ஆய்வு: நீதி பாடிய ஒளவையாரும் அறம்செய்தலும்

முன்னுரை:   
- முனைவர்.பா.சத்யா தேவி, விரிவுரையாளர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை-09 -தமிழ் இலக்கிய பரப்பில் ஒளவையார் பாடியதாகப் பல்வேறு இலக்கியங்கள் காணப்படுகின்றன.  அந்த வரிசையில் சங்ககாலத் திணைப் பாடல்கள், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, விநாயகர் அகவல், ஞானக்குறள், அசதிக்கோவை, நன்னூற் கோவை, நாண்மணிக்கோவை, நான்மணிமாலை, அருந்தமிழ் மாலை, தரிசனப்பத்து, பந்தனத்தந்தாதி, தனிப்பாடலில் ஒருபாடல், திருவள்ளுவமாலையில்; அமைந்துள்ள ஒரு வெண்பா போன்ற இலக்கியங்களின் ஆசிரியர் ஒளவையார் என்பதாகக் காணப்படுகின்றன.  ஆயினும், இவற்றை ஒருவரே எழுதியிருக்க வாய்ப்பில்லை.

ஒளவையார் பெயரில் காணலாகும் இவ்விலக்கியங்கள் ஒரே காலட்டத்தைச் சார்ந்ததை அல்ல.  வெவ்வேறு காலகட்டச் சமூக அமைப்பையும், அச்சமூக அமைப்பின் கருத்தியல், பண்பாட்டு இலக்கியக் கொள்கை அமைவுகளுக்கு ஏற்பவும்; அமைந்திருப்பவை.  எனவே இவற்றையெல்லாம் ஒருவரே பாடியதாகக் கொள்ள முடியாது. வேறுவேறு காலத்தில் வாழ்ந்த கவிஞர்களே ஒளவை எனும் பெயரில் எழுதியிருக்க வேண்டும் என்பதே பெரும்பாலான ஆய்வாளர்களின் கருத்தாகும்.  வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்தாகக் கருதப்படும் பல ஒளவைகளைக் கலவையாக்கி ஒரே ஒளவை என்பதான சிந்தனைத் தோற்றம் தமிழ்ச் சிந்தனை மரபில் திணிக்கப்பட்டிருக்கிறது.  இருப்பினும் ஒளவையார் என்னும் உருவகம் தமிழ்க் கவிதைப் பரப்பில் தொடர்ந்து வந்திருப்பதால் ஒளவையார்களை வகைப்படுத்தியும் ஆய்வாளர்கள் சுட்டியுள்ளனர்.

ஒளவையார் இத்தனை பேர்தான் என வரையறுப்பதிலும் கருத்து வேறுபாடுகள் உண்டு.  இருப்பினும், ஒளவைகள் மூவர் என்றே பெரும்பாலான ஆய்வாளர்கள் வரையறுக்கின்றனர்.  “சங்க கால ஒளவையார் அகம், புறம் இரண்டையும் அகவற்பாவால் பாடியவராகையால் அவரது பாடல்களில் எவ்வித கருத்து முரண்பாடுகளும் ஏற்பட வாய்பில்லை. இரண்டாம் ஒளவையார் பாடியனவாகக் கருதப்படும் நீதி நூல்களான ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி ஆகியன ஒரே பாடு பொருளை உள்ளடக்கியமையாலும் அவற்றுள் ஒன்றுக்கொன்று கருத்து முரண்பாடமையாலும், தொகுப்பு நூல்களாக அமைந்தவையாலும் அவர் பாடியனவாக ஏற்கத்தக்கன.  மூன்றாம் ஒளவையார் தனிப்பாடல்களைப் படைத்தவராகவும் சிற்றிலக்கிய வகைகளைப் படைத்தவராகவும் ஏற்கத்தக்கவராவார்”1 என்ற மு.பழனியப்பன் கருத்தும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.  இதன் மூலம் ஒளவையார் என்ற பெயரில் மூவர் இருந்துள்ளனர் என்று வரையறுக்கலாம்.  இதில் அறநெறியும் பக்தியும் பாடிய இடைக்கால ஒளவையாரின் பாடல்களே இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

Continue Reading →

ஆய்வு: காப்பிய கதைகளினூடான கதைச்சொல்லிகள் (சிலப்பதிகாரத்தில் உளவியல் பார்வை)

- ச.அன்பு, M.A.,M.Phil.,(Ph.D.,), தலைவர் - தமிழ்த்துறை, விஸ்டம் கலை & அறிவியல் கல்லூரி, அனக்காவூர் – 604 401.-         காப்பியம் என்பது காப்புடையது. பொருள் தொடர் நிலையில் அமைவது. அதாவது ஒரு மொழியை சிதைக்காமல் காப்பது காப்பியம். இதையே இலக்கண மரபு, மரபின் இயல்பு வழுவாமல் காத்தல் என்று கூறுகிறது.

