பாரதிதாசன் கவிதைகளில் இயற்கை!

இலக்கியக் கட்டுரை வாசிப்போமா?பாவேந்தர் பாரதிதாசன் அற்புதமான கவிதை வரிகளில் இயற்கை மூலம் நமது மானிட குலத்தின் வழி நடத்தலை அழகாக படம்பிடித்துக் காட்டுகிறார். அவரை இயற்கை கவிஞன் என அழைப்பது சாலச் சிறந்தது. தமிழ், தமிழன் என்னும் வார்த்தைகளை வானளாவிப் பிடித்து தமிழினத்தைத் தலை நிமிர்த்திய பாரதியின் தாசனாவார். அவருடைய கவிதை வரிகளில் இயற்கை பற்றி ஈங்கு இனி காண்போம்.

மயில்:-
மயில் என்னும் நமது தேசியப் பறவையின் அழகை வருணிக்க அவர் பயன்படுத்திய வார்த்தைகள் தோகை புனையா ஓவியம். முனதின் மகிழ்ச்சியை உச்சியில் கொண்டையாய் உயர்த்தி வைத்ததாகவும், ஆயிரம் ஆயிரம் அம்பொற்காசுகளைக் கொண்டதாகவும் ஆயரமாயிரம் அம்பிறை நிலவுகளின் சாயலைக் கொண்டதாகவும் கூறுகின்றார்.
மேலும், மரகதப் பச்சையை உருக்கி வண்ணத்தால் உனது மென்னுடல் அமைந்துள்ளது என்றும், நீயும் பெண்களும் நிகர் பிறர் பழி தூற்றும் பெண்களின் கழுத்து உன் கழுத்து என்றும் வருணித்துள்ளார்.

சிரித்தமுல்லை:-
மாலைப் பொழுதில் சோலையின் பக்கம் அவர் செல்லும் போது அவ்வேளையில் குளிர்ந்த மந்த மாருதம் வந்தது அது அவரைத் தழுவி வாசம் தந்தது. அந்த வாசத்தில் அதன் வசம் திரும்பியதாகவும், சோலை நடுவே பச்சைப்பட்டு உடை போர்த்தினார் போன்று புல் பூண்டுகள் படர்ந்து கிடக்க. அதில் குலுக்கென்று ஒரு முல்லைத் தன் முன்னால் சிரிப்பதைக் கண்டு மகிழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அணில்:-
கத்திக் கொண்டு கிளைக்குக் கிளை தாவும் அணில் கீச்சென்று அதன் காதலன் வாலை வெடுக்கென்று கடித்ததாகவும் காதலன் ஆச்சென்று சொல்லி காதலியை அணைக்க நெருங்கியதாகவும் கூறியுள்ள பாவேந்தர். மேலும் கொல்லர் உலையிலிட்டுக் காய்ச்சும் இரும்பின் இடையே நீர்த்துளி ஆகக் கலப்பது போல் கலந்திடும் இன்பங்கள் எவ்வளவு துன்பத்திலும் காதலன் அணைப்பில் காதலியும் துன்பம் மறந்து மகிழ்வாள். கூச்சல் குழப்பம் கொத்தடிமைத்தனம் செய்யும் மனிதர்கள் போல் அணில் இனத்தில் அப்படி ஏதுமில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

வானும் முல்லையும்:-
நம் எண்ணங்களைப் போல் விரிந்துள்ள என்ன தெரியுமா?அது வான். நமது இருகண்களைக் கவர்ந்திடும் ஆயிரம் வண்ணங்கள் சேர்ந்து தரும் ஒளி வானாகும்.
இந்த வண்ணங்களைக் கருமுகிற் கூட்டங்கள் மறைத்து இடி என்னும் பாட்டையும், மின்னலையும், வானவில்லையும் கொடுப்பதாகக் கூறியுள்ளார்.
மழை மேகக் கூட்டங்களைக் கண்டு தோகை விரித்தாடும். வெண் முத்து போன்ற மழைத்துளி மல்லிகை கண்டு சிரிக்கும் என்பது போன்ற இயற்கை வருணனைகள் அழகுபடப் படைத்துள்ளார்.

Continue Reading →

‘வேரில் பழுத்த பலா’ புதினத்தின் கருவும் உருவும்

‘வேரில் பழுத்த பலா’ புதினத்தின் கருவும் உருவும்சு.சமுத்திரம் இலக்கியத் தளத்தில் பல்வேறு விமரிசனங்களை எழுப்பியவரும் பல்வேறு விமரிசனங்களுக்கு உள்ளானவரும் ஆவார். இவரது ‘வேரில் பழுத்த பலா’ என்ற புதினம் சாகித்திய அகாதமி விருதைப் பெற்று உள்ளது. அரசு அலுவலகச் செயல்பாடுகளையும் அநீதியின் உச்சக் குரலையும் நீதியின் மெளனத்தையும் சாதியத்தின் பன்முகத்தையும் கருவாகக் கொண்டு புதினமாக உருப் பெற்று உள்ளது. சு.சமுத்திரம் இக்கருவிற்கு எங்ஙனம் உருவம் கொடுத்துள்ளார் என்பதை ஆய்வதாகக் கட்டுரை அமையப் பெறுகிறது.

