ஆய்வு: கற்பிற்குரிய மெய்ப்பாடுகளும் மனன் அழியாதவழி புலப்படும் மெய்ப்பாடுகளும் அகநானூறும் உரையாசிரியர்களின் உரைகளை முன்வைத்து ஓர் ஆய்வு

- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், ஆற்காடு -1:0. முன்னுரை
கற்பிற்குரிய மெய்ப்பாடுகளை, மனன் அழியாதவழி புலப்படுவன எனவும்;  மனன் அழிந்தவழி புலப்படுவன எனவும் கூறியுள்ளார் தொல்காப்பியர். (தொல்.மெய்.23-24) இவ்வியலில் மேற்கூறிய மெய்ப்பாடுகளையும் அதனை விளக்க உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ள அகநானூற்றுப் பாடல்களையும் உரையாசிரியர்கள் வழிநின்று ஆராயப்படுகின்றன.

1:1. மனன் அழியாதவழி புலப்படும் மெய்ப்பாடுகளும் அகநானூறும்
மனன் அழியாதவழி புலப்படும் மெய்ப்பாடுகளாக, முட்டுவயிற் கழறல், முனிவு மெய்ந்நிறுத்தல், அச்சத்தின் அகறல், அவன் புணர்வு மறுத்தல், தூதுமுனிவின்மை, துஞ்சிச் சேர்தல், காதல் கைம்மிகல், கட்டுரையின்மை ஆகியனவற்றைத் தொல்காப்பியர் கூறியுள்ளார்.(தொல்.மெய்.23) இம்மெய்ப்பாடுகளையும் அவற்றிற்கு உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ள அகநானூற்றுப் பாடல்களும் குறித்து இப்பகுதி ஆராயவுள்ளது.

1:1:1.முட்டுவயிற் கழறலும் அகநானூறும்
முட்டுவயிற் கழறலென்பது, “களவு இடையீடு பட்டுழியதற்கு வருந்தாது இவ்வாறாகி நின்றதென அவனை கழறியுரைத்தல் என்றவாறு.”(இளம்.மெய்.23.) என இளம்பூரணர் கூறியுள்ளார். ஏனைய உரையாசிரியர்களின் உரையும் இதன்பாற்படும். முட்டுவயிற் கழறலென்பது களவுக்காலத்து தலைவியைக் குறியிடத்துச் சந்திக்க இயலா காலத்து நேர்ந்த முட்டுப்பாடு காரணமாக தலைவனை கழறி உரைத்தலாகும். இதனை விளக்க, பாரதியும் பாலசுந்தரமும், குறுந்.296ஆம் பாடலையும்;  மேலும் பாரதி, பாலசுந்தரம், பேராசிரியர், குழந்தை, இராசா, தாசன் ஆகியோர்,

“நொச்சி வேலித் தித்த னுறந்தைக்
கன்முதிர் புறங்காட் டன்ன
பன்முட் டின்றார் றோழிநங் களவே”(அகம்.122)

எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், நொச்சி வேலியாகச் சூழ்ந்து நிற்கின்ற தித்தனது உறந்தையிலுள்ள கன்முதிர்ந்த புறங்காட்டினையொத்த பல முட்டினையுடையது தோழி நமது கள்ளப்புணர்ச்சி நொச்சிவேலிப் புறங்காடு என்க என்பதில் ‘பலமுட்டின்றால் தோழிநங் களவே’ என்பது முட்டுவயிற் கழறலாகும். இதில் இரவு நேரச் சத்திப்பு இத்துணைத் தடைகளை உடையது. ஆகையால் விரைந்து மணத்திற்கு ஏற்பாடு செய்யும்படி தலைவனை வற்புறுத்துவது இதிலுள்ள குறிப்பு.

