைபாடுகளும் பரந்திடும் தீர்வுகளும்!சுரேஷ் அகணிவெளியே உள்ள ஒளியை உணர்வதற்கு உதவும் ஒரு உறுப்பாகக் கண் உள்ளது. மனிதர்களின் கண்கள் முப்பரிமாணப் படிமத்தைக் காண உதவுகின்றன. ஐம்புலன்களில் ஒன்றான பார்த்தலுக்கு உதவுவது கண். நமது உடலில் உள்ள கண்ணின் தொழிற்பாடு எவ்வாறுள்ளது என்பதையும், அதன் தொழிற்பாடு எவ்வாறாக ஒரு நிழற்படக் கருவியோடு ஒப்பீடு செய்யப்படுகின்றது என்பதையும் பற்றி எமது கல்வியில் விஞ்ஞானப் பாடங்கள் ஊடாகவும், இயற்பியல் போன்ற உயர்தரப் பாடங்கள் ஊடாகவும் படித்திருக்கின்றோம். ஒளியின் உதவியுடன் படம் பிடிக்கப்படும் பொருட்களின் உருவம் மனதில் பதிவுசெய்யப்பட்டு மூளையால் உணரப்படுகின்றது. கண்ணில் உள்ள பல பாகங்கள் இணைந்து இதனைச் சாத்தியமாக்குகின்றன. விம்பத்தை அல்லது பிம்பத்தை தேக்கி வைத்திருப்பது விழிப்படலம் (Comea) ஆகும். கண்ணில் உள்ள கண்மணிக்குள் ஒளிக்கதிர்கள் திசைமாற்றி கண்மணிக்குப்  பின்னால் உள்ள குவி ஆடியைச்  சென்றடைகின்றன. விழித்திரை அல்லது ஒளிமின்மாற்றி (Retina) எனப்படும் பாகம் தலைகீழ் உருவத்தைப் பதிக்கின்றது. பதிக்கப்படும் இந்த உருவம் மூளைக்குள் மின் விசைகளாகச் செலுத்தப்பட்டு விருத்தி செய்யப்படுகின்றது. கண் இமைகள் கண்களின் மேற்பரப்பில் வீசப்படும் காற்றின் திசையைத் திருப்பிப் பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புலன் உணர்வு தொடர்பான விடயங்களைத் தொழிற்படுத்தும் நரம்புத் தொகுதியின் பகுதிகளை இணைத்து உணர்வுத் தொகுதி (Sensory System) என்று அழைக்கப்படுகின்றது. பார்த்தல், கேட்டல், தொட்டுணர்தல், சுவைத்தல், முகர்தல் ஆகிய ஐம்புலன்களும் உணர்வுத்தொகுதியால் உணரப்படுகின்றன. கண்ணால் பார்க்கக் கூடியவற்றை உணரப்படக்கூடிய பகுதி ஏற்புப் புலம் (Receptive field) எனப்படும். கண்ணும் பார்வைக்குரிய புலன் உணர்வுத் தொகுதியின் முக்கியமான உறுப்பாகவே கருதப்படுகின்றது.

குருட்டுத்தன்மை (Blindness) என்பது உடல் அல்லது நரம்புப் பாதிப்பினால் ஏற்படும் பார்வை உணர்வுக் குறைவு ஆகும். வடிவங்களை, எழுத்துக்களை, பார்க்கக் கூடிய ஒளியை முற்றாக உணரமுடியாத நிலையாகக் குருட்டுத்தன்மை உள்ளது. மருத்துவரீதியாக ஒளியுணர்வுத்தன்மை (No light Perception) என்றும் சட்டரீதியாக சட்டக் குருட்டுத் தன்மை(Legal Blindness) என்றும் குருட்டுத்தன்மை விபரிக்கப்படுகின்றது. பார்வைக் கூர்மையின் அளவு 20/200 அல்லது 6/60 இனைவிடக் குறைவாக இருத்தலை குருட்டுத் தன்மையாகக் கொள்ளப்படுகின்றது. சாதாரண பார்வை கொண்ட ஒருவர் 200 அடி (60 மீற்றர்) தொலைவில் இருந்து பார்க்கக்கூடியதை சட்டக் குருட்டுத்தன்மை கொண்டவர் 20 அடி (6 மீற்றர்) தூரத்தில் இருந்தே தெளிவாகப் பார்க்க முடியும் என்பதே இதன் விளக்கம் ஆகும். பார்வைப் புலம் (Visual Field) 180 பாகைக்குப் பதிலாக 20 பாகைக்குள் கொண்டிருக்கும் ஒருவரும் குருட்டுத் தன்மை உள்ள ஒரு மாற்றுத்திறனாளர் ஆகக் கருதப்படுகின்றார்.