தொடக்கம்
‘எல்லாக் குழந்தையும் நல்லக் குழந்தை தான்
மண்ணில் பிறக்கையிலே – அவர்
நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும்
அன்னை வளர்ப்பினிலே’

என்ற வரிகளை மெய்ப்பிக்கும் வகையிலேயே புதினத்தின் தொடக்கம் அமைந்து உள்ளது. முதன்மைப் பாத்திரமான சரவணனின் அலுவலகப் புறப்பாடே, புதினத்தின் முதல் காட்சி ஆகும். புறத் தோற்றத்திற்கு முக்கியத்துவம் தராதவன். ஆனால் அகத் தோற்றத்தில் எவ்வித கறையும் படியாவண்ணம் தற்காத்துக் கொள்ளும் குணம் உள்ளவன் என்பதை தெளிவுபடுத்துவதாய்,

‘ உடை என்பது, உடம்பை உடைத்துக் காட்ட அல்ல. மறைத்துக் கொள்ளவே என்பதை சரவணன் கொள்கையாகக் கொண்டிருப்பானோ என்ற சந்தேகம் எவருக்கும் வரலாம்.’ என்ற வரிகள் அமைந்துள்ளது. ஒரு மனிதனின் குணம், பண்பு அக அழகில் இருக்கிறதே தவிர புற அழகில் இல்லை என்பதை மனத்தில் ஆழப் பதியச் செய்து வளர்த்தது தாய் முத்தம்மாவும் இரண்டாம் தாயகத் திகழும் அண்ணி தங்கம்மாளுமே ஆவர். இப்பண்பு தங்கை வசந்தவிற்கான பணித் தேடலிலும் நிலை பெற்று இருக்கிறது. தன்னிடம் அதிகாரமும் பதவியும் இருந்த நிலையிலும, “ வேலைக்குன்னு பேனாவைத் தான் தொட்டேன். எவன் காலையும் தொடலைஸ இவளுக்கும் தொட மாட்டேன். இவளுக்கு நான் வழிதான் காட்ட முடியும். கூடவே நடக்க முடியாது ? ” என்று கூறுகிறான்.

சு.சமுத்திரம் தனது படைப்பின் முதன்மைப் பாத்திரத்தை, ‘ ஊருக்குத் தான் உபதேசம். தனக்கு அல்ல’ என்றா எண்ணம் கொண்டதாக இல்லாமல் பேச்சும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளதாகப் படைத்துள்ளார்.

தலைப்பு

படைப்பாளர் புதினத்திற்கு மேலோட்டமாக இல்லாஅமல் குறியீடாகவும் கவிதையாகவும், ‘வேரில் பழுத்த பலா’ என்று தலைப்பிட்டு உள்ளார். கதையின் மையக் கருவைக் கடந்து முதன்மைப் பாத்திரத்தின் எண்ணப் போக்கை மனத்திற் கொண்டு தலைப்பு அமைந்துள்ளது. நம்முடைய தேவைகளை நிவிர்த்தி செய்யும் காரணிகள் காலடியில் கிடப்பதைக் கவனத்தில் கொள்ளாமல் ஏழு கடல் ஏழு மலை தாண்டி மனம் தேடுவதே இயல்பாகும். அதைப் போன்று சரவணன், வாழ்க்கைத் துணையையும் பிரச்சினைகளுக்கான தீர்வையும் திறமை கொண்ட ஆளுமையையும் எங்கோ தேடிக் கொண்டிருந்தான். ஆனால், “ அலுவலக மரங்களின் உச்சாணிக் கிளைகளில் அணில் கடித்த பழங்களையும் பிஞ்சில் பழுத்த பழங்களையும் பிடுங்காமல் பார்த்த எனக்கு இவ்வளவு நாளாய் இந்த வேரில் பழுத்த பலா பார்வைக்குப் படாமல் போய் விட்டதே? இப்போ, இவளை இவளையே. . . . . இவளை மட்டுமே . . . . நாள் பூராவும் பார்த்துக் கொண்டே இருக்கணும் போல் தோணுதே! இதுக்குப் பெயர் தான் காதலோ ” என்று சரவணன் எண்ணுவதாகப் புதினம் அமைந்துள்ளது.

