ஆய்வு: சங்க காலப்போரில் கழுதை உழவும் பின்புலமும்

- பா.சிவக்குமார்,    முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழ்த்துறை,  பாரதியார் பல்கலைக்கழகம் கோவை-46 -சங்ககாலப் போரில் நீர் நிலைகளை அழித்தல், வயல்வெளிகள் மற்றும் ஊரை நெருப்பிட்டு அழித்தல், காவல்மரங்களை அழித்தல், அரண்களை அழித்தல், வழித்தடங்களை அழித்தல், ஊர்மன்றங்களை அழித்தல், விளை நிலங்களைக் கொள்ளையிடுதல், பகையரசரின் உரிமை மகளிரின் கூந்தலை மழித்தல் மற்றும் கவர்ந்து வருதல் போன்ற செயல்களில் சங்ககால அரசர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், வெற்றி பெற்ற அரசன் பகையரசரின் நாட்டில் உள்ள வயல்கள், ஊர்மன்றம், வழித்தடங்களில் கழுதை கொண்டு உழவு செய்து அதில் வரகும், கொள்ளும் விதைத்துள்ளனர். இக்கழுதை உழவு, வன்புலப் பயிர்களின் விதைப்பு   மற்றும் அதன் பின்புலம் குறித்து ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

கழுதை உழவும் வன்புலப் பயிர்களின் விதைப்பும்
தன் ஆதிக்கத்திற்கு அடிபணிய மறுத்துத் திறை செலுத்தாத பகைவர் புலத்தை அழித்து அவர்களின் நிலத்தில் கழுதை கொண்டு உழவு செய்து அதில் வரகும், கொள்ளும் விதைத்துள்ளதை,

“……………………………………….கொடாஅ
உருகெழு மன்ன  ராரெயில் கடந்து
நிணம்படு குருதி பெரும்பாட்டீரத்
தணங்குடை மரபி னிருங்களந் தோறும்           (புறம்.392: 5-8)1
என்ற புறப்பாடல் எடுத்துரைக்கின்றது.

பல்யானை செல்கெழு குட்டுவனின் அரசாதிக்கத்தால் அவனின் காலாட்படைகள் ஊர் மன்றங்களை அழித்தும் கழுதை ஏர்பூட்டியும் பாழ்செய்யப்பட்டுள்ளதை,“நின்படைஞர், சேர்ந்த மன்றங் கழுதை போகி” (ப.ப.25:4)  என்ற பாடலடி மூலம் அறியமுடிகின்றது. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியினைப் பகைத்துக் கொண்ட மன்னர்களின் நாட்டிலுள்ள தேரோடும் வீதிகளை அழித்துக் கீழ்த்தன்மை விலங்கெனக் கருதப்பட்ட கழுதைகளைப் பூட்டி உழுது பாழாக்கும் வன்செயலில் ஈடுபட்டுள்ளமையை,

Continue Reading →

ஆய்வு: வள்ளுவர் உணர்த்தும் கள் உண்ணாமை

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
தமிழகத்தில்  சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இந்நூல்கள் அறம், அகம், புறம் என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன. இதில் அறநூல் பதினொன்று,அக நூல் ஆறு, புற நூல் ஒன்று என்ற வகையில் அமைந்துள்ளன.திருக்குறள் அறநூல் வகையை சார்தது ஆகும். இந்நூலின் ஆசிரியர் திருவள்ளுவர் இந்நூலில்;  1330 பாடல்கள் உள்ளன.133 அதிகாரமா பகுக்கப்பட்டு ஒவ்வொரு அதிகார விதம் மொத்தம் பத்து குறள்களாக உள்ளன.இந்நூலில் இடம் பெறும் கள்குடிப்பதால் அதாவது மதுஅருந்துவதால் ஏற்படும் விளைவுகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கள் உண்ணாமை
கள் உண்ணாமை என்ற அதிகாரம் திருக்குறளில் 93 ஆவது அதிகாரமாக அமைந்துள்ளது.ஒழுக்கமும்,உணர்வும் அழித்தற்கண் பரத்தையர் உறவுடன் ஒத்த தீங்கினை உடையது.இப்பழக்கம்,சங்ககாலத் தமிழரிடம் மிகுதியாகப் பரவியிருந்தது.சங்க காலத்தை அடுத்துத் தமிழ் அரசரும்,மக்களும் பகைவரிடம் தோற்றுப் போனமைக்கு இப்பழக்கம் ஒரு பெரும் காரணம் ஆகும்.ஏனெனில்,மது குடிக்கும் பழக்கம் உடையவர், தம் அறிவை இழந்து விடுவர்.உடல் நலம் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.உள்ள நலமும் கெடுகிறது.அவர்,வைத்திருக்கும் பொருள் நலனும் கெடுகிறது. அனைத்தும் கெடுவதால் அவரை நம்பி இருக்கும் குடும்பமும் கெடுகிறது.இதனைச் சமூக மேதையாகிய திருவள்ளுவரும் கண்டறிந்து தம் சமகால மக்களிடம் பரவியிருக்கும் ஒழுக்கத்தைக் கண்டித்துக் கூறியுள்ளார்.குடித்தல்,அருந்துதல் முதலாய சொற்களுக்கு மாற்றாக அளவறிந்து குடித்தலைச் சுட்டுதற்காக ‘உண்ணாமை’என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார்.

