கவிதை: சொற்கள்போல் ஒளியை விழுங்குதல்

துவாரகன்

இருட்காட்டில் ஒளியைக் கண்டுகொண்டவன்
அதைச் சொற்கள் போல் விழுங்கிவிட்டான்.
சொல்… விழுங்கினால் திக்கும்.
யாருக்கும் எதுவும் புரியாது.

 வேடதாரி ஒளியை விழுங்கினான்.
அது தொண்டைக்குழியில்
மீள்முள் போல் சிக்கிக்கொண்டது.

பாட்டன் சொன்ன கதைகள் போல்
கனவுகண்டான்
ஒளி உமிழ்நீரில் கரைந்துவிடும் என்று.
ஒளி இரைப்பையில் சமிபாடடையும் என்று.
குருடன் அடித்த கதையாய் காத்திருந்தான்
ஒளி அசைவற்றுக் கட்டியாகியது.

இன்னமும்
ஆட்டுக்குட்டியை விழுங்கிய
வெங்கடாந்திப் பாம்புடல்போல்
துருத்திக் கொண்டிருக்கிறது ஒளி

kuneswaran thuvarakan <kuneswaran@gmail.com