காப்பு – என்னும் சொற்பொருள்
பொதுவாக தமிழில் தக்க கருத்தியல்களைத் தரும் இலக்கியங்களாகத் திகழ்வன இதிகாசங்கள் என்று சொல்லத்தகும் மகாபாரதமும், இராமாயணமும்; காப்பியங்கள் என்று அழைக்கப்படும் பெருங்காப்பியப் பண்புகளுக்குட்பட்ட காப்பியங்களும்; சங்க இலக்கியங்கள் என்று அழைக்கப்படும் எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்களும் அதன் அமைப்பியலை ஒத்த சிற்றிலக்கிய நூல்களும் தான். இவற்றில் கூட முதலாவதாகச் சொல்லப்பட்ட இதிகாசங்கள் தான் நமக்கான எல்லா கருத்தியல்களையும் சொல்லுகின்றன.

இதிகாசங்களால் சொல்லப்பட்ட நமக்கான பண்பாட்டு – கலாச்சார – பழக்கவழக்கங்கள் யாவும், புனைகதைகளாகவும் (கட்டுக் கதைகளாகவும்), தொல்புராண கதைகளாகவுமே சொல்லப்பட்டுருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தொல்புராண இதிகாசங்களில் சொல்லப்பட்ட கருத்தியல்கள் தான் பின்னால் வந்த காப்பியங்கள் மூலம் காட்சிகளாக – நாடகப்பாங்கில் காட்டப்பட்டுள்ளன அல்லது விளக்கப்பட்டுள்ளன. இப்படி காப்பியங்களால் விளக்கப்பட்ட காட்சியுருக்களே சங்க இலக்கியங்கள் மூலமாகவும் அதைத் தொடர்ந்து வந்த பிற இலக்கியங்கள் மூலமாகவும், ஒருவித விமரிசன நோக்கில் பிரித்தறியப்பட்டது. இப்பிரிவுகள் அனைத்தும் அதன் தன்மையை அல்லது உட்பொருளை விளங்கிக்கொள்ள வந்தவையாகும். எனவே தான் சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் தனது எல்லா கருத்துரைகளையும் அகம் – புறம்; காதல் – வீரம்; களவு – கற்பு; தலைவன் – தலைவி என இரண்டு வகைமைக்குள் அடக்கி இருக்கக்காண்கிறோம். இவையல்லாமல் எழுந்த மற்ற இலக்கியங்கள் யாவும் புதிதாக எதையும் சொல்வதாக இல்லை. மாறாக ஏற்கனவே தொன்றியுள்ள இதிகாசங்கள், காப்பியங்கள், இலக்கியங்கள் என்ற மூன்று வகைமைக்குள் இருக்கும் உண்மைகளைத் தேடுவதாகவோ அல்லது மறுப்பதாகவோ இருப்பது கவனிக்கத்தக்கது. இதன் அடிப்படையில் தான் தமிழ் நூல்கள் அனைத்தும் இலக்கியங்கள், காப்பியங்கள் என்ற இரண்டே வகைமைக்குள் அடக்கப்பட்டுள்ளன.

Continue Reading →

ஆய்வு: பண்டைத் தமிழ்ச் சூழலும், பெண்ணடிமைத் தனத்திற்கு எதிரான இன்குலாப்பின் குரலும்.

- பா.பிரபு M A., M.Phil., P.hd, உதவிப் பேராசிரியர், ஸ்ரீ மாலோலன் கல்லூரி, மதுராந்தகம் - 603306. -எந்த வகை இலக்கியமாயினும் முற்போக்கு சிந்தனையோடு படைக்கும் போது தான் நிலை பெறுகின்றது.  முக்காலத்திய ஆய்வில் கடந்த கால உண்மைகளை வெளிக் கொணர்வதும், நிகழ்கால பார்வையோடு சுட்டி உரைப்பதும், அவை எதிர்காலத்திய தேவை மற்றும் புரிதலுக்கானதாகவும் அமையும் போது அஃது முற்போக்கு இலக்கியமாய் வலம் வரும்.  அவ்வகை தன்மையில் ‘இன்குலாப்பின் ஒளவை’ 20 -ஆம் நூற்றாண்டின் சிறந்த கலைப்படைப்புகளுள் ஒன்றாகக் கொள்ள முடியும்.