Continue Reading →

ஆய்வு: சீகன்பால்கு பார்வையில் தமிழ் எழுத்திலக்கணம்

- முனைவர் ப.ஜெயபால், உதவிப்பேராசிரியர் ,தமிழ்த்துறை, எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரி, கோயமுத்தூர் -ஒவ்வொரு காலகட்ட சமூக, அரசியல், கல்வி மற்றும் மொழி மாற்றங்கள் சார்ந்த அழுத்தங்களின் வெளிப்பாடே இலக்கண நூல்களை உருப்பெறச் செய்கின்றன. இலக்கணம் சமூகத்தின் உற்பத்திப் பொருளாக உள்ளது. சமூகத்தின் அடையாளப்படுத்தும் தன்மை இதில் வெளிப்படும். இலக்கணம் புனிதமானது; மாறாதது என்னும் கருத்தாக்கத்தை யதார்த்த நிலையில் காணும் பொழுது கட்டுடைத்தலுக்கு உள்ளாகின்றது. தமிழ் இலக்கண மரபில் தோன்றிய தொல்காப்பியம், வீரசோழியம், பிரயோக விவேகம் போன்றவை அந்த நூல்கள் எழுந்த காலகட்டத்தின் சமூக நிலையையே பிரதிபலிக்கின்றன. மரபை ஒட்டிய இலக்கணப் பெருக்கத்தில் ஐரோப்பியர் வருகையினால் உருப்பெற்ற இலக்கணங்கள் வேறொரு புரிதலுக்குள் கொண்டு சென்றன. இலக்கணநூல் உருவாக்கத்தில் எளிமையாக்கமும் புதுமையாக்கமும் செயல்படுத்தப்பட்டது. பதினெழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் மரபை அடிப்படையாக வைத்துக் கொண்டு தமிழ் இலக்கண நூல்கள் உருப்பெற்ற அதே காலகட்டத்தில் ஐரோப்பியரால் மரபை மீறிய இலக்கண நூல்கள் படைக்கப்பட்டன. ஐரோப்பிய சிந்தனையில் இலக்கணம் படைக்க விழைந்த கிறித்துவ பாதிரிமார்களுக்கு தமிழின் நீண்ட இலக்கணமரபை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தமிழ் இலக்கண மரபின் முன்னோடிகளான அகத்தியர், தொல்காப்பியர், பவணந்தியாரின் துணை தேவையாக இருந்துள்ளதை ஐரோப்பியர் இயற்றிய தமிழ் இலக்கண நூல்களின் முகவுரையின் வழி அறியலாகின்றது.

ஐரோப்பியர் வருகையும் இலக்கண உருவாக்கமும்
பதினெட்டு மற்றும் அதற்கு பின்னான காலகட்டங்களில் ஐரோப்பியர் எழுதிய தமிழ் இலக்கணநூல்கள் நெடிய ஒரு வரலாற்றினைக் கொண்டுள்ளன. தமிழ் இலக்கண வரலாற்றினை எழுத முற்பட்ட இளவரசு (1965), இளங்குமரன் (1988) ஆகியோரின் நூல்களில் இந்நூல்கள் பற்றிய குறிப்பினைக் காணமுடியவில்லை. ஐரோப்பியரால் எழுதப்பட்ட ஆரம்பகால இலக்கண நூல்கள் போர்த்துகீசிய மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. அதற்குப் பிறகான இலக்கணநூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன. ஐரோப்பிய மொழியில் இயற்றப்பட்ட முதல் இலக்கண நூலாக சீகன்பால்குவின் Grammatica Damulica (1716) என்னும் நூல் அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால் இதற்கு முன்பே சில இலக்கணநூல்கள் உருப்பெற்றுள்ளன.

Continue Reading →

ஆய்வு: ஒரு மனித இனத்தின் மரபணு DNA – M130

மேற்கு அவுஸ்ரேலியாவில் வாழும் திராவிட மூதாதையர்களின் ஆதிக்குடிகளின் படம்.

