மு.பொ வின் ‘திறனாய்வின் புதிய திசைகள்’

மு.பொன்னம்பலத்தின் 'திறனாய்வின் புதிய திசைகள்'மு.பொன்னம்பலம்மு.பொ அவர்கள் இலங்கைத் தமிழ் இலக்கிய உலகில் மிக முக்கிய ஆளுமைகளில் ஒருவர். கவிதை, சிறுகதை, நவீனம், விமர்சனம், எனப் பல துறைகளிலும் தனது திறமைகளைக் காட்டியவர். இதழ் ஆசிரியரும் கூட. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த திசைகள் என்ற சிறந்த வார இதழின் ஆசிரியராகக் கடமையாற்றியவர். இவற்றைவிட சிறப்பாக இவரது சிந்தனை ஆற்றலைக் கூறலாம். மற்றவர்கள் சொல்வதை வேறு வார்த்தைகளில் சொல்லிக் கொண்டிருப்பவர் இவரல்ல. இரவல் வாங்காத சுயசிந்தனைதான் அவரது பெரு முதல். நான் அவரது ரசிகன். அவரது பல கவிதைகளை மிகவும் ரசித்தவன். ஆதேபோல அவரது சிறுகதைகளும், நாவலும் கூட எனக்குப் பிடித்தமானதே. எனவே இந்த கட்டுரையானது அவரது விமர்சன நூல் பற்றிய விமர்சனமாக இருக்கும் என நான் நம்பவில்லை. பெரும்பாலும் நான் ரசித்தவையாகவே இருக்கும்.

 விமர்சனம் என்றால் என்ன?

இந்த நூலைப் படித்தபோது விமர்சனம் பற்றிய பல்வேறு சிந்தனைகள் என்னளவில் முகிழ்வு கொண்டன. அவை பற்றி சில கூறிவிட்டு முழமையாக நூலுக்குள் நுழையலாம் என எண்ணுகிறேன். இலக்கிய விமர்சனம் என்றால் என்ன? இலக்கிய விமர்சனம் என்பது ஒரு படைப்பைப் படித்தல், ஆய்வு செய்தல், அதன் இலக்கியத்தன்மையை மதிப்பீடு செய்தல், படைப்புப் பற்றிய இலக்கிய விளக்கம், அப் படைப்பின் நோக்கம், அது வாசகனிடத்தும் பரந்தளவில் சமூக நிலையிலும் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்களை ஆராய்தல் என பல நிலைகளைக் கொண்டது எனலாம்.

 நவீன இலக்கிய விமர்சனங்கள் ரசனைக் குறிப்புகளிலிருந்து முற்றிலும் வேறுபடுகின்றன. பெரும்பாலும் ஒரு படைப்பாளியின் படைப்பாற்றல் எவ்வாறு வெளிப்படுகிறது. எத்தகைய உத்தியில் படைக்கப்பட்டுள்ளது, படைப்பின் கரு பற்றிய கருத்தாடல், படைப்பாளியின் இலக்குகள் குறித்த தத்துவார்த்த விளக்கம், அது பற்றிய விவாதம் ஆகியனவும் விமர்சனத்தில் அடங்கலாம்.

விமர்சனம் செய்ய வரும்போது பெரும்பாலும் ஒரு இலக்கிய கோட்பாடு விமர்சிப்பசர் மனதில் அடிநாதமாக இயங்கிக் கொண்டிருக்கும். அது வெளிப்படையானதாக இருக்கலாம் அல்லது மறைமுகமாகச் சுட்டப்படலாம். அல்லது முழுமையாக மறைமுகமாகச் சொல்லப்படலாம். ஆனால் இலக்கிய விமர்சகர்கள் எல்லோரும் எப்போதும் கோட்பாட்டாளர்களாக இருப்பது இல்லை. தானாக ஒரு கோட்பாட்டிற்குள் தன்னை முனைப்படுத்தாவிட்டால் கூட ஏதோ ஒரு கருத்து நிலையோடு அவர் உடன்பட்டிருப்பதை மறுக்க முடியாது.

ஆனால் கருத்துகள் நிலையானவை அல்ல. காலத்திற்கு காலம் மாறுவன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

விமர்சனத்தை மீறியது படைப்பு

நான் ஒரு மருத்துவன். பலருக்கு மருந்து கொடுக்கிறேன். ஆனால் குணப்படுத்துவது நான் அல்ல. கைலாயாத்தில் உள்ள கடவுளும் அல்ல. அவனது உடல் தன்னைத்தானே குணப்படுத்துகிறது. அதேபோலத்தான் விமர்சனங்களும், விமர்சகர்களும். விமர்சகர்கள் படைப்புகளை விமர்சிக்கிறார்கள். திருத்தங்கள் வேண்டும் என்கிறார்கள். அத்துடன் அவரது கடமை முடிந்துவிடுகிறது. மருத்துவனுக்கு சிகிச்சை அளிப்பதுடன் கடமை தீர்ந்துவிடுகிறது. உயிரைக் கொடுப்தோ பறிப்பதோ அவன் அல்ல. அதேபோல விமர்சகன் ஒரு படைப்பு பற்றி தனது விமர்சனங்களை முன்வைக்கலாம். ஆயினும் அந்தப் படைப்பு காலம் கடந்தும் வாழப் போகிறதா அல்லது அற்ப ஆயுசில் மடியப் போகிறதா என்பது அந்தப் படைப்பில் மட்டுமே தங்கியுள்ளது. படைப்பின் கனதியிலும், சமூகத்திற்கான அதன் பயன்பாட்டில் தங்கியுள்ளது.

