ஆய்வு: ‘கடல்காண் படல’த்தில் – சங்கச் செவ்வி

- முனைவர். ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு இந்தியா. -முன்னுரை
தமிழ் இலக்கிய, இலக்கண வளத்தைச் சங்கப் பாடல்களின் தனித்தன்மைகளைக் கொண்டும், இலக்கண மரபுகளிலிருந்தும் அறிந்து கொள்ளலாம். சங்க இலக்கியத்தின் பாடுபொருட்பொதிவாக அமைந்த முதல், கரு, உரி என்னும் பாடற்கூறுகள், அகப்பாடல் பாடல்மரபுகள், திணைக்கோட்பாட்டு மரபுகள், அதன் கருவுரு ஆகியன தமிழ் இலக்கியங்களின் காப்பியங்களிலும், பக்தி இலக்கியங்களிலும், அறநூல்களிலும், அதற்குப் பின்னர் எழுந்த இலக்கியங்கள் யாவற்றிலும் உட்பொதிவாக அமைந்து, இலக்கியத்தை வளப்படுத்தி வருவதனைக் காணலாம். 

தமிழ்மொழியின் தலைப்பெரும் காவியமாகத் திகழ்வது கம்பராமாயணம் ஆகும். அது தமிழ் மரபுக்கேற்றவகையில் படைப்பாக்கம் செய்யப் பெற்றுள்ளமையால் இன்றைக்கும் ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்’ என்று சிறப்பித்துப் போற்றப்படுகின்றது.

கம்பர், வடமொழிக் காவியமான இராம காதையைத் தமிழில் கம்பர் இராமாயணமாகப் படைத்தளித்தாலும், அதில் தமிழ் இலக்கிய, இலக்கண மரபுகளின் சாரத்தைக் காணஇயலும். சங்கச் செவ்விகளில் அகப்பாடல் மரபுகளையும், புறப்பாடல் மரபுகளையும் தன் காவியம் முழுவதும் ஒருசேரப் படைத்தளித்துத் தமிழ் மொழிக்கு வளம் சேர்த்துள்ளார். இவற்றோடு மட்டுமல்லாது, கம்பர், சங்க அகப்பொருள் மரபினைத் தழுவியே தனது காவியத்தைப் படைத்துள்ளார் என்பதனைப் பல்வேறு சான்றுகளின் மூலம் அறியலாம். அவ்வகையில் கம்பராமாயண யுத்தகாண்டத்தில் இடம்பெற்றுள்ள ‘கடல்காண் படலத்’தில்; உணர்த்தப்படும் சங்க இலக்கியத்தின் செவ்வியல் கூறுகளான அக, புறத் திணைக்கோட்பாடுகள் குறித்து இக்கட்டுரையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது.

சங்கச்செவ்வி
சங்க இலக்கியங்களின் உயிராக அமைபவை அதன் திணைக்கோட்பாட்டு மரபுகளாகும். ‘அகப்பாடலாயினும், புறப்பாடலாயினும் திணைமரபுகளுக்கு உட்பட்டே படைக்கப்பெற வேண்டும’; என்பது சங்க இலக்கியக்கொள்கைகளில் முதன்மையான கருத்தியலாக அமைந்திருக்கின்றது.

Continue Reading →

ஆய்வு: செவ்விலக்கியத்தில் ஓவியக் கலைத்தொழில்

முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 113ஓவியக்கலை என்பது காண்பவரைக் கவர்ந்திழுத்து உள்ளங்களைத் தன்வயப்படுத்தும் ஓர் உயர்ந்த கலையாகும். மனிதன் நாகரிகம் அடையும் முன் காட்டுமிராண்டிகளாக வாழும் காலத்திலேயே ஓவியக்கலை தோன்றிவிட்டது. எல்லைகளையெல்லாம் கடந்து எங்கும் பரந்து வாழும் மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்டு வியக்க வைக்கும் விந்தை மொழி ஓவியக் கலை என்றால் மிகையில்லை. தமிழ்நாட்டு ஓவியக்கலை தொன்மையான வரலாற்றைக் கொண்டதாகும். அத்துடன் பல்வேறு காலகட்டங்களையும் சேர்ந்த ஓவியங்கள் முழுதாகவும் சிதைந்த நிலையிலும் குகைகளிலும் பழைய அரண்மனைகளிலும் கோயில்களிலும் வேறு கட்டடங்களிலும் காணப்படுகின்றன. ஓவியத்தோடு தொடர்புடைய குறிப்புகள் பல சங்கப் பாடல்களில் காணப்படுகின்றன. சங்கம் மருவிய காலம் மற்றும் அதற்குப் பிற்பட்ட காலங்களிலும் ஓவியம் பற்றிய செய்திகள் இலக்கியங்களில் உள்ளன. ஓவியச் செந்நூ லுரைநூற் கிடக்கையும் என்ற சிலப்பதிகாரம் அடிகள் ஓவிய சம்பந்தமான நூல் இருந்தமையை அறிவிக்கின்றது. சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் ஓவிய நூலென ஒன்றைக் கூறியிருக்கின்றார். ஆடைகளிற் சித்திரங்களை எழுதும் வழக்கம் பழமையானதாகும். ஓவியம் பேசும் செய்திகளும் உணர்த்தும் கருத்துக்களும் மிகப்பலவாகும். இத்தகைய தொல்தமிழரின் ஓவியக்கலையைச் செவ்விலக்கியத்தில் ஓவியக் கலைத்தொழில் என்ற தலைப்பின் வாயிலாகக் காண்போம்.