Continue Reading →

உலகின் முதல் அணுஉலை இயக்கிய என்ரிகோ பெர்மி

- சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா -* பதிவுகள் இணைய இதழில் (ஜூன் 2002 இதழ் 30) வெளியான கட்டுரை. அன்று திஸ்கி எழுத்தில் வெளியான கட்டுரை, இன்று ஒருங்குறியில் மீள்பிரசுரமாகின்றது. அறிவியல் அறிஞர் ஜெயபாரதன் எழுதி அன்று திஸ்கி எழுத்துருவில் ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியான ஏனைய அறிவியல் கட்டுரைகளும் ஒருங்குறி எழுத்துருவில் படிப்படியாக மீள்பிரசுரமாகும். –


அணுவைப் பிளந்தார்கள்!

1934 ஆம் ஆண்டு ஜனவரியில் நோபல் பரிசு பெற்ற இத்தாலிய விஞ்ஞான மேதை, என்ரிகோ பெர்மி [Enrico Fermi] முதன் முதல் யுரேனியத்தை நியூட்ரான் கணைகளை ஏவி, அதை இரு கூறாக்கினார். ஆனால் சரித்திரப் புகழ் பெற்ற, அந்த அணுப் பிளவுச் சம்பவம் அவருக்குத் தெரியாமலே போனது! காரணம் அணுக்கரு இயக்கத்தின் விளைவுகள் யாவும் புதிராக இருந்தன. புதிய கதிர்வீச்சு உலோகமும் மற்றும் சிறிய துணுக்குகளும் தோன்றின! தான் ஒரு புது மூலகத்தை உண்டாக்கி விட்டதாகப் பெர்மி தவறாக நம்பினார். சோதனையில் யுரேனியம் கதிரியக்கப்பட்டு, எதிர்பாராத புதிய ரசாயனக் குணாதிசயங்களை ஏற்று, ஒரு புதிய மூலகமாக உருமாற்றம் [Transmutation] கொண்டது! ஆனால் சிறிய துகள்களை இரசாயன முறையில் பிரித்துக் கண்டு பிடிக்கத் தவறிவிட்டார்! அடுத்த நான்கு ஆண்டுகள் பல தடவை பாரிஸ், பெர்லின், இத்தாலியில் யுரேனியம் நியூட்ரன் கணைகளால் பிளக்கப் பட்டாலும், என்ன விந்தை விளைந்துள்ளது, என்று விஞ்ஞானிகளுக்கு அப்போது புரியவில்லை.

ஜெர்மன் வெளியீடு “பயன்படும் இரசாயனம்” [Applied Chemistry] இதழில் ஐடா & வால்டர் நோடாக் [Ida & Walter Noddack] விஞ்ஞானத் தம்பதிகள், பெர்மியின் பிழையான கருத்தை எடுத்துக் கூறி, “கன உலோகம் யுரேனியத்தை நியூட்ரான் தாக்கும் போது, பிளவு பட்டுப் பல துணுக்குகளாய்ப் பிரிகிறது” என்று எழுதி யிருந்தார்கள். மெய்யான இவ்வரிய விளக்கத்தை, பெர்மி உள்படப் பலர் அன்று ஒப்புக் கொள்ளாது ஒதுக்கித் தள்ளினார்கள்! சாதாரண ஆய்வகச் சாதனங்களால் எளிதாக அணுவைப் பிளக்க முடியாது. விஞ்ஞான விதிகளின்படி, மாபெரும் சக்தியைக் கொண்டுதான் அணுவை உடைக்க முடியும், என்பது பெர்மியின் அசைக்க முடியாத கருத்து.  பெரும்பான்மையான பௌதிகவாதிகள் [Physicists] பெர்மியைப் பின்பற்றி, யுரேனியம் நியூட்ரானை விழுங்கி, எதிர்பார்த்தபடி ஒரு புது மூலகத்தை உண்டாக்கி யுள்ளது என்றே நம்பினார்கள். அப்போது ஐன்ஸ்டைன் உள்படப் பல விஞ்ஞான மேதைகள் அணுவைப் பிளப்பது அத்துணை எளிதன்று என்ற ஆழ்ந்த கருத்தையே கொண்டிருந்தனர்.