இதற்குரிய அடிப்படை காரணம் என்னவெனில், அவர் பண்டைய கால தமிழகச் சூழலை பார்க்கும் கோணமே முதன்மைச் சிறப்பு.  சமூகத்துள் நிகழ்ந்த பெண்ணுடிமைத் தனத்திற்கு எதிரான அவரின் குரல், மக்களின் பார்வையும், மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுப்பதற்கான கூர்மைச் சிந்தனையும் முதன்மை அம்சம் பெற்று ‘ஒளவை நாடகம்’ திகழ்கின்றது.  கேள்விகளை முன் வைப்பதோடு காரணங்களையும் முன் வைத்து விமர்சன ரீதியாக பண்டைத் தமிழகத்தை ஆய்ந்தே இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. 

இலக்கியம் மக்களுக்கானதாக இருக்கும் பட்சத்திலேயே அவை சிறந்த கலைப் படைப்பாக அமைய முடியும் என்பதை நோக்காகக் கொண்டுள்ளார்.   அவ்வகையில் அவர் சமூகத்திற்கு பல கருத்துக்களை முன் வைத்துள்ளார்.  அவற்றை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1.    பண்டைய இனக்குழு சமூகத்தின் மிச்ச சொச்சமும் மன்னர் உடைமை சமூகத்தின் அதிகார மையமும்.
2.    பாணர்களின் நிலையும், ஐந்நில மக்களின் வாழ்வும்.
3.    ஒளவையின் கருத்தியலும், ஒளவைப் பற்றிய பார்வையின் சிக்கலும்.
4.    பெண்ணடிமைத் தனமும் விடுதலைக்கான முன்னேற்பாடும்.

என 4 வகையில் அடிப்படையாக இந்நூலை வகைப்படுத்த முடிகின்றது.

Continue Reading →

ஆய்வு: பழந்தமிழரின் வானியல் அறிவுநுட்பம்

- பா.பிரபு M A., M.Phil., P.hd, உதவிப் பேராசிரியர், ஸ்ரீ மாலோலன் கல்லூரி, மதுராந்தகம் - 603306. -இன்றைய அறிவியல் உலகில் அண்டவெளி பிரபஞ்சத்தை பற்றி (Universal) நொடியொரு பொழுதும் ஆராய்ந்து கொண்டே வருகின்றனர்.  நீண்ட மனித வாழ்வின் அறிவியல் தேடலும், நவீன அறிவியல் கருவிகளின் வரவுமே இவ்வுலகை இன்று ‘அறிவியல் யுகமாய்’ மாற்றியிருக்கின்றது.  ஆனால் பண்டைய காலம் அப்படி இல்லை.  ஊழி காலத்துள் (பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு) வாழ்வதற்கான போராட்டம் மிகப்பெரும் சவாலாக விளங்கியது.  பின்னர் தேவைகள் ஒருபுறம் பூர்த்தியாக மற்றொரு புறம் இயற்கையைப் பற்றி ஆய்வினில் இறங்கினர்.  அதனால் இயற்கைக்கு உட்பட்ட இயல்பான வாழ்வினை அதனோடு இயற்கைப் புறவெளியையும் ஆய்ந்தனர்.  அறிவியலுள் ‘வானியல் அறிவும் பண்டைத் தமிழகத்துள் மிகுந்திருந்தது.  வான்வெளியில் நிகழும் மாற்றங்கள், கோள்களின் இயக்கப் போக்குகள் அதனால் புவியில் ஏற்படும் மாற்றங்கள், பருவ மாற்றங்கள் என பலவற்றையும் ஆராய்ந்து அதற்கேற்ப தங்கள் வாழ்க்கையை அமைத்தனர்.

பண்டைய இந்தியாவிலும், ‘வானியல் அறிவு’ சிறப்பாக இருந்தது என்பர்.  “ரிக் வேதத்தின் மூலம் வேதகாலத்து இந்தியர்கள் வானியல் சிந்தனைகள், சூரியனின் பாதை சந்திரனின் பருவங்கள், கோள்களின் இயக்கம் போன்றவற்றைப் பற்றிய தேவையான அறிவைப் பெற்றிருந்தனர் என்று பொதுவாகக் கருதப்படுகிறது.  சந்திரனை அடிப்படையாக வைத்து மாதங்கள் நிர்ணயம் செய்யப்பட்டன.  சந்திரனுக்கு ‘மாச கிருத்தா அல்லது மாதத்தை உருவாக்குபவர்’ என்ற பெயரும் உண்டு.  சந்திர மாதங்களின் பெயர்கள் எந்தெந்த நட்சத்திரங்களில் பௌர்ணமி ஏற்படுகிறதோ அந்தந்த நட்சத்திரங்களின் பெயர்கள் சூட்டப்பட்டன.  ‘சந்திரனின் வீடுகள்’ (Iunarmansions) என்றழைக்கப்படும் நட்சத்திர இராசி முறை இந்தியாவிற்கே உரித்தான ஒன்றாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
(பக். 67 கு.வி. கிருட்டிணமூர்த்தி, அறிவியலின் வரலாறு)