ஓவியக் கலை

ஓவியக்கலை என்பது, வரைதல், கூட்டமைத்தல் (Composition) மற்றும் பிற அழகியல் சார்ந்த செயற்பாடுகளையும் உள்ளடக்கி, கடுதாசி, துணி, மரம், கண்ணாடி, காங்கிறீட்டு போன்ற ஊடகங்களில் நிறப்பூச்சுகளைப் பயன்படுத்தி, வரைபவரின் வெளிப்பாட்டு மற்றும் கருத்தியல் நோக்கங்களை வெளிக்கொணரும் ஒருகலை ஆகும். 

ஓவியக்கலையானது பல்வேறு ஆக்கத்திறன்களை, உள்வாங்குவதற்கும், ஆவணப்படுத்துவதற்கும் வெளிப்படுத்துவதற்குமான ஒரு வழிமுறை ஆகும். ஓவியங்கள், இயற்கையானவையாகவோ, ஒரு பொருளைப்போல வரையப்பட்டவையாகவோ, நிழற்படத்தை ஒத்தவையாகவோ, பண்பியல் (Abstract) தன்மை கொண்டனவாகவோ இருக்கலாம். அத்துடன் இவை ஒரு செய்தியை விளக்கும் உள்ளடக்கம் கொண்டவையாக, குறியீட்டுத் தன்மை கொண்டனவாக, உணர்ச்சி பூர்வமானவையாக அல்லது அரசியல் சார்ந்தவையாகக்கூட இருக்கக்கூடும். தமிழர் வளர்த்த நுண்கலைகளின் வரிசையில் ஓவியக்கலை முன்னணியில் நிற்கிறது. மோனாலிசா ஓவியம் இத்தாலிய ஓவியர் லியொனார்டோ டாவின்சியால் வரையப்பட்ட உலகப்புகழ்பெற்ற கலைநயமிக்க ஓவியங்களில் ஒன்றாகும்.

Continue Reading →

ஆய்வுக் கட்டுரை: விந்தைக் கவிஞன் விந்தன்!

எழுத்தாளர் விந்தன்தமிழ் எழுத்து மரபில் கவிதை, பாடல், சிறுகதை, நாவல், கட்டுரை, இதழ், பதிப்பு எனப் பல்வேறு தளங்களில் தடம் பதித்த ஆளுமைகளுள் விந்தனும் குறிப்பிடத்தக்கவர். 1916 – இல் செங்கல்பட்டு மாவட்டம், நாவலூரில் பிறந்த கோவிந்தன் எனும் இயற்பெயர் கொண்ட விந்தன், வறுமையின் காரணமாக நடுநிலைப் பள்ளியைக் கூட முடிக்க முடியாமல் தம் குலத்தொழிலான இரும்புப் பட்டறை வேலையை செய்து வந்தார். பின்னர் சூளை பட்டாளத்தில் பொதுவுடமை இயக்கத்தினர் நடத்திய இரவுப் பள்ளியில் சேர்ந்து கல்விக் கற்றார். பின்னர் 1941 – இல் கல்கி இதழில் அச்சுக்கோர்ப்புப் பணியில் சேர்ந்து அவ் இதழின் துணை ஆசிரியராக உயர்வு பெற்றார்.

1951 – இல் திறைத்துறையில் இணைந்து அன்பு, பார்த்திபன் கனவு, குலேபகாவலி ஆகிய படங்களுக்குப் பாடல்களும் திரைக்கதை வசனமும் வாழப்பிறந்தவள், மணமாலை, குழந்தைகள் கண்ட குடியரசு, சொல்லுத் தம்பி சொல்லு ஆகிய படங்களுக்குத் திரைக்கதை வசனமும் எழுதினார். இவை மட்டுமன்றி முல்லைக் கொடியாள், ஒரே உரிமை, சமுதாய விரோதி, விந்தன் கதைகள், இரண்டு ரூபாய், ஏமாந்துதான் கொடுப்பீர்களா?, மகிழம்பூ, நாளை நம்முடையது, முதல்தேதி, எங்கள் ஏகாம்பரம், இதோ ஒரு மக்கள் பிரதிநிதி, நவீன விக்கிரமாதித்தன், ஓ மனிதா! ஆகிய சிறுகதைகளையும் கண் திறக்குமா?, பாலும் பாவையும், அன்பு அலறுகிறது, மனிதன் மாறவில்லை, சுயம்வரம், தெருவிளக்கு ஆகிய நாவல்களையும் எம்.கே.டி.பாகவதர், நடிகவேள் எம்.ஆர்.ராதா ஆகியோரது வாழ்க்கை வரலாறுகளையும் பாட்டில் பாரதம், பசி கோவிந்தம், புதிய ஆத்திச்சூடி –பெரியார் அடிச்சுவட்டில் ஆகிய கவிதை நூல்களையும் வேலை நிறுத்தம் ஏன்?, சேரிகள் நிறைந்த சென்னை, விந்தன் கட்டுரைகள், புதுமைப்பித்தனும் புகையிலையும் ஆகிய கட்டுரைகளையும் எழுதி தமிழ் எழுத்து மரபில் நீங்கா இடம் பெற்றவர் கவிஞர் விந்தன். ஆனால் அவரது நூற்றாண்டினை (1916-2016) கொண்டாடிய நிலையிலும் தமிழ்ச்சமூகம் அவரை இன்றளவும் முன்னெடுக்கவில்லை என்பது வருந்தத்தக்கதே. பொதுவுடமைவாதியாக பன்முகத் தளத்தில் ஆளுமை செலுத்திய விந்தனின் கவிதைகளையும் பாடல்களையும் இக் கட்டுரை முன்னெடுக்கின்றது.