Continue Reading →

அணுப் பிணைவு சக்தி அவனியின் எதிர்கால மின்சக்தி

அறிவியல் அறிஞர் ஜெயபாரதன்– * பதிவுகள் இணைய இதழில் (ஆகஸ்ட் 2002 இதழ் 32) வெளியான கட்டுரை. அன்று திஸ்கி எழுத்தில் வெளியான கட்டுரை, இன்று ஒருங்குறியில் மீள்பிரசுரமாகின்றது. அறிவியல் அறிஞர் ஜெயபாரதன் எழுதி அன்று திஸ்கி எழுத்துருவில் ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியான ஏனைய அறிவியல் கட்டுரைகளும் ஒருங்குறி எழுத்துருவில் படிப்படியாக மீள்பிரசுரமாகும். –


சூரியன் ஓர் அணுப் பிணைவுத் தீப்பந்து!

சூரியன் பிணைவுச் சக்தியை [Fusion Energy] உற்பத்தி செய்யும், பிரம்மாண்டமான ஓர் அணுக்கருப் பிழம்பு உலை [Plasma Reactor]! அண்ட வெளியில் ஆயிரம் ஆயிரம் சூரியன்கள், சுய ஒளி விண்மீன்கள் அணுப் பிணைவுச் சக்தியைத்தான், பிரபஞ்சம் தோன்றியது முதல் வாரி இறைத்து வருகின்றன! 4000 மில்லியன் ஆண்டுகளாக, சூரியன் வினாடிக்கு 40 கோடி பில்லியன் MW வெப்ப சக்தியைத் தொடர்ந்து வெளியாக்கிக் கொண்டிருக்கிறது! தீக்கோளத்தின் நடுப் பகுதி உஷ்ணம் 20 மில்லியன் டிகிரி K! சூரியவாயு அழுத்தம், பூவாயு [Earth’s Atmosphere] அழுத்ததை விட 400 மில்லியன் மடங்கு மிகையானது! சூரிய கோள அமைப்பு, வெங்காயத் தோல்கள் போல் அடுக்கடுக்காக இருக்கிறது. வாயுக்களின் அடர்த்தி [Density] ஈயத்தைப் போல் 12 மடங்கு. சூரியன் பேரளவு உஷ்ணத்தில், தன் ஈர்ப்புப் [Gravitation] பேரழுத்தத்தில், வினாடிக்கு 4 மில்லியன் டன் வாயு அணுக்கருத் துகள்களைப் பிணைத்து, அளக்க முடியாத பிணைவு சக்தியை உண்டாக்கு கிறது. ஒரு தம்ளர் நீரில் உள்ள ஹைடிஜன் வாயுவைப் பிரித்துப் பிணைக்க முடிந்தால், அதிலிருந்து வெளியாகும் சக்தி 600 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் எரிந்துதரும் சக்திக்குச் சமமாகும்! ஆனால் பூமியில் பிணைவுச் சக்தியைத் தூண்டி வெளிப்படுத்த, உலைகளில் சூரியவாயு போல் பேரழுத்தமும், பெருமளவு உஷ்ணமும், விஞ்ஞானிகளால் உண்டாக்க முடியுமா?

1952 நவம்பர் முதல் தேதியில் அமெரிக்காவும், 1953 ஆகஸ்டு 20 இல் ரஷ்யாவும் வெப்ப அணுக்கரு ஆயுதமான [Thermo-Nuclear Weapon] ஹைடிரஜன் குண்டைத் [H-Bomb] தயாரித்து முதன் முதல் ஒரு குட்டிச் சூரியனை உண்டாக்கி வெடிக்க வைத்து வெற்றி பெற்றன. ஆனால் அணுப்பிணைவுப் பிழம்பை ஓர் உலை அரணுக்குள் அடக்கி நீடிக்கச் செய்ய எந்த நாட்டு விஞ்ஞானியாலும் இதுவரை முடியவில்லை! அப்பெரும் முயற்சிதான் அகில உலகில் இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகளுக்கு மிகச் சிக்கலான பொறிநுணக்கப் பிரச்சனையாகவும் திறமைக்குச் சவாலாகவும் ஆகியிருக்கிறது!