1:1:2 முனிவு மெய்ந்நிறுத்தலும் அகநானூறும்
முனிவு மெய்ந்நிறுத்தலென்பது, “வெறுப்பினைப் பிறர்க்குப் புலனாகாமல் மெய்யின் கண்ணே நிறுத்தல்”(இளம்.மெய்.23) எனவும், “தலைமகளுள்ளத்து வெறுப்பு வெளிப்பட நிற்கும் நிலமையும்.”(பேரா.மெய்.23.)  எனவும், “வரையாக்கூட்ட வெறுப்பைத் தலைவி தன் மெய்ப்பாடு குறிப்பால் வற்புறுத்துதல்.”(பாரதி.மெய்.23) எனவும், “தலைவன் வரைவிற்குரியன புரியாமல் களவு நீட்டித்தலின் அவ்வெறுப்புத் தன் மேனியிற் புலப்படத் தோழியை வற்புறுத்துங் குறிப்பொடு நிற்றல்.”(பாலசுந்.மெய்.23)எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். இவற்றுள் இளம்பூரணர் ‘வெறுப்பு பிறர்க்குப் புலனாகாமை’ எனவும், பேராசிரியரும் ஏனைய உரையாசிரியர்களும் ‘வெறுப்பு வெளிப்பட நிற்கும் நிலைமை’ எனவும் பொருள் கூறியுள்ளனர். முனிவு என்பது வெறுப்பு, மெய் என்பது உடல், நிறுத்தல், என்பது கோடாமை தலைமகன் மீதான வெறுப்பு தன் மெய்யின் வழியே வெளிப்படாது காத்தல் முனிவு மெய் நிறத்தலாகும். இதனை விளக்க, பாரதி, குறுந்.218 ஆம் பாடலையும்; மேலும், பாரதி, இராசா, பாலசுந்தரம், தாசன் ஆகியோர் குறுந்.4 ஆம் பாடலையும்; பேராசிரியர், பாரதி, குழந்தை, பாலசுந்தரம் ஆகியோர்,

Continue Reading →

ஆய்வு: உவகையெனும் மெய்ப்பாடும் அகநானூறும் உரையாசிரியர்களின் உரைகளை முன்வைத்து ஓர் ஆய்வு

- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், ஆற்காடு -1:0. முன்னுரை
நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டும் மெய்ப்பாடுகள் என்கிறார் தொல்காப்பியர்1. இக்கட்டுரையில் உகையெனும் மெய்ப்பாடும் அகநானூற்றுப் பாடல்களும் உரையாசிரியர்கள் வழிநின்று ஆராயப்படுகின்றன.

1:1. உவகையெனும் மெய்ப்பாடும் அதன் விரிகளும்
உவகையெனும் மெய்ப்பாட்டின் விரிகளாக, செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு எனும் நான்கினையும் கூறுகின்றார் தொல்காப்பியர்151 என மேலே சொல்லப்பட்டது. இந்நான்கு விரிகளையும் விளக்கும் உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ள அகநானூற்றுப் பாடல்கள் குறித்து இப்பகுதி ஆராயவுள்ளது.
உவகையென்பது,

“உவகையெனினும் மகிழ்ச்சியெனினும் ஒக்கும்.”152
என பேராசிரியரும்;

“ஒத்த காமத் தொருவனும் ஒருத்தியும்
ஒத்த காமத் தொருவனோடு பலரும்
ஆடலும் பாடலுங் கள்ளுங் களியும்
ஊடலும் உணர்தலுங் கூடலு மிடைந்து.
புதுப்புனல் பொய்கை பூம்புனல் என்றிவை
விருப்புறு மனத்தொடு விழைந்து நுகர்தலும்
பயமலை மகிழ்தலும் பனிக்கடல் ஆடலும்
நயனுடை மரபின் நன்னகர்ப் பொலிதலும்
குளம்பரிந் தாடலும் கோலஞ் செய்தலும்
கொடிநகர் புகுதலும் கடிமனை விரும்பலும்
துயிற்கண் இன்றி இன்பந் துய்த்தலும்
அயிற்கண் மடவார் ஆடலுள் மகிழ்தலும்
நிலாப்பயன் கோடலும் நிலம்பெயர்ந் துறைத்தலும்
கலம்பயில் சாந்தொடு கடிமல ரணிதலும்
ஒருங்கா ராய்ந்த இன்னவை பிறவும்
சிருங்கா ரம்மென வேண்டுப இதன்பயன்
துன்பம் நீங்கத் துகளறக் கிடந்த
இன்பமொடு புணர்ந்த ஏக்கழுத் தம்மே.”

எனச் செயிற்றியனார் விரித்தோதினாராயினும் இவையெல்லாம் இந்நான்கனுள் அடங்கும்.”153

Continue Reading →

ஆய்வு: நம்மாழ்வார் பாசுரங்களில் திருமாலின் திருக்கலியாண குணங்கள்

இலக்கியக் கட்டுரை வாசிப்போமா?திருமாலின் திருக்கலியாண குணங்களில் ஆழ்ந்திருப்போர் ஆழ்வார்கள். இவா்களது பாசுரங்கள் இனிய எளிய தமிழில் அமைந்துள்ளன. ஆயினும் அவற்றின் பொருளோ மிகவும் ஆழமானவை. அரிய தத்துவங்களை உள்ளடக்கியுள்ளவை. இறைவன் எங்கும் நிறைந்திருப்பவன். உயிர்களின் நலனையே தனது விருப்பாகக் கொண்டவன். இறைவனுடைய இப்பண்புகளை திருக்கலியாண குணங்கள் என்று குறிப்பிடுவா். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் சுட்டியுள்ள இறைவனின் திருக்கலியாண குணங்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