Continue Reading →

தமிழறிஞர் ப. மருதநாயகம்;: (1935)

கட்டுரையாளர்: * - இர.ஜோதிமீனா, முனைவர் பட்ட ஆய்வாளர்  அரசுகலைக்கல்லூரி,(தன்னாட்சி)  கோயம்புத்தூர் - 18. -முனைவர்.ப.மருதநாயகம் ஆங்கிலத்திலும் தமிழிலும் முதுமுனைவர் பட்டம் பெற்றவர் என்பது அவரது சிறப்புத்தகுதியாகும். அமெரிக்க இலக்கியத்தை ஹவாய் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். பேராசிரியர் கல்வியாளர், நூலாசிரியர், ஆய்வாளர் மொழிபெயர்ப்பாளர் எனப் பல தளங்களில் பரிணமிப்பவர். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கில போராசிரியராகக் கல்லூரியிலும் பல்கலைகழகங்களிலும் பணியாற்றியவர். தற்போது எண்பது வயதிலும் விடாப்படியாக மிகுந்த அக்கறையோடு உலக அரங்கில் தமிழில் ஆய்வுக்கட்டுரை வழங்கி தமிழின் பெருமையை உயர்த்தி வருகிறார்.

ஆங்கிலத்தில் பத்திற்கும் மேற்பட்ட ஆய்வுநூல்களும், தமிழில் பதினைந்திற்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களும் எழுதியுள்ளார். தொல்காப்பியம், சங்கஇலக்கியம், திருக்குறள் குறித்தும் இவர் எழுதிய ஆய்வுக்கட்டுரைகள் தமிழுக்கு வளம் சேர்ப்பவை. புறநானூறு குறித்த மிக விரிவான இவரது ஆய்வு போற்றத்தக்கது. ஏனைய வடமொழி இலக்கியத்திற்கெல்லாம் மூலம் புறநானூறு தான் என்றும் சிற்றிக்கியங்களின் தோற்றத்திற்கும் புறநானூறு அடிப்டையாக அமைவதையும் வெளிப்படுத்தியுள்ளார். சம காலத்து இலக்கியவாணார்களான வள்ளலார், அயோத்திதாசர், பாராதி, பாவாணர், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார், குலோத்துங்கன், ஜெயகாந்தன், ம.இல.தங்கப்பா, சிற்பி போன்றோர்களின் படைப்புகளையும் ஆய்வுக்குட்படுத்தி அவர்களின் தனிச்சிறப்பை விளக்கியுள்ளார்.

ஆங்கிலப்போராசிரியர்கள்; தமிழ்மீது அக்கறை கொள்வதில்லை அல்லது ஆங்கில இலக்கியம் முதலியவற்றைக் கற்றவர் தமிழின் மீது அக்கறை கொண்டதே இல்லை. அதேபோல் தமிழ்இலக்கியம் கற்றவர்கள் ஆங்கில இலக்கியத்தைக் கற்பதும் இல்லை. இவ்வகை தமிழ் அறிஞர்கள் இடையில் மருதநாயகம் தமிழுக்கு ஒரு கலங்கரை விளக்கமெனத் திகழ்கிறார்(த.நே.இ.43, ப.4).

ஆங்கில இலக்கியம் கற்றவர் எனினும் தாய்மொழிக்கு வளம் சேர்க்கும் ஒரு சிலரில் பேராசிரியர் மருதநாயகம் குறிப்பிடத்தக்கவர். ஆங்கில இலக்கியத்தின் மேன்மை குறித்துப் பேசுபவர்களை மறுக்கும் முறையில் ஆங்கிலத்தை ஏவல் கொண்ட தமிழ்தேடல் என்னும் தலைப்பில் 96 பக்க அளவிலான கட்டுரையை தமிழ்நேயம் (43) வது (மே 2011) சிறப்பிதழில் எழுதியுள்ளார். இக்கட்டுரையிலிருந்து மருதநாயகத்தின் ஆய்வுகள் இங்குத் தொகுத்துத் தரப்படுகின்றன.

Continue Reading →

2004 சுனாமி நினைவலைகள்: அனாமிகா – கூத்தில் நிமிர்ந்து ஈழ நாட்டிய கனவை விதைத்த மகள்!

அநாமிகாபாலசிங்கம் சுகுமார்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பீடமொன்றின் தலைவராக இருந்தவரும், கூத்துக்கலைகளில் ஆர்வம் மிகுந்தவருமான திரு. பாலசிங்கம் சுகுமார் அவர்கள் தன் மகளைப்பற்றி அவ்வப்போது முகநூலில் பதிவுகளிடுவார். இப்பதிவுகளுக்குப் பின்னாலுள்ள வலி, சோகம், துயரம் வாசிப்பவர் நெஞ்சங்களைப் பாதிப்பவை. ஆனால் அவற்றையும் மீறி அவர் தன் மகளுக்குச் சொற்களாலான கவிமாலை புனைந்து இலக்கியத்தில் நிலையாத இடத்தை ஏற்படுத்தி விட்டார். 2004இல் தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாப்பிரதேசங்களைப் பாதித்த ஆழிப்பேரலைக்குப் பலியான அவரது மகள் பற்றிய அவரது உணர்வுகளில் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றோம்.

