தொடர் : வெற்றியின் இரகசியங்கள் (1): அத்தியாயம் ஒன்று: இன்பம் என்பது என்ன?

அ.ந.கந்தசாமியின் வெற்றியின் இரகசியங்கள்அறிஞர் அ.ந.கந்தசாமிஅ.ந.கந்தசாமி நினைவு தினம் பெப்ருவரி 14!

– அறிஞர் அ.ந.கந்தசாமி எழுதித் தமிழகத்தில் பாரி பதிப்பக வெளியீடாக 1966இல் வெளியான நூல் ‘வெற்றியின் இரகசியங்கள்’. வாழ்வின் வெற்றிக்கு அறிவுரைகள் கூறும் சிறந்த தமிழ் நூல்களிலொன்று. இந்நூலில் அ.ந.க மனத்தின் தன்மைகளை, அது பற்றிய நவீன அறிவியற் கோட்பாடுகளையெல்லாம் மிகச்சிறப்பாக, துள்ளு தமிழ் நடையில் எழுதியிருக்கின்றார். அந்த வகையில் சிறந்த உளவியல் நூலாகவும் இதனைக் கொள்ளலாம். இந்நூல் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராக வெளிவரும். – பதிவுகள் –


முனனுரை
அன்றாட வாழ்க்கைக்கு வழிகாட்டும் நூல்களை அறிஞர் பலர் அவ்வப்போது எழுதிப் போயிருக்கிறர்கள். வள்ளுவரின் திருக்குறள், ஒளவையார் கவிகள், காலடியார் போன்றவை இத்தகையன. இவை எக்காலத்துக்கும் பொதுவான வாழ்க்கை வழிகாட்டிகளாக விளங்குகின்றன. ஆனால் தற்காலத்துக்கென்றே இன்றைய உலகின் சூழ்நிலைகளை மனதுட் கொண்டு எழுதப்பட்ட வாழ்க்கை வழிகாட்டி நூல்கள் தமிழில் குறைவு. ஆங்கிலத்திலோ இத்துறையில் ஏராளமான நூல்கள் ஆண்டுதோறும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. டேல் கார்னேஜி, நெப்போலியன் ஹில், ஹேர்பேர்ட் கசன், கோர்மன் வின்சென்ட் பீல் போன்றர் இத்துறையில் மிகப் புகழ்பெற்று விளங்குகிருர்கள். இவர்கள் எழுதிய நூல்கள் இலட்சக்கணக்கில் உலகெங்கும் விற்கப் படுகின்றன. இந்நூல்கள் பலரது வாழ்க்கையின் போக்கையே முற்றாக மாற்றி அமைத்திருக்கின்றன. இவர்களைத் தவிர வாழ்க்கைக்கு வழிகாட்டும் இத்தகைய நூல்களைப் புகழ்பெற்ற சிருஷ்டி இலக்கிய கர்த்தாக்கள் சிலரும் எழுதியுள்ளனர். இவர்களில் நாவலாசிரியர் ஆர்னேல்ட் பெனட் எழுதிய “24 மணி நேரத்தில் வாழ்வதெப்படி?’ ‘மனத்திறன்’  என்பவை முக்கியமானவை. அப்டன் சிங்க்ளெயர் எழுதிய *வாழ்க்கை நூல்’ என்ற வெளியீடும் இத்தகையதே. நோபல் இலக்கியப் பரிசு பெற்ற பேட்ரன்ட் ரசலும் இத்துறையில் மிகச் சிறந்த நூலொன்றை எழுதியுள்ளார். அதன் பெயர் “இன்பத்தை வெற்றி கொள்ளல்” என்பதாகும்.

மேலே கூறிய எழுத்தாளர்களின் நூல்களோடு எனக்கேற் பட்ட பரிச்சயம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் நூலொன்றை நானும் எழுதவேண்டுமென்ற ஆர்வத்தை என்னிடத்தே தூண்டியது. அதன் பலனே இன்று உங்கள் கரங்களில் தவழும் ‘வெற் றியின் இரகசியங்கள்’ என்ற இந்நூலாகும். கல்வி, கேள்வி, அனுபவம் என்ற மூன்றுடன் சிந்தனையும் சேரும் பொழுது அறிவு பிறக்கிறது. இந்நூலிலே கான் கற்றதும் கேட்டதும் அனுபவித்ததும் என் சிந்தனைச் சூளையில் புடம் போடப்பட்டு வெளிவந்துள்ளன. ஒருவன் இவ்வுலகில் இன்ப வாழ்வு வாழுதற்கு இந்நூல் உறுதியாக வழிகாட்டும் என்பதே எனது கம்பிக்கை,

கொழும்பு-2. இலங்கை.
121, மலே வீதி
அ. ந. கந்தசாமி


வாசகருக்கு நூலாசிரியர் கடிதம்

பிரிட்டிஷ் தத்துவஞானி பேட்ரண்ட் ரசல் இதுபற்றி ஒரு அருமையான கருத்தைக் கூறியிருக்கிறர். ஒரு நூலை வாசிப்பவன் முதற் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம்வரை மனதுக்கு இன்பக் குளுகுளுப்பை அளிக்கும் விஷயங்களையே எதிர்பார்க்கக் கூடாது. வாசிப்பதற்குக் கஷ்டமான, சலிப்பை ஏற்படுத்தும் பல பாகங்களையும், அவன் வாசிக்கும்படியே நேரிடும். ஆனால் நூலால் பயனடைய விரும்பும் ஒருவன் அவற்றையும் வாசித்துக் கொண்டே போக வேண்டும். ரசல் இதைப் பின்வருமாறு சொல்லுகிறார் . 'மிகச் சிறந்த நூல்கள் யாவற்றிலும் சலிப்புத்தரும் பகுதிகள் இருக்கவே செய்யும். உண்மையில் மிகச் சிறந்த நாவல்கள் எல்லாவற்றிலும் சலிப்புத்தரும் பகுதிகள் இருக்கவே செய்கின்றன. பைபிள், கோரான், மார்க்ஸின் "மூலதனம்’ இவை யாவற்றிலும் இப்படிப்பட்ட பகுதிகள் இருக்கின்றன. ஆனால் இவையே உலகில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் புத்தகங்கள்! ஒரு நாவல் முதலிலிருந்து கடைசிப் பக்கம்வரை ஒருவனுக்கு எக்களிப்பை ஊட்டுமானுல் அது ஒரு சிறந்த நாவலாக இருக்க முடியுமா என்பது எனக்குச் சங்தேகம்."அன்புக்குரிய வாசகரே, வணக்கம்,