மின்சக்திப் பற்றாக் குறை உலக நாடுகளில் மெதுவாகத் தலை தூக்கி யிருக்கிறது! செல்வம் கொழித்த மேலை நாடுகளிலும் பற்றாக் குறையால் பல தொழிற்சாலைகள் பாதிக்கப் பட்டு வருகின்றன! சமீபத்தில் அமெரிக்காவில் மின்சக்திப் பற்றாக் குறை கலி·போர்னியாவில் தலை விரித்தாடி வர்த்தகங்களும், வாணிபத் தொழில்களும் கதவுகளை மூடி, பலர் வேலைகள் இழந்ததை யாவரும் அறிவர்! சென்ற நூற்றாண்டில் திரீமைல் தீவு, செர்நோபிள் அணுசக்தி நிலையங்களில் பெரும் விபத்து நேர்ந்து, கதிரியக்கத்தால் தீங்குகள் விளைந்து, புது அணுசக்தி நிலையங்கள் அமெரிக்காவில் கட்டப் படாமல் நிறுத்தப்பட்டன.

Continue Reading →

மெய்யியல் கற்றல் கற்பித்தல்- 8

- ஆதவன் கதிரேசர்பிள்ளை (பிரான்சு) -இனி ஆழமாகப் போகலாம். இருப்பு வாதம் இரு பெரும் பிரிவாய் வளர்ந்தது. முதலில் இருப்புவாதம் என்றால் என்னவெனக் கற்றுக் கொள்வோம். ஒன்றின் இருப்பினை அதன் இருப்பு தீர்மானிக்கிறதா..? அல்லது அதன் கருத்து (சாரம்) தீர்மானிக்கிறதா என்று கேட்டனர். உதாரணம்> ஆதவனின் இருப்பை ஆதவனின் தற்போதைய இருப்பு தீர்மானிக்கிறதா..? அல்லது அவன் முழு வாழ்வின் சாரம் தீர்மானிக்கிறதா..? -நான் என்பது என் உடம்பு மட்டுமே- என நீட்சே ஓரிடத்தில் சொல்வார்.

ஆக, ஒன்றினது இருப்பை அதன் இருப்புத்தான் தீர்மானிக்கிறது எனச் சொல்வோர் –இருப்புவாதிகள்- என அழைக்கப்பட்டனர். மற்றையோர் –சாரவாதிகள்- என அழைக்கப்பட்டனர். இருப்புவாதிகள்—எக்சிஸ்ரென்சியலிஸ்ற். சாரவாதிகள்—எசென்ஸ்சியலிஸ்ற்.

இருப்புவாதிகளும் தங்களுக்குள் மோதுண்டு இரு பெரும் பிரிவாகினர்.

1. தீயிஸ்ற் எக்சிஸ்ரென்சியலிஸ்ற். (இறை இருப்பை ஏற்றுக்கொண்ட இருப்புவாதிகள்)
2. ஏதீஸ்ற் எக்சிஸ்ரென்சியலிஸ்ற். (இறை இருப்பை ஏற்றுக் கொள்ளாத இருப்புவாதிகள்)

இதனைத் தமிழில்- ஆத்திக இருப்புவாதிகள் நாத்திக இருப்புவாதிகள் எனப் புரிந்து கொள்ளலாம்.

ஆத்திக இருப்புவாதிகளில் மிகப் பிரபல்யமானவர் நான் வாழும் நாட்டில்(டென்மார்க்) வாழ்ந்த சோர்ண் கியர்க்ககோட் என்பவர். இவரை இருப்புவாதத்தின் தந்தை என நவீன மெய்யியலாளர் அழைப்பர். இவர் பாகம் பாகமாய் எழுதிய நூல்கள் டென்மார்க்கின் மூலைமுடுக்கிலுள்ள கிராம நூல்நிலையங்களிற்கூடக் கிடைக்கும். பல மொழிகளிலும் மொழிபெயர்த்து உலகின் சகல பல்கலைக்கழகங்களிலும் கிடைக்கும்.