கவிதைகள்
1956 இல் விந்தன் ‘பசி கோவிந்தம்’ என்ற சிறுநூல் எழுதினார். அந்த நூலைப் பற்றி டாக்டர் ஆ.ரா. வெங்கடாசலபதி அவர்கள், புலவர் த.கோவேந்தன் எழுதிய புதுநாநூறு என்ற நூலுக்கு எழுதியுள்ள முன்னோட்டத்தில் “இராஜாஜியின் பஜ கோவிந்தத்தை நையாண்டி செய்து விந்தன் ‘பசி கோவிந்தம்’ எழுதினார். இராஜாஜி அரசியல் தலைவராகவும் இந்தியாவின் நடுவண் ஆளுநராகவும் இருந்ததால் அவருக்கு இலக்கிய பீடத்தில் இடம் கிடைத்து விட்டது. அவருடைய பஜ கோவிந்தத்தை வாங்கு வாங்கு என்று வாங்குகிறார் விந்தன். இயல்பாகவே விந்தன் ஒரு சிறுகதையோ, நாவலையோ எழுதும் போதுகூட ஆசிரியர் கூற்றாகப் பகுதிக்கு ஒரு வரியேனும் எழுதி சமூக இழிவுகளையும் ஒழுக்கங்களையும் நையாண்டி செய்யாமல் விந்தனுக்குக் கதையை நடத்திச் செல்லத் தெரியாது. அப்படி இருக்கையில் நையாண்டி செய்வதற்காகவே எழுதப்பட்ட ‘பகடி’ நூலில் கேட்க வேண்டுமா? தன்னுடைய நூலைப் புடைநூல் என்று குறிப்பிட்டாலும் குறிப்பிட்டார் ‘புடை புடை’ என்று புடைத்து விடுகிறார் விந்தன்” எனக் குறிப்பிடுகிறார். பசி கோவிந்தத்தில் முப்பத்தொரு பாடல்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு சில பாடல்கள். 

Continue Reading →

ஆய்வு: தமிழ்ச் சிற்றிதழ்களில் மார்க்சியக் கவிதைகள்

- முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன், தமிழ்ப் பேராசிரியர், அறிவியல் மற்றும் மனிதவளத் துறை, வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி, ஆவடி. -“மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தோடு இலக்கியக் கோட்பாடுகள் மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. இயற்கையோடு போராடி, இயற்கையை அடக்கி ஆளும் ஆற்றலைப் பெறும் போது, இயற்கையின் மத்தியில் இயற்கையை விடவும் உயர்வு பெற்ற மனிதன் காட்சி தருகிறான். இயற்கையோடு போராடி, உற்பத்தித் திறனைப் பெருக்கி, பொருளாதார வளர்ச்சியை எந்த அளவிற்குத் தன்னைச் சுற்றியுள்ள புறச்சூழல்களையும் மனிதன்; கட்டுபடுத்தி ஆளத் தொடங்கி விடுகிறான். இதனால், உழைக்கும் திறத்தோடும் உற்பத்திப் பெருக்கதோடும் பொருளாதார வளர்ச்சியோடும் பண்பாட்டு நிலைகள் பின்னிப் பிணைக்கப் பட்டிருப்பதைக் காண்கிறோம்”1 என்பார் ஜி.ஜான்சாமுவேல். இதனைச் சமுதாய இருப்பு என்பர் மார்க்சியவாதிகள்.

சமுதாய இருப்பு குறித்து தி.சு.நடராஜன் கூறும் பொழுது, “சமுதாய அமைப்பினைத் தமக்குள் செயல்பாட்டுறவுடைய இரண்டு கட்டுமானங்களாக மார்க்சியம் பகுத்துணர்கிறது. இவ்விரண்டு கட்டுமானங்களுள், அடிக்கட்டுமானம் என்பது பொருளியல் வாழ்க்கையின் அனுகூலங்களால் பெற்ற பொருளாதார உற்பத்தியுறவுகளைக் குறிக்கும். இது சமுதாய இருப்பு என்பதாகும். இத்தகைய வாழ்க்கையினை அடிப்படையாகக் கொண்டு அதன் மேல் மட்டத்தில் அமைந்துள்ள கருத்தோட்டங்கள், சமயங்கள், அரசுகள், மரபுகள், அழகியல்கள் முதலியவற்றின் ஒட்டு மொத்தத்தைக் குறிப்பிடுவது, “சமுதாய உணர்வு நிலை” என்பதாகும். இதுவே சமுதாய அமைப்பின் மேல் கட்டுமானம் இது, தனக்குள் ஒன்றைனையொன்று சார்ந்துள்ள பல உள்கட்டுமானங்களைக் கொண்டி ருக்கிறது.”2 என்பார்.

மேற்கண்ட கூற்றுகள் மார்க்சியக் கோட்பாட்டின் அடிப்படைத் திறன்களை விளக்குவதாகவுள்ளன. இலக்கியத்தின் மேல்கட்டுமானங்களை விட, அவற்றின் கருத்திற்கே முக்கியத்துவம் மார்க்சியத்தில் வழங்கப் பெறுகின்றன.

தமிழ்ச் சிற்றிதழ்களில் மார்க்சியக் கவிதைகள் எழுதப் பெற்றிருக்கின்றன. அவைகள் சமூகப் பொருளதார ஏற்றத் தாழ்வுகளைக் கூறுவதாகவும், ஏழ்மை நிலையினைச் சுட்டிக் காட்டுவதாகவும், அரசியல்வாதிகளின் போலித்துவத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருக்கின்றன.