இந்நூலை வாசிக்கும் நீங்கள் இதை எங்கிருந்து வாசிக்கிறீர்களோ நானறியேன், வீட்டிலா, நூல் நிலையத்திலா, ஒடும் ரெயிலிலா, விமானத்திலா, கப்பலிலா, ‘பார்க்” பெஞ்சிலா, படுக்கை அறையிலா, கடற்கரை மணலிலா,- இவற்றில் ஓரிடத்திலாக இருக்கலாம். அல்லது என்னால் கற்பனை செய்தே பார்க்க முடியாத வேறு ஏதாவது இடத்திலாகவும் இருக்கலாம். அது எப்படி என்ருலும் எனது நூலை நீங்கள் வாசிக்கிறீர்கள்அது எனக்கு இன்பமளிக்கும் விஷயம்; உங்களுக்கு இன்ப மளிக்க வேண்டுமென்பதே என் ஆசை. ஆனால் ஒரு நூலை வாசிப்பது இன்பத்துக்காக மட்டுமல்ல. பிரிட்டிஷ் தத்துவஞானி பேட்ரண்ட் ரசல் இதுபற்றி ஒரு அருமையான கருத்தைக் கூறியிருக்கிறர். ஒரு நூலை வாசிப்பவன் முதற் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம்வரை மனதுக்கு இன்பக் குளுகுளுப்பை அளிக்கும் விஷயங்களையே எதிர்பார்க்கக் கூடாது. வாசிப்பதற்குக் கஷ்டமான, சலிப்பை ஏற்படுத்தும் பல பாகங்களையும், அவன் வாசிக்கும்படியே நேரிடும். ஆனால் நூலால் பயனடைய விரும்பும் ஒருவன் அவற்றையும் வாசித்துக் கொண்டே போக வேண்டும். ரசல் இதைப் பின்வருமாறு சொல்லுகிறார் . ‘மிகச் சிறந்த நூல்கள் யாவற்றிலும் சலிப்புத்தரும் பகுதிகள் இருக்கவே செய்யும். உண்மையில் மிகச் சிறந்த நாவல்கள் எல்லாவற்றிலும் சலிப்புத்தரும் பகுதிகள் இருக்கவே செய்கின்றன. பைபிள், கோரான், மார்க்ஸின் “மூலதனம்’ இவை யாவற்றிலும் இப்படிப்பட்ட பகுதிகள் இருக்கின்றன. ஆனால் இவையே உலகில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் புத்தகங்கள்! ஒரு நாவல் முதலிலிருந்து கடைசிப் பக்கம்வரை ஒருவனுக்கு எக்களிப்பை ஊட்டுமானுல் அது ஒரு சிறந்த நாவலாக இருக்க முடியுமா என்பது எனக்குச் சங்தேகம்.”

நான் இந்நூலை எழுதியதின் நோக்கம் இதை வாசிப்பவனுக்குப் புதிய மனோவலிமையை அளிப்பதாகும். மனித மனத்திலே உறைந்திருக்கும் அபார சக்திகள் பலருக்கு தெரிவதில்லை. அவற்றை இன்றைய அன்றாட உளவியலின் அடிப்படையில் சுட்டிக்காட்டி மனிதனுக்குப் புது வாழ்வும் புதுத் தெம்பும் அளிப்பதே எனது நோக்கம். இன்றைய உலகில் பலர் இன்ப வாழ்வு வாழவில்லை. அவர்களுக்கு வாழ்க்கைக் கலையை உணர்த்த வேண்டுமென்ற ஆசையில் இந்நூலை நான் எழுதியுள்ளேன். ரசல் இன்னோரிடத்தில் சொல்லுவது போல “இன்றைய மனிதரின் துன்ப வாழ்வுக்கு சமுதாய அமைப்பு ஓரளவிலும், தனிமனித மனோநிலை ஓரளவிலும் காரணமாயிருக்கிறது.” பின்னால் சொன்ன தனி மனித மனோநிலைகூடப் பெருமளவுக்குச் சமுதாய அமைப்பு முறையின் விளைவுதான். ஆகவே மனிதன் இன்பவாழ்வு வாழவேண்டுமானுல் சமுதாய அமைப்பு முறையில் மாற்றம் கண்டேயாகவேண்டும். அதே நேரத்தில் தனி மனிதனின் மன வளர்ச்சியும் இன்ப வாழ்வுக்கு அத்தியாவசியம், இதில் முதலாவது வேலையைச் செய்ய உலகில் அரசியல் சமு தாu இயக்கங்கள் பல இன்று செயலாற்றி வருகின்றன. இந் நூலைப் பொறுத்தவரையில் இரண்டாவது தேவையான மனித னின் மன வளர்ச்சி என்ற துறைக்கு உதவுவதே இதன் நோக்கம். இதில் நான் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறேன் என்பதை என்னாற் சொல்லமுடியாது. வாசகராகிய நீங்கள் தான் சொல்லவேண்டும். வாசகரே, இந்நூல் எவ்வளவு தூரம் உங்களுக்குப் பயனளித்திருக்கிறது என்பதை நான் அறிய விரும்புகிறேன். இந்நூலைப் பற்றிய . உங்கள் கருத்தை ஒரு கடிதமூலம் எனக்கு அறியத் தருவீரானால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். நூலாசிரியனுக்கு வாசகனே ஆதாரம். அதனுல் தான் உங்கள் கருத்துக்கு இத்தகைய மதிப்புத் தருகிறேன். நண்பரே, இக் நூல் உண்மையில் பயனுள்ள ஒரு நூல்தான், வாழ்க்கைக்கு வழிகாட்டவல்ல அம்சங்கள் இதில் இருக்கவே இருக்கின்றன என்று நீங்கள் கருதும் பட்சத்தில் ஒரு நல்ல காரியத்தை நீங்கள் செய்யலாம், உங்கள் அன்புக்குரியவர்களுக்கு இதைத் திருமணப் பரிசாக, பிறந்த நா பரிசாக, புதுவருடப் பரிசாக அனுப்பி வையுங்கள். பரீட்சையில் சித்தி எய்திய மாணவ மாணவிகளுக்கு ஊக்கப் பரிசாக அளிக்கவும் இந்நூல் போல் வேறு நூலில்லை என்பது எனது கருத்து. உங்கள் கருத்தும் அதுவேயானால் அவ்வாறே இந்நூலைப் பரிசாக அனுப்பி வையுங்கள். ‘நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.”

உங்கள் வாழ்க்கை எல்லாவகையிலும் சிறப்படைவதாக,

உங்கள் நண்பன்
அ. ந. கந்தசாமி
பாரி நிலையம்
59, பிராட்வே சென்னை-1.


பொருளடக்கம்

1. இன்பம் என்பது என்ன?
2. மனத்தின் தன்மைகள்
3. எமில்கூ காட்டிய வழி
4. சுயவசியம் செய்வதெப்படி?
5. சுயவசியம்-இன்னும் சிலமுறைகள்
6. அழகும் ஆரோக்கியமும்
7. மனச் சஞ்சலங்களுக்கு மருந்து
8. தாழ்மைப் பிராந்தியைத் தகர்த்தெறியுங்கள்.
9. பணத்தைச் சம்பாதிப்பது-செலவழிப்பது
சேமிப்பது எப்படி?
10. நண்பர்களைப் பெறுவதெப்படி நல்லுறவை வளர்ப்பதெப்படி?
11. பூரண வாழ்வு

அத்தியாயம் ஒன்று:  இன்பம் என்பது என்ன?

அ.ந.கந்தசாமியின் வெற்றியின் இரகசியங்கள்இவ்வுலகில் மனிதராகப் பிறந்த எவர்களுக்கும் ஒரே ஒரு கனவு பொதுவாயிருக்கிறது. அந்தக் கனவுதான் என்ன? உலகத்தில் காணப்படும் இன்பங்களிலே தாம் தமக்குரிய பங்கைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதே அது. ஒரு சிலர் இதை வாய்விட்டுச் சொல்வார்கள். மற்றும் சிலர் பேசமாட்டார்கள். ஆனால் இது மனித குலத்திற்குப் பொதுவான ஆசை என்பதில் ஐயமில்லை. ஆண், பெண், அலி என்ற பேதம் இதில் கிடையாது. இன்பமே மனித வாழ்க்கையின் குறிக்கோள். அதை அடைவதே வாழ்க்கையின் வெற்றி.