ஆய்வு: ஒரு மனித இனத்தின் மரபணு DNA -  M130

DNA என்பது Deoxyribonucleic Acid என்பதன் சுருக்கமாகும்(;(Abbreviation).). இது மனிதனது மரபணுவினை (DNA) உயிரியல் நோக்கில் கண்ணடறியும் விஞ்ஞான ரீதியான ஒரு ஆய்வின் முடியாகும். M130 என்பது ஒரு மனிதனதோ அன்றி ஒரு இனக்குழுமத்தினதோ அன்றி பல இனக்குழுமங்களைத் தொடர்பு படுத்திய மரபணுவுக்கு இடப்பட்ட விஞ்ஞானரீதியான குறியீடாகும். மேலே குறிப்பிட்ட DNA -M130 என்பது 70,000 ஆண்டுகளுக்கு முந்தி வாழ்ந்த உலகின் நவீன மூத்த குடியாகிய ஒரு பகுதி  மனிதனினதோ அன்றி ஒரு மக்கள் கூட்டத்தினதோ பொது மரபணு என்று தற்போது அறியப்பட்டுள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் உயிரியில் விஞ்ஞான பீடத்தின் தலைவரான பேராசிரியர் ஆர்.எம்.பச்சப்பன் அவர்கள் உலகளாவிய அமைப்பான தேசிய புவியியல் (National Geographic) என்ற அமைப்பின் சார்பாக மனித மரபணுவியல் (Genology) பற்றிய ஆய்வினை இந்தியாவில் செய்வதற்காக நியமிக்கப்பட்டு 2007ஆம் ஆண்டில் தனது ஆய்வினை ஆரம்பித்தார். இவ்வாய்வின் நோக்கமானது நவீன மனித இனம் எங்கிருந்து தோற்றம் பெற்றது என்றும் அந்த மனித இனங்களின் பொதுவான தொடர்புகள் என்ன என்பதனைக் கண்டறிய டி.என்.ஏ பகுப்பாய்வு செய்து மனித இனத்தின் தோற்றம் அதன் பரம்பல் பற்றி நிறுவுவதாகும். இவ்வாறாக அவரும் அவரது குழுவினரும் செய்த ஆய்வுகளில் பல வியத்தகு முடிவுகள் வெளிப்பட்டன.

பேராசிரியர் பச்சப்பனின் ஆய்வு மதுரையிலும், ஆதித் திராவிடர்கள் வாழும் மலைப்பகுதிகளிலும் வடஇந்தியாவின் குஜராத், ஒரிசா, ஹிமாசல்பிரதேஷ், ஜம்முகாஷ்மீர், கார்கில் ஆகிய பகுதிகளிலும் டி.என்.ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுகூட சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது ஒரு பொதுவான மரபணுவே எங்கும் காணப்பட்டது. இம்மரபணுவை எம்-130 என்னும் பெயரிடப்பட்ட மரபணு என்ற முடிவு பெறப்பட்டது. இதில் குறிப்பாக மதுரையில் உள்ள குக்கிராமமான “ஜோதிமாணிகம்” என்னும் கிராமத்தில் பெறப்பட்ட டி.என.;ஏ மாதிரிகள் 700 பேரிடம் பெறப்பட்டு அதில் நடைபெற்ற ஆய்வு முடிபுகளும் எம்-130 என்ற ஆய்வு முடிவினையே காட்டடியது. இங்கு முதன் முதலில் விருமாண்டி ஆண்டித்தேவர் என்னும் 30 வயதுடைய முன்னணி கணணி நிறுவன  நிர்வாகியிடம் பெறப்பட்ட முடிவின் பிரகாரம் அவரிடம் பெறப்பட்ட டீ.என்.ஏ மாதிரி 70,000 வருடங்களுக்கு முந்திய ஆபிரிக்க மனிதனின் டி.என்.ஏ மாதிரியுடனும் இன்றும் வடமேற்கு அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் பல வகையான ஆதிக்குடிகளிலும் பெறப்பட்ட டி.என்.ஏ மாதிரிகள் யாவும் எம்-130 என்ற முடிவினையே கொடுத்தன. இந்த ஆய்வு முடிவுகளைப்பெற 5 ஆண்டுகள் எடுத்ததாக பேரசிரியர் பச்சப்பன் குறிப்பிடுகின்றார். ஆகவே இதிலிருந்து அறிப்படுவது இந்த மூன்று இனக்குழுமங்களும் ஒரு மனித இனத்தின் வேர்கள் என்ற முடிவிற்கு வரமுடிகின்றது. இந்த ஜோதிமாணிக்கம் கிராமத்து மக்களே இந்தியாவின் ஆதிக்குடிகளாகும். இவ்வாறாகவே மலைவாழ் ஆதித்திராவிடர்களும் இவ்வாறான ஆதிக் குடிகளேயாவர். அத்தோடு திருமலை கள்வர் இனம், யாதவர், சௌராஷ்டர் ஆகியோரிடை 5மூ வீதமானவர்களிடம் இவ்வாய்வினை மேற்கொண்டபோதும் டி.என.ஏ எம்130 என்ற முடிவே பெறப்பட்டுள்ளது. ஆனால் ஆபிரிக்காவின் சில பகுதிகளில் பெறப்பட்ட முடிவுகளின் பிரகாரம் அவர்களது டி.என்.ஏ எம்60 என்றும் அறிப்பட்டு உள்ளது. இது வேறொரு இனக்குழுமத்திலிருந்து பெறப்பட்டதாக இருக்கவேண்டும். 160,000 ஆண்டுகளுக்கு முன்பே மனித இனம் தோற்றம் பெற்றிருக்க வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் முடிவாகும். இக்காலப்பகுதியில் பல இனங்கள் ஒன்றாகக் கலக்கத் தொடங்கியதனால் இவ்வாறான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