சிற்றிதழ்க் கவிதைகளில் சமூக ஏற்றத்தாழ்வுகள்
“இலக்கியம் என்பது காலங்காலமாகக் கலாச்சாரத்தின் வாழ்க்கை முறையின், வாழ்நிலைகளின் சமூக எதிர்பார்ப்புகளின், கட்டுகளின் பிரதிபலிப்பாக இருந்திருக்கிறது”3 என்பார் சாப்ராபேகம். “இலக்கியம் விரும்பினாலும் சரி, விரும்பா விட்டாலும் சரி, சமுதாயத்தின் நலன்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் ஆட்பட்டே இருக்கும்”4 என்பதைக் கொண்டு இலக்கியத்தில் சமூகம் ஒன்றியிருக்கும் தன்மையினை அறிந்து கொள்ள முடிகின்றது. சமூக ஏற்றத் தாழ்வுகளால் பாதிக்கப் பெற்ற கவிஞன் தன் ஆற்றொணாத் துயரத்தைத் தம் கவிதையில் பதிவு செய்கின்றான். அவ்வாறான கவிதையாக,

“சமரச வார்த்தைகளின்
களிம்புகளை நிராகரித்த
எங்கள் கோபம்
சமத்துவ தீர்வுகளுக்காய்
இன்னும் எரிகிறது.
கனமாய் விழும்
எங்கள் எழுத்துக்கள்
உங்கள் பாறை
மனசுகளை
உடைத்துப் போடும்
கவனமாயிருங்கள்”5

எனும் இக்கவிதையைக் கூறலாம். எழுத்தினாலும் சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டி, முயற்சிகள் செய்கின்றோம். கவனமாயிருங்கள் எனக் கவிஞரின் எச்சரிக்கை அமைகின்றது. “ஒரு மனிதன் எந்த அளவிற்கு வாழ்க்கையோடும் புற உலகோடும் வரலாற்றின் முற்போக்குச் சக்திகளோடும் தன்னைப் பிணைத்துக் கொள்கின்றானோ, அந்த அளவிற்கு அவனது முருகியல் உணர்வுகளும் வளம் பெற்றதாகக் காட்சி தரும். இந்நிலையில் நின்று நோக்குவோமென்றால் கலை என்பது புற உலகின் பிரதிப்பலிப்பாக அமைவதைத் தெளிவாக விளக்கிக் கொள்ள முடியும்.”143 பா.தனராஜ் தம் கவிதையொன்றில், சமூக ஏற்றத்தாழ்வைக் ‘காப்பிழை’ என்கின்றார். ஏழை பணக்காரன் நிலை குறித்துக் கூறும் பொழுது,

Continue Reading →

ஆய்வு: இலக்கியங்கள் காட்டும் வீரக்கற்கள்

- முனைவா் செ. செயந்தி, விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, சங்ககிரி, வீராச்சிபாளையம். 637 303 -தமிழில் கிடைத்துள்ள இலக்கியங்களில் காலப்பழமை வாய்ந்தது சங்க இலக்கியமாகும். சங்க இலக்கியங்களின் பின் எல்லையை கி.பி. 300 எனக்கூறுவா். சங்க இலக்கியங்களுக்குப் பின்னா் தோன்றிய நூல்களிலும் செய்திகள் பேசப்படுகின்றன.  தமிழ் இலக்கியங்கள் வீரக்கற்கள் எழுப்பப்பட்ட இடங்களையும் அக்கற்களில் வீரரது உருவம், பெயா், பெருமை ஆகியவற்றைப் பொறித்து வைத்திருந்த தன்மைகளையும் அக்கற்களை வழிபட்ட தன்மைகளையும் பெரும்பாலும் காட்டுகின்றன. 

இலக்கிய நூல்கள் 
தெலுங்கு மொழியில் இலக்கிய வளா்ச்சி பிற்பட்ட காலங்களில்தான் ஏற்பட்டது. இருப்பினும் கி.பி. 11 – ம் நூற்றாண்டிற்குப் பின்பு தெலுங்கு இலக்கியங்கள் தோன்றியிருக்க வாய்ப்புண்டு. கி.பி. 800 க்கும் கி.பி. 1000 க்கும் இடைப்பட்ட காலங்களில் வாழ்ந்த புலவா்களைப் பற்றியக் கருத்துகளும் உண்டும். 

முதல் கல்வெட்டு
கி.பி. ஆறாவது நூற்றாண்டில் தோன்றிய கல்வெட்டுகளில் தான் தெலுங்கு மொழியினை முதன் முதலாகக் காணமுடிகிறது. கடப்பா மாவட்டத்திலுள்ள கலமல்லா என்னும் இடத்தில் கண்டெடுக்கபட்ட கல்வெட்டே முதல் கல்வெட்டாகும். கி.பி 848 – ல் அதங்கி என்ற இடத்தில் கீழைச்சாளுக்கியா்களின் தலைவா்களான பாண்டுரங்காவில் அமைந்த முதல் தடவையாகத் தெலுங்கு கவிதை பொறிக்கப்பட்டுள்ளது. 