திருக்கலியாண குணங்கள்
திருமாலுடைய குணங்களை வைணவா்கள் திருக்கலியாண குணங்கள் என்று குறிப்பிடுவா். “இறைவன் எல்லா குற்றங்களுக்கும் எதிரிடையாக இருப்பவன். அதாவது இருளுக்கு ஒளி போலவும் பாம்புக்குக் கருடன் போலவும் திகழ்பவன். தன்னைச் சரணடைந்தவருடைய துன்பங்களைப் போக்குபவன். இடத்தாலும் காலத்தாலும் பொருளாலும் அளவுபடுத்தப் பெறாதவன். அதாவது இன்ன காலத்தில் உள்ளான். இன்ன காலத்தில் இல்லான் என்கிற கால அளவு இல்லாத நித்தியன். இன்ன இடத்தில் உள்ளான் இன்ன இடத்தில் இல்லான் என்கிற தன்மை இல்லாதவன்”1 என்று குறிப்பிடுவா்.

“விஷ்ணு என்ற சொல்லுக்கு எங்கும் பரந்துள்ளவன். நன்மை செய்பவன். அடியவா்களை மாயையிலிருந்து விடுவிப்பவன். எல்லாப் பொருள்களிலும் ஊடுருவி நிற்பவன் என்றெல்லாம் பொருள் கூறினும் இச்சொல்லை விடவும் பகவான் என்ற சொல்லையே ஆழ்வார்கள் பல இடங்களிலும் பயன்படுத்துகின்றனா். இதனாலேயே பாகவத சமயம் பாகவத தருமம் எனத் திருமால் நெறியைக் கூறி வருகின்றனா். பகவான் என்னும் பெயரின் அடிச்சொல் பகம் என்பது. இஃது ஆறு என்னும் பொருளை உடையது. இதனால் ஆறு கல்யாண குணங்களை உடையவன் பகவான் ”2 என்று குறிப்பிடுவா்.

“ ஞானம் ( அறிவு ) ஐசுவரியம் ( ஒரு தலைவனுக்குரிய இயல்பு ) சக்தி ( ஆற்றல் ) பலம் ( வலிமை ) வீரியம் ( ஆண்மை ) தேஜஸ் ( ஒளி மயமாக இருத்தல் ) ”3 என்பனவே அக்குணங்களாகும். இப்பண்புகள் அனைத்தும் இறைவனுடைய தலைமைத் தன்மையை விளக்கிக் காட்டுவனவாக அமைந்துள்ளன எனலாம்.

ஞானம்
எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் உள்ள எல்லாப் பொருட்களின் பண்புகளையும் ஒன்றுவிடாமல் ஒரே இடத்தில் கண்கூடாகக் காணுதலே ஞானம் எனப்படும். ஞானம் குறித்து “ ஞானம் என்பது அறிவு எனப்படும். சேதனனிடம் உள்ள துன்பங்களைப் போக்கவும் இன்பங்களை ஈயவும் அறிவதற்குத் தகுதியாக உள்ள எல்லாப் பொருட்களையும் ஒரே காலத்தில் நேராகக் காணவல்ல அறிவே ஞானம் ” 4 எனப்படும் என்பா்.

மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும்பாயார்க் களித்தாலுன் சுடா்ச்சோதி மறையாதே
( திருவாய்மொழி 3 – 1  : 9 )
என்ற பாசுர அடிகளில் இறைவனுடைய ஞானம் என்னும் குணத்தினை நம்மாழ்வார் விளக்கிக் காட்டுகிறார்.

Continue Reading →

ஆய்வுக் கட்டுரைகள் அனுப்புவோர் கவனத்துக்கு..

‘பதிவுகள்’ பன்னாட்டு இணைய இதழுக்கு ஆய்வுக் கட்டுரைகள் அனுப்புவோர் தம் கட்டுரைகளின் இறுதியில் பாவித்த நூல்கள் பற்றிய முழுமையான விபரங்களுடன் (பதிப்பகத்தின் பெயர், ஆசிரியர் பெயர், வெளியான…