பிறப்பதும் வாழ்வதும் சாவதும் சகலருக்கும் பொதுவானது. இதில் நமது பிறப்புப் பற்றி நம்மால் ஒன்றும் செய்யமுடியாது. அது நமது சக்திக்கு உட்பட்டதல்ல. ஆனால், இரண்டாவதாகக் கூறிய வாழ்க்கையை நாம் நமது முயற்சியினல் செப்பனிட்டுக் கொள்ள முடியும். சரியான படி முயன்றால் இவ்வுலகில் நம்மால் பெறமுடியாத தொன்றில்லை. முயற்சியாளர்கள், ஆள்வினை உடையவர்கள்  நடக்க முடியாது என்று மற்றவர்களால் கருதப்பட்ட பலவற்றை நடக்கச் செய்திருக்கிருர்கள்! மனிதன் தன் முயற்சியால் செய்யக்கூடிய வினைகளுக்கு, அடையக் கூடிய வெற்றிகளுக்கு எல்லையே கிடையாது! காட்டில் திரிந்த மனிதன் இன்று காற்றில் பறக்கிருன்,ஜெட் விமானத்தில் ஜெட் டில் பறக்கும் மனிதன் இன்று வானவெளிக்கு அப்பால், வெளிவானில் ராக்கெட்டில் செல்கிறான், அண்ட கோளங்களை அடைய, சந்திரனில் செவ்வாயில் சுக்கிரனில் தன் வெற்றிக் கொடியைப் பறக்கவிட இது எதனைக் காட்டுகின்றது? மனித முயற்சியின் சக்தியை, உழைப்பின் வெற்றியை உலகிற்கு அழுத்தம் திருத்தமாக எடுத்துரைக்க இச்சாதனைகள் உதவுகின்றன.

முயற்சியின் பெருமையை உணர்ந்தவர்களில் ஒருவன் நெப்போலியன் என்ற பிரெஞ்சு வீரன். யார் இவரென்றறியாத ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிரெஞ்சு இராணுவத் தில் ஒரு சாதாரண சிப்பாயாகச் சேர்ந்து படிப்படியாக அவன் தளகர்த்தனாகி நாளடைவில் நாட்டின் மன்னனாகி முடிவில் ஐரோப்பாவின் பெரும் பகுதிக்குச் சக்கரவர்த்தியுமாகியவன் இவன். சரித்திரம் ஒருகால் அவன் அடைந்த வெற்றிகளை, நடத்திய போராட்டங்களை, புகுத்திய சட்டங்களை மறந்தாலும் அவன் கூறிய ஒரு வசனத்தை மட்டும் மறக்காது. அவ்வொரு வசனத்தில் அவன் அதுவரை பெற்ற வாழ்க்கையின் அனுபவம் முழுவதும் தோய்ந்து கிடப்பதோடு ஒவ்வொருவன் உள்ளத்திலும் தன்னம்பிக்கையைச் சுடர் விடச் செய்யும் சக்தியும் பொதிந்து கிடக்கிறது. அவ்வசனத்தை வாழ்க்கையில் வெற்றியை விரும்பும் ஒவ்வொரு மனிதனும், ஆணும் பெண்ணும் தன் உள்ளத்தில் அழுத்தமாகச் சிலை எழுத்துப்போல் செதுக்கி வைத் துக்கொள்ள வேண்டும்.

“அசாத்தியம் என்ற சொல் என் அகராதியில் கிடையாது”

இதுதான் அந்த வசனம், அசாத்தியம் என்ற ஒன்றே கிடையாது! எதுவும் சாத்தியம், எதுவும் என்னா முடியும்! இப்படி எண்ணுபவனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி! இப்படி எண்ணுபவனுக்கே இவ்வுலக இன்பங்கள்! இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்.

எதுவும் சாத்தியம் என்று தமிழிலே பாடினவர் தாயுமானவர்: “கரடி வெம்புலி வாயையும் கட்டலாம். ஒரு சிங்க முதுகின்மேற் கொள்ளலாம், கட்செவி எடுத்தாட்டலாம், அனல்மேல் நடக்கலாம், ஜலமேல் இருக்கலாம், தன்னிகரில் சித்தி பெறலாம், சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறீமரிது காண்’ என்று பாடினர். சிந்தையை அடக்குதலைக் கூட அரிய காரியம் என்றாரல்லாது அசாத்தியம் என்று கூறவில்லை. சிந்தையை அடக்குதல் அரிய காரியம்தான். ஆனால் அதையும் மனிதர்கள் செய்யத்தான் செய்கிறர்கள்! சிந்தையை அடக்கியவர்கள் இன்று கூட எம்மிடையில் இல்லாமல் இல்லை! முயற்சியின் பெருமையைப் பற்றி வள்ளுவர்  “முயற்சி திருவினையாக்கும். முயற்றின்மை இன்மை புகுத்திவிடும்” என்று கூறியிருக்கிறார்,

முயற்சியால் வாழ்வை வளம் பெறச் செய்யமட்டுமல்ல, சாவையும் வெல்ல முடியும்! இந்த உலகில் தம் வாழ்வை நீடிக்கவிரும்பாதவர்கள் யாரும் கிடையாது. தற்கொலையை நாடும் ஒரு சில மன நோயாளர்களைத் தவிர. வைத்தியத் துறை விஞ்ஞானிகள் இத் துறையில் ஈடுபட்டு உழைத்து வருகிருர்கள். அதன் பயனாக சாவை வெல்லும் துறையிலும் மனிதன் முன்னேற்றம் அடைந்து கொண்டேயிருக்கிறான்!

மலேரியா பரப்பும் கொசுவை ஒழிக்க மனிதன் மருந்து கண்டான். அம்மை நோயைத் தடுக்க அம்மைப் பால் கட்ட ஆரம்பித்தான். உடலை ரோகங்கள் அணுகாது தடுத்துப் பலமுறுத்த விட்டமின் ஜீவ சத்துகளைக் கண்டு பிடித்தான். இக்கண்டுபிடிப்புகளால் உலகம் முழுவதிலும் மக்களின் சராசரி சாவு விகிதம் குறைந்து வருகிறது. வாழும் வயது உயர்ந்து வருகிறது. ஆம், இன்றைய உலகில் வாழ்க்கை முன்னேறிக்கொண்டிருக்கிறது. சாவு பின்னேறிக் கொண்டிருக்கிறது. மனிதனின் தாக்குதலுக்கு முன்னுல் யமனுல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. சுமார் 15 வருடங்களுக்கு முன் இலங்கையில் சராசரி 40 வயதில் மனிதனை எமபுரத்துக்கு இட்டுச் சென்ற எம கிங்கரர்கள் இன்று 63 வயதுவரை காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறது. சீக்கிரம் மனிதன் சாவை முற்ருக வென்று விடவும் கூடும். சமீபத்தில் ஒரு சோவியத் விஞ் ஞானி “மனிதன் சாகவேண்டிய அவசியமில்லை. சாசுவத மாக சீவிக்க வழி காண்பது சாத்திமே’ என்று கூறியிருக்கிறான்! இவை எல்லாம் மனித முயற்சியால், உழைப்பால் சாதிக்கக் கூடியவற்றை நமக்குக் காட்டுகின்றன. இச் சாதனைகளுக்கு எல்லையே கிடையாது. இதுவரை மனிதன் சாதித்தவை பல. எதிர்காலத்தில் சாதிக்க இருப்பவை இன் னும் பல. உலகம் முழுவதும் வியக்கும் படியான மாபெரும் சாதனைகளைச் செய்தவர்களும் நம்மைப் போன்ற மனிதர் கள்தான்! மற்றவனல் எதைச் சாதிக்க முடியுமோ அதனை என்னலும் சாதிக்க முடியும்- நான் அதை விரும்பி முயற்சித்தால் என்ற எண்ணம் உள்ள எவனும் அச்சாதனையைத் தானும் புரிய முடியும்-தானும் அச்சாதனையைப் புரிந்த வன்போல் திட்டமிட்டுச் செயலாற்றினால்!

