தந்தையர் தினத்தை பேணுவோம் வாழ்த்தினைப் பெறுவோம்! அவர் வாழ்த்தை வேண்டுகிறேன் !

விரதமெலாம் தானிருந்து
விரும்பியெனை இறைவனிடம்
வரமாகப் பெற்றவரே
வாய்மைநிறை என்னப்பா
விரல்பிடித்து அரிசியிலே
எழுதவைத்த என்னப்பா
உரமாக என்னுள்ளே
உணர்வோடு கலந்துவிட்டார் !

தோள்மீது எனைத்தூக்கி
தான்மகிழ்ந்து நின்றிடுவார்
வாழ்நாளில் வீழாமல்
வளரவெண்ணி பலசெய்தார்
மெய்வருத்தம் பாராமல்
எனையெண்ணி தானுழைத்தார்
கண்ணெனவே காத்துநின்றார்
கருணைநிறை என்னப்பா !

பொட்டுவைத்த  என்முகத்தை
கட்டிக்கட்டி கொஞ்சிடுவார்
பட்டுச்சட்டை  வாங்கிவந்து
பரவசத்தில் மூழ்கிடுவார்
இஷ்டமுடன்  தன்மார்பில்
எனையுறங்க வைத்திடுவார்
அஷ்ட   ஐஸ்வரியமென்று
அனைவர்க்கும் சொல்லிடுவார் !

நானுண்ட   மிச்சமெலாம்
தானெடுத்து சுவைத்திடுவார்
அவர்பாதி  நானென்று
அவருக்குள் எண்ணிடுவார்
உலகிலென்னை உயர்ந்தவனாய்
உருவாக்க  உருவானார்
நிலவுலகில் என்னப்பா
நிகரில்லா தெய்வமன்றோ !

Continue Reading →

“தந்தை என்னும் தெய்வம்” (தந்தையர் தினக் கவிதை)

ஶ்ரீராம் விக்னேஷ்

பல்கலைக் கழக மென்று : பாரது போற்றிச்  சொல்ல,
நல்லதோர் குடும்பம் செய்யும்…..சிந்தை ! –  அந்த,  
நல்லவர் பேருலகில்……..    தந்தை….!

ஓர்பது  மாதந்  தன்னில் : ஒருத்திதன்  வயிற்றிற்  கொளினும்,
யார் அதன்   வேரை இட்டார்…….  முதலில் ?  –  அவர், 
பேர் அது   தந்தையாகும்……   உலகில்….!

வானது  பெய்தால் தானே : வையகம்  பசுமை  காணும்,
வானைப்போல்  வழங்கிடுவார்……  வாரி !   –  அந்த, 
வான்புகழ்  கொண்ட தந்தை …….     பாரி…!

அன்பெனும்   அமளி  மேலே  :  அன்னைதான்  துயிலச்  செயினும்,
நன்புகழ் அறிவை   ஏற்றும்…….  ஜோதி !  –  அது,
நானிலம்  புகழும்    தந்தை…….      ஜாதி…!

எதை எதோ   நினைத்து  நெஞ்சம் : ஏங்கிய  போதும்  மழலை,    
உதையினைக்  கண்டபோது…… மலரும் !  –  அந்த,  
உத்தமர்  தந்தை என்பார் …….     பலரும் !

Continue Reading →

பலூனில் மாட்டிக் கொண்ட சிறுமி.

கவிதை வாசிப்போமா?
பலூன் ஊதிக்கொண்டிருந்த அந்தச் சிறுமி
தவறி அதனுள் விழுந்துவிட்டாள்.
அவளுடைய மூச்சுக் காற்றில்
பலூன் பெரிதாகிக் கொண்டிருந்தது

அவள் மூச்சில் ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டேயிருந்தது.
பலூனில் கருவில் இருக்கும் சிசுவைப் போல
தத்தளித்துக் கொண்டிருந்தாள்
பலூனின் வாயைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்துவிட
பிரயத்தனம் செய்தவைகள் எல்லாம் வீணாகிக் கொண்டிருந்தன.

Continue Reading →

கவிதை: காகிதப் பூ !