Continue Reading →

ஆய்வு: கம்பராமாயணத்தில் சூழல் பாதுகாப்புச் சிந்தனைகள்

- முனைவர் இரா. சுதமதி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி - 627008 -முன்னுரை
பழந்தமிழ்  நூல்கள்  பல அறங்களை வலியுறுத்தினாலும் சூழல் சார்ந்து அது முன் வைக்கும் அறம், ‘இயற்கையோடு இணைந்த வாழ்வே இனிய வாழ்வு’ என்பதாகும்.  இவ்வுலகம் மனிதன் உயிர் வாழ மட்டும் உருவானதன்று பல்லுயிர்களும்; அவ்வவற்றின் இயல்புகளோடும் உரிமைகளோடும் வாழ்வதற்கென்று அமைந்திருப்பதே இவ்வுலகம் ஆகும். இவ்வுலகில் வாழ்ந்த, வாழ்கின்ற சான்றோர்களும் அறிஞர் பெருமக்களும் பல்லுயிர்களின் வாழ்வும் நலமும் இன்றியமையாதது என்பதை வலியுறுத்தியே வந்திருக்கிறார்கள். இயற்கையின் வளங்கள் எந்தநாளும் காக்கப்பட வேண்டியன என்பதை உணர்த்தியிருக்கிறார்கள். அவ்வகையில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் தன் கதையமைப்பிற்கும்; காப்பியப் போக்கிற்கும் மேலும் சிறப்பு ஏற்படும் வகையில் சூழல் சிந்தனைகளை முன் வைத்துச் செல்வது இங்கு ஆய்வுக்குரியதாக அமைகிறது.

சூழல் காப்பு
சுற்றுச்சூழல் என்பது உயிரினத் தொகுதிகள் வசிக்கும் இடங்களைச் சுற்றி நிலவுகின்ற  தன்மை அல்லது சூழ்நிலை ஆகும். உயிரினத் தொகுதிகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும், அவை வாழ்கின்ற இடங்களைத் தூய்மையாக மாசுபடாமல் வைத்துக் கொள்ளவும் முயற்சிக்கின்ற போக்கே சூழல் பாதுகாப்பு எனப்படுகிறது. தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஐந்துவகைத் திணைகளை உருவாக்கி, இயற்கைப்  பாதுகாப்பில் உலகிற்கே முன்னோடிகளாக விளங்கினர். சங்க இலக்கியங்கள் இதற்குச் சிறந்த சான்றுகளாகும். பின் வந்த இலக்கியங்களிலும் சூழல் காப்பு பேணப்பட்டது. அவ்வகையில் கம்பராமாயணத்தில் காணப்படும் சூழல் காப்புச் சிந்தனைகள்

1. நீர்ப் பாதுகாப்பு
2. காட்டுயிரிப் பாதுகாப்பு
என இரண்டாகப் பகுத்து ஆராயப்படுகின்றன.

1. நீர்ப்பாதுகாப்பு
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண் (குறள்.742  )

என்று நாட்டின் பாதுகாப்புக்கு இலக்கணம் வகுக்;கிறது திருக்குறள். மணிநீர் என்பதற்கு ‘மணிநீர் போன்ற நிறத்தினை உடைய எஞ்ஞான்றும் வற்றாத நீர்’ என்று பொருள் தருகிறார் பரிமேலழகர். இத்தகைய வற்றாத நீர்வளத்தைத் தருவது அணிநிழல் காடு. ஓயாமல் பெய்யும் மழையைப் பிடித்து வைத்துக் கொண்டு சிற்றோடையாக, கால்வாயாக, ஆறாக, பெருநதியாகக் கசிய விட்டுக் கொண்டிருப்பது காடு. அவ்வாறு பெருகி ஓடி வரும் நீர் வளத்தைத் தக்க முறையில் பாதுகாத்து ஆற்று வளத்தையும் நாட்டு வளத்தையும் தமிழர்கள் பேணிக் காத்தனர். இதற்குக் கம்பரின் பாடல் வரிகள் சான்று பகருகின்றன.