அவர் தன் மகளைப் பற்றி அண்மையில் எழுதிய பதிவொன்று கீழே:

கூத்தில் நிமிர்ந்து ஈழ நாட்டிய கனவை விதைத்த மகள்!
200ம் ஆம் ஆன்டு பேராசிரியர் மெளனகுரு இராவணேசன் தயாரிப்புக்காக கிட்டத்தட்ட ஒரு வருட பயிற்சியயை ஆரம்பித்தார்.அந்த பயிற்சியில் நான் உட்பட பல விரிவுரையாளர்களும் இணைந்து கொண்டனர் மகள் அனாமிகாவும் இணைந்து கொண்டாள் பெரும்பாலும் மாலை நேரங்களிலும் சனி ஞாயிற்றுக் கிழமைகளிலும் பயிற்சிகள் நடை பெறும் மிகக் கடுமையான பயிற்சிகள் நான் வேலைகள் காரணமாக பயிற்சிகளை தவற விட்டாலும் அவள் நாட் தப்பாமல் நேரம் தவறாமல் கலந்து கொள்வாள் .

பயிற்சியில் அவளது திறன் அசாத்தியமானதாக இருந்தது.அதனால் பல வேளைகளில் அவளை முன்னுக்கு விட்டு மற்றவர்களுக்கு பயிற்சியயை வழி நடத்துவார்.அவள் பரதமும் படித்தாள் என்பதால் அவள் ஆட்டத்தில் அடவுகள் அற்புதமான காட்சிகளாக விரிந்து வியப்பை தரும். வீட்டில் அவளை ஆடச் சொல்லி பார்த்து பார்த்து மகிழ்வேன். அவழின் ஆடல் திறனை நானும் பேராசிரியர் மெளனகுரு அவர்களும் அடிக்கடி பேசிக்கொள்வோம் அப்போது உருவானதுதான் என் ஈழ நாட்டியக் கனவு. 2002ஆம் ஆண்டு நடை பெற்ற கூத்து பற்றிய கருத்தரங்கில் பேராசிரியர் மெளனகுருவின் கூத்து விளக்க செயல் முறை விளக்கத்துக்கு அனாமிகா ஆடிக் காட்டி விளக்கி நின்றாள். எப்படி பரத நாட்டியத்துக்கு தனியொருவரைக் கொண்டு அரங்கேற்றம் செய்யப் படுகிறதோ அதே போல மட்டக் களப்பு வடமோடிக் கூத்துக்கு அனாமிகாவை வைத்து ஒரு அரங்கேற்றம் செய்வது அதனை 2005 ஆம் ஆண்டு செய்வது எனவும் தீர்மானித்தோம். ஆனால் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 சுனாமி எல்லாக் கனவுகளையும் கழுவிக் கொண்டு நிர் மூலமாக்கிக் கொண்டு சென்றது

மகளைப்பற்றி அவர் முகநூலில் பதிவிட்டிருந்த கவித்துளிகள் சில கீழே:

1.
எனக்கு
எல்லாமாய் இருந்தவள்
நீ….
சொல்லாமல் வந்த
சுனாமியில்
கரைந்த
அந்த நாளோடு
நான்
இல்லாமல் போனேன்

Continue Reading →

பாக்கியம் ராமசாமி (ஐ.ரா.சுந்தரேசன்) மறைவு! ஆழ்ந்த இரங்கல்!

ஐ.ரா.சுந்தரேசன்அப்புசாமி, சீதாப்பாட்டிஎழுத்தாளர் ஐ.ரா.சுந்தரேசன் அவர்கள் மறைந்த செய்தியினை முகநூலில் எழுத்தாளர் இரா முருகன் பதிவு செய்திருந்தார். ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன் என்பது இவரது இயற்பெயர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைப்பகிர்ந்துகொள்கின்றோம். எங்களது காலகட்டத்தில் நகைச்சுவை எழுத்தென்றால் முதலில் ஞாபகத்துக்கு வருபவை எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி படைத்த அப்புசாமி – சீதாப்பாட்டி கதைகள்தாம். ஓவியர் ஜெயராஜின் கை வண்ணத்தில் வெளியான அப்புசாமி – சீதாப்பாட்டி ஓவியங்களை அவ்வளவு இலகுவாக மறந்துவிட முடியுமா என்ன? ஐ.ரா.,சுந்தரேசனின் புனைபெயர்களிலொன்றுதான் பாக்கியம் ராமசாமி என்பதும். ஐ.ரா.சுந்தரேசன் என்னும் பெயரிலும் இவரது தொடர்கள் எழுபதுகளில் குமுதம் இதழில் தொடராக வெளிவந்துள்ளன. அவற்றில் ‘கதம்பாவின் எதிர்’ அப்பருவத்தில் நாம் விரும்பிப்படித்த நாவல்களிலொன்று. தமிழ் இலக்கிய உலகில் தேவனின் ‘துப்பறியும் சாம்பு’ போல் பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி, சீதாப்பாட்டியும் நிலைத்து நிற்பார்கள். இவர் அப்புசாமி.காம் என்னும் புகழ்பெற்ற வலைப்பதிவொன்றினையும் நடாத்தி வந்தார். அதன் இணையத்தள முகவரி: http://www.appusami.com/nagaichuvaimenu.asp அத்தளத்தில் அப்புசாமி – சீதாப்பாட்டி நாவல்கள் பலவற்றை வாசிக்கலாம்: http://www.appusami.com/nagaichuvaimenu.asp