பெரிய சாதனைகளைப் புரிபவர்களைக் கண்டு சிலர் மலைப்புக் கொண்டுவிடுகிருர்கள். தம்மிடமில்லாத ஏதோ அரிய சக்தி அவர்களிடம் இருப்பதாக எண்ணி அதிசயிக்கிருர்கள். அவர்கள் மனிதர்கள் அல்ல, தெய்வங்கள் என்றுகூட சிலர் நினைத்து விடுகிறார்கள். ஆனால் உண்மை என்ன? வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் என்று கருதப்படுபவர்களிடம் எவ்வித விசேஷ சக்தியும் கிடையாது. அடிப்படையாகப் பார்க்கப் போனல் மனிதர்கள் எல்லோருடைய சக்திகளும் ஏறக்குறைய ஒன்று போல் சமமாகத்தான் இருக்கின்றன. ஆனால் ஒரு சிலரிடம் அவை விருத்தி அடைந்தும் இன்னும் சிலரிடம் விருத்தியடையாமலும் இருக்கின்றன. தன்னிடம் இருக்கும் சக்திகள் இவை, இவற்றை விருத்தி செய்து இவ்வாறு செயலாற்றினால் இன்ன பலனை அடையலாம் என்று உணர்ந்து செயலாற்றுறான் ஒருவன். அவனே வெற்றித் தேவையின் அனுக்கிரகத்தைப் பெற்று முன்னேறுகிறான்.  மற்றவனோ தன் சக்திகள் என்ன என்று ஆராய்வதுமில்லை, அவற்றை விருத்தி செய்ய முயற்சி எடுப்பதுமில்லை. இருளில் விளக்கில்லாது செல்பவன் வழியில் காணப்படும் குழிகளில் வீழ்ந்து இடர்ப்படுவதுபோல இவனும் தோல்விகளுக்கு ஆளாகித் துன்பமுறுகிறான்.

ஆகவே வாழ்க்கையில் முன்னேற்றமடைய விரும்பும் ஒவ்வொருவனும் முதலில் தன் கையில் அதற்குத் தேவையான அறிவென்னும் விளக்கை ஏற்றிக்கொள்ள வேண்டும். தனது சக்திகள் யாவை? அவை எவ்வளவு தூரம் விருத்தி செய்யப்பட்டுள்ளன? அவற்றை இன்னும் எவ்வளவு தூரம் விருத்தி செய்ய வேண்டும்?–இவை போன்ற கேள்விகளுக்கு அவன் தன் மனதில் பதில் காணவேண்டும். இக்கேள்விகளுக்கு அவன் காணும் பதில்கள்தான் அவன் வாழ்க்கைக்கு ஒளிகாட்டும் விளக்கின் திரியாகிறது. இவ்வறிவென்னும் விளக்கு எவ்வளவு தூரம் ஒருவன் கையில் பிரகாசிக்கிறதோ அவ்வளவுக்குத்தான் ஒருவன் வாழ்க்கை முன்னேற்றமடையும்.

இங்கு நாம் ஒரு முக்கியமான விஷயத்தைச் சுட்டிக் காட்ட வேண்டிருக்கிறது. வாழ்க்கையில் வெற்றி என்ற தும் ஒவ்வொருவனும் ஒரு ஐன்ஸ்டீனகவோ, சிசில் பி. டி. மில்லே ஆகவோ, டாட்டா ஆகவோ, ரெக்பெல்லரா கவோ, ஸ்டாலினுகவோ, நெப்போலியனுகவோ, ஷேகஸ் பியராகவோ, பேர்னர்ட்ஷா ஆகவோ வந்துவிட வேண்டுமென்பதல்ல! இன்பம், வெற்றி என்ற சொற்களுக்கு ஒவ்வொருவர் உள்ளத்திலும் வெவ்வேறு கருத்துகள் உண்டு. இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்திலே இன்பத்தை அடைவதே மனிதர்களின் இலட்சியம் என்று கூறினோம், மனிதன் மட்டுமல்ல, மிருகங்கள் கூட இன்பத்தையே நாடுகின்றன.   

ஆனால் இன்பம் என்பதுதான் என்ன?