Continue Reading →

ஆய்வு: வருபொருள் ஈட்டும் பண்டைத்தமிழரின் வணிக மரபு

- முனைவர் ந.இரகுதேவன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 21. சங்ககால மக்களின் வணிகத்தைப் பற்றிப் பேசும்போது அக்காலத்து மக்களின் வாழ்க்கைநிலை எப்படி இருந்தது என்பதையும் அறியவேண்டும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்நிலப்பிரிவில் இயற்கையமைப்புக்குத் தக்கபடி அக்காலத்து மக்களின் வாழ்க்கை அமைந்திருந்தது. பண்டைத் தமிழ்நாட்டின் அடிப்படைத் தொழிலாக வேளாண்மை அமைந்திருந்தது. மருதநிலப் பகுதியில் நெல்லும், கரும்பும் பயிர் செய்யப்பட்டன. எள், கொள், துவரை ஆகியன குறிஞ்சி, முல்லை நிலப்பகுதிகளின் பயிர் ஆயின. சாமை, வரகு, திணை ஆகியன முக்கிய புன்செய் நிலப் பயிர்களாக அமைந்திருந்தன. தேனெடுத்தல், கிழங்குகளை அகழ்ந்தெடுத்தல், மீன்பிடித்தல், உப்பு விளைவித்தல் ஆகியன ஏனைய பொருளாதார நடவடிக்கைகளாக இடம்பெற்றுள்ளன. நெசவு, கொல்வேலை, தச்சு வேலை, கருப்பஞ்சாற்றிலிருந்து வெல்லம் எடுத்தல், சங்கறுத்தல், கூடை முடைதல் ஆகியன இன்றியமையாக் கைத்தொழில்களாக இருந்தன.

அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பண்டமாற்று முறையில் நிகழ்ந்திருக்கிறது. பெரிய நகரங்களில் அங்காடி என்ற சந்தைகள் இருந்துள்ளன. பகற்பொழுதில் செயல்படுபவை நாளங்காடி (சிலம்பு.இந்திரவிழாவூரெடுத்த காதை.59) என்றும், இரவு நேரத்தில் செயல்படும் கடைகளை அல்லங்காடி என்றும் அழைக்கப்பட்டன. பொருட்களைக் கொண்டு செல்ல எருதுகள் பூட்டப்பட்ட வண்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடல் வாணிகத்திற்குப் பாய்கள் கட்டப்பட்ட மரக்கலங்கள் பயன்படுத்தப்பட்டன என்ற செய்தியும் காணக்கிடைக்கின்றன. வணிகர்கள் சாத்து என்ற பெயரில் குழுக்களாகச் செயல்பட்டுள்ளனர். மிளகு, அரிசி, இஞ்சி, ஏலம், மஞ்சள், இலவங்கம் ஆகிய உணவுப் பொருட்களும் சந்தனம், அகில் ஆகிய மணமிக்க வாசனைப் பொருட்களும் தமிழகத்திலிருந்து அரேபியா, எகிப்து, உரோம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. குரங்கு, மயில், யானைத்தந்தம், முத்து ஆகியனவும் ஏற்றுமதி பொருட்களில் இடம்பெற்றுள்ளன. இதுபோன்று பண்டைத்தமிழர்களின் பல்வேறு வணிகத்தகவல்கள் குறித்து சங்கஇலக்கியம் நமக்கு சான்றுரைக்கின்றன. இத்தரவுகளை அடிப்படையாகக் கொண்டு பண்டைத்தமிழர் வணிகத்தில் இடம்பெற்ற பண்டமாற்று முறையினையும், அவற்றில் இடம்பெற்றுள்ள பண்டமாற்றுப் பொருட்களையும் குறித்து ஆய்கிறது இக்கட்டுரை.

பண்டமாற்று முறை
சங்ககாலத் தமிழர் அன்றாடத் தேவையான அரிசி, பருப்பு, உப்பு, பால், தயிர், மீன், இறைச்சி முதலான பல்வேறு பொருட்களைக் பணம் கொடுத்து வாங்காமல் பண்டமாற்று முறையிலேயே பெற்றுக்கொண்டனர். ஏனெனில், பண்டாற்று முறையென்பது ஒரு பொருளைக் கொடுத்து அதற்கு ஈடாக தனக்குத் தேவையான பிறிதொரு பொருளைப் பெற்றுக்கொள்வதாகும். பெரிய பட்டினங்களிலும் நகரங்களிலும் பணம் கொடுத்து பொருட்களை வாங்கும் முறை இருந்தபோதிலும், ஊர்களிலும், கிராமங்களிலும் பண்டமாற்று முறையே பொது வழக்காக இருந்துள்ளது. பண்டைத்தமிழகத்தில் மட்டுமின்றி பிற நாடுகளிலும் பண்டமாற்று முறையே வழக்கத்தில் இருந்ததை அறியமுடிகிறது.

