இலண்டன் 30ம் ஆண்டு கருப்பு ஜூலை நினைவுதினத்தில் நிலஅபகரிப்பு எதிர்ப்பு போராட்டம் ஆரம்பம்

லண்டன் 30ம்  ஆண்டு கருப்பு ஜூலை நினைவுதினத்தில் நிலஅபகரிப்பு எதிர்ப்பு போராட்டம் ஆரம்பம்லண்டன் 30ம்  ஆண்டு கருப்பு ஜூலை நினைவுதினத்தில் நிலஅபகரிப்பு எதிர்ப்பு போராட்டம் ஆரம்பம்1983ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் திகதி இலங்கையின் சிங்கள பேரினவாத அரசினால்  தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பிரித்தானியத் தமிழர் பேரவையினால்  ஏற்பாடு செய்யப்பட்ட  நினைவேந்தல் மற்றும் ஆர்ப்பாட்ட நிகழ்வுகள் ஜூலை மாதம் 23ம் திகதி  செவ்வாய்க்கிழமை  பிற்பகல் 4 மணியளவில் பிரித்தானிய பிரதம மந்திரியின் உத்தியோகபூர்வ வதிவிடமான 10 Downing  Street முன்பாக ஆரம்பமாகி  இரவு 7 மணி வரை மிக எழுச்சியோடு நடை பெற்றது. இலங்கையில்  நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டை  பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் மற்றும் இளவரசர் சாள்ஸ் ஆகியோர் புறக்கணிக்க வேண்டுமென்றும், தமிழர் தாயக பகுதிகளில் நடைபெறும் திட்டமிட்ட இனவழிப்பு, இராணுவமயப்படுத்தல், பௌத்தமயப்படுத்தல்  மற்றும் காணி அபகரிப்பு  போன்றவற்றை நிறுத்த அழுத்தம் கொடுக்கக் கோரியுமான பதாதைகளை ஏந்திய வண்ணம் இவ் ஆர்பாட்டத்தில் பல நூற்றுக் கணக்கான பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் பங்கேற்றனர்.

பிரதமரே இலங்கைக்கு செல்லாதீர்கள் எனவும், கொலைகார ராஜபக்சேவை பொதுநலவாய நாடுகளின் தலைமையை ஏற்க விடவேண்டாம் என்றும், தமிழரின் பூர்விக  நிலங்களை ஆக்கிரமிப்பதை தடுத்து நிறுத்தக் கோரியும் உணர்வுபூர்வமாக குழுமியிருந்த தமிழ் மக்கள் உரக்கக் குரல் எழுப்பினர்.

அத்துடன் பிரித்தானியத் தமிழர் பேரவையின் தொண்டர்களால் அங்கு வந்திருந்த மக்களிடம் தத்தம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களை  பிரித்தானிய பிரதமரிடம் அழுத்தம் கொடுக்குமாறு கோரும் மனுக்களில்  கையெழுத்து பெறப்படதுடன் சிறிலங்காவை புறக்கணிக்கக் கோரும் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. தாயகத்தில் கடந்த காலங்களிலும் தற்போதும் பறிபோகும் இடங்களின் வரை படங்கள் பலரினதும் கவனத்தை ஈர்த்தது.

அங்கு உரையாற்றிய, தமிழின உணர்வாளர் திரு ராஜமனோகரன் அவர்கள் 1983ம் ஆண்டு இன அழிப்பின் துயர நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

எமது மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை  சர்வதேசத்தின் கவனத்திற்கு நாம் ஓயாது தொடர்ந்து கொண்டு செல்லல் மிகவும் அவசியம். இவ் விடயங்கள் தொடர்பில் ஏற்கனவே பிரித்தானிய தமிழர் பேரவை பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.  அந்த வகையிலே தமிழரின் பூர்விக நிலங்கள் பறிமுதல் செய்யப் படுவதை நிறுத்த வேண்டுமென்று “Stop Uprooting Tamils From Their Land ” என்ற பரப்புரை போராட்டம் ஒன்றை   பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் திரு ரவிக்குமாரால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த பரப்புரை  நடவடிக்கையை சிறப்புற முன்னெடுப்பதற்கு, தாய்த்தமிழகம், புலம் பெயர் மற்றும்  தாயக உறவுகளின் பங்களிப்புகள் தேவை என்றும், குறிப்பாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் சார்பான தகவல்கள்  பற்றி பிரித்தானியத் தமிழர் பேரவையுடன் தொடர்பு கொண்டு பரிமாறுமாறும்  வேண்டிக் கொண்டார். 

இறுதியில் அழிக்கப்பட்ட எங்கள் மக்களின் நினைவாக மெழுகுவர்த்தி ஏற்றி நிகழ்வு நிறைவு செய்யப்பட்டது.

media@tamilsforum.com