‘பதிவுகளி’ல் அன்று: ஜெயமோகனின் கட்டுரைகள் சில ..

[ ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளிவந்த எழுத்தாளர் ஜெயமோகனின் கட்டுரைகள் சில. பதிவுகளின் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர் ]

பதிவுகள் செப்டம்பர் 2003; இதழ் 45

சாப்ளின்

ஜெயமோகன்சார்லி சாப்ளின் நடித்த படத்தை நான் பார்த்தது ஒன்பதாம் வகுப்பில் படிக்கும்போது . வாழைக்குலைகள் விற்க  அதிகாலைச்சந்தைக்கு போனால் இரண்டாம் ஆட்டம் படம் பார்ப்பது பொதுவான வழக்கம். குலைகளுக்கு காவலாக நிற்பவனுக்கு தலைக்கு பத்துபைசா கூலிதருவோம். அருமனையில் ஓலைக்கொட்டகைதான் . மழை பெய்ய ஆரம்பித்து விட்ட படங்கள்தான் அதிகமும் வரும் .பொதுவாக அன்றெல்லாம் புதிய படங்களைவிட பழைய படங்களைத்தான் எல்லாரும் விரும்பிப் பார்த்தார்கள். படங்கள் சாவகாசமாக இருக்கவேண்டும், கொஞ்சம் தூங்கி எழுந்தால் கூட ரொம்பதூரம் ஓடியிருக்கக் கூடாது. பன்னிரண்டுமணிக்கு தொடங்கும் ஆட்டம் காலைநான்குமணிவரை நீளவேண்டும்.ஆகவே ஓவல்டின், ரெமி முகப்பவுடர், சைபால் கால்களிம்பு  முதலிய விளம்பரங்கள் முடிந்தபிறகு துண்டுபடங்கள்போடுவார்கள். லாரல் ஹார்டி நகைச்சுவை, மிக்கி மௌஸ் கார்ட்டூன் இவற்றுடன் சாப்ளின் படமும் இருக்கும். சாப்ளின் ‘கோணக்கால்’ என்று சொல்லப்பட்டார் . லாரல் ஹார்டி மல்லனும் மாதேவனும் என்றும் கார்ட்டூன்படங்கள் பொம்மலாட்டம் என்றும் குறிப்பிடப்பட்டன.  

 கொட்டகையின் சொத்தாக இருந்து அனேகமாக தினமும் காண்பிக்கப்படும் இப்படங்களை எல்லாருமே பலநூறுமுறை கண்டிருப்பார்கள். படத்தில் தெளிவாக எதுவுமே தெரியாது இருந்தாலும் ஜனங்கள் பயங்கரமாக கூக்குரலிட்டு கூவி சிரித்து ரசிப்பார்கள். நான் பார்த்த சாப்ளின் படம் ஏதோ சம்பந்தமில்லாத நிழலசைவுகளாகவே இருந்தது . அதில் சிரிக்க என்ன இருக்கிறது என்றே எனக்குப் புரியவில்லை.

பலவருடங்கள் கழித்து பெங்களூர் அரங்கு ஒன்றில் நடந்த திரைப்படவிழாவில் சாப்ளினின் எல்லா படங்களையும் பார்த்தேன்.  பெரும்பாலான சமகால எழுத்தாளர்களைப் போலவே நானும் கோமாளியான தத்துவ ஞானியின் ரசிகனானேன் .

என் வீட்டில் எங்களுக்கு சொந்தமாக இருக்கும் திரைப்பட சிடிக்கள் இரண்டுதான். இரண்டுமே சாப்ளின் படங்கள் . என் குழந்தைகள் அஜிதன்[9] சைதன்யா[5] இருவருக்கும் சாப்ளின் மீது மோகம் பக்தி பரவசம் எல்லாமே உண்டு.எல்லா சனி ஞாயிறுகளிலும் இருபடங்களையும் ஒரு சடங்கு போல தவறாமல் பார்த்துவிடுவார்கள். இந்த வெறி எல்லையை மீறுகிறதோ என்று எனக்கு சந்தேகம்.