பாலைக் கொடுத்து இடையன் அதற்கு ஈடாகத் தானியத்தை மாற்றிக்கொண்டதை ‘பாலொடு வந்த கூழொடு பெயரும் யாடுடை இடையன்’ என்று முதுகூத்தனார் குறுந்தொகை 221 ஆவது பாடலில் குறிப்பிட்டுள்ளார். ஆயர் மகளிர் தயிரையும் மோரையும் கொடுத்து உணவுக்கான தானியத்தைப் பெற்றுக்கொண்டனர் என்பதை,

“நள்ளிருள் விடியல் புள்ளெழப் போகிப்
புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி
ஆம்பி வான்முகை யன்ன கூம்புமுகிழ்
ஊறையமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து
புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ
நாள்மோர் மாறும் நன்மா மேனிச்
சிறுகுழை துயல்வரும் காதிற் பணைத்தோள்
குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்
அளவிலை உணவில் கிளையுடன் அருந்தி”

என்ற பெரும்பாணாற்றுப்படை (155-163) பாடலில் உருத்திரங் கண்ணனார் பதிவிட்டுள்ளார். ஆனால், இடைச்சியர் நெய்யைப் பண்டமாற்று முறையில் பயன்படுத்தாமல் காசுக்கு விற்று அதனைச் சேகரித்து பின்னர் பசுவையும் எருமையையும் விலைக்கு வாங்கினார்கள் என்று,

Continue Reading →

ஆய்வு: மனுவும் வள்ளுவரும் குறிப்பிடும் மறுபிறப்பு

- முனைவர் மா. உமா மகேஸ்வரி, உதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை- 09தொல் தமிழரின் நுண்ணறிவு மிக வியப்பிற்குரியதாகும். பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன் மொழியியல், உயிரியல், கணிதவியல், அறிவியல் ஆகியவற்றில் தமிழர் பெற்றிருந்த பேரறிவு போற்றுதற்குரியதாகும். தொன்மை மிகுந்த தமிழன் கண்ட பேருண்மைகளை இன்றைய அறிவியலாளர் மறுப்பதற்கில்லை. மாறாகப் பண்டைத்தமிழர் கூற்றினை அடிப்படையாகக் கொண்டே பல சிறந்த அறிவியல் உண்மைகளை நிலைப்படுத்தியுள்ளனர் என்பது தெளிவாகும். பிறப்புக்கள் ஆறு என்பதை,

“ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே;
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே”    (தொல் ; மரபியல், நூ – 27.)

என்று தொல்காப்பியர் மரபியலில் எடுத்துரைக்கின்றார். மேலும்

“புல்லும் மரனும் ஓர் அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”

“நந்தும் முரளும் ஈர்அறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”

“சிதலும் எறும்பும் மூஅ றிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”

“நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”

“மாவும் மாக்களும் ஐஅறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”

“மக்கள் தாமே ஆறுஅறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”    (தொல் ; மரபியல், நூ -28-34 )

Continue Reading →

ஆய்வு: அகநானூற்றில் காட்டுயிரி வாழிடச் சூழலும் மனிதத் தலையீடும்

- முனைவர் இரா. சுதமதி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி - 627008 -முன்னுரை
காட்டுயிரி என்பது வீட்டுப் பயன்பாடு சாராத அனைத்து வகையான தாவரங்கள், விலங்குகள், பறவைகள் போன்றவையாகும். காட்டுயிரிகளை, அவை வாழ்கின்ற இடங்களில் பாதுகாப்பாகவும் எவ்வித இடையூறின்றியும் வைத்துக் கொள்ள முயற்சிக்கின்ற போக்குச் ‘சூழல் பாதுகாப்பு’ எனப்படுகிறது. இத்தகையச் சூழல் பாதுகாப்பைப் பழந்தமிழர் காட்டுயிரிகளுக்குக் கொடுத்து வாழ்ந்ததைச் சங்க இலக்கியங்களில் பரவலாகக் காணலாம். ஆயினும் காட்டுயிரிகளின் வாழிடச் சூழல், மனிதர்களின் தலையீடு காரணமாகப் பெரும் விளைவுகளை எதிர்கொண்ட செய்திகளையும் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. இவ்வாய்வுக் கட்டுரை சங்க இலக்கியங்களுள் ஒன்றான அகநானூற்றின் வழி காட்டுயிரிகளின் வாழிடச் சூழலில் மனிதத் தலையீடு குறித்து விரிவாக ஆராய முற்படுகிறது.

காட்டுயிரிகளும் வாழிடச் சூழலும்
மனிதர்களிடமிருந்து தனித்து வாழக்கூடிய காட்டுயிரிகளுக்கு அவற்றைச் சுற்றியிருக்கின்ற சூழலே பாதுகாப்பான வாழிடச் சூழலாகும். காட்டுயிரிகளான தாவரங்கள், விலங்குகள், பறவைகள் ஆகியவை வாழக்கூடிய தகுந்த சூழல் அமைப்புகள் காடுகளில் இருந்தே கிடைக்கின்றன.