Continue Reading →

ஆய்வு: திணைச்சமூகப் பண்பாட்டில் சூழல் பொருத்தம் – நில ஒப்பாய்வு!

- ரா. மூர்த்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் -641046 -மனிதப் பண்பாட்டின் அனைத்துக் கூறுகளும் இடம், காலம், சூழல் என்னும் பௌதிகத்திற்குள் ஒன்றிணைந்து செயலாற்றி வருகிறது. இதில் பண்பாட்டினை அனைத்து நிலைகளிலும் வெளிப்படுத்திக் காட்டுவது காலமும் சூழலுமே ஆகும். அதே போன்று சங்ககால மக்களின் வாழ்வியல் பின்புலங்களைத் தற்காலச் சூழலில் இனங்காணுவதற்கு மூலப்பனுவல்கள் தேவையான ஒன்றாகிறது. இப்பனுவல்கள் எழுத்தாக்கம் பெறும்போது தொகுப்பாக்கம் பெறவில்லை. மாறாக வாய்மொழி மரபுத்தன்மையில் மக்களாலும், பாண்மரபுகளாலுமே அவை பாடப்பட்டு, பின்னர் அவை கவிதையாக்கம் பெற்றன. இந்நிலையிலிருந்து சங்கப் பனுவல்களைப் பார்க்கும்போது சூழல்த் தன்மையும் காலவரையறையும் வெளிப்பட்டு நிற்கிறது.

சங்க மரபுகள் அவை தோன்றிய காலகட்டத்தில் தளப்பார்வை (நிலம்) கொண்டு இயங்கின. ஆனால் இன்றைய நிலையில் வரலாற்றுச் சான்றுகளகாவும், தொல்லியல் ஆவணமாகவும் காலப்பார்வை சார்ந்து வெளிப்பட்டு நிற்கிறது. இத்தகையப் பொதுத்தன்மையில் இயங்கிவரும் சங்கப் பனுவல்களை நிலத்தோடு மக்கள் வாழ்வியலாகப் பண்பாடாக வெளிப்படுத்துவதற்கு முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் தேவையான ஒன்றாகிறது. இம்மூன்றையும் ஒருமித்த தன்மையில் வெளிக்காட்டுகிறது சங்கப்பாடல்கள். இருந்தபோதிலும் முப்பொருள் செயற்பாடு ஐந்து நிலமக்களின் வாழ்வியலில் ஒரே தன்மையில் வெளிப்படவில்லை. சுற்றுச்சூழல் மாற்றம், நிலஅமைப்பு, மக்கள்வாழ்வு என வெவவேறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பதிசெய்யப்பட்டத் திணைச்சமூக மக்களின் வாழ்வியலை வெளிக்காட்டுவதற்குச் சுற்றுச்சூழல், சுற்றுச்சூழலை ஒட்டிய தனிமனிதசூழல், குடும்பச்சூழல், வாழிடச்சூழல், சமூகச்சூழல் ஆகிய அனைத்தும் இடத்திற்கேற்பத் தேவையாகிறது. அதனை உள்வாங்கி சங்கப் பாடல்கள் வாயிலாகச் சூழல் படுத்துவதே இக்கட்டுரையின்  நோக்கமாகும்.