இன்பத்தை அனுபவிக்க இயற்கை நமக்கு அளித்திருக்கும் முதலாவது கருவி மனம். இம்மனத்தின் உபகரணங்களாக விளங்குவன பஞ்சபுலன்கள் என்று அழைக்கப்படும் கண், மூக்கு, செவி, வாய், மெய் என்ற உறுப்புகள். இவற்றில் க்ண்களின் மூலம் இயற்கையின் இனிய காட்சிகளையும் சினிமா, நடனம், சிற்பம், சித்திரம் போன்ற செயற்கைக் காட்சிகளையும் கண்டு மகிழ நாம் விரும்புகிறோம் காதுகளால் இன்னிசையையும் குழந்தையின் மழலையையும், மாதராரின் அன்புப் பேச்சையும், கானாற்றின் மெல்லொலியையும், அறிஞர்களின் அறிவுரையையும் கேட்க விரும்புகிறோம். மூக்கின் மூலம் மலர்களின் நறுமணத்தையும், அத்தர்களின் வாசனையையும் அனுபவிக்க விழைகிறோம். வாயின் உதவியால் நல்ல உணவு வகைகளையும், பழரச பானங்களையும் அருந்தி மகிழ ஆசைப்படுகிறோம்.. உடலின் மூலம் எதிர்ப்பாலார் தரும் ஸ்பரிச இன்பத்தையும், ஆடிவரும் தென்றல் காற்றின் அணைப்பின் இன்பத்தையும், பட்டு மெத்தையின் மெத்தென்ற சொகுசையும் அனுபவிக்க விரும்புகிறோம்.
ஆனால் பஞ்ச புலன்கள் தரும் இவ்வின்பங்களை நாம் நன்கு அனுபவிக்க எம்மிடம் சில பண்புகள் இருக்கவேண்டும். முதலாவதாக இந்த ஐந்து உறுப்புகளும், நம்மிடம் நன்நிலையில் அமைந்திருத்தல் வேண்டும். பொட்டைக் கண்ணனால் காட்சிகளைக் காணவோ ரசிக்கவோ முடியாது. செவி செவிடாயிருந்தால் குழந்தையின் மழலை இனிக்காது. அலியாய்ப் பிறந்தவனுக்கும், நபுஞ்சகனகி விட்டவனுக்கும் பெண்ணின்பம் கிடையாது. ஆனால் உறுப்புகள் சிறப்பாக அமைந்து விட்டால்
கூடப் போதாது. அவற்றை இயக்குவதும் அவற்றல் இன்பத்தை நுகர்வதும் மனம்தான். ஆகவே மனமும் ஆரோக்கியமான நிலையில் இருத்தல் வேண்டும். ஏனெனில் சித்த ஸ்வாதீனமற்றவனால் சினிமாக் காட்சியைக் கூட ரசிக்க முடியாது. ஆனால் உறுப்புகளும் மனநிலையில் நன்கு இருந்து விட்டால் கூட நாம் இன்பத்தை நுகர்ந்துவிட முடியாது. இன்றைய சமுதாயம், நாம் அதை விரும்பினால் என்ன, விரும்பாவிட்டால் என்ன, ஒவ்வொரு இன்பத்துக்கும் ஒவ்வொரு விலையை வைத்திருக்கிறது. அவ்விலை பணம் என்னும் பொருளால் நிர்ணயிக்கப்படுகிறது. கண்ணுக்கு இனிய பரத நாட்டியத்தைப் பார்க்கவேண்டுமா? சினிமாவுக்குப் போக வேண்டுமா? ஏன், கடற்கரைக்குச் சென்று மாலைச் சூரியன் மங்கி மறையும் இயற்கைக் காட்சியைப் பார்த்து மகிழ வேண்டுமா? எல்லாவற்றுக்குமே பணம் தேவை. பரத நாட்டியத்துக்கும் சினிமாவுக்கும் டிக்கெட் எடுக்கப் பணம் வேண்டும். கடற்கரைக்குச் சென்று இயற்கை தரும் இலவசக் காட்சியைக் காணக் கூட பஸ் வண்டிக்குக் காசு வேண்டும். ஆனால் பணத்தின் தேவை பார்ப்பதற்கும் போவதற்கும் மட்டுமல்ல. போகும்பொழுது என்ன உடை அணிந்திருக்கிறீர்கள் என்பதும் முக்கியம். பொருத்தமான உடைகளுக்குப் பணம் வேண்டும். போகுமுன் குளித்து முழுகி முகம் கழுவிப் புறப்பட வேண்டியிருக்கிறது. குளிக்கும் அறையை அமைப்பதற்குப் பணம். வாடகைக்கெடுத்த வீடானலும் வாடகை செலுத்தப் பணம் தேவை. ஏன் குளிப்பதற்குக் கூட, வாயைக் கழுவுதற்குக் கூடப் பணம் தேவை. வாய் கழுவப் பற்பசை வேண்டும், பிரஷ் வேண்டும், குளிப்பதற்கு சோப் வேண்டும் எல்லாவற்றுக்கும் பணம் தேவை. ஏன் சினிமா மண்டபத்தில் கூட ஆயாசம் தோன்றும். கடற்கரையில் கூடக் களைப்புத் தோன்றும். அவற்றைச் சமாளிக்க ஐஸ் கிரீமோ, காப்பியோ அருந்த வேண்டாமா? அவற்றுக்கும் பணம் தேவை. நம் உடல் சாகாதிருக்க எந்த நேரமும் உடலில் இரத்தம் ஒடிக் கொண்டேயிருக்க வேண்டும். இரவென்றில்லை, பகலென்றில்லை. அதுபோல் வாழ்க்கை செளகரியமாக ஓடிக் கொண்டிருக்க எந்த நேரமும் எப்பொழுதும் பணத்தைச் செலவழித்துக் கொண்டே இருக்கவேண்டும். இரவில் நாம் அாங்கும் போது கூட எமது பணம் செலவழிந்து கொண்டிருக்கிறது.

நமது கட்டில் பணங்கொடுத்து வாங்கப்படுகிறது. தலையணைகளுக்கும் பணம் தேவை. ஒரு தலையணையை நாம் இரண்டு ரூபா கொடுத்து வாங்கி ஒருவருஷம் உபயோகித்தால் கூட நாளொன்றுக்கு அரைக்காசு அதற்காகச் செலவிடப் படுகிறதல்லவா? மேலும் தலையணைக்கு உறை வேண்டும். உறையின் விலை இன்னேர் இரண்டு ரூபா. மேலும் உறையை அடிக்கடி வெளுக்க வேண்டும். அல்லது சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். வாரத்துக்கு ஒரு முறை கழுவினுலும் வருடமொன்றுக்கு ஐம்பத்திரண்டு சலவையாகிறது. ஒரு சலவைக்குப் பத்துக் காசானல் ஐம்பத்திரண்டு சலவைக்கு ஐந்து ரூபாவுக்கு மேலாகிறது. ஆகவே வருடத்துக்குத் தலையணைச் செலவே பத்து ரூபாவாகி விடுகிறது. விரிப்பின் செலவை விட்டு மெத்தையின் செலவை விட்டுப் பார்த்தாலும் நாளொன்றுக்குத் தலையணைச் செலவே மூன்று காசாகி விடுகிறது. ஒற்றை ஆளுக்கு. அதுவும் இங்கு நான் ஒரு சாதாரண மத்திய தர மனிதனின் செலவையே குறிப்பிடுகிறேன் என் பதை மறந்துவிடாதீர்கள். அதாவது ஒரு தலையணையோடு உறங்கத் தெரிந்த மனிதனின் நிலைமை இது.

இப்படி எதற்கெடுத்தாலூம் பணம் தேவைப் படும் உலகம் இது. நாம் இன்பங்களை அனுபவிப்பதற்கு, ஏன் வெறுமனே உயிரை உடலோடு ஒட்ட வைத்திருப்பதற்குக் கூடப் பணத்தினால் விலை செலுத்த வேண்டியிருக்கிறது. ஆகவே உலகில் நாம் இன்பத்தை அனுபவிப்பதற்கு தேகாரோக்கியமும், மன ஆரோக்கியமும் போதாது, பண ஆரோக்கியமும் நமக்கு வேண்டும். ஆனால் எமது உடலின் உறுப்புகளான பஞ்ச புலன்கள் மூலமே நாம் உலகின் பெரும்பாலான இன்பங்களை அனுபவித்த போதிலும், இந்தப் பஞ்ச புலனுகர்ச்சிக்கு அப்பாற் பட்ட வேறு இன்பங்களும் உலகில் இருக்கத்தான் செய்கின்றன. இவை மனிதன் தன் மனதினால் மட்டும் அனுபவிக்கும் இன்பங்கள். அவற்றையும் நாம் இங்கு கவனிப்போம்.
,
மனிதர் எல்லாரும் தான் உலகில் பிறக்கிறார்கள். வாழ்கிறார்கள். சாகிறார்கள். ஆனால் ஒரு சிலர் இவ்வாறு வெறுமனே வாழ்ந்து மடிவதற்கு விரும்புவதில்லை. அவர்கள் தம் வாழ்க்கை ஒரு விதத்திலாவது சிறப்புற்று இருக்கவேண்டு மென்று விரும்புகிறர்கள். பல கோடி மனிதப் புழுக்களில் நானும் ஒரு புழு, அவ்வாறு வாழ்ந்து செத்தால் போதும் என்று இவர்கள் திருப்தி அடைவதில்லை. இவர்கள் சமுதாயத்தின் நல்மதிப்பைப் பெறவேண்டு மென்று விரும்புபவர்கள். நாலு பேர் நம்மைக் கவனிக்கவேண்டும், மெச்சவேண்டும், விரும்பவேண்டும் என்று எண்ணுபவர்கள். இவ்வித எண்ணம் மனிதனின் அடிப்படை ஆசை ஒன்றிலிருந்து பிறக்கிறது.