தமிழ் மாநிலத்துள் ஐநில மக்களின் வாழ்வும் இயற்கைச் சூழலுக்கேற்ப அமைந்திருந்தது.  கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் ஆகிய 6 – வகை பருவங்களை வகுத்து, அப்பருவங்களுக்கு ஏற்ப வாழ்வு அமைத்து இயற்கை வாழ்வு வாழ்ந்தனர்.  ஞாயிறு, திங்கள் பிற கோள்கள், நட்சத்திரங்களின் இயல்புகள் சிலவற்றை கண்டறிந்தனர்.  அதன் அடிப்படையில் கால கணிதம் தோற்றுவித்தே ஒவ்வொரு நிகழ்வினையும் செய்தனர்.  பிறப்பு முதல் இறப்பு வரையிலான சடங்குகள் வரையும் வானின் செயல்களை வைத்தே நிகழ்வினை செய்தனர்.

Continue Reading →

ஆய்வு: ஏலாதி காட்டும் வாழ்வியல் விழுமியங்கள்

பெ.சுபாசினி, முனைவர் பட்ட ஆய்வாளர்,  செந்தமிழ் கல்லூரி, மதுரை -அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையோ அல்லது அவற்றில் ஒன்றையோ ஐந்து அல்லது அதனினும் குறைந்த அடிகளில் வெண்பா யாப்பில் கூறுவன கீழ்க்கணக்கு நூல்களாகும். இவ்விலக்கணம் நீதி நூல்களுக்குப் பொருந்துவதாகும். இதன் காரணமாகவே வெண்பா யாப்பு நீதி நூல்களுக்கு உரியதானது. குறிப்பாக ஓரடி, ஈரடி, நான்கடி என்று சுருங்கிய அளவில் நீதிக் கருத்துக்களை எடுத்துரைக்கும் போக்கு நீதி நூல்களில் காணப்படுகிறது. நீதி கூறுகையில் அது சுருங்கிய அளவில் இருக்க வேண்டும் என்று தமிழ்ப் படைப்பாளர்கள் எண்ணியுள்ளனர். மேலும் வாழ்க்கைக்குச் சட்டமாக அமையும் நீதி நூல்கள் விரிவான அடிவரையறை பெற்றனவாக இருந்தால் அதனுள் பல குழப்பங்கள் நேரும் என்பது கருதியும் இந்தச் சுருக்கமான அடி வரையறை நீதி நூல்கள் எழுதுபவர்களால் பின்பற்றப் பெற்றுள்ளது. தமிழ்ப் பரப்பில் தொடர்ந்து வந்த நீதி நூல்களிலும் இந்தச் சுருக்கமான அடிவரையறை என்ற கட்டமைப்பு பின்பற்றப் பெற்றுள்ளது. இதனை அறிந்துணர நீதி நூல்களின் அடி அளவு குறித்த செய்திகளைத் தொகுத்துக் காண வேண்டியுள்ளது.

ஏலாதி என்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. கீழ்க்கணக்கு நூல்கள் சங்க மருவியக் காலத்தில் தோன்றியவை. ஏலம், இலவங்கம், சிறு நாவற்பூ, சுக்கு, மிளகு மற்றும் திப்பிலி என்ற ஆறு பொருட்கள் சேர்த்து செய்யப்படும் சூர்ணத்திற்கு ஏலாதி என்று பெயர். அதுபோல ஒவ்வொரு பாடலிலும் ஆறு அறக்கருத்துக்களைக் கொண்டிலங்குவதால்  ஏலாதி என்று இந்நூல் பெயர் பெற்றது.

ஏலாதி ஆசிரியர்
ஏலாதி ஆசிரியரின் பெயர் கணிமேதாவியார். இது இவரது இயற்பெயர்ப் போல் தெரியவில்லை. கணி என்பதற்கு கணிதம் (கணக்கு) என்றும் சோதிடம் என்றும் பொருள் படும். இத்துறைகளில் சிறந்து விளங்கியவர் ஆதலால் ஆர் விகுதி சேர்த்து, மரியாதை நிமித்தம் “கணிமேதாவியார்” என்று அழைக்கப்பட்டிருக்கலாம். இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்பதை இவர் நூலில் வலியுறுத்தும் கருத்துக்களைக் கொண்டு எளிதில் அறியமுடிகிறது.