திணைக்குடி மக்களின் வாழ்விற்கு ‘இடம்’ தேவையான ஒன்றாக இருப்பின் அவை நிலத்தோடு, சமூகக் குழுக்களோடு, சுற்றுச்சூழலோடு என இணைந்து செயல்புரிய வேண்டியிருக்கிறது. நிலம் – மக்கள் இருகூறுகளும் தனித்தனியே இருப்பினும் அவை செயலாற்றுவதற்கு சூழல், பொழுது (காலம்) இரண்டும் தேவையாகின்றது. இவை சுற்றுச்சூழலோடு இணைந்து “உள்ளீட்டுத் தொடர்புகள், பண்பாட்டு ரீதியாக வடிவமைக்கப்பட்ட தேவைகள் மற்றும் விருப்பங்கள்,  வேலைப்பிரிவு, தொழில்நுட்பம், உற்பத்திமுறைகள் மற்றும் இயற்கை வளங்களை அடைய விரும்புவோரும் பயன்படுத்துவோரும் அவற்றைப் பங்கீட்டுக் கொள்ளுதல்”1 என அனைத்துச் செயல்பாடுகளிலும் சூழல் செயலாற்றுகிறது. ஒரு படைப்பாக்கப் பனுவலில் சூழல் தன்மையில்லை என்றால் அப்பனுவல் வெறும் படிமமாகவே பொருளற்றுக் கிடக்கும். அதற்கு உயிரோட்டம் கொடுத்து இயங்கச் செய்வது சூழலே ஆகும்.

Continue Reading →

ஆய்வு: ஆசாரக்கோவை உணர்த்தும் சமுதாய நெறிகள்!

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
தமிழ் இலக்கியங்களில் சிறப்பாகக் கருதப்படும் நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு ஆகும்.இந்நூல்கள் எவை என்பதை பற்றி

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு

என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது. இப்பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக்கோவையில் இடம்பெறும் சமுதாய நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பதினெண் கீழ்க்கணக்கில் ஆசாரக்கோவை
பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் பெருவாயில் முள்ளியார்.ஆசாரம் என்பது வாழ்க்கையில் மக்கள் கடைபிடிக்கும் ஒழுக்க நெறிகளைக் குறிப்பதாகும்.வடமொழியில் ஆரிடம் என்னும் நூலைத் தழுவி இந்நூலாசிரியர் 100 பாடல்களைப் பாடியுள்ளார்.இவை வெண்பா வகையில் அமைந்தனவாகும்.இவருடைய காலம் 5 ஆம் நூற்றாண்டு ஆகும்.

சமுதாயம் என்பதன் விளக்கம்
சமுதாயம் என்பதற்கு கௌரா தமிழ் அகராதி கூட்டம், சங்கம், பொதுவானது, மக்களின் திரள், பொருளின் திரள்,உடன்படிக்கை என்று பல்வேறு பொருள் விளக்கமளிக்கிறது.(ப.331)

Continue Reading →

ஆய்வு: தமிழ்நாட்டில் அய்யனார் வழிபாடு

ஆய்வுகட்டுரை வாசிப்போமா?தமிழ் இலக்கியங்களில் இறைவழிபாடு முறையில் நோக்கிடும்போது தமிழகமக்களின் பழமையும், ஆய்வுக்குட்பட்ட பல செய்திகளும் புலப்படுகின்றன. வழிபாடு என்பது பின்பற்றுதல் என்ற பொருளினைத் தரும். பலதரப்பட்ட கடவுள்களைச் சைவசமயத்தினர் வணங்கி வருகின்றனர். இறைவனை நேரில் காண இயலாததாகி இருப்பினும் இறைவனுக்குப் படையல் இடுவதும், தன்னையும், தமது குடும்பத்தாரையும் காக்கும் சக்தியாக எண்ணியும் வழிபட்டு வருகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தெய்வமாக அமையப்பெற்ற அய்யனார் வழிபாடு குறித்து இவ்வாய்வுக்கட்டுரை அமையப்பெறுகிறது.