ஶ்ரீராம் விக்னேஷ்“பஞ்சத்தில்   உழன்று  :  பட்டினி   கிடந்தாலும்….
பட்டதாரி  ஆக்கிப்  :  பார்க்க வேண்டும்  தம்மகனை….”
நெஞ்சத்தில்  நினைப்போடு  :  நிறையப்   பெற்றோர்கள்,
நெருக்கடிகளைச்  சுமந்து  :  நேரகாலத்  தையும்மறந்து ….,

பட்டணம்  அனுப்பிவைத்துப் :  பட்டதாரி  ஆக்கிவிட்டு,
பட்டயம்  பெற்றதனைப்  :  படம்பிடித்து  மாட்டிவைத்து,
தொட்டதனைப்   பார்ப்பதிலே  :  சுகமொன்றைக்  கண்டுவிடும்,     
பெற்றோர்க்கும்  பிள்ளைகட்கும்  :  இக்கவிதை  சமர்ப்பணமாம் !

பட்டம் பெறுவதில்தான் :  பற்றெல்லாம்  இருந்ததனால்,
பழகியே  எத்தொழிலும்  :  பார்ப்பதற்கு  வாய்ப்பு  இன்றிப்,
பாவம்  இவன் நிலைமை  :  பயனற்ற  அலைச்சலிலே…….
பணிகள்   பலதேடிப்   :  படியேறி  இறங்குகின்றான்…..!

ஒரு ரூபாச்  சீட்டினிலே  :  ஒரு  லட்சம்  கனவுகாணும்….
உருப்படார்  வரிசையிலே :  உள்ளபடி  இவனும் ஒன்று !
“உனக்கும்  கீழுள்ளோர் : ஒருகோடி  என அவரை,
நினைத்துப் பார்   அதிலே :  நிம்மதியை  நாடு”  என்று….,

செப்பிய  கவிஞர்  தன் : சிந்தனை  வரிகளை….
திருப்பியே  பார்த் துணர்ந்து : திருந்தியே  கொள்ளுங்கள் !
“உனக்கும்  முன்னே : உள்ளவர்  பலரே….
உத்தியோகம்  பெற்றோர் : ஒருவர்  சிலரே….! ”

என்கின்ற  உண்மையை : ஏற்றிட  மறுத்தே,
இன்னும்  வாழ்க்கையை :  இழந்திட  வேண்டாம் !
பட்டம்  பெறுவதும் : படிப்பில்  உழல்வதும்,
“பாபச்  செயல்” என்று பகர்ந்திட  வில்லை !

Continue Reading →

பண்பு பாராட்டும் உலகு

- சீ. நவநீத ராம கிருஷ்ணன் -

அறம் பொருளின்பமென்று முப்பால் முலையெடுத்து
புறம் அகம் நிகழ்வதத்தனையும் – இகம் பரமென்று
எங்குள்ளார்க்கும் புகட்டிப் புவிதனில் புகழொடு 
தோன்றிப் புகழொடு மறைந்தான் திரு வள்ளுவன் !

ஒன்று தெய்வமென்றுணர்தல் வேண்டுமென்று ஓதி
ஒற்றுமையின் வலுவுரைக்க ஓயாது பாடிப் – பெண்ணடிமை
தீருமட்டும் கவியெடுத்துச்சாடி களிறிடரித்தான்  விழுந்து
கண்ணணோடு உறைந்தான் கவி பாரதி !

அன்பாயுதமெடுத்து அஹிம்சையென்னும் உறையிலிட்டு
துன்பம்வரும் வேளையிலும் மலர்ந்து – காலன் வரும்
காலம்வரை நடந்து கருப்பு வெள்ளைக் கலகமோய
கணைகள் வாங்கிச் சரிந்தான் மகான் காந்தி !

நோயடித்த பிள்ளைகளின் துயர்துடைத்தோர் கருணைத்
தாயென்றணைத்து நின்றாள் – அவள் கரம்பட்டுத்
தலைதெறிக்க ஓடியதாம் பிணிகள்; தம்சேவை தேவையென
தேவனழைக்கச் சென்றாள் அன்னை தெரசா !

Continue Reading →

சூறை ஆடி விட்டார்கள் ! அனைவருமே ஆசை கொள்வோம் !