 

Continue Reading →

இலக்கியங்களில் உயிரின நடத்தையை மாந்தரோடு ஒப்புமைப்படுத்தல் (நற்றிணையை முன்வைத்து)

இலக்கியங்களில் உயிரின நடத்தையை மாந்தரோடு ஒப்புமைப்படுத்தல் (நற்றிணையை முன்வைத்து)விலங்குகள் என்பதற்குப் பொதுவாக ‘நான்கு கால்களைக் கொண்ட பாலூட்டி வகைகளைச் சார்ந்தன@ பலவகை உணவு உண்ணும் பழக்கங்களைக் கொண்டன@ இனப்பெருக்கத்துக்காக குட்டிகளை ஈன்று கொள்வன’ என்று பொதுமையான ஒரு வரையறைக் கொடுக்கலாம். நற்றிணையில் ஆடு, எருது, எருமை, கரடி, குதிரை, குரங்கு, சிங்கம், புலி, செந்நாய், பசு, பன்றி, மான், யானை உள்ளிட்ட 27 வகை விலங்கினங்கள் 221 பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆய்வுப் பொருண்மை, அதிகப்பாடல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் விலங்கினம் என்ற இரண்டின் அடிப்படையில் யானை, புலி, மந்தி, மான் செந்நாய் ஆகியவற்றை உள்ளடக்கமாகக் கொண்ட பாடல்கள் மட்டும் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இவ்விலங்கினங்களின் செயல்கள் மனிதச் செயல்களோடு எவ்வாறு தொடர்புபடுத்தப்படுகின்றன என்பதை உளவியல் நோக்கில் ஆராய முற்படுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

யானை
நற்றிணையில் யானைப்பற்றிய பாடல்கள் 70 ஆகும். களிறு, பிடி, வேழம், கோட்டுமா, ஒருத்தல், நன்மான் என்ற சொல்லாடலில் இவை குறிக்கப்படுகின்றன. விலங்குகளைப் பற்றிய செய்திகளில் யானைகளைப் பற்றியே செய்திகளே மிகுதியாகக் காணப்படுகின்றன. யானையின் செயல்கள் பெரும்பாலும் தலைவியுடன் ஒப்புமைப்படுத்திக் கூறுவதை நற்றிணையில் அறிய முடிகிறது. களிறு பிரிந்ததனால் பிடியானது தன் குட்டியுடன் வருந்தியிருக்கின்ற செயலினைக் கூறி, அதுபோல் தலைவன் பிரிந்திருப்பதனால் தலைவியும் வருந்துகிறாள் என்று அதோடு தொடர்;புப்படுத்திக் கூறுகின்ற முறையினை நற்றிணையில் காண முடிகிறது (நற்.85,114). இவை பெரும்பாலும் உவமையாகக் கூறப்படுகின்றன. யானையது வருத்தத்தை பின்வரும் பாடலால் அறியலாம்.

“பெருங்களிறு உழுவை அட்டென, இரும்பிடி
உயங்குபிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது,
நெய்தற் பாசடை புரையும் அம்செவிப்          
பைதலம் குழவி தழீஇ, ஒய்யென
அரும்புண் உறுநரின் வருந்தி வைகும்  (நற்.47)

புலியை அஞ்சிய பிடியானை, அதனை உணராத தன் இளங்கன்றைப் பேணி நிற்றலைப் போலப் பிரிவால் தலைவிக்கு வரும் துயரத்திற்கு அஞ்சிய தோழி, அதனை அறியாதே களவு உறவில் திளைக்கும் தலைவியைப் பேணிக் காத்து நிற்கின்றாள் (நற்.85).

Continue Reading →

எழுத்து ஊடகங்களில் பெண் உடல்

 -முனைவர். த. விஜயலட்சுமி, துறைத்தலைவர், தமிழ்த்துறை, கேரளப்பல்கலைக்கழகம், காரியவட்டம், திருவனந்தபுரம்-695 581-பெண்ணியம் வேரூன்றிய இக்காலகட்டத்தில் பெண் எழுத்து, பெண் மொழி, பெண் உடல் மொழி போன்ற சொல்லாடல்கள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இச்சொற்கள் இவற்றின் சொற்பொருளுக்கு அப்பால் சென்று பொருள் தந்து நிற்கின்றன. இக்கட்டுரையின் தலைப்பில் கூறப்பட்டுள்ள ‘பெண் உடல்’ என்ற சொல் அதுபோன்ற சொல்லைக் கடந்த பொருளில் இங்கு பயன்படுத்தப்படவில்லை. பௌதீகமான பெண்ணின் உடல் என்ற சாதாரணமான பொருளில்தான் கையாளப்படுகிறது. காலகாலமாக சமூகம் பெண்ணின் உடலை எவ்வாறு கண்டது என்பதையும், இன்றைய பெண்கள் பெண் உடலை எவ்வாறு காண்கிறார்கள் என்பதையும் எழுத்து ஊடகங்கள் வழி இக்கட்டுரை விளக்க முனைகிறது.