வீரக்கற்கள் நடப்பட்ட இடம்
வீரக்கற்கள் பாலை நில வழிகளில் உள்ளுரிலும் நடப்பட்டமையை இலக்கியங்கள் குறிக்கின்றன. உள்ளுரில் கற்கள் நடப்பட்டதற்கான சான்றுகள் குறைவாக இருக்க பாலை நில வழிகளில் இறந்தவா்கள் நினைவாக அமைக்கப்ட்ட நினைவுக்கற்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதற்கான சான்றுகள் கிடைக்கின்றன. 1

பாலைநில வழிகளில் வீரக்கற்கள்
பாலை நில வழிப்போவோரைக் கொன்று பொருள் பறிப்பது மரவா்களது பழக்கமாக இருந்தது. அவ்வாறு கொல்லப்பட்டோரின் உடல்களைத் தழையிட்டு மூடி அதன்மேல் கற்களைக் குவித்து மேடுபோல் செய்வா். இதனை “பதுக்கை“ என சங்க இலக்கியப் பாடல்கள் பகா்கின்றன. இத்தகு பதுக்கைகளின் அச்சமூட்டும் வருணனையை சங்கப் பாடல்கள் காட்டுகின்றன.

Continue Reading →

ஆய்வு: தொல்தமிழர் கொடையும் மடமும்

முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 113செவ்விலக்கியங்களில் பல வள்ளல்கள் பற்றியக் குறிப்புகள் பரந்த அளவில் இடம் பெற்றுள்ளன. அவர்கள் வாழ்ந்த காலத்தைக் கணக்கில் கொண்டு வள்ளல்கள் முதலேழு, இடையேழு, கடையேழு என்று பகுத்துள்ளனர். ஆனால் முதலேழு மற்றும் இடையேழு வள்ளல்களுடைய பெயர்கள் அவ்வளவு எளிதாக யாருக்கும் தெரிந்திருப்பதில்லை, கர்ணனை தவிர்த்து. அவர்களைப் பற்றியத் தரவுகள் கூட மிகவும் அரிதாக இருக்கின்றன. பழங்காலத்தில் ஈகையையும் கொடையையும் ஒன்றாகப் பார்த்தனர். உண்டாட்டுக் கொடையென (தொல். பொ 58). இல்லான் கொடையே கொடைப்பயன் (நாலடி,65). என்கிறது பாடல். நுணுகிப் பார்க்கும்போது பொதுவாக ஈகையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது கொடையாகும். இக்கட்டுரையில் தொல்தமிழ் மன்னர்களின் கொடைமடச் செயல்களைச் சற்று ஆராய்வோம்.

கொடை பற்றிய விளக்கம்

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறிஎதிர்ப்பை நீரது உடைத்து (குறள்.221)

ஈகை என்பது இல்லாதார்க்குக்கு ஒன்று கொடுப்பதே; பிற எல்லாக் கொடையும் எதிர்பார்த்துக் கொடுப்பது. கொடை என்ற சொல்லிற்குத் தியாகம், புறத்துறை, திருவிழா, வசவு, அடி என்றும் ஈகைக்கு – கொடை, பொன், கற்பகம் என்றும் சென்னை பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி. (பக்.236 ) பொருள் தருகின்றது. தமிழ்-தமிழ் அகரமுதலி கொடை என்ற சொல்லிற்கு ஈகம், தியாகம், கொடை, கைக்கொண்ட ஆநிரையை இரவலர்க்கு வரையாது கொடுக்கும் (புறத்துறை), ஊர்த்தேவதைக்கு மூன்று நாள் செய்யும் திருவிழா, வசவு, அடி(ப.- 387) என்று பொருள் சுட்டுவதைக் காணலாம்.

கொடைமடம்
கொடைமடம் என்பது மடைமை குணங்களில் ஒன்றாகும். ‘மடம்’ என்பதற்கு ‘அறியாமை’ என்ற பொருள். இன்னாருக்கு இன்னது கொடுக்க வேண்டும் என்பதை எண்ணாமல், கிடைத்ததை நினைத்தபோதே கொடுப்பதைக் ‘கொடை மடம்’ என்று சொல்வார்கள். இது சரியா, தவறா என்று ஆலோசிக்க அறிவுக்கு இடம் கொடுக்காமல், உள்ளத்தில் கொடுக்கத் தோன்றியபோதே ‘கொடை மடம்’ உடையவர்கள் கொடுத்துவிடுவார்கள்.

‘மடைமை’ என்பது போற்றப்பட வேண்டிய குணங்களில் ஒன்றாக இல்லையெனினும், ‘கொடைமடத்தை’ அவ்வாறு கூற இயலாது. கொடைக் கொடுப்பதென்பது ஒரு மாபெரும் நற்செயல். நாம் பெற்ற செல்வங்கள் எல்லாம் மற்றவர்களுக்கு கொடுப்பதற்கே. ஈகையை தவிர, பிற எல்லா கொடுத்தலும், திரும்பி பெறக்கூடிய நோக்கத்தில் மட்டும் தான் தரப்படும். இதனை வள்ளுவர் கூறுவது,

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் 
குறியெதிர்ப்பை நீர துடைத்து. (குறள்.221)

இத்தகைய கொடையை, கண் மூடித்தனமாக கொடுப்பதில் தவறொன்றுமில்லையே? சங்க காலத்தில், இந்த ‘கொடைமடத்தைப்’ போற்றி, கபிலர் போன்ற பல புலவர்கள், அரசர்களின் கொடை வள்ளல்களைப் பாடியது சிறப்பிற்குரியது.