வில்லியம் ஜேம்ஸ் என்ற அமெரிக்க அறிஞன் இந்த ஆசையைப் பற்றிப் பின் வருமாறு கூறியுள்ளான்: “ஒரு மனிதனை சழுதாயம் முற்றிலும் தன் கவனத்துக்கு எடுக்காமல் தள்ளி வைக்க முடிந்து, அவ்விதம் அடியோடு கவனத்துக்கு எடுக்காது தள்ளி வைத்தால் அதைப் போன்ற அசுரத்தனமான பயங்கரமான தண்டனை இவ்வுலகில் இருக்கவே முடியாது. நாம் ஒரு இடத்துக்குச் செல்கிருேம். யாரும் நம்மை ஏறிட்டுப் பார்க்கவில்லை. நாம் பேசுகிருேம். யாரும் அவற்குப் பதிலளிக்கவில்லை. நாம் எதையாவது செய்கிறோம் யாரும் அதைக் கவனிக்கவில்லை, நாம் காணும் எவரும் நாம் இவ்வுலகில் வாழும் ஒரு மனிதன் என்றே நம்மை எண்ணவில்லை என்று வைத்துக் கொள்வோம். இப்படிப் பட்ட நிலை ஏற்பட்டால் எந்த மனிதனுள்ளத்திலும் தாங்க முடியாத நபுஞ்சகம் நிறைந்த ஒரு மகா வேதனை ஏற்படும். இந்த உலகில் அந்த வேதனைக்குச் சமமாக வேறெந்த வேதனையையும் கூறமுடியாது.

வில்லியம் ஜேம்ஸ் சுட்டிக் காட்டும் இக்காரணத்தினல் தான் நாம் எங்காவது சென்று யாராலாவது அலட்சியம் செய்யப்பட்டால் ‘ஏன் நாயே என்று கூட நீ கேட்க வில்லையே!”  என்று சீறுகிறோம். நமக்கு மரியாதை செய்ய வேண்டாம். அவமரியாதையாவது செய்திருக்கலாமே, அதன் மூலம் நாமும் இவ்வுலகில் இருக்கிறோம் என்பதை அங்கீகரித்திருக்கலாமே என்பது தான் இதன் பொருள். கவனத்துக்கு எடுக்கப்படாமல் விடுவதைவிட கவனத்துக்கு எடுக்கப்பட்டு வெறுக்கப் படுவது கூட இனியதாகப் படுகிறது மனித உள்ளத்திற்கு!

இந்த உணர்வு மனிதர் எல்லோரிடமும், குழந்தைகளிடமும் கூட இருப்பதை நாம் காணலாம். கவனியாது விடப்பட்ட கைக் குழந்தை கூடக் கை தட்டி ஆரவாரிக்கிறது. ஒலிகளைக் கிளப்புகிறது, உங்கள் கவனத்தைத் தன்பால் இழுக்கக் குழந்தை செய்யும் முயற்சிகள் இவை. அப்பொழுதும் நீங்கள் கவனியா திருந்தால் குழந்தை வேதனை கொண்டு வெம்பும். கூப்பாடு போடும், அலறும். தன்னை மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்ற ஆசை பின்னல் தன்னை மற்றவர்கள் மெச்ச வேண்டும் விரும்ப வேண்டும் என்ற முறையில் வளர்ச்சி அடைகிறது. இதுவே சமுதாய மதிப்பை அடைதல், புகழ்பெறுதல் என்ற வார்த்தைகளால் குறிக்கப் படுகின்றன. தன்னை ஒருபெண் நேசிக்க வேண்டுமென்று ஒரு ஆண் விரும்புவதும் ஒரு ஆண் தன்னை நேசிக்க வேண்டும், என்று பெண் விரும்புவதும் குடும்ப வாழ்க்கை வாழவேண்டுமென்று பலர் ஆசைப்படுவதும் தன்னை மற்றவர்கள் கவனிக்க வேண்டும் அங்கீ கரிக்க வேண்டுமென்ற இந்த ஆசையின் அடிப்படையில் எழுவதுதான். அன்பு, புகழ், சமுதாய மதிப்பு எல்லாம் மற்றவர்கள் தன்னை அங்கீகரித்ததன் சின்னங்களாக மனித உள்ளத்திற்குப் படுகிறது.

ஒல்வொரு மனிதனும் சமுதாய மதிப்பை ஒவ்வொரு வகையில் அடைய முயல்கிறான். சிலர் பணத்தைப் பெரிதாகச் சேர்த்துப் பணக்காரன் என்று புகழடைய விரும்புகிறார்கள். கல்வித் துறையில் முன்னேறிக் கல்விமான் என்று பெயரடைய விரும்புவர்களும் உண்டு. வேறு சிலர் அரசியல் அதிகாரத்தின் மூலம் புகழடைய எண்ணுகின்றனர். மதத்தின் மூலம், கலைகளின் மூலம், வீரதீர பராக்கிரமச் செயல்களின் மூலம், நல்ல சேவைகளின் மூலம், அன்பின் மூலம் புகழடைய விரும்புவோரும் உண்டு.

சமுதாய மதிப்பைப் பெற விரும்பும் வகையினால்” சமுதாயத்திற்கு நல்ல சேவையைச் செய்பவர்கள் பலர். அவர்களால் இவ்வுலகமே ஒளி பெறுகிறது. அதனால் தான் இவ்வுணர்வு சமுதாயத்திற்குப் பலனளிக்கும் ஒன்று என்று அறிஞர்களால் கருதப்படுகிறது.

வள்ளுவர் கூட ‘ஒன்று உலகத்து உயர்ந்த புகழல்லால் போன்றது. நிற்பதொன்று இல்’ என்று கூறியுள்ளமை. இத்தகைய புகழை ஒவ்வொருவனும் சம்பாதிக்க வேண்டு மென்று வற்புறுத்துவதற்காகத்தான். ஆனால் இத்தகைய புகழை அடைவதற்குக் கூட மனிதனுக்கு தேகாரோக்கியமும், மன ஆரோக்கியமும், பண ஆரோக்கியமும் அவசியம்தான், அடிப்படைத் தேவைகள் தீர்க்கப்பட்ட பின்னர் தான் ஒருவனுல் புகழுக்காக உழைத்து வெற்றிகாண முடியும்.

சமுதாய மதிப்பைப் பெறுதல் என்ற இந்த ஆசையின் வேகம் இருக்கிறதே அது ஒவ்வொருவர் விஷயத்திலும் வெவ்வேறு விதமாக அமைகிறது. சிலர் மிகப் பெரிய சாக சங்களைச் செய்து முழு உலகின் கவனத்தையும் ஈர்க்க விரும்புவார்கள். இன்னும் சிலர் நாட்டின் கவனத்தை. ஈர்த்தால் அதுவே போதும் என்று திருப்தி அடைவார்கள். மற்றும் சிலர் தாம் வாழும் நகரில் அல்லது கிராமத்தில் அல்லது தெருவில் புகழுடன் வாழ்ந்தால் போதும் என்று நினைப்பார்கள். தம் உறவினர்கள் தம்மை மெச்சவேண்டும். அது போதும் என்று கருதுபவர்களும் உண்டு, தம் குடும்பத்தினர் தம்மை மதித்து நேசித்தால் அதைவிட வேறென்ன வேண்டும் என்று எண்ணுபவர்களும் இருக்கிறார்கள்.