அய்யனார் விளக்கம்
அய்யனாரைப் பல சாதி சமயத்தினரும் வழிபாடு செய்துவருகின்றனர். அய்யனார் என்ற சொல்லானது அய்(ஐ) அன், ஆர் என்ற மூன்றால் ஆனதாகும். இதில் ஐ என்ற எழுத்து தலைவன் என்றும் அன் என்பது ஆண்பால் ஈறு ஆகும். ஆர் என்பது மரியாதைக்குரிய விகுதியாகும். பழங்காலம் முதற்கொண்டே அய்யனார் வழிபாடு தமிழகத்தில் இருந்து வந்ததற்கான ஆதாரங்கள் இலக்கியங்களில் இருக்கின்றன. சமணர்கள் கோயிலிலும் அய்யனார் தெய்வத்தைப் பரிவாரத் தெய்வமாய் வைத்து வழிபட்டு  வந்திருக்கின்றார்கள். அவர்கள் இவரைப் பிரம்மயட்சணர் என்றும் அழைத்து வருகின்றார்கள். யானை வாகனம் அவருக்குரியது என்றும் கூறி வழிபட்டு வருகின்றனர். தமிழகத்திலுள்ள சிறுதெய்வ வழிபாடு முழுவதும் அழகர்மலையிலுள்ள பதினெட்டாம்படி கருப்பர் வழிபாட்டிற்குக் கட்டுப்பட்டதேயாகும். அய்யனார் கோயில்களில் இருக்கும் தெய்வச்சிலைகள், எல்லாம் களிமண்ணால் செய்யப்பட்டு சூளையில் வைத்துச் சுட்டுச் செய்யப்பட்டவைகளாய் இருந்து வருகின்றன.(நன்றி-வலைத்தளம்)

சைவமும்,வைணவமும் ஒருங்கிணைந்ததுபோல அய்யனாரின் பிறப்பு அமைந்துள்ளது. அய்யப்பனே அய்யனார் எனவும், சாஸ்தா எனவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. சாத்தன்’, அல்லது ‘சாத்தனார்’ என்னும் பெயர் ‘சாஸ்தா’ என்னும் வடமொழிப் பெயரின் திரிபு. ‘சாஸ்தா’ என்பது புத்தருக்குரிய பெயர்களுள் ஒன்று என்பது ‘அமரகோசம்’, ‘நாமலிங்கானுசாசனம்’ முதலிய வடமொழி நிகண்டுகளால் அறியப்படும். எனவே, ‘சாஸ்தா’ என்னும் சொல்லின் திரிபாகிய ‘சாத்தன்’ என்னும் பெயர் புத்தரைக் குறிக்கும் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கப்பட்டு வந்தது. இந்தப் பெயரைப் பௌத்த மதத்தினர் பெரும்பான்மையும் தத்தம் சிறுவருக்குச் சூட்டினர். பண்டைக் காலத்தில், அதாவது கடைச்சங்க காலத்தில், தமிழ் நாட்டிலிருந்த பௌத்தர்கள் ‘சாத்தன்’ என்னும் பெயரைப் பெரும்பாலும் மேற்கொண்டிருந்தனர் என்பது சங்க நூல்களினின்றும் தெரியவருகின்றது.   காப்பியச் சிலம்பில் சாஸ்தாவைப் பற்றிப் பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன. கனாத்திறமுரைத்தகாதையில் பாசண்டச் சாத்தன் பற்றிய குறிப்பும் வரலாறும் வருகிறது. சாத்தன் கோயிலை சிலம்பு புறம்பணையான் கோட்டம் என்கின்றது. அங்கு வழிபாடு நிகழ்தலையும், அத் தெய்வம் தம்மை அண்டியவரைக் காத்து நிற்பதையும் சிலம்பு கூறுகிறது.

Continue Reading →

ஆய்வு: சிலம்பு ஒரு குறியீடு!

ஆய்வுகட்டுரை வாசிப்போமா?மனித வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை சடங்குகளும் வழிபாடுகளும் இரண்டறக் கலந்தவையாக இருக்கின்றன. இயற்கையைச் சரிவர உணராத தொன்மைச் சமுதாயத்தில் வழிபாடுகளுக்கும் சடங்குகளுக்கும் தனித்ததொரு இடமிருந்ததை இலக்கியங்கள் உணர்த்துகின்றன. சடங்குகள் சமுதாயத்தின் பழக்கவழக்கங்களை சமுதாயத்தைக்கட்டமைக்கும் உறுப்பினர்களின் கடமைகளை அவர்தம் நிலைப்பாட்டை உணர்த்துவனவாகவும் உள்ளன. ஆடை, அணிகள் குறித்து விவாதம் ஏற்படும் இன்றைய சூழலில் மனிதனை அடையாளப்படுத்தும் ஆடை அணிகலன் குறித்தும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஆணுக்குக் கழல் அணியப்பட்ட நிலையில் பெண்ணுக்குச் சிலம்பு ஏன்?  திருமணத்திற்கு முன் காலில் அணியப்பட்ட  சிலம்பு வதுவைச்சடங்குக்கு முன் கழியப்படுவது ஏன்? என்ற வினாக்களுக்கு விடைகாணும் முயற்சியை இக்கட்டுரை மேற்கொள்கிறது.சிலம்பு குறித்த பதிவுகளை நோக்க அகநானூற்றுப்பாடல்கள் மூலமாக அமைகின்றன.