மனித உடல் பல பரிணாம வளர்ச்சிக்குப் பின் இன்றைய நிலையை அடைந்தது என்பது நாம் அறிந்ததே. வலிமையான இருகைகள் தான் மனிதனை விலங்குகளில் இருந்து மாறுபடுத்தி உழைக்கவும் செயல்களைச் செயல்படுத்தவும் உதவின என்பர். உடல் உழைப்பில் உணவைச் சேகரித்த காலகட்டத்தில் ஆண் உடல், பெண் உடல் என்று வேற்றுமைகள் இல்லாமல் இருந்தன. காமம் கூட கட்டுப்பாடற்ற ஒரு உடல் தேவையாகவும், ஆண், பெண் உடல் உறவு ஒரு இனக் கவர்ச்சியாக மட்டுமே இருந்தன. காம இச்சையை நிறைவு செய்யும் போது விபத்துக்களாக குழந்தைகள் உருவாயின. தாயின் பாதுகாப்பில் அவை வளர்ந்தன. விலங்குகளின் வாழ்க்கைக்கும் மனித வாழ்க்கைக்கும் இக்காரியங்களில் பெரும் வேறுபாடு ஒன்றும் இல்லை.

மனிதம் காமத்தை இனக்கவர்ச்சிக்கு அப்பால் ஒரு சுகமாக பொழுது போக்காக, ஒரு போதையாக என்று காணத் தொடங்கியதோ அன்றே மனித உடல் ஆண் உடல், பெண் உடல் என்ற வேறுபாட்டைப் பெற்றது. போதைப் பொருளாக காமத்தை கொள்ளும் ஒரே உயிரினம் மனிதம்தான். பிற அனைத்து உயிரினங்களும் காமம் ஒரு இனக்கவர்ச்சி, உடலின் தேவை, இனப்பெருக்கமுறை அவ்வளவிதான். காம இச்சை ஒரு போதையாக வெறியாக மாறிய போது, பெண் உடல் அதற்கான ஒரு கருவியாக மாறியது.

“கண்டு கேட்டு உற்று உண்டு உயிர்த்தல்
ஒண்டொடி மாட்டே உள”

என ஐம்புலனையும் நிறைவு செய்யும் ஒரே பொருளாக பென் உடல் சமூகத்தால் மதிப்பிடப்பட்டது. இதன் அடிப்படையில் பெண் ‘சுயம் இழக்கப்பட்டு’ பெண் உடல் என்ற பௌதீஇகப் பொருள் முன்னிலைப்படுத்தப்பட்டது.

பெண் உடல் வர்ணனைகள்
சங்க காலம் முதல் நமக்குக் கிடைக்கும் எழுத்திலக்கியங்களைக் கூர்ந்து கவனித்தால் அதில் பெண் உடல், பெண் உடல் உறுப்புகள் எவ்வாறு வர்ணிக்கப்பட்டுள்ளன என்று காணலாம். இதற்கு மாறாக ஆணின் புயம் அல்லது தோள் மட்டுமே வர்ணிக்கப்பட்டுள்ளன. இதற்கு இரு வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இவ்விலக்கியங்கள் ஆண்களால் படைக்கப்பட்டன என்பதும் ஆண்களால் ரசிக்கப்பட்டன என்பதுமாகும் அவை. சமீபத்தில் ஒருவர் சங்க இலக்கிய உடல் வர்ணனைகள் ஒரு வகையான பாலியல் கல்வி என்று தனது மேதாவித் தனத்தை நிறுவியுள்ளார். உண்மையில் இக்காரணங்களுக்கும் இலக்க்கிய பெண் உடல் வருணனைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பது திண்ணம்.