Continue Reading →

ஆய்வு: க.நா. சுப்ரமண்யம் படைப்புலகம்

ஆய்வு: க.நா. சுப்ரமண்யம் படைப்புலகம்க.நா.சு என்று அனைவராலும் அறியப்படும் க.நா.சுப்ரமண்யம் என்பதன் விரிவாக்கம் கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம். இவர் தன் விமர்சனங்களுக்காக அதிகமாக அறியப்பட்ட படைப்பாளர். இந்தியா முழுவதும் அறியப்பட்ட தமிழ் எழுத்தாளர். இவர் 1912ஆம் ஆண்டில் சனவரி 31 இல், தஞ்சாவூரை அடுத்த சுவாமி மலையில் (வலங்கைமானியில்) பிறந்தவர். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றவர். இவர் முழுநேர எழுத்தாளராகவே வாழ்ந்தவர். நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு, நாடகம், விமரிசனம் எனப் பல தளங்களில் தன் படைப்பாளுமையை வெளிப்படுத்தியர். ஐரோப்பிய படைப்புகளை மொழிபெயர்ப்புகள் மூலம் தமிழ் வாசகர்களுக்குப் பரவலாக அறியச் செய்த பெருமை க.நா.சு வுக்கு உண்டு.  க.நா.சு வின் படைப்புலகத்தை அவரின் நூல்களின் வழி வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் மையப்பொருளாகும். இருபதாம் நூற்றாண்டில் பல எழுத்தாளர்கள் இருந்தாலும் தன் படைப்புகளான கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் மற்றும் விமரிசனங்கள் என அனைத்து தளத்திலும் சிறந்து விளங்கிய க.நா.சுப்ரமண்யத்தின் படைப்புலகத்தை அவரின் வாழ்வு மற்றும் படைப்பின் வழி காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

க.நா.சு வின் தந்தை நாராயணசாமி ஐயர் தபால் துறையில் வேலை பார்த்தார். தன் மகன் ஆங்கிலம் படித்து இலக்கியம் எழுதிப் பெயர் பெற வேண்டும் என்பது அவர் இலட்சியமாக இருந்தது. க.நா.சு வை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்க வைத்தார். படிப்பு முடிந்ததும் வேலைக்குச் செல்ல அவசியம் ஏற்படவில்லை. தந்தையார் ஆங்கிலத்தில் எழுத ஊக்கம் கொடுத்தார். அதிகமாகப் படிக்க வைத்தார். படிப்பு மற்றும் (வாசிப்பு) அவருக்கு பரந்துபட்ட இலக்கியத்தை அறிமுகப்படுத்தியது.அவர் படிப்பின் வாயிலாக வாழ்க்கைக்கு ஒரு தத்துவத்தை அமைத்துக் கொண்டார்.அவர் தத்துவம் பற்றி பின்னால் கூட எழுதவில்லை. ஆனால் தத்துவம் அவரின் வாழ்க்கையிலும் படைப்புகளிலும் ஆழப் பதிந்துவிட்டது.

க.நா.சு ஆங்கிலத்தில் எழுதிப் பெயர் பெற வேண்டும் என்ற நாராயணசாமியின் ஆசையை அவர் நிராகரித்துவிட்டார்.இருந்தாலும் 1928 முதல் 1934 வரை எதற்காக எழுதுகிறேன் என்ற சிந்தனையே இல்லாமல் ஆங்கிலத்தில் பல கட்டுரைகள், கதைகள் எழுதியதாகச் சொல்கிறார்.‘க.நா.சு வின் முதல் ஆங்கிலக் கட்டுரை கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது 1928 இல் வெளிவந்தது’1

படித்த ஒரு மொழியில் அந்த மொழிக்குப் பழக்கம் இல்லாத வாழ்க்கையை எழுதுவது எத்தனைதான் சிறப்பாக எழுதினாலும் அது நியாயமானதாகத் தெரியவில்லை என்று கருதினார். 1934, 1935 ஆம் ஆண்டுகளில் சென்னையில் நடந்து கொண்டிருந்த இலக்கிய முயற்சிகளைக் கண்டுள்ளார்.அப்போது டி.எஸ்.சொக்கலிங்கம் நடத்திக் கொண்டிருந்த ‘காந்தி’ என்ற பத்திரிகையில் வெளிவந்த ‘வத்திலக்குண்டு எஸ்.ராமய்யா என்பவரின் வார்ப்படம் என்கிற கதைதான் முதன்முதலில் க.நா.சு வுக்கு தமிழில் எழுத வேண்டும் என்கிற எண்ணத்தை உண்டு பண்ணியது’2 பின்பு மணிக்கொடியிலும் எழுதலானார்.தாய்மொழியில் எழுதுவதுதான் ஆன்மீகமான ஒரு காரியம் என்று எண்ணித் தமிழில் எழுதத் தொடங்கினார்.கவிதை, சிறுகதை, நாவல் என்று படைப்பு இலக்கியத்தை எழுதினார்.

Continue Reading →

ஆய்வு: புலம்பெயர் தமிழர்களின் பண்பாட்டுக் கல்வியில் திருக்குறளுக்கு அளிக்கப்படவேண்டிய முக்கியத்துவம்.

கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன்  [ஐக்கிய ராச்சியம் லிவர்ப்பூல் ஹோப் பல்கலைக் கழகத்தில் 2018ஜூன் 27,28,29 நாள்களில்  நடைபெற்ற இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாட்டு ஆய்வரங்கில் வாசிக்கப் பட்ட ஆய்வுக்கட்டுரை. கட்டுரையாளர் :  கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன்   ]

தோற்றுவாய்
தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தங்கள் பண்பாட்டம்சங்களைப் பேணிக் கொள்வதற்கு திருக்குறள் எவ்வகையில் துணபுரியக் கூடியது என்பதை எடுத்துப்பேசும் முயற்சியாக எனது இக்கட்டுரை அமைகிறது.