மேலும் நான் மிகமுக்கியமாக ஏதேனும் செய்துகொண்டு இருக்கும்போது அந்த இசை தேவையில்லாத நடன அசைவுகளை என் உடலில் உருவாக்கி விடுகிறது .சாப்ளின் சீரியஸான ஆள் இல்லை கோமாளிதான் என்று சொல்லிப்பார்த்தேன். சைதன்யா வாஜ்பாய் கூடத்தான் சாப்ளின் மாதிரி ஆடுகிறார்சென்று சொல்லி ஒரு நாள் காட்டவும் செய்தாள். அப்போது தொலைக்காட்சி மின்னழுத்தக்குறைவால் நெளிந்து கொண்டிருந்தது. வாஜ்பாய் இடுப்பை மட்டும் நெளித்து காக்ரா நடனம் ஆடினார்.

திடீரென்று மென்பொருள் கோளாறு ஏற்பட்டு படம் பார்க்கமுடியாமலாயிற்று . ஒலி மட்டும்தான். நானும் அப்படியே விட்டுவிட்டேன். ஒரு சனியன்று அறைக்குள் இசைகேட்க எட்டிப் பார்த்தேன். ஒரே ஆட்டமாக இருந்தது. என்ன இங்கே என்றேன். ”சாப்ளின் ஆட்டம் அப்பா” என்றாள் சைதன்யா. ஆரம்பத்தில் வெறுமே இசையை மட்டும் வைத்துக் கேட்டு காட்சிகளை கற்பனையில் கண்டு சிரித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்.  பிறகு அஜிதன் சாப்ளின் ஆக நடிக்க ஆரம்பித்தான் .மற்ற அத்தனை கதாபாத்திரங்களும் சைதன்யா. ஆட்டம் கற்பனைகள் நிறைந்து படர்ந்து பல திசைகளுக்கு சென்றது . சாப்ளின் பள்ளி ஆசிரியர்களை அறவே வெறுத்தார். முதல் இடமாண்வனை குத்தினார்.  பிறகு இசையே வேண்டாம் என்றாயிற்று. நானும் ஆட்டத்தில் புகுந்து சாப்ளினிடம் உதை வாங்கும் குண்டுமனிதனோ போலீஸ்காரனோ ஆனேன். சாப்ளின் விளையாட்டு மேலும் நுட்பங்கள் கொண்டதாக மாறியது. எங்கும் எப்போதும் ஒரு புருவத்தூக்கலினாலோ முகச்சுளிப்பினாலோ சாப்ளினை கொண்டுவந்துவிடலாம் என்றாயிற்று. சாப்ளினுக்கு சிரிப்பூடும் நபர்கள் மட்டுமல்ல சாப்ளினே எங்கும்கண்ணில் பட ஆரம்பித்தார் .பேருந்தில் பள்ளிக்கு செல்லும் போது சைதன்யா என்னருகே உட்கார்ந்து “அப்பா இண்ணைக்கு சாப்ளின் யாரு?” என்பாள்.  குடை கண்டபடி மாட்டி இறங்கச் சிரமப்படும் ஆசாமி, கண்ணாடியை தூக்கிவிட்டு முகசுளிக்கும் அந்த பள்ளி ஆசிரியர்.

யார்வேண்டுமானாலும் சாப்ளினாகலாம். அக்கணமே சைதன்யா கண்டு வாயைப்பொத்தி சிரிப்பை அடக்குவாள். கண்கள் மட்டும் ஒளிவிடும். அத்தனை பேரிலும் மூடிகளை தூக்கி சாப்ளின் பொங்கிக் கசிந்துகொண்டே இருக்கிறார்.

இப்போது சாப்ளின்படங்களை பார்ப்பதில்லை. அவை சாப்ளினை ஒரு தனிமனிதராக மாற்றிவிடுகின்றன.

[சண்டே எக்ஸ்பிரஸ் இதழில்  ரைட்டர்ஸ் நோட்ஸ் பகுதியில் வெளியானது. தமிழாக்கம் அருண்மொழிநங்கை]

– பதிவுகள் செப்டம்பர் 2003; இதழ் 45 –