படித்தோம் சொல்கின்றோம்: தமிழகத்தில் வெளியாகும் தளம்

படித்தோம்  சொல்கின்றோம்: தமிழகத்தில் வெளியாகும் தளம்‘முரண்படுதலுக்கான  காரணங்களைக்காட்டிலும், ஒன்றுபட்டு செயல்படுவதற்கான காரணங்கள்  வலுவானவை’ என்ற கருத்தை  முன்னிருத்தி தமிழ்நாட்டிலிருந்து இந்த (2013) ஆண்டு  முதல்  வெளியாகும் தளம் கலை, இலக்கிய காலாண்டிதழின்;  ஏப்ரில்,  மே,  ஜூன்  இதழ்  சமீபத்தில் கிடைத்தது. நாடகச்சிறப்பிதழாக  வந்துள்ள இவ்விதழ்  தமிழ்த்தூது  தனிநாயகம்  அடிகளார்  பற்றிய  ஆக்கத்தையும்  பதிவுசெய்து அன்னாரின் நூற்றாண்டு  காலத்தையும்  மறக்காமல் நினைவுபடுத்தியுள்ளது. தளம் இதழை  உலகெங்கும்  வாழும் கலை, இலக்கிய,  நாடக,  திரைப்படச்சுவைஞர்கள்  படிக்கத்தக்கதாக  தற்பொழுது இணையத்திலும் பார்க்கமுடிகிறது. தளம் மூன்றாவது  இதழும்  வெளியாகியுள்ளது.

தளம்  விடுக்கும்  வேண்டுகோள்:
வாசகர் – படைப்பாளி – வாசகர் – விமர்சகர் என 1970களிலிருந்து தமிழ் சிற்றேடுகள் தீவிரமான இலக்கிய இதழ்கள்முனைப்பான படைப்பிலக்கியத்தை உருவாக்கியுள்ளன. தமிழ்நாடு , தமிழ் பேசும் அனைத்து பகுதிகளிலிருந்தும்  இம்முனைப்பு காரணமாக படிப்புத்திறனும், படைப்புத்திறனும் வலுப்பெற்றன. இத்தொடர் ஓட்டத்தில் இப்போது தளம் கலை இலக்கிய இதழ் இணைந்துள்ளது. வலுவான, முனைப்பான, தீவிரமான வாசக வளையங்களை தமிழ் இளைஞர்களிடையே உருவாக்கி, கூர்மையான  விவாதங்கள் மூலம்  திக்குத்தெரியாத எழுத்தாக படைப்பிலக்கியம் செல்லும் நிலையிலிருந்து மீட்டு நோக்கப்படுத்துவது சாத்தியம் என தளம் கருதுகிறது.

இம்முயற்சியில் இவ்விதழை மேலும் உரிய தளத்திற்கு எடுத்துச்செல்ல, வரக்கூடிய புதிய இளம்படைப்பாளிகளை தளம் வரவேற்பதுடன், அவர்கள் வசம்  இத்தளத்தை மாற்றித்தந்து செல்ல வேண்டும் எனக்கருதுகிறது. எனவே, முனைப்பான வாசகர்களின் படைப்பாளிகளின் உறுதுணையை எல்லா வகையிலும் தளம்  எதிர்நோக்குகிறது. தங்கள் படைப்புகளை   யூனிகோட்டில்  thalam.base@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு   அனுப்பக்கேட்டுக்கொள்ளப்படுகிறது.  தங்கள் நன்கொடைகளை   வுர்யுடுயுஆ  என்னும் பெயரில் பணவிடையாகவோ, வரைவோலையாகவோ, வங்கிக் காசோலையாகவோ  அனுப்பலாம். அனுப்ப   வேண்டிய    முகவரி : எண்.46/248, பீட்டர்ஸ்ரோடு  இராயப்பேட்டை, சென்னை – 600 014. போன் : 044 – 2848 5000. செல் : 9445281820 (அல்லது) இந்தியன் வங்கியின் எந்தக் கிளையிலும் தொகையை  பின்வரும் வங்கிக் கணக்கில் நேரடியாக  டெபாசிட் செய்யலாம்.