அர்த்தமின்றித் தூற்றுவதும் போற்றுவதும் நல்ல விமர்சனங்களில் இருக்காது. எமது கருத்தை வலியுறுத்துவது போலவே மற்றவர் கருத்துக்களையும் மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அதே நேரத்தில் தனது கற்கை ஆற்றலாலும், பரந்த அனுபவத்தாலும் பெற்றுக் கொண்ட புதியவற்றை சமூகத்திற்கும்; படைப்புலகிற்கும் கடத்தும் கடமையையும் விமர்சகன் மறந்து விடக் கூடாது. ஆனால் அவற்றை நேர்மையாகவும், கண்ணிமாகவும். தரிசனத்துடனும் சொல்வது அவசியம். இல்லையேல் விமர்சனத்தை காலம் தூக்கி எறிந்து விடும். ஆனால் அந்தப் படைப்பு நிலைத்து நிங்கும்.

மு.பொ வும் அவரது படைப்புலகும்

மு.பொ அவர்கள் எமது படைபுலகில் விரல் விட்டு எண்ணக் கூடிய அற்புதமான படைப்பாளிகளில் ஒருவர். கவிதை, சிறுகதை, நவீனம், போன்ற படைப்புலக்கு அப்பால் விமர்சனத்துறையிலும் தனது தனித்துவத்துத்தைக் வெளிப்படுத்தியவர்.

இலங்கையில் தமிழ் இலக்கியத் துறை முற்போக்கு நற்போக்கு பிரிந்து நின்று வரிந்து கட்டி முரண்பட்டு நின்ற போது, இலக்கியச் சிந்தனை மரபில் இற்றைவரை இல்லாத புது வீச்சைப் பாச்சிய மு.தளையசிங்கத்தின் மரபில் வந்தவர் மு.பொ. கருத்து முதல்வாதம் பொருள் முதல் வாதம் என இரு முனைப்பட்ட சிந்தனை நிலவியபோது ஆத்மார்த்தம் சார்ந்த புதிய சிந்தனை ஊற்றை பிரவாகிக்க விட்டவர் மு.த. மெய்யுள் என்ற அவரது எண்ணக்கரு இலங்கையை விட தமிழகத்தில் கூடிய வரவேற்பைப் பெற்றது என மு.பொ அவர்களே ஓரிடத்தில் லொல்லியிருக்கிறார்.

மு.பொ படைப்புகளிலும் விமர்சனங்களிலும் இந்தக் கருத்து உள்ளுறைந்து நிற்பதை தீவிர வாசகர்கள் அறிவர்.
‘திறனாய்வின் புதிய திசைகள்’ என்பது மு.பொன்னம்பலம் அவர்களின் புதிய நூலாகும். அவர் பல வருடங்களாக எழுதிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பாக இந் நூல் வெளிவந்துள்ளது.

400 பக்கங்களுக்கு மேல் வரும் இந்த நாலில் உள்ள படைப்புகள் நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

1. அறிமுக விமர்சனம்
2. விமர்சனம்
3. ஆய்வு நிலை சார்ந்த விமர்சனம்
4. எதிர்வினை விமர்சனம்

திறனாய்வின் புதிய திசைகள் என்ற இந்த நூல் மிகவும் கனதியானது. நான் ஆரம்பத்தில் கூறியவை போன்ற பல கருத்துக்களை உள்ளடக்கியிருப்பதாகவே கருதுகிறேன். ஆனால் மு.பொ வின் நூல் அவற்றிற்கு மேலும் செல்கிறது. இது 400க்கு மேற்பட்ட பக்கங்களைக் கொண்டது எனவே அளவில் கனதியானது. அதைவிட அதன் உள்ளடக்கம் கனதியானது என உறுதியாகச் சொல்லலாம். பல படைப்புகள் பற்றிய கூர்மையான விமரசனங்களை வைக்கிறது. ஆனால் அத்துடன் மட்டுப்பட்டு நிற்காது விமர்சனத் துறையின் செல்நெறிகளையும் பெசுகிறது. அதற்கும் அப்பால் அது செல்ல வேண்டிய புதிய திசைகளையும் சுட்டி நிற்கிறது.  புரியாத இஸங்களின் பெயர் உதிர்ப்புப்  பயமுறுத்தல்கள் இவரிடம் இல்லை. ஆங்கிலச் சொற்களை அனாசயமாக பெய்து வாசகனை தகைப்பில் மூழ்கடிக்கதும் இல்லை.

மார்க்ஸீயம், பெண்ணியம், தலித்தியம், யதார்த்தம், பின்நவீனத்துவம், ஆத்மார்த்தம் போன்ற பல்வேறு கருத்து நிலைகளை அடிப்படையாகக் கொண்டு இன்று விமர்சனங்கள் செய்யப்படுகின்றன.

விமர்சனத்தில் படைப்பின் தளம்

படைப்புகளை விமர்சிக்க வரும் ஒவ்வொருவரும் அவற்றை தமது கருத்துத் தளங்களுக்கு ஏற்பவே விமர்சிக்கிறார்கள். இது ஒரு விதத்தில் தவிர்க்க முடியாது என்றபோதும் அது சரியானதானா? இல்லை என்கிறார் மு.பொ தெளிவாக. படைப்பு எத்தளத்தில் எழுதப்பட்டது என்பதை வைத்து அதை விமர்சிக்க வேண்டும் என்று சொல்கிறார். ‘விமர்சனம், ஆய்வு கட்டுரை என்பவை நமது அறிவின் தளத்தில் மட்டுமே இயங்குபவை’ ஏன்கிறார். பக்கம் 170. ஆனால் ஆக்க இலக்கியம் என வரும்போது அறிவு, உணர்வு, அடிமனம், பூர்வீக மளம் உனப் பல தளங்கள் இயங்க ஆரம்பிக்கின்றன. இவ்வாறு பல தள சக்திகளை இழுத்து வரும் ஆக்க இலக