சிலம்பு ஒரு குறியீடு

கயமனாரின் செவிலித்தாய் தலைவனுடன் உடன்போக்கு மேற்கொண்ட தன் மகளைக் குறித்து, ‘ஏதிலாளனது நெஞ்சு தனக்கேயுரித்தாகப் பெற்ற எனது சிறிய மூதறிவுடையவளது சிலம்புபொருந்திய சிறிய அடிகள் மேகங்கள் பொருந்திய பெரியமலைகள் குறுக்கிட்டு நிற்கும் சுரநெறியில் செல்லுதற்கு வல்லுநவோ’ என்றுகூறி வருந்துகிறாள்1. வண்ணப்புறக்கந்தரத்தனாரின் பாடலிலும் செவிலி, ‘மானின் கூட்டம் வற்றிய மரச்செடியினைச் சுவைத்துப் பார்க்கும் காட்டில் வலிமைமிக்க பெருந்தகையாய தலைவன் இவளைப் பலபடியாகப் பாரட்டி உலர்ந்த நிழலிலே தங்கி இவளை உடன்கொண்டு கழிதலை அறியின் இவள் தந்தையது தங்கும் உணவுமிகுந்துள்ள காவல் பொருந்தியப் பெரியமனையில் செல்லும் இடம்தொறும் இடந்தொறும் உடம்பின் நிழலைப் போலச் சென்று கோதையையுடைய ஆயத்தாரொடு விளையாடும் விளையாட்டினை மேற்கொண்டு தொகுதிவாய்ந்த பரலினையுடைய சிலம்பு ஒலிக்க அவள் விளையாடும் இடந்தொறும் அகலாதிருப்பேன் அது கழிந்ததே என வருந்துகிறாள்2.

Continue Reading →

ஆய்வு: சமூகத்தின் பெண்ணிண அடையாளம் : சிலம்பும் சிலம்பு கழீ நோன்பும்

- ரா.மூர்த்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம் ,கோயம்புத்தூர்-46, -மனித வளர்ச்சியினால் பண்பாட்டில் ஆண் x பெண் உருவாக்கம், சமூக உருவாக்கம், சமுதாய வளர்ச்சி என அனைத்தும் சுழற்சி முறையில் ஒன்றையொன்று சார்ந்து இயங்கி இனப்பெருக்கத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு அடித்தளமாக நிலைகொண்டிருப்பவள் ஒரு பெண். இப்பெண் மனித தோற்றத்திற்கான உயிராகவும்  ஆயுதமாகவும் இருந்து வருகிறாள். தொடக்க காலத்தில் உயிர் உற்பத்திக்கே தன்னை ஆட்படுத்திக்கொண்ட பெண் பின்பு விவசாய உற்பத்திக்கான தொடக்கம், பொருளாதார உற்பத்தியில் உபரியைப் பெருக்குதல், விற்பனை செய்தல் எனத் தன்னைப் படிப்படியாக ஒவ்வொரு நிலையிலும் உயர்த்திக்கொண்டாள். இது சங்க காலத்தில் தொடர்ந்து  நிகழ்ந்து வந்தாலும் சமூக வயத்தளத்தில் குடும்பமென்ற ஒடுக்கு நிலைக்குள்ளும் பெண் ஆழாக்கப்பட்டாள். இதனால் குறிப்பிட்ட இயங்கு தளத்திலே தன்னை தகவமைத்துக்கொண்டு வாழமுற்படவும் செய்தாள். ஓவ்வொரு வயத்திலும் ஓர் அடையாளமாகப் பரிணமித்த பெண்கள் சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர். இதனால் உடல்தோற்றத்தில் மட்டுமின்றி வாழ்விலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தச் செய்ததுடன் சமூக அடையாளமாகவும் சில அணிகலன்களையும் மரபாக அணிந்தனர். அதில் ஒன்று தான் சிலம்பு.