1. சூறை ஆடி விட்டார்கள் !
– யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதை வெளிப்படுத்தும் இதயத்தின் குமுறல் –

ஏடுகளாய் இருந்தவற்றை எப்படியோ கண்டெடெடுத்து
நாடெல்லாம் நன்மைபெற நல்ல உள்ளம் விரும்பியாதால்
ஓடாக உழைத்து நிதம் உருப்படியாய் செய்தமையே
வாடாது நிற்கின்ற வகைவகையாம் நூல்களெலாம்

எத்தனையோர் உழைப்பினிலே இங்குவந்த புத்தகங்கள்
எத்தனையோ மேதைகளை எமக்களித்து நின்றதுவே
நித்தமும் நாம்படிப்பதற்கு புத்தகமாய் இருக்குமவை
எத்தனையோ சந்ததிக்கு இருக்கின்ற பொக்கிஷமாம்

நூல்நிலையம் இல்லையென்றால் நுண்ணறிவு வளராது
நூல்நிலையம் அருகிருந்தால் தேடிடிடலாம் அறிவையெலாம்
பாவலரும் நாவலரும் பலபேரும் உருவாக
நூல்நிலையம் காரணமாய் அமைந்ததனை அறிந்திடுவோம்

யாழ்ப்பாண நூலகத்தை யாருமே மறக்கார்கள்
வேண்டிய புத்தகத்தை விரைவுடனே தந்துநிற்கும்
தென்கிழக்கு ஆசியாவின் சிறந்தவொரு நூலகமாய்
சிறந்தோங்கி நின்றதனை தேசமே தானறியும்

Continue Reading →

கவிதை; திருவிழாவில் தொலைந்து போதல்

- தம்பா (நோர்வே) -விரிந்த உலக வலையின்
அத்தனை நம்பிக்கைகளும்,
தத்துவங்களும்,
மதங்களும்
சாமானியனுக்கு கைவிரிக்கும்.
அனுதினமும் சாண் எற முழஞ்சறுக்கி
கரையேற்றத்தை கானல் நீராக்கி காக்கவைக்கும்.

வியாபாரிக்கு விலை மதிப்பில்லா
உலோகமோ
பண்டமோ
பத்திரமோ
அடைமானத்தின் பிடிமானமே
கஞ்சத்தனத்தை களைக்கும் நம்பிக்கைகளானது.

மோசமான வியாபாரியே
உலோகமற்ற உயிரின்
அடைமானத்தில் அவமானம் காண்பான்.

உலக மகாநேயத்தின் மன்னனை
தமிழன் என்றால்
அவனுக்கு பெரும் சக்கரவர்த்தி
வேட்பாளர் என புளகாங்கித்து முழங்கு.

Continue Reading →

கவிதை: கவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்) கவிதைகள்!

கவிஞர் முனைவர் ராமசந்திரன்

1. இயேசுவின் முகத்தில்  பயத்தின் சாயல்

மூக்கைத் துளைத்து
நினைவில் வடுவான
ரத்த வாசனை!

எப்பொழுது  தோட்டாக்களின்
உறக்கம் களையுமோவென்று
உறங்காமல் இருந்த
பொழுதுகள் அதிகம்!

மனித ஓலங்களின் ஓசை
அடங்க மறுத்து தூங்கி
சிவந்த கண்களோடு பகல்!

Continue Reading →

கவிதை: வாழ்க்கைன்னா இதுதான்

தாயாரின் வலியிலே தாரணியில் வீழ்வதும்தவழ்வதும் வளர்வதும் தானாகி நிமிர்ந்திடஓயாது கற்பதும் உழைப்பதும் உயர்வதும்ஒருத்தியை மணப்பதும் உறவினில் கலப்பதும்தீயாக இருப்பதும் தேனாகி சுவைப்பதும்தீராத மோகத்தில் திரிவதும் திடீர்நோயாகி வீழ்வதும்…

Continue Reading →

கவிதை: குரல் வராத வீட்டில் பெய்த மழை!

- முல்லைஅமுதன்

சிறு தூறலாய்
காட்சி தந்த பெருமழையாயிற்று.
அம்மா
பெரிய கிடாரமாய்
கொண்டுவந்து
கூரை ஒழுக்கைச் சரிசெய்தாள்.
மரங்கள் முறிந்ததாயும்,
காற்று பேயாய் அடிப்பதாகவும்
கணபதியர் சொல்லிப்போவது மெதுவாய்
சன்னலோரம்
குந்தியிருந்தவளுக்கும்
கேட்டது.
அப்பா மூலையில் குடங்கிப்போய்
பிணம்போலக்கிடந்தார்..
மழை விடவேண்டும்..ஊருக்குள் போகவேண்டும்..
இன்று அடுப்பெரிய ஏதாவது வேண்டும்..
கடைசிக்குரலும்
‘அம்மா பசிக்குது’
சொல்லி அடங்கிப்போனது.
அம்மா என்ன ஊற்றெடுக்கும் சுரங்கமா?
அழும் குழந்தைக்குப்பால்தர…??

Continue Reading →