பதிப்பு வரலாறு
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலும் சமண சமயத்தவர்கள் செய்தது. சுமார் 19ஆம் நூற்றாண்டில்தான் கீழ்க்கணக்கு நூல்கள் பதிக்கப்பட்டன. பெரும்பாலான கீழ்க்கணக்கு நூல்களுக்கு பழைய உரைகள் கிடைக்கப் பெறவில்லை. கிடைக்கப் பெறாத உரைகளுக்கு, பின்னாளில், பதிப்பித்தவர்கள் மற்ற புலவர்களை வைத்து உரையெழுதி வெளியிட்டார்கள். அவர்களுக்கு, சமண நூற்களில் பயிற்சியின்மையால், சில சொற்றொடர்களுக்கு தங்களுக்குத் தெரிந்த பொருள்களைக் கொண்டு உரையெழுதினார்கள். அவற்றுள் அறுநால்வர் என்பது ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

நூல் கருத்து
சிறப்புப் பாயிரம் இல்லறத்தையும், துறவறத்தையும் போற்றி, கணிமேதாவியார் நூல் செய்திருப்பதாகக் கூறுகிறது. சமணம் இல்லறத்தை வெறுத்தது என்று தூற்றுவோர்கள் கவனிக்கவும். இல்லறம், துறவறம் என்று அறத்தைப் பகுப்பதுச் சமண சமயக் கொள்கை. இந்நூலில் நாற்பொருளுள் முதலான அறத்தைக் கலந்துக் கொடுத்திருக்கும் பாங்கு எண்ணத்தகும்.

Continue Reading →

ஆய்வு: புறநானூறு காட்டும் சமூகவெளிப்பாட்டின் தோற்றப் பின்புலத்தில் பண்பாட்டுக் கட்டமைப்பு (மானிடவியல் அணுகுமுறை)

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?சங்க இலக்கியத்தின் புறவாயிலாகக் கருதத்தக்கப் புறநானூற்றில் வேடன், வீரன், வேந்தன், சிற்றரசன் என நான்கு வகையான சமூக அடுக்குகள்  காணப்படுகின்றன. ஒரே காலத்தில் இந்த நான்கு வகை சமூக அமைப்புகளும் நிலைநிறத்தப்பட்டுள்ளது. மேலும் இப்புறப்பாடல்களில் வேந்தர்களிலிருந்து விறலி வரை பாடியுள்ளது குறிப்பிடத்தக்கச் செய்தியாகும். தொல் புறத்திணையான வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், காஞ்சி, என இவ் ஏழினுள் உழிஞை திணை புறநானூற்றுப் பாடல்களில் எங்குமே இடம்பெறவில்லை.

மேலும் இப்புறப்பொருளை மையமிட்டு பாடப்பட்ட நூல்களாகப் பதிற்றுப்பத்து, புறநானூறு என இரு நூல்கள் தனித்து இயங்குகின்றன. இதில் பதிற்றுப்பத்து சேரமன்னர்களின் வரலாற்றை மட்டும் எடுத்தியம்புகின்றது. ஆனால் புறநானூறு வேட்டையாடி சேகரித்து பங்கிட்டு வாழ்ந்த இனக்குழுச் சமூகம், அதற்கு மாறாக நாகரிக வளர்ச்சியின் உச்சநிலையில் அதிகாரம் செலுத்திய மூவேந்தர்களின் சமூகம், அம்மூவேந்தர்களுக்கு போர் புரிதற் பொருட்டு உதவிய வீரயுகச் சமூகம், இனக்குழுச் சமூகத்தின் வாழ்வியலையும் மூவேந்தர்களின் நாகரிக வளர்ச்சியையும் ஒருங்கே பெற்று ஒரு சிறு நிலப்பகுதியை ஆண்ட குறுநிலமன்னர்கள் எனத் தமிழ்ச் சமூகத்தில் வாழ்ந்தப் பல சமூக மக்களை அடையாளப்படுத்தியுள்ளது. இவ்வாறு அடையாளப்படுத்துவதன் மூலம் புறநானூறு தமிழ் மக்களின் வரலாற்று ஆவணமாகத் திகழ்கின்றன.