இதில் ஒருவன் இதயத்தில் எந்த ஆசை இருக்கிறதோ அந்த ஆசை எய்தப் பெறுதலே இன்பம். ஆகவே மனிதன் நாடும் இன்பங்கள் யாவை என்ற கேள்விக்கு நாம் அளிக்கக் கூடிய பதில் என்ன? ஐம்புல நுகர்ச்சியும், தானும் ஒரு மனிதன் என்ற அங்கீகாரத்தைப் பெற்று நாலு பேர் மெச்ச வாழுதலும்தான் அவை என்று பொதுவாகக் குறிப்பிடலாம்.

இவ்வித அங்கீகாரத்தைப் பெறுவதற்கு இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொருவனும் ஓர் ஐன்ஸ்டீனகவோ, ஒரு நேரு வாகவோ, ஹென்றி போர்டாகவோ இருக்க வேண்டுமென்பதில்லை. அவர்கள் அடைவது ஒருவிதமான சமுதாய மதிப்பை- கண்ணை மின்ன வைக்கும் சூரிய ஒளி போன்றது! ஆனால் நட்சத்திரங்களும் இவ்வுலகில் ஒளி வீசவே செய்கின்றன. அவை கண்களை மின்ன வைத்துப் பார்ப்பவர்களைக் குருடாய் அடித்து பிரமிக்க வைக்கா விட்டாலும் மனதைக் கவரும் வகையில் பிரகாசிக்கவே செய்கின்றன. பகட்டான “பெட்ரோல் மாக்’ஸின் வெளிச்சம் கோயிலின் வாசலை ஒளிக்கடலாக ஆக்குகிறது. ஆனல் மூலஸ்தானத்தில் ஏற்றப்பட்டுள்ள தூண்டா விளக்கின் நெய் வெளிச்சம் குளிர்ச்சியும் அமைதியும் நிறைந்த ஒளியை வீசி நம்மைக் கவர்கிறது! அதுபோலவேதான் சமுதாய மதிப்பு என்ற இந்த விஷயமும்.

நேருவும் ஐன்ஸ்டீனும் உலகத்தைக் கவர்கிறார்கள். .ஆனால் நம்முடைய் தெருவில் வாழும் செல்வவினாயகம் பிள்ளையின் மகன் ராஜேந்திரன் சார்ட்டர்ட் அக்கவுண்ட் பரீட்சையில் சித்தி எய்தி நமதூரில் பெருமதிப்பைப் பெறவில்லையா? நேருவின் புகழ் ஒருவகை; ராஜேந்திரன் பெற்ற சமுதாய மதிப்பு வேறோர் வகை. ஆனால் இருவரும் ஒரே இன்பத்தைப் பெறுகிறார்கள். ஏன், அடுத்த தெருவில் அம்பலவாணன் பலசரக்குக் கடை வைத்திருக்கிறான். எமது நகரிலேயே அவன்தான் பெரிய முதலாளி. அவனும் சமுதாய மதிப்பைப் பெற்றவன்தான். ஏன், சிரமதானத்துக்காக உழைக்கும் சிற்றம்பலத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? வாத்தியார் வைரமுத்து பற்றி என்ன நினைக் கிறீர்கள்? அவர்களும் சமுதாய மதிப்பைப் பெற்றவர்களே. கிருஷ்ணசாமி அரசாங்க குமாஸ்தா. முதலில் மூன்றாவது வகுப்பில் தான் சேர்ந்தான். இன்று படிப்படியாக உயர்ந்து சிவில் சேர்விஸ் நிலைக்கு வந்துவிட்டான். ஒரு மகன் சமீபத்தில் டாக்டரானான். இன்னெருவன் எஞ்ஜினியராகப் படித்துக் கொண்டிருக்கிறான், மகள் பீ.ஏ.-இல் குண்டடித்தாலும் பரத நாட்டியத்தில் பாஸ் பண்ணிவிட்டாள்! இன்று அவள் நடத்தும் சரஸ்வதி நாட்டிய மன்றத்தில் நூறு பெண்கள் நடனம் பயில்கிறார்கள். கிருஷ்ணசாமி சமுதாயத்தின் மதிப்பைப் பெற்றவனில்லையா? நேருவை அமெரிக்காவிலும் ருஷ்யாவிலும் எல்லோரும் அறிவார்கள். கிருஷ்ணசாமியை எங்களுக்குத்தான் தெரியும். ஆனால் அவனும் சமுதாய மதிப்பைப் பெற்றவன்தான் என்பதை எவரும் மறுக்க முடியாது. அவன் வாழும் உலகத்தில் அவன் போதிய அங்கீகாரத்தைப் பெற்று விட்டான்.

ஆனால் உலகத்தில் எத்தனைபேர் வாழ்க்கையை இவ்வாறு அனுபவிக்கக் கூடியதாயிருக்கிறது? எத்தனைபேர் வாழ்க்கை இன்பங்களையும் உலகின் அங்கீகாரத்தையும் போதிய அளவில் பெறுகிறார்கள்? ஒரு சிலர்தான். பத்துப் பேர் வாழ்க்கையில் வெற்றி பெற்றால் முப்பது பேர் தோல்வி அடைந்தவர்களாகக் காணப்படுகிறர்கள். இந் நிலை எதனால் ஏற்படுகிறது என்பதை ஒவ்வொருவனும் எண்ணிப் பார்க்கவேண்டும்.