Continue Reading →

மீள்பிரசுரம்: கால எந்திரம் ஒன்றைக் கட்டமைப்பது எப்படி?:

ஸ்டீபன் ஹாக்கிங்ஹலோ. என் பெயர் ஸ்டீபன் ஹாக்கிங். இயற்பியலாளன், பிரபஞ்சத்தோற்றக் கோட்பாட்டாளன், ஒருவிதக் கனவாளி. என்னால் நகர முடியாது என்றாலும், கணினி ஊடகம் வழியாகப் பேச முடியும். என் மனதால் நான் சுதந்திரமானவன். காலத்தினுள் பயணிப்பது சாத்தியமா? இறந்தகாலத்துக்குச் செல்லும் நுழைவாயிலைத் திறக்க நம்மால் முடியுமா? அல்லது எதிர்காலத்துக்குச் செல்லும் குறுக்குவழி ஒன்றைக் கண்டுபிடிக்க முடியுமா? இயற்கையின் விதிகளைப் பயன்படுத்தி நாம், சாசுவதமாக காலத்தின் மேல் ஆதிக்கம் செலுத்துபவர்களாக மாற முடியுமா? : இவை போன்ற மகத்தான கேள்விகளைக் கேட்கவும் பிரபஞ்சத்தைத் துருவி ஆராயவும், சுதந்திரம் கொண்டவன்.

ஒருகாலத்தில், காலப் பயணம் பற்றிப் பேசுவதே விஞ்ஞான நிந்தனையாகக் கருதப்பட்டது. ஒரு பித்துக்குள்ளியாக முத்திரை குத்தப்படலாம் என்ற பயத்தில், நான் இதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து விடுவது வழக்கம். ஆனால் இன்றைய தினங்களில், நான் அப்படியொன்றும் எச்சரிக்கையுடன் இருப்பதில்லை. உண்மையில், ஸடோன்ஹெஞ்ச் கட்டிய ஜனங்களைப் போன்றவனாய் நான் இருக்கிறேன். காலம் பற்றிய சிந்தனை என்னை ஆட்டிப்படைக்கிறது எனலாம். என்னிடம் ஒரு கால எந்திரம் இருந்தால், மர்லின் மன்றோவை அவளது உச்சநிலைக் காலத்தில் போய் சந்திப்பேன். அல்லது ஆகாயவெளியை நோக்கி தனது தொலைநோக்கியைக் கலிலியோ திருப்பிய சமயத்தில் அங்கே போய்ச் சேர்வேன். பிரபஞ்சத் தோற்றத்தின் கதை எப்படி முடிவுக்கு வருகிறது என்பதைக் கண்டடைய நமது பிரபஞ்சத்தின் இறுதிக்குப் பயணம் போவதற்கும், ஒருவேளை நான் முனையலாம்.

இது எவ்விதத்தில் சாத்தியம் என்று பார்க்க, இயற்பியல்காரர்கள் காலத்தைக் கவனிப்பதுபோல், நாம் பார்ப்பது அவசியமாகிறது – நான்காவது பரிமாணத்தில். அது அப்படியொன்றும் கடினமானதல்ல. எல்லா தூலப் பொருள்களுக்கும் – எனது நாற்காலியில் அமர்ந்தபடி இருக்கும் எனக்கும்கூட – பரிமாணங்கள் இருக்கின்றன என்பது கவனமுள்ள எந்தவொரு பள்ளிப்பிள்ளைக்கும் தெரிந்ததே. எல்லாப்பொருள்களுக்கும் அகலம், உயரம், நீளம் உண்டு. ஆனால், இன்னொருவகை நீளம் இருக்கிறது – காலத்தின் நீளம். மனிதன் ஒருவன் 80 ஆண்டுகள் உயிர் பிழைத்திருக்கலாம். எடுத்துக்காட்டாக, ஸ்டோன்கெஞ்சில் உள்ள கற்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் குழுமி நின்று கொண்டிருக்க முடியும். சூரிய மண்டலமோ கோடிக்கணக்கான ஆண்டுகள் நிலைத்திருக்கலாம். அனைத்தும், காலத்தின் நீளத்தையும் அதேபோல் வெளியின் நீளத்தையும் பெற்றிருக்கின்றன. காலத்தினுள் பயணித்தல் என்பதன் அர்த்தம், இந்த நான்காவது பரிமாணத்தினூடே பயணிப்பதுதான்.