‘பண்பாடு’ என்பது தனிமனித அறஒழுக்கநெறிகள், குடும்ப-சமூக உறவு முறைகள் அவை தொடர்பினாலான சடங்கு சம்பிரதாயங்கள்–விழாக்கள், வாழ்வியல் முறைமைகள், கலைக் கோலங்கள் முதலான பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கியதாகும். இவ்வாறான பண்பாட்டம் சங்களின் இயல்பு மற்றும் அவை காலம்தோறும் அடைந்துவந்த வளர்ச்சி மற்றும் மாற்றம் ஆகிய வற்றைப் பதிவுசெய்து பேணி நிற்கும் செயன்முறைகளில் ஒருவகையாகத் திகழ்பவை இலக்கிய ஆக்கங்கள் ஆகும். அவ்வகையில் தமிழரின் பண் பாட்டைப் பொறுத்தவகையில் முக்கியமான அற இலக்கியப் பதிவாக அமைந்த நூல் திருக்குறள் ஆகும்.

தமிழில் நாலடியார், நான்மணிக்கடிகை, ஆத்திசூடி முதலான பத்துக்கும் மேற்பட்ட அறநூல்கள் பண்டைய காலப்பகுதிகளில் எழுந்திருப்பினும் வாழ்க்கை தொடர்பான முழு நிலைப்பார்வையை முன்வைத்துள்ள ஆக்கம் என்ற வகையில் தலைமைத்தகுதியுடையதாகத் திகழ்ந்துவருவது திருக்குறளேயாகும். இவ்வாக்கம் பண்டைத்தமிழர் பேணிநின்ற உலகியல் வாழ்க்கை சார்ந்த பண்பாட்டம்சங்கள் பலவற்றைத் தொகுத்துரைப்பது. இவ்வாறான இந்நூலா னது, இன்றைய சூழலில் புலம்பெயர் தமிழரின் பண்பாட்டுக் கல்விக்கு எவ்வெவ்வகைகளில் பயன்படக்கூடியது என்பதைக் கவனத்திற்கு இட்டுவருவதே இவ்வாய்வுக் கட்டுரையின் குறிக்கோளாகும்.

இவ்வகையில் இக்கட்டுரையிலே முதலில், திருக்குறளின் பண்பாட்டுப் பார்வை தொடர்பான பொது விளக்கம் முன்வைக்கப்படவுள்ளது. குறிப்பாக, அந்நூல் இல்லறத்தார், துறவறத்தார், ஆட்சியாளர் மற்றும் நிர்வாகப்பணியாளர் முதலான அனைத்துவகை சமூக மாந்தர்க்குமுரிய அறங்களை எடுத்துக் கூறும் முறைமை இம்முதற்பகுதியிலே கவனத்துக்கு இட்டு வரப்படவுள்ளது. 

இக்கட்டுரையின் இரண்டாம் பகுதியானது, திருக்குறள் புலப்படுத்தி நிற்கும் மேற் சுட்டிய பண்பாட்டம்சங்களின் பரப்பிலே புலம்பெயர்தமிழ்ச் சமூகச்சூழலில் கல்விகற்கும் மாணவர் களுக்கு அழுத்திப் பேசப்படவேண்டிய அம்சங்கள் எவையெவை என்பதைச் சுட்டிக்காட்டும் செயற்பாடாக அமையவுள்ளது.

Continue Reading →

ஆய்வு: இல்வாழ்க்கைக்குத் திருக்குறள் அளித்துள்ள முதன்மை நிலை -இந்திய மற்றும் உலகளாவிய சிந்தனைகளுடனான ஒப்புநோக்கு

கலாநிதி நா. சுப்பிரமணியன்[ஐக்கிய ராச்சியம் லிவர்ப்பூல் ஹோப் பல்கலைக் கழகத்தில் 2018ஜூன் 27,28,29 நாள்களில்  நடைபெற்ற இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாட்டு ஆய்வரங்கில் வாசிக்கப் பட்ட ஆய்வுக்கட்டுரை. கட்டுரையாளர் : பேராசிரியர் கலாநிதி நா. சுப்பிரமணியன் ]


தோற்றுவாய்
திருக்குறள் பற்றிய பார்வைகளிலே கவனத்துட் கொள்ளப்படவேண்டிய ஒரு முக்கிய அம்சத்தை ஆய்வுநிலையில் முன்வைப்பதாக இக்கட்டுரை அமைகிறது. அந்நூலைப் பற்றி இதுவரை மேற்கொள்ளப்பட்டுவந்துள்ள ஆய்வுப் பார்வைகள் பலவும் அதனை ’உலகப் பொதுவானஒரு அறநூல் ’ஆக, சரியாகவே இனங்காட்டிவந்துள்ளன. அவ்வகையில் அப் பார்வைகள் பலவும் அந்நூலின் ’அறவியல் சார்ந்த உள்ளடக்க அம்சங்களின் சிறப்பு’களை, உலகளாவியநிலைகளிலான அத்தகு சிந்தனை மரபுகளுடன் தொடர்புறுத்தி நோக்கித் தெளிவாகவே எடுத்துரைத்துள்ளன என்பதும் வெளிப்படை. இவ்வாறு அதனை உலகப் பொது வானஒரு அறநூலாகக்கொண்டு நிகழ்த்தப் பட்டு வரும் ஒப்பியல்சார் பார்வைகளிலே, ‘இதுவரை தனிநிலையில் உரிய கவனத்தைப்பெறாத’ ஒரு அம்சத்தை அடையாளங் காட்டும் ஆய்வுமுயற்சியாகவே இக்கட்டுரை அமையவுள்ளது. அந்தஅம்சம், அந்நூலின் ’வாழ்க்கை பற்றிய நோக்கு நிலை‘ தொடர்பானதாகும். குறிப்பாக, ’இல்வாழ்க்கை’ எனப்படும் ’குடும்பக் கட்டமைப்பு சார்’ வாழ்வியலுக்கு அந்நூல் அளித்துள்ள முதன்மையே  இவ்வாய்விலே நமது கவனத்துட் கொள்ளப்படுகிறது. இவ்வாறாக அவ்வாக்கம் அளித்துள்ள அம்முதன்மை நிலையின் வரலாற்று முக்கியத்துவத்தை நுனித்து நோக்கும் முயற்சியே இங்கு மேற்கொள்ளப்படவுள்ளது. 