ஒரு சமூகம் அமைப்பு என்பது முறைப்படுத்தப்பட்ட சமூக குழுக்கள், சமுதாயத்தில் நிலவும் பழக்கவழக்கங்கள் ஒழுக்கம் பிற நடத்தைகள் முதலியவற்றை ஒழுங்குபடுத்தி அதில் மக்களை இணைக்கும்போது உண்டாகும் சமூகக் குழு அல்லது சமுதாய அமைப்பு குழுக்களை நடத்தை, பண்புகள் மூலம் ஒன்றிணைத்து அவற்றிடையே உள்ள முரண்பாடுகளை  களைதல் இதன் நோக்கமாகும். அல்லது அமைப்பின் இயக்களை ஆராய்வது. (சமூகவியல் பக் : 162 – 163)  இதனடிப்படையில் எந்த ஒரு சமூக அமைப்பும் தன் வாழ்வியலை விழுமியம் சார்ந்த பண்பாட்டு கூறுகளை உள்ளடக்கியதாக இருக்கும். ஏனெனில் பண்பாடு என்பது மனித வாழ்வியலோடு கட்டமைக்கப்பட்டது. இது தனிமனித வாழ்விலும், மற்றவர்களோடு பழகுவதிலும் தனித்தன்மையுடன் மனிதனை உயர்த்தும் தன்மையுடையது.

இதில் மானிடவியல் நோக்கில் புறம் சார்ந்த நானூறு பாடல்களில் பத்துப் பாடல்களை மட்டும் ஆய்வுக்களமாகக் கொண்டு இனக்குழுத் தலைவன், வேந்தரை மட்டும் மையப்படுத்திச் தமிழ்ச் சமூகம் சார்ந்த இனவாழ்விலை நாகரிகம், பண்பாடு என இருபொருண்மை வழிநின்று அச்சமூகத்தின் வாழ்வியலின் வளர்ச்சி நிலையைப் புலப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரை அமைக்கிறது.

Continue Reading →

ஆய்வு: பாரதிதாசன் ஆத்திசூடி உணர்த்தும் அறநெறிகள்

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
29.4.1891 இல் பாரதிதாசன் பாண்டிச்சேரியில் பிறந்தார்.இவரின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். தமிழாசிரியராகப் பணிப்புரிந்தவர்.பாரதி மேல் கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார்.இவர் ஆத்திசூடி என்ற நூலை இயற்றியுள்ளார்.இந்நூல் 84  ஓரடி பாடல் அடிகளைக் கொண்டுள்ளது.இந்நூலில் பாரதிதாசன் எந்த ஒரு தெய்வத்தையும் நம்பாத நாத்திகர் ஆதலின் கடவுள் வாழ்த்து பாடவில்லை.ஒரு பாயிரம் பாட நூலைத் தொடங்குகிறார்.இந்த பாயிரம் பத்து அடிகளில் அமைந்துள்ளது.இனப்பற்றும்,நாட்டுப் பற்றும் உலகப் பற்றை வளர்க்கும் அடிப்படையில் அமைய வேண்டும்.பகை உணர்ச்சிக்கு அடிப்படையாக அமையக் கூடாது என்றும்  அமைதி நிலவ இந்தக் குறிக்கோள் வேண்டும் என்றும் உலகில் பொது ஆட்சி நிலவத் தன்னுடைய  நூல் பயன்பட வேண்டும் என்றும் ஒர் உயர்ந்த நோக்கத்தைப் பாயிரமாகக் கூறி பாரதிதாசன் ஆத்திசூடியை பாடத் தொடங்குகிறார். அவ்வையாரின் ஆத்திசூடியைப் போலவே அமைந்துள்ளதால் தம் நூலுக்கும் ஆத்திசூடி என்றே பெயர் வைத்ததாகச் சொல்கிறார் இதனை,

நவில் இனப்பற்றும் நாட்டுப் பற்றும்
வையப் பற்றை வளர்க்கும் நோக்கத்தன
இல்லை யாயின் இன்றிவ் வுலகில்
தொல்லை யணுக்குண்டு தொகு தொலைக் கருவி
பொல்லா நச்சுப் புகைச்சல் இவற்றை
அகற்றல் எப்படி ?அமைதியாங்ஙனம்?
உலகில் பொதுவாட்சி ஒன்றே ஒன்று
நிலவுதல் கருதி நிகழ்த்திய இந்நூல்
ஆத்திசூடி போறலின்
ஆத்திசூடியென் றடைந்து பெயரே        (பாயிரம்)