Continue Reading →

முதுபெரும் பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் அமரரானார்

ஈழத்தின் முதுபெரும் பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் தனது 87ஆவது அகவையில்; நேற்று 15.11.2017 அன்று மட்டக்களப்பில் காலமானார். தமது இளவயதில் வீரகேசரி நாளிதழில் ஒப்புநோக்குநராக இணைந்து கொண்ட அவர் பின்னர் அங்கு உதவி ஆசிரியராகிப் பின்னர் சிரேஷ்ட உதவி ஆசிரியராகப் பதவி உயர்வுபெற்று பணிபுரிந்தார். 1958இல் ’ஈழநாடு” பத்திரிகை நாளிதழாக வெளியானபோது, அதன் செய்தி ஆசிரியராக இணைந்த கோபாலரத்தினம் 1980களின் முற்பகுதிவரை அதன் ஆசிரியபீடத்தின் பிரதானியாக இயங்கிவந்தார். 1985இல் ‘ஈழமுரசு” பத்திரிகையின் ஆசிரியராகப் பணியை ஏற்று அப்பத்திரிகையின் துரித வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தார். அவ்வேளையில்; 1987இல் இந்திய அமைதிப்படை இலங்கைக்குள் புகுந்து ஈழத்தின் பத்திரிகைச் சுதந்திரத்தில் கைவைத்தபோது கைது செய்யப்பட்டு பல மாதங்கள் இந்திய அமைதிப் படைகளின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். பின்னர் வெளியே வந்ததும் ‘ஈழமண்ணில் ஒரு இந்தியச் சிறை’ என்ற தலைப்பில் தனது அனுபவத்தினை தொடராக தமிழகத்தின் ‘ஜுனியர் விகடன்” பத்திரிகையில் இடம்பெறச்செய்து, இந்திய அமைதிப்படையின் கோரமுகத்தை வெளிப்படுத்தினார். இத்தொடர் பின்னர் ‘ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை” என்ற மூலத் தலைப்பிலேயே மட்டக்களப்பு றுழசடன எழiஉந Pரடிடiஉயவழைளெஇ வெளியீடாக ஆகஸ்ட் 2000 இல் நூலுருவாக வெளிவந்தது. இந்நூலில் இந்திய அமைதிப்படையினரால் தான் கைது செய்யப்பட்டதன் பின்னரான இரண்டு மாத சிறை அனுபவம் விரிவாகப் பதிவுசெய்திருந்தார். கைது செய்யப்பட்டதிலிருந்து விடுதலையாகும் வரை நடந்த நிகழ்வுகள், சிறையில் சந்தித்தவர்கள், அவர்களிடமிருந்து கேட்டறிந்தவை என அனைத்தும் பதிவுக்குள்ளாகியிருந்தன. 

இந்தியப்படை 1991இல் இலங்கையிலிருந்து புறப்பட்ட பின்னர், ‘ஈழநாதம்” நமது ஈழநாடு” ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றிய கோபாலரத்தினம் கொழும்பில் ‘சுடரொளி” பத்திரிகையின் ஆசிரிய பீடத்திலும் சிறிது காலம் தனது ஊடகவியல் பணியைத்; தொடர்ந்தார். பின்னர் மட்டக்களப்புக்குச் சென்று அங்கு ‘தினக்கதிர்” பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

தெகிவளை, நிகரி வெளியீட்டாளர்களினால் மே 2003இல் வெளியிடப்பட்ட ‘அந்த ஒரு உயிர்தானா உயிர்” என்ற அவரது நூல், மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் தினக்கதிர் நாளேட்டில் பிரதம ஆசிரியராக இருந்த வேளையில் எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கங்களையே பெருமளவில் உள்ளடக்கியதாக இருந்தது. இந்நூலில் யாழ்ப்பாணத்து ‘ஈழநாதம்” பத்திரிகையில் வெளிவந்த இரண்டு ஆக்கங்களும் சேர்க்கப்பட்டிருந்தன. இவரது ஆசிரியத் தலையங்கங்கள் அனைத்தும் சமகால ஈழத்து அரசியல் நிலையை வைத்து எழுதப்பட்டவையே. தமிழ்மக்களின் மன எழுச்சியையும் இவை துல்லியமாகப் பிரதிபலிப்பனவாக அமைந்துள்ளன.

ஈழத்தில் அனுபவம்மிக்க பத்திரிகையாளராகத் திகழும் எஸ்.எம்.ஜி. அவர்கள் வீரகேசரியில் 7 ஆண்டுகளும், ஈழநாட்டில் 21 ஆண்டுகளும் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவத்தை முன்வைத்து, ‘பத்திரிகைப் பணியில் அரை நூற்றாண்டு” என்றதொரு நூலையும்  நவம்பர் 2003 இல் யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பக வெளியீடாக வெளியிட்டிருந்தார். ஈழத்தின் பத்திரிகையாளராகத் தான் வாழ்ந்துபெற்ற அனுபவங்களை இந்நூலில் சுவையாக விபரித்திருந்தார்.

Continue Reading →

அமரர் காரை செ.சுந்தரம்பிள்ளை வாழ்வும் பணிகளும்

அமரர் காரை. சுந்தரம்பிள்ளை– 11.11.2017 அன்று ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற அமரர் காரை சுந்தரம்பிள்ளை அவர்களின் நினைவேந்தல் நிகழ்வின் போது ஆற்றிய நினைவுப் பேருரை –

அமரர் காரை செ.சுந்தரம்பிள்ளை (20.5.1938-21.9.2005) அவர்களின் நினைவேந்தலும், அவரது மகள் மாதவி சிவலீலனின் கவிதை நூலான இமைப்பொழுது என்ற படைப்பின் வெளியீடும் இணையப்பெற்ற இந்த இனிய நிகழ்வில் கலந்து சிறப்பிக்க வந்து அவையில் அமைந்திருக்கும் பெரியோர்களே, இங்கு மேடையில் வீற்றிருக்கும் பெரியோர்களே உங்கள் அனைவருக்கும் முதற்கண் என் பணிவான வணக்கம். அமரர் காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்களின் நினைவுரையை வழங்குவதற்காக என்னைத் தேர்ந்தெடுத்துள்ள சகோதரி மாதவிக்கு எனது நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