THALAM  current A/c. No. 6087653615-ல் Indian Bank, Tamilnadu Open University Branch,    Saidapet, Chennai – 15.   செலுத்தலாம். IFSC Code : IDIBOOOT146, MICR CODE: 600019228  வங்கிக்  கணக்கில் நேரடியாக தொகை செலுத்துபவர்கள்     தகவலை     தெரிவிக்கக்    கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

முரண்படுதலுக்கான காரணங்களைக் காட்டிலும் ஒன்றுபடுதலுக்கான காரணங்கள் வலுவானவை. தீவிர வாசகத் தேடலுடைய   அனைத்து நண்பர்களையும் தளம் வரவேற்கிறது. தளம்  முதலாவது இதழ் இலக்கிய முன்னோடி சி.சு. செல்லப்பா  நினைவுத்தொகுப்பாக வெளியானது. இரண்டாவது இதழில்  எழுதப்பட்டுள்ள ஆசிரியதலையங்கம் உரையாடலுக்குரியது. விவாதிக்கப்படவேண்டியது.
ஏனைய  இயக்கங்கங்களை  ஒழித்துக்கட்டிவிட்டு, தாம் மாத்திரமே ஏகபோக சக்திகளாக  விளங்கி முன்னணியில் நின்ற விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கு இலங்கையும்  இந்தியாவும் சில சர்வதேச சக்திகளும் இணைந்த சமகாலத்திய  வரலாறு  பற்றி 2009 மே மாதத்திற்குப்பின்னர் தொடர்ந்தும் பலரால் எழுதப்பட்டுவருகிறது.

தளம் இதழும் தனது பங்கிற்கு, “தங்களது மக்களுக்காக எழுந்தவர்கள் ‘குற்றங்களும்’ எழுந்தவர்களோடு அவர்களின் குஞ்சுகுளுவான்களையும் மண்ணோடு மண்ணாய் தேய்த்து  அழித்த அழிக்கின்ற ஆதிக்க வெறியர்களின் ‘குற்றங்களும்’ஒன்றெனவே   பார்க்கப்படவேண்டும் என ‘ஓநாய்களின்’ நியாயம் பேசுபவர்களை பார்த்து மலைப்பு ஏற்படுகிறது” என்று ஆசிரியத்தலையங்கத்தில்  குறிப்பிட்டுள்ளது.

எனவே வாசகர்களிடம் அந்த விவாதத்தை விட்டுவிட்டு, தளம் இதழின் உள்ளடக்கம்பற்றிப்பார்ப்போம். புறநானூறு, நற்றிணை,    குறுந்தொகை, கலித்தொகை, முதலானவற்றை அடிப்படையாகக்கொண்டு இன்குலாப் எழுதிய நாடகம்  பல்சான்றீரே,  மற்றும்  உலகநாடக அரங்கில் ஒளியமைப்பாளன் என்ற அடையாளத்துடன் திகழ்ந்தவர்களைப்பற்றிய கட்டுரை (ஒளியின்  ஊடாக – செ.ரவீந்திரன்,) மராத்திய நாடகங்கள் அன்றும் இன்றும் (மதியழகன்  சுப்பையா)  நாடகவியல் மேதை  பெர்டோல்ட்  ப்ரெக்ட்   ( வீ. விஜயராகவன்)   உலக அரங்க தினமும் (மார்ச் 27)அது தொடர்பான சிந்தனைகளும் (எஸ்.எம்.ஏ. ராம்)  தமிழ் நாடகச்சூழல் ( எஸ்.சுவாமிநாதன்)      பொறுப்புகள் அதிகம்கொண்டவன் சமூக   அக்கறை  கொண்டவன்  கலைஞன் ஓவியர்  சிற்பி ஜெயராமன் (நேர்காணல்  ஓவியர் அன்பழகன்) முதலான  பதிவுகளுடன் ரஷிய படைப்பாளி ஆன்டன் செக்காவின் ஆண்டு விழா (ஓரங்க நையாண்டி நாடகம்)   உட்பட கவிதைகள், சிறுகதைகளுடன் தளம் இரண்டாவது  இதழ்  வெளியாகியுள்ளது. தமிழாரய்ச்சிக்கு வித்திட்ட இலங்கையின்  தமிழ்த்தூது தனிநாயகம்  அடிகளாரை தமிழகம் மறந்துவிட்டதோ என்ற கவலையில் இருந்தோம். கலைஞர் நடத்திய செம்மொழி மாநாட்டிலும்  அவர் மறக்கப்பட்டார். மறைக்கப்பட்டார். ஆனால் தனிநாயகம்  அடிகளாரின் நூற்றாண்டு வந்ததும் தமிழகத்தின் கண்கள்  திறந்தன. தளம் இரண்டாவது இதழ், தமிழ்க்கலாச்சாரமும் தவத்திரு  தனிநாயக அடிகளாரும் (1913-2013)   என்ற  தலைப்பில்  எஸ். ஆல்பர்ட்டின்  ஆழமான ஆக்கத்தை வெளியிட்டு, அடிகளாரை  தமிழக வாசகர்களுக்கு   அறிமுகப்படுத்தியிருக்கிறது. வெளிநாடுகளில் வதியும் வாசகர்கள் தளம் இதழ்களை www.thalamithazh.com இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

letchumananm@gmail.com