Continue Reading →

ஆய்வு: சங்கப் புலவர்களின் மனிதஉரிமைகள் சிந்தனைகள்

- முனைவர். ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு இந்தியா. -முன்னுரை
பழந்தமிழ் இலக்கியமாகத் திகழும் சங்க இலக்கியம், மனித சமூகம் உய்வதற்குரிய கருத்துக்களை உயரிய அறக்கோட்பாடுகளாக வகுத்துரைக்கின்றது. சமூக மேம்பாட்டின் பல்வேறு சிறப்புக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றது. காதலும் வீரமும் அவற்றுள் பெருமையுடையனவாய்ச் சொல்லப்பட்டுள்ளன. இவ்விரண்டும் பண்டைத்தமிழ் வாழ்வின் பண்பாட்டுக் கூறுகளாக விளங்கியுள்ளன. இவ்விரு கூறுகளையும் எடுத்துரைத்துத் தமிழ்மொழியின் பெருமையினையும் உயர்வினையும் உலகறியச் செய்தவர்கள் சங்ககாலப் புலவர்கள் ஆவர். அப்புலவர்கள், தனிமனித வாழ்விலும், சமூகவாழ்விலும், சமூகத்துடன் தொடர்புடைய அரசவாழ்விலும் பெறத்தக்க மனித உரிமைகளைத் தங்கள் பாடல்களில் புலப்படுத்தியுள்ள திறத்தினைக் குறித்து இக்கட்டுரையில் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றது. 

சங்ககாலப் புலவர்கள்
மனித உரிமைகள் என்ற கருத்துருவாக்கம் மனித சமூகம் குழுவாக வாழ ஆரம்பித்த நாளிலிருந்தே எழத் தொடங்கியுள்ளது. சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்கள் சமூகத்தில் உயர்வான நிலையில் வைத்துப் போற்றப்பட்டமைக்குக் காரணம் அவர்கள் மனித உரிமைகளைப் பற்றிய அறிவினைப் பெற்றிருந்தமையினால்தான். அரசியலிலும், சமூக உயர்விலும் தங்கள் பங்களிப்பினைச் சிறப்புற எடுத்துரைத்து வந்துள்ளனர். சமூகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதர்களின் தேவைகளை எடுத்துரைத்ததோடு, அவர்களது உரிமைகளைப் பாதுகாக்கவும் தவறவில்லை. தமிழ் இலக்கியத்தில் மனித உரிமைகள் அறக்கோட்பாடுகளாக வகுத்துரைக்கப்பட்டுள்ளன. இதில் புலவர்களின் பங்கு அளப்பரியதாக இருந்துள்ளது. அவர்கள் தங்களது வறுமையைப் போக்கிக்கொள்ள மன்னர்களைப் பாடிப் பரிசில் பெறுவதை மட்டுமே தொழிலாகக் கொள்ளாமல் மன்னர்கள் மனித உரிமை மீறல்களைச் செய்யும் போது அவர்களைத் திருத்தவும், அறிவுறுத்தவும் செய்துள்ளனர்.

Continue Reading →

ஆய்வு: பஞ்ச பூதங்களைப் பற்றிய பண்டைத் தமிழரின் அறிவு

- பா.பிரபு M A., M.Phil., P.hd, உதவிப் பேராசிரியர், ஸ்ரீ மாலோலன் கல்லூரி, மதுராந்தகம் - 603306. -இப்புற உலகினைப் பற்றி மனிதன் நொடியொரு  பொழுதும் ஆராய்ந்து வருகின்றான்.  இன்றைய சூழலில் ஒரு புதிய  உலகையே படைக்கும்  வல்லமையை மனித அறிவு பெற்றிருக்கின்றது. இவற்றிற்கு  அடிப்படைக் காரணம் பண்டைய மக்களின் அறிவும்,  நுட்பமான பார்வையுமே ஆகும்.

உலக நாகரிகங்களெனக் கூறப்படும் கிரேக்கம், எகிப்து, ரோம், சிந்து சமவெளி, மெசபடோமியா போன்ற 24- ற்கும் மேற்பட்ட பகுதிகளில்  வாழ்ந்த மக்கள்  சிறந்த, நாகரிக வாழ்வை  வாழ்ந்தனர் என வரலாறு மெய்ப்பிக்கின்றது.  கி.பி.க்கு முற்பட்ட காலத்தில் உய்த்துணர்வு முறையில்  தொடங்கிய ஆய்வு பின்னர் சோதனை மூலம் கண்டறிதல் (Practical Method)  முயன்றனர். அதற்கு ஆர்க்கிமிடிஸ் தத்துவமே முதன்மைச் சான்றாகும். எனினும், உய்த்துணர் முறையில் பல ஆயிரக்கணக்கான விடையை பழங்கால மக்கள்  பெற்றிருந்தனர் என்பதற்கு  தொல்பொருள், இலக்கிய இலக்கணச் சான்றுகளும்,  இன்ன பிற சான்றுகளும்  முதன்மை ஆதாரமாகின்றன.

சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளாட்டோ தமிழகத்தில் தொல்காப்பியர், திருவள்ளுவர், சங்க இலக்கிய புலவர்கள் சிலர், சீனாவில் கன்பூசியஸ்  போன்றோர் உலக கருத்துக்களை புதிய நோக்கில் ஆராய்ந்து இயற்கையின்  புறவெளியைப் பற்றியும் மக்கள் வாழ்வதற்குரிய வழிமுறைகளைப் பற்றியும் எடுத்துரைத்துள்ளனர்.