யாழ்ப்பாண மாவட்டத்தில், காரைநகரின் களபூமி என்ற ஊரில் செல்லர்-தங்கம் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர், அமரர் சுந்தரம்பிள்ளை அவர்கள். தனது ஆரம்பக் கல்வியை ஊரி காரைநகர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் உயர்நிலைக் கல்வியை சுழிபுரம் விக்டோரியா கல்லூரியிலும் பயின்றார். கொழும்பு அக்குவைனாஸ் பல்கலைக்கழகக் கல்லூரியில் கலைமாணி, கல்வித்துறையில் முதுமாணிப் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பின்னாளில் பெற்றார். அவரை கலாநிதி செ.சுந்தரம்பிள்ளை என்பதைவிட, கவிஞர் காரை. சுந்தரம்பிள்ளை என்றழைப்பதையே தமிழ் உலகம் வழக்கமாக்கிக்கொண்டது. இன்னும் நெருக்கமாக, ‘காரை” என்ற அடைமொழி தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தனிமனிதனான அமரர் காரை சுந்தரம்பிள்ளையைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகின்றது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். ஊரின் பெயரைத் தனக்கான அடையாளமாகக் கொண்ட பலரை நாம் ஈழத்துப் படைப்புலகில் காண்கின்றோம். தான் மதிக்கும் ஊரைக் குறிப்பதன் காரணமாக, அந்த ஊரின் வழியாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் எம்மவரின் மத்தியில், தன் பெயரின் முன்னால் காரைநகரைச் சேர்த்துக்கொண்ட காரை சுந்தரம்பிள்ளையால் காரைநகர் அன்னையே ‘சான்றோன் எனக் கேட்ட தாயாகிப்” பெருமிதம் கொள்வாள். காரை மண் இவரது அடையாளமாகக் கொண்டபோதிலும், இவர் காரைமண்ணுக்கு மாத்திரம் உரியவரல்ல. அந்த மண்ணுக்கு மாத்திரம் உரியவராக இவரை இனம்காண முடியாத அளவிற்கு இவரது பன்முக ஆளுமையால், உலகளாவி விகாசித்து நிற்கிறார். இவர் கற்பித்த பாடசாலைகள், நிறுவனங்கள்,ஆசிரிய கலாசாலைகள், வாழ்ந்த பிரதேசங்கள் யாவும் இவர் நம்மவர் என்று உரிமைகொள்வதில் பெருமிதம் கொள்வதை இன்றும் நாம் காண்கிறோம்.

காரை சுந்தரம்பிள்ளை அவர்களின் தமிழ் மொழிப் பயிற்சியில் முக்கிய ஆசான்களாக பண்டித வித்வான் க.கி.நடரஜன், வித்துவான் பொன் முத்துக்குமாரன், வித்துவான் க. வேந்தனார், பண்டிதர் ஆ.பொன்னுத்துரை ஆகியோரும், தமிழ் இலக்கண இலக்கியத்தில் தமிழ்த் தாத்தா கந்த முருகேசனார், ஆ.சபாரத்தினம் ஆகியோரும்; விளங்கினார்கள். தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலம், சமஸ்கிருதம், பாளி, சிங்களம் ஆகிய மொழிகளிலும் இவர் புலமை பெற்றிருந்தார்.

Continue Reading →

அஞ்சலி: மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் இன்று மட்டக்களப்பில் மறைந்தார்!

இலங்கை தமிழ்ப்பத்திரிகை உலகின் மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம். கோபாலரத்தினம் இன்று புதன் கிழமை காலை மட்டக்களப்பில் காலமானார். கோபு என அழைக்கப்படும் இவர் வீரகேசரியில் 1953 இல் முதலில் ஒப்புநோக்காளராகவே இணைந்தவர். அதன் பின்னர் ஆசிரிய பீடத்தில் ஒரே சமயத்தில் அலுவலக நிருபராகவும் துணை ஆசிரியராகவும் பணியாற்றியவர். அக்காலப்பகுதியில் அவர் பெற்ற மாதச்சம்பளம் 72 ரூபாதான். 1960 இல் வீரகேசரியில் நடந்த வேலை நிறுத்தத்தின்போது அந்த வேலையை இழந்து யாழ்ப்பாணம் சென்று ஈழநாடு பத்திரிகையில் இணைந்தார். கோபு, வீரகேசரி, ஈழநாடு, ஆகியனவற்றில் மாத்திரமின்றி ஈழமுரசு, தினக்கதிர், செய்திக்கதிர், ஈழநாதம், சுடரொளி முதலான பத்திரிகைகளிலும் பணியாற்றியவர். 1987 இல் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தையடுத்து இந்திய அமைதிப் படை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலைகொண்டது. இந்தியப்படையினரால் சுமார் இரண்டு மாதங்கள் சிறைவைக்கப்பட்டார்.

Continue Reading →