இச்சிலம்போடு தொல்தமிழர்கள் திணைச்சமுதாய வாழ்வில் பெண்களுக்கென்று பண்பாட்டில் சில வாழ்க்கை வட்டச் சடங்குகளைக் நிகழ்த்தி வந்தனர். அச்சடங்குகள் திணைச்சமுதாயத்திற்கே உரித்தான பண்பாட்டு அடையாளமாக வளம் வந்தது. அதில் சிலம்பு கழீஇ நோன்பும் அடங்கும். இச்சடங்கைத் திருமணத்திற்கு முன்பாகக் கடைப்பிடித்து வந்ததாகவும் திருமண காலத்தில் அதனை மீண்டும் நீக்கியதாகவும் திணைச்சமுதாயப் பண்பாடு எடுத்துரைக்கிறது. சிலம்புகழீஇ நோன்பின் தொடர் மரபுகளைத் திணைச்சமூக முதுகுடிகள், முதுபெண்டிர்கள் கடைப்பிடித்ததுடன் இளமகளிர்களின் (தலைவியின்) கற்பு வாழ்க்கையைக் கருத்தில் கொண்டும்,  இனக்குழு மரபிற்கு உட்பட்டும் இதனைச் செய்தனர். ஆனால், அதற்கு எதிர்மாறாக களவு (காதல்) வயப்பாட்டில் இளமகளிர் (குமரிகள்) தன்னுடைய காதலனுடன் உடன்போக்கு செல்லத் துணிவதும் உடன்போக்கு செல்லும் காலத்தில் காலில் அணியப்பட்ட சிலம்பினைக் கழற்றி கைகளில் எடுத்துக்கொண்டு நிலம்பெயர்ந்து செல்வதும் மரபாக்கப்பட்டுள்ளது. பின்னர் வளர்ச்சி பெற்ற காலங்களில் கற்பின் அடையாளமாகவும் மாறத்தொடங்கியது. ஆனால்,  இன்றைய சூழலில் சிலம்பு பல்வேறு வடிவங்களில் திரிகிறது. அவ்வாறு திரிவதற்கான காரணம், சூழல் மாற்றம் இவைகள் குறித்து வரலாற்றுக் கண்ணோட்டத்தில்  இக்கட்டுரை ஆராயப்படுகிறது.

Continue Reading →

ஆய்வு: கொன்றைவேந்தன் காட்டும் அறநெறிகள்

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க மருவிய காலம் நீதி நூல் காலம் ஆகும்.களப்பிரர் காலம் என அழைக்கப்பட்ட அக்காலம் கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 6 ஆம் நூற்றாண்டுக்கு பின் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெறாமல் இருந்து கி.பி 12 ஆம் நூற்றாண்டில் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.இடைக்கால ஒளவையார் வருகைக்கு பின்பே நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.தமிழ் இலக்கிய நூல் ஆசிரியர்களில் மிகவும் புகழ் பெற்றவர்.இவர் தமிழ் இலக்கியத்தை வளர்த்தவர்.இவர் பிற்காலச் சோழர் காலத்தின் இறுதியில் வாழ்ந்த பெண்பாற் புலவர்.இவர் சிறுவர்கள் மனதில் எளிமையாகப் பதியும்படி அறக்கருத்துக்களைப் பாடும் திறன் பெற்றவர்.இவர் விநாயகர் அகவல்,அசதிக்கோவை,ஞானக்குறள், போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.மேலும் இவர் நீதி இலக்கியப் படைப்புகளாக விளங்கும் ஆத்திசூடி,கொன்றை வேந்தன்,மூதுரை,நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.இந்நூலில் ஒன்றான கொன்றை வேந்தனில் இடம்பெறும் அறநெறிகளை எடுத்து கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அறம் என்பதன் பொருள்
அறமெனும் சொல்லிற்கு ஒழுக்கம், வழக்கம், நீதி, கடமை ,ஈகை, புண்ணியம்,அறக்கடவுள்,சமயம் என்ற எட்டு வகையான பொருட்கள் பெருவழக்காக வழங்கப்பட்டன.(க.தி.திருநாவுக்கரசு,திருக்குறள் நீதி இலக்கியம்,ப.18)

கொன்றைவேந்தனில் இடம்பெறும் அறநெறிகள்

“கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே”

என இந்நூல் சிவபெருமான் வணக்கத்துடன் தொடங்குகிறது.கொன்றை மாலை அணிந்தவன் சிவபெருமான்.கொன்றைவேந்தன் – சிவபெருமான்,அவன் செல்வன் விநாயகன்,எனவே இது வினாயகர் வணக்கத்துடன் தொடங்குகிறது என்பார் நா.மு.வேங்கடசாமி நாட்டார்.கொன்றை வேந்தன் என்ற நூலின் தொடக்கத்தால் இந்நூல் பெயர் பெற்றது.அகர வரிசையில் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.ஒர் எழுத்திற்கு ஒரு பாடலாக மொத்தம் 91 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.ஓர் அடியில் நாற்சீர்கள் உள்ளன.எளிமை,ஓசை நயம்,பொருள் ஆழம் உடைய நூல் ஆகும்.

Continue Reading →