இந்த உலகம் எப்படிப்பட்டது? அதன் தோற்றம் என்ன? அது எதனால் உருவானது? இயற்கைப் புறவெளியில் உள்ள அண்டவெளி பிரபஞ்சத்தின் (Universe)   இயக்கப் போக்குகள் என்ன? ஐம்பூதங்கள் எப்படி தோன்றின? பகலிலும், இரவிலும் பருப்பொருள்கள் தோன்றுவதும், மறைவதுமாய் இருப்பதற்குரிய காரணம் என்ன? மனிதன் பிற உயிரினங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றான்? என்பது போன்ற பல ஆயிரக்கணக்கான வினாக்களைத் தொடுத்து அதற்கு பல்வேறு விளக்கங்களையும் தந்துள்ளனர்.

Continue Reading →

ஆய்வு: இளிவரலெனும் மெய்ப்பாட்டில் உரையாசிரியர்களின் அகநானூற்றுத்திறன்

- பேரா.பீ.பெரியசாமி பேரா.பீ.பெரியசாமி, 22, சாஸ்திரி நகர் விரிவு, தமிழ்த்துறைத்தலைவர், பாட்டல் கம்பெனி அருகில் DLR கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கஸ்பா, வேலூர்-1 விளாப்பாக்கம் –முன்னுரை
நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டையும் முதன்மையான எண்வகை மெய்ப்பாடுகள் என்கிறார் தொல்காப்பியர்.(தொ.மெய்.3) அவற்றுள் இளிவரலெனும் மெய்ப்பாட்டிற்கான தோற்றுவாய்களாக மூப்பு, பிணி, வருத்தம், மென்மை என்பவற்றை விரித்துரைத்துள்ளார். இக்கட்டுரை தொல்காப்பியர் விரித்துரைக்கும் இளிவரலுக்குரிய மெய்ப்பாடுகளுக்கு உரையெழுதிய உரையாசிரியர்களின் உரையில் அகநானூற்றுப் பாடல்கள் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளன என்பதனை ஆராய்கின்றது.

இளிவரல் தோன்றும் களன்கள்
இளிவரலெனும் மெய்ப்பாடு தோன்றும் களனை தொல்காப்பியர்,
மூப்பே பிணியே வருத்த மென்மையோடு
யாப்புற வந்த இளிவரல் நான்கே.(தொ.மெய்.நூ.6)

எனும் நூற்பாவினில் கூறியுள்ளார்.

உரையாசிரியர்களின் பார்வையில் இளிவரல்
மூப்பு முதலாகச் சொல்லப்பட்ட நான்கும் இளிவரலுக்குரிய பொருளாகும். இவை தன்னிடமும் பிறரிடமும் தோன்றும்(இளம்.) மூப்பும் பிணியும் வருத்தமும் மென்மையுமென நான்கு பொருள் பற்றிப் பிறக்கும் இளிவரல்.(பேரா.) இளிவரல் எனும் மெய்ப்பாடு வகை நான்கும் அவற்றின் பொதுவியல்பும் குறிக்கிறது.(பாரதி.) என உரையாசிரியர்கள் இளிவரலினைக் குறித்துக் கூறியுள்ளனர்.

மூப்பு
பிறர்மாட்டு தோன்றும் மூப்புப் பற்றி விளக்க நாலடி.14 ஆம் பாடலை இளம்பூரணர் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார். தன்கட் டோன்றிய மூப்புப் பற்றி விளக்க பேராசிரியர். புறம்.243 ஆம் பாடலையும்,

”மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றியெம்
முதுமை யெள்ளலஃ தமைகுந் தில்ல”(அகம்.6)

எனும் பாடலையும் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார். மேற்கண்ட அகநானூற்றுப் பாடலடிகளில் இன்று இங்கு வந்து எனது மார்பில் தோன்றிய தேமலையும், கற்பினையும் உடைய புதல்வனது தாய் என்று வஞ்சனையுடன் வணங்கிப் பொய்ம்மொழி கூறி என்னுடைய முதுமையை இகழாது இருக்க என தலைவனிடம் தலைவி வேண்டுகின்றாள் எனும் செய்தி இடம்பெற்றுள்ளமையின் இஃது தன்னிடம் தோன்றிய முதுமைப் பொருளாயிற்று. மூப்பு என்பது முதுமை(பாரதி) என பாரதி கூறியுள்ளார்.

Continue Reading →