Continue Reading →

மெய்யியல் கற்றல் கற்பித்தல் -7

இம்மானுவேல் கான்ற்.

இம்மானுவெல் கான்ற்- ஆதவன் கதிரேசர்பிள்ளை (பிரான்சு) -அப்பாடா… இவரின்றி மெய்யியலுலகே அசையாதென்பர் இவரை அறிந்தோர்.
இரு பெரும் பிரிவுகளாய் அறிவுலகு பிரிந்திருந்தது.

1. ஞான அறிவு
2. அனுபவ அறிவு.

2 ம் 2 ம் நாலு என்பது அனுபவ அறிவல்ல. 2 மனிதரும் 2 மனிதரும் 4 மனிதராய் அதோ தெரிகிறார்கள் பார். என்பது அனுபவ அறிவு.

முக்கோணம் 3 கோணங்களை உடையது. இதற்கு அனுபவம் தேவையில்லை. முக்கோணம் பற்றிய ஞான அறிவு வேண்டும். ஆனால், அந்த முக்கோணம் சற்றுச் சரிந்திருக்கிறதென்றால்…அதற்கு அனுபவ அறிவு வேண்டும்.

1. உயரமான மனிதன் ஒரு மனிதன். (ஞான அறிவு)
2. உயரமான மனிதன் நீலச் சட்டை அணிந்துள்ள ஒரு மனிதன். (அனுபவ அறிவு)

Continue Reading →

மெய்யியல் கற்றல் கற்பித்தல் பாகம் 6.

லுட்விக் விற்கிஸ்ரைன்ற்- ஆதவன் கதிரேசர்பிள்ளை (பிரான்சு) -சிலபோதுகளில் ஏன் மெய்யியலைக் கற்கவேணும் இதனால் என்ன பயன் என்கிற கேள்விகளைப் பலர் கேட்பர். மெய்யிலுக்கான பயன்பாடு என்ன? தத்துவத்தால் என்ன பயன்..? பயன்பாட்டு வாதம் ஒரு புறமிருக்கட்டும்.

லுட்விக் விற்கிஸ்ரைன்ற் எனும் மொழியியல் மெய்யியலாளரிடம் போகலாம். அவர் சொன்னார்- ஒரு போத்தலுக்குள் ஒரு ஈ அகப்பட்டுவிட்டது அந்த ஈ ஐ எவ்வாறு விடுவிக்கலாம்- இதுவே மெய்யியல். எல்லோரும் அகப்பட்டுவிட்ட ஈ ஆ மெய்யியல்?

அவர் இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த மெய்யிலாளர் என்பது என் கணிப்பு. பாரிய பிரச்சினைகளை அவர் தீர்த்தார்.

1) தனியன் ஒன்றைச் சுட்டும் பொழுது அது வெறுமனே தனியனைச் சுட்டுகிறதா.? அல்லது பொதுவைச் சுட்டுகிறதா..? உதாரணமாக – மரம் – எனும் தனியனை நாம் சுட்டும் பொழுது.. அந்த மரம் இந்த மரம் எனச் சொல்கிறோம். ஆனால் –மரம்- என்பது எதைச் சுட்டுகிறது ? பொதுக் கருத்து என்பது என்ன..? பொதுவிலே ஒரு கருத்து இருக்கமுடியுமா..? -அழகு- என்பது தனிச்சொல்லா..? பொதுச் சொல்லா..?

இப்படியாகப் பல கேள்விகளை அவர் கேட்டார். ஈற்றில் சொல்= அர்த்தம்= பயன்பாடு என்கிற சமன்பாட்டை நிறுவினார்.

இவருக்கு முன்னோர்கள் சொல்=அர்த்தம் என்பதுடன் நின்றுவிட்டனர். இவரே உலகிற்கு முதன்முதலில் சொன்னார் சொல்லுக்கு அர்த்தம் மட்டுமில்லை அதற்கொரு பயன்பாடும் இருக்கிறதென்று.

-கூப்பிடுதொலை- இந்தச் சொல்லின் அளவீடு என்ன..? எத்தனை மீற்றர்.

Continue Reading →