திருக்குறளின் கட்டமைப்பிலே – குறிப்பாக பால் மற்றும் இயல்களுக்குப் பெயரிடுவ திலும் அவற்றின் வைப்பு முறைகளிலும் – வேறுபாடுகள் நிலவி வருவதால் இங்கு எனது இப்பார்வைக்கு பரிமேலழகருரையுடனான கட்டமைப்பையே ஆதாரமாகக் கொண்டுள் ளேன் என்பதை முதலிலேயே தெரிவித்துக்கொள்கிறேன். 

1. திருக்குறள்  இல்வாழ்க்கைக்கு தந்துள்ள முதன்மை –சில சான்றுகள் 

வாழ்க்கை பற்றிய நோக்குநிலைகளை முக்கியமான இரு வகைகளில் அடக்கலாம். அவற்றுள் முதலாவது நிலையானது கணவன்>மனைவி> பிள்ளைகள் மற்றும் சுற்றத்தினர் ஆகியோரை உள்ளடக்கியதான ‘குடும்பம்’ என்ற கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளும் நிலையாகும். மேற்படி குடும்பக்கட்டமைப்புசார் நிலையே தமிழில் இல்வாழ்க்கை எனப்படு கிறது. இதிலே உலகியல்சார்ந்த நடைமுறை அனுபவங்கள், அவைசார்ந்த அற-ஒழுக்க நியமங்கள் மற்றும் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் ஆற்றவேண்டிய கடமைகள் முதலியன முக்கியத்துவம் பெறுகின்றன.

இரண்டாவது நிலையானது ‘குடும்பம்’ என்ற கட்டமைப்பை  ஏற்காத – அதாவது அதற்குப் புறத்தே நிற்கும் – நிலையாகும். இந்த நிலையானது மேற்படி உலகியல்சார் அனுபவங்களினின்று விலகிநிற்பதாகும். குறித்த சில அற – ஒழுக்கநியமங்களைப் பேணிக் கொள்வது மற்றும் சமூகத்துக்கான சில கடமைகளை ஆற்றுவது ஆகிய எல்லைகளுடன் இந்த இரண்டாவது நிலை நிறைவுபெற்றுவிடுகிறது.

Continue Reading →

ஆய்வு: நெய்தல் திணையும் பரதவர் குடிலும்

தொல் தமிழர்கள் நிலங்களை அதன் தன்மை அடிப்படையில் மிக நுட்பமாக ஆ- முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 600 113 -ய்ந்து ஐந்து வகையாகப் பகுத்து வைத்திருக்கிறார்கள். அவை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பவைகளாகும். இதில், கடலும் கடல்சார்ந்த பகுதியான நெய்தல் நிலத்தின்கண் வாழும் ஆண் மக்களைப் பரதவர், நுளையர், திமிலர் என்றும் பெண்மக்களைப் பரத்தியர், நுளைத்தியர், நுழைச்சியர் என்றும் அழைப்பர். இங்ஙனம் நெய்தல் நிலத் தலைமகனைக் கொண்கன், துறைவன், சேர்ப்பன், மெல்லம்புலம்பன், புலம்பன் பரப்பன் என்ற பெயர்களால் வழங்கப்பட்டுள்ளதைப் பண்டைய இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. இத்தகைய நெய்தல் நிலத்தில் வாழும் மக்களின் வாழ்வியலின் முக்கிய அங்கமான குடில்கள் பற்றியப் பதிவுகளை ஆய்ந்து வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

பரதவர் எனப்படும் மீனவர் குடிலைச் சுற்றி பனைமரங்கள் நிறைந்து அடர்ந்து காணப்பட்டதை,

“ஒலிகா வோலை முள்மிடை வேலி
பெண்ணை இவரும் ஆங்கண்
வெண்மணற் படப்பைஎம் அழுங்கல் ஊரே” (நற்.38:8-10)

என்று குறிக்கக் காணலாம். குடிலின் அருகில் வளைந்த கருங்கழிகளும் காணப்படும். அவற்றிலே நெய்தல் கொடிகள் மலிந்து பூத்துக் குலுங்கும் தன்மையுடையது.

“கொடுங்கழி நெய்தலும்” (ஐங்.183:5)

“பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இன்மீன் இருங்கழி
….. ……………………………..
தண்ணம் துறைவன்”    (குறுந்.9:4-7)

இவ்விடத்திலே தாழைப் புதர்கள் நிறைந்து வேலியமைத்ததைப் போன்று காணப்படும்.

“வாள்போல் வாய கொழுமடல் தாழை
மாலை வேல்நாட்டு வேலி ஆகும்” (குறுந்:245:3-4)

இங்கு அடும்புக் கொடிகள் எங்கும் படர்ந்தும் பரவியும் இருந்ததை,

“………………….. தண்கடல் பரப்பின்
அடும்புஅமல் அடைகரை” (பதிற்.51:6-7)

என்னும் பாடலடிகள் வெளிப்படுத்துகிறது. மேலும் புன்னை மரங்களும் பூத்துக் குலுங்கும் புலிநகக்கொன்றையும் புதுமணம் வீசி நிற்கும்.

Continue Reading →