வாழ்க்கையில் சந்தோஷமாயிருப்பவர்கள் இருவகை ஆயினர். ஒரு சிலர் சாதகமான சந்தர்ப்ப சூழ்நிலைகளால் வெற்றி பெற்றவர்கள். மற்றவர்கள் தம் சொந்த முயற்சியால் முன்னேறி வெற்றி கண்டவர்கள். நமது சமுதாயத்தில் சந்தர்ப்ப சூழ்நிலைகள் தாமாகவே வந்து வாய்ப்பது மிகவும் அரிது. விவேகமுள்ளவர்கள் அவற்றுக்காகக் காத்துக்கொண்டிருப்பதில்லை. தாமே முயன்று சந்தர்ப்பங்களை சிருஷ்டிக்கிறாகள். சூழ்நிலைகளைத் தேடிச் செல்கிறார்கள். வெற்றியும் அடைகிறார்கள். நீர் நிலைக்கு அருகே காணப்படும் வாழை மரத்தையும், வரண்ட நிலத்தில் காணப்படும் ஒரு வாழை மரத்தையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம். நீர் நிலைக்கருகே காணப்படும் வாழைமரம் இயற்கையாகவே மொழு மொழு என்று செழித்து வளர்ந்துவிடுகிறது! வரண்ட நிலத்து வாழை மரம் அப்படி வளராது என்பதற்காக நாம் தண்ணிர் ஊற்றி வளர்க்காது விடுவதில்லை. தண்ணீர் ஊற்றுகிறோம். பசளை இடுகிகிறோம். அதன் பயனாக அதுவும் செழிப்புடன் வளர்கிறது. பல சந்தர்ப்பங்களில் ஆற்றோரர வாழையிலும் பார்க்கப் பல மடங்கு சிறப்பாக வளர்ந்து நல்ல பயனையும் தருகிறது, நாம் பாடுபட்டு வளர்க்கும் வரட்சி நிலை வாழை மரம்! ஆகவே சந்தர்ப்பம் சரியில்லை, சூழ்நிலை சரியில்லை என்று கூறிக்கொண்டு வாழ்க்கையை எவரும் வறிதே கழிக்கக்கூடாது. ஆனால் சந்தர்ப்பத்தையும் சூழ்நிலையையும் மாற்றி முன்னேறுவதற்கு நாம் முன்னர் கூறியது போல அறிவென்னும் விளக்குத் தேவை. சந்தர்ப்ப சூழ்நிலைகள் சமமாய் இருந்தாலும் ஒருவன் வாழ்க்கையில் வெற்றியடைய மற்றவன் தோற்கிறான். உதாரணமாக எனது நண்பன் சுப்பிரமணியம் மாதத்துக்கு ரூபா 450 சம்பளம் பெறுகிருன். பிள்ளைகள் ஐந்து. மனைவி ஒருத்தி. போதாதற்கு வீட்டில் வயோதிபத்தாயும் தந்தையும் வேறு இருக்கிறார்கள். வேலைக்காரி ஒருத்தி. இவ்வள விருந்தும் வீட்டில் சகல காரியங்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. பிள்ளைகள் சுத்தமான உடை உடுத்துகின்றனர். நல்ல பாடசாலைகளுக்குச் செல்கிறார்கள். தானும் உடுத்துகிறான். மாதத்திற்கு ஒரு தடவை முழுக் குடும்பமும் சினிமாவுக்குப் போகிறது. வாரத்துக்கொருதடவை கடற்கரைக்கோ, பார்க்கிற்கோ, கோயிலுக்கோ போகிறார்கள். மனைவி செல்லம்மா சிரித்த முகத்துடன் இருக்கிறாள் அழகாக அலங்காரம் செய்துகொள்கிறாள், வீட்டை சுத்தமாக வைத்திருக்கிறாள். வாசலில் பூச்செடிகளை நட்டிருக்கிறாள். அவற்றின் வாசனை நாலு வீட்டிற்கு அப்பாலும் வீசுகிறது!

ஆனால் சின்னையா வீட்டு விஷயம் வேறு. அவனுக்குச் சம்பளம் 475 ரூபா. பிள்ளைகள் நாலுதான். ஆனால் மனைவி ஒருத்தி, வயோதிபத்தாய் தந்தையர், வேலைக்காரி என்ற விஷயத்தில் சுப்பிரமணியமும் சின்னையாவும் சமம். என்றாலும் வீட்டு நடப்போ மிகவும் மோசம். பிள்ளைகள் எந்த நேரமும் அழுக்கடைந்த உடைகளையே உடுத்தி இருக்கின்றனர். பணக் கஷ்டத்தால் கடைசிப் பிள்ளையை இன்னும் பாடசாலைக்கு அனுப்பவில்லை. வீடு என்றுமே சுத்தமாய் இருப்பதில்லை. வீட்டுத் தோட்டமோ ஒரே குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது. சின்னையாவின் மனைவி சுபத்ரா சிரிப்பதைக் காண்பது அபூர்வம். அவள் சிடுமூஞ்சித் தனத்தைப் பற்றி அந்த வீதியில் பேசாதவர்களே கிடையாது. சந்தர்ப்ப சூழ்நிலைகள் சமமாகவே இருந்த போதிலும் ஏன் இந்த வித்தியாசம்? உண்மையில் சம்பளத்தைப் பொறுத்தவரையில் சின்னையா 25 ரூபா அதிகமாகவே சம்பாதிக்கிறான். பிள்ளைகள் எண்ணிக்கையிலும் அவனுக்கு சுப்பிரமணியத்திலும் பார்க்க ஒரு பிள்ளை குறைவுதான். இருந்தாலும் அவனது வாழ்க்கையில் சுப்பிரமணியத்தின் வாழ்க்கையிலுள்ள மலர்ச்சியில்லை. ஏன்? பணம் அதிகமாயிருந்தால் மட்டும் இன்பத்தை அடைந்து விட முடியாது, வாழ்க்கை மலர்ச்சியைப் பெற்றுவிட முடியாது, மன ஆரோக்கியம் இல்லாவிட்டால்! பணத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்ற விஷயத்தைத் தெரிந்து கொண்டவனுல் மட்டும்தான் பணத்தின் மூலம் கிடைக்கும் பலன்களை அடையமுடியும். சுப்பிரமணியம் அந்தக் கலையை அறிந்திருக்கிறான் சின்னையாவுக்கோ அது தெரியாது! சுப்பிரமணியத்தையும் சின்னையாவையும் போன்ற பல உதாரணங்களை நீங்களும் உங்கள் வாழ்க்கையில் கண்டிருக்கக் கூடும். உங்கள் உறவினர்களிடைய கூட பல சின்னையாக்களையும் சுப்பிரமணியங்களையும் நீங்கள் சந்தித்திருப்பீர்கள். பல சந்தர்ப்பங்களில் அண்ணன் சின்னையா போல் இருக்க, தம்பி சுப்பிரமணியம் போல் இல்லையா?

சின்னையாவின் தோல்விக்குக் காரணம் அவன் ஒரு திட்டமிட்ட வாழ்க்கையை நடத்தாதிருப்பது தான். சுப்பிரமணியத்தின் வெற்றிக்குக் காரணம் அவன் ஒரு திட்டமிட்ட வாழ்க்கையை நடத்துவது தான் இத்திட்ட மிட்ட வாழ்க்கைக்கு அடிப்படை அவனவன் இது விஷயத்தில் பெற்றுள்ள அறிவேயாகும். இவ்வறிவென்பது எமது சிந்தனையில் பிறப்பது. சிந்தனையே எல்லாவற்றுக்கும் தூண்டுகோல். எங்கள் எண்ணங்களே எங்கள் வாழ்க்கைத் திட்டங்களாகின்றன; செயல்களாகின்றன! அதனல் தான் ‘மனம் போல வாழ்வு’ என்று பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள். தெளிவான சிந்தனையுள்ளவனல் தான் திட்டமிட முடியும். வெற்றிபெற முடியும். சிந்தனையின் சக்தியை எண்ணத்தின் வலிமையை எடுத்துச் சொல்லமுடியாது. ஆனல் சரியான முறையில் சிதிப்பது என்பது எல்லோருக்கும் இயற்கையாக அமைவதில்லை. சமுதாயம் நம்மைத் தவருண முறைகளில் சிந்திக்கப் பயிற்றி வைத்திருக்கிறது. ஆகவே வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானுல் நாம் முதலாவது கற்றுக் கொள்ள வேண்டியது, எப்படிச் சிந்திப்பது என்பதே யாகும். சரியான சிந்தனையில், சரியான திட்டம் பிறக்கும். சரியான திட்டத்தால் சரியான செயல்கள் உண்டாகும். சரியான செயல்களே வெற்றி மாளிகைக்கு நம்மை இட்டுச் செல்லவல்லன. ஆகவே சிந்தனையின் பிறப்பிடமாகிய மனத்தைப் பற்றிய அறிவே

[தொடரும்]