“கோழிலை வாழைக் கோள்முதிர் பெருங்குலை
ஊழுறு தீம்கனி, உண்ணுநர்த் தடுத்த
சாரல் பலவின் சுளையொடு, ஊழ்படு
பாறை நெடுஞ்சுனை விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது
கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது
நறுவீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்”    (அகம்.2)

என்னும் பாடல்வரிகள் காட்டுயிரிகளின் வாழிடச் சூழலுக்கு மிகச் சிறந்த சான்றாகும். குறிஞ்சி நிலத்தில் வாழையின் பெரிய குலையிலுள்ள முதிர்ந்த இனிய கனியாலும் பலாவின் முற்றிய சுளையாலும் பாறையில் அமைந்த பெரிய சுனையில் உண்டான தேனை ஆண் குரங்கு உண்டு, அருகிலிருந்த மிளகுக் கொடி படர்ந்த சந்தன மரத்தில் ஏற மாட்டாது, அதன் நிழலிடத்து இருந்த மலர்ப்படுக்கையில் மகிழ்ந்து உறங்கியது என்னும் வருணனை, வளமையும் செழிப்பும் மிக்க காட்டுயிரிகளின் வாழிடச் சூழலை அழகுற எடுத்துரைப்பதாகும். தம் வாழிடத்தில் பாதுகாப்பை உணர்ந்து இனிது உறங்கும் குரங்கு, துய்ப்போர் இன்மையால் தாமாகவே பழுத்து உதிரும் பழ மரங்கள் எனும் இவை மனிதத் தலையீடு இல்லாத அழகிய வாழிடச் சூழலை உணர்த்தி நிற்கின்றன.

Continue Reading →

திருவள்ளுவரின் பிறப்பிடம் – ஓர் ஆய்வு

இலக்கியக் கட்டுரை வாசிப்போமா?முன்னுரை:
தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களை நூலில் எந்த ஓரிடத்திலும் குறிப்பிடாமல் உலக மனித குலம் கொண்டும் கொடுத்தும் ஒற்றுமையாய் மனித நேயத்தோடு இணைந்து ஒரே குலமாக ஒருலகமாக வாழ ‘திருக்குறள்’ என்னும் உலகப் பொதுமறை அருளிய திருவள்ளுவர் தோன்றிய நாடு நமது செந்தமிழ் நாடு இதனையே

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ் நாடு”

என்று வியந்து பாராட்டுகிறார் பாரதியார்.

திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு
திருவள்ளுவரின் பிறப்பு பற்றியும், பெயர் பற்றியும், பிறந்து வாழ்ந்து மறைந்த இடம் பற்றியும் பல கட்டுக்கதைகள் உண்டு. திருவள்ளுவரின் தாய் தந்தையர் ‘ஆதிபகவன்’ என்பவர். சிலர் அதாவது ‘ஆதி’ என்ற பறையர் குலப்பெண்மணிக்கும் ‘பகவன்’ என்பவர்க்கும் பிறந்தார் என்பதாம் மற்றும் எதற்கெடுத்தாலும் எதிலும் சமஸ்கிருத பார்வையால் தேடிக் கொண்டிருப்போர்களின் ஆசைப்படி, சமஸ்கிருத வார்த்தையின் ‘வல்லப’ என்ற வடமொழி பெயரே தமிழில் வள்ளுவராக மாறியது என்று கனவு கண்டு சொல்வாரும் உளர்.

வள்ளுவர் நெசவாளர் தொழில் புரிந்தவர் என்ற வழக்கம் உள்ளது. அந்த மாதிரி திருக்குறள் ஆசிரியர் பெயரிலும,; சமயத்திலும், பிறப்பிலும் கூட பலதரப்பட்ட கற்பனையால் பின்னப்பட்ட செய்திகள் உலவினாலும் இதற்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை. வள்ளுவரின் மனைவி வாசுகி எனும் கற்புக்கரசியர் ஆவார். ‘இறும்பூது’ செயல் கற்பினாலும் நிகழலாம். இறைவன் அருளிய ஈவினாலும் நிகலாம். திருவள்ளுவருக்கு வாசுகி அருமையான வாழ்க்கைத் துணைவியாக இருந்திருக்க வேண்டும். வாசுகி அம்மையார் மறைவில்,

“அடிசிற்கு இனியாளே அன்புடையாளே
படிசொற் கடவாத பாவாய் அடிவருடிப்
பின் தூங்கி முன்எழும் பேதையே போதியோ
என் தூங்கும் என் கண் இரா”        (வ.வா.கு)

எனும் வள்ளுவரின் இரங்கற்பா உள்ளத்தை உருக்குவதாகும். மக்கள் எவரும் இருந்தாகத் தெரியவில்லை. திருவள்ளுவர் என்று குறிப்பிடப்படுபவர் யானை மீது அமர்ந்து நகரம் முழுவதும் விரைவி வந்து அரசக்கட்டளைகளை பறையறைந்து தெரிவிக்கும் பணியினை மேற்கொண்டார் என ‘மணிமேகலை’ சொல்கிறது.

Continue Reading →

அழகியல் நோக்கில் க.நா.சுவின் நாவல்களில் பெயரமைப்பு உத்தி

இலக்கியக் கட்டுரை வாசிப்போமா?‘செய்யுள் மொழியால் சீர்புனைந்து யாப்பின்
அவ்வகை தானே அழகெனப்படுமே”1 (தொல் செய்யுளியல் 1492 நூற்பா)

அழகு என்பது செய்யுள் உறுப்புகளில் ஒன்று. செய்யுளுக்குரிய சொல்லால் சீரைப் புனைந்து தொகுத்து வருவது அழகு என்று தொல்காப்பியம் கூறுகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேலைநாட்டில் (இரஷ்யாவில்) பல கலைக் கோட்பாடுகள் உருவாகின. அவற்றுள் அழகியலும் ஒன்றாகும். அழகியலில் ‘என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைவிட எப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்பதே அழகியலின் அடிப்படை”.2 (தி.சு. நடராசன், தமிழ் அழகியல்) தமிழில் அழகியலை முருகியல் என்றும் அழைப்பர் இது ஆங்கிலத்தில் ஈஸ்தடிக்ஸ் (யுநளவாநவiஉள) என்று வழங்கப்படுகிறது. இதனை பொற்கோ, ‘அழகியல் அல்லது முருகியல் என்ற சொல்லால் குறிக்கப்படுகின்ற துறை இன்றைய சூழலில் நமக்குப் பெரிதும் புதியது என்றாலும் அணி இலக்கணமும் இலக்கணங்களில் பல்வேறு சூழல்களில் பேசப்பட்டிருக்கின்ற  பொருள்கோளும் நடையியலும் அழகியலுக்கு நெருக்கமானவை என்று நாம் குறிப்பிடுதல் பொருந்தும்”3 என்று ஆராய்ச்சி நெறிமுறைகள் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அழகு என்பதற்கு திரு, அம், அணி, ஏர், நோக்கு, ஐ, காமர், தகை, மதன், மைந்து, மா, பொற்பு, பொலிவு, சீர், வடிவு, கோலம், வண்ணம், கவின், முருகு, வனப்பு, எழில் எனும்  பல பொருள்கள் உள்ளன. முருகு என்பது தொன்மை வாய்ந்த ஒரு தமிழ்ச்சொல். ஈஸ்தடிக்ஸ் எனும் ஆங்கில சொல்லிற்கு தமிழில் புலனுணர்வு, உணர்வுக்காட்சி, கலையுணர்வுக்கூறு என்ற பொருள்களும் உள்ளன.  மேலும், முருகு எனும் சொல் கலித்தொகை,  ஐங்குறுநூறு, புறம்.4, திருமுருகாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை, பரிபாடல், சிலப்பதிகாரம் போன்ற பழந்தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது. முருகு என்பது பலபொருள் குறிக்கும் சொல். சிறப்பாகக் குறிக்கத்தக்கன நான்கு. அவை,

அ) மனம் ஆ) இளமை இ)கடவுட்டன்மை  ஈ) அழகு என்பன.
‘கை புனைந்தியற்றா கவின்பெறு வனப்பு|4 (திருமுருகாற்றுப் படை)
‘சுருங்க சொல்லல், விளங்க வைத்தல்……
நவின்றோர்க் கினிமை நன்மொழி புணர்தல்|5 (நன்னூல், பத்து அழகுகள், நூற்பா 13)

என்பன அழகு குறித்துப் பேசப்படும் நூல்கள். மேலும்;, திரு.வி.கவின் முருகன் அல்லது அழகு நூலும், பாரதிதாசனின் அழகின் சிரிப்பும், வாணிதாசனின் எழிலோவியம் நூலும் அழகு என்ற பெயரில் அமைந்த நூல்கள், மேலும், அழகு குறித்து திருவாசகம் – சித்தம் அழகியார் என்றும், குமரகுருபரர் ‘அழகு ஒழுக| எழுதிப் பார்த்திருக்கும் உயிரோவியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய திறனாய்வில் அழகியல் என்பது உருவம், உள்ளடக்கம் இரண்டைப் பற்றியதாகும். இவற்றில் எது முக்கியமானது? எது முதன்மையானது? என்பது நீண்ட காலமாக இருந்துவரும் விவாதம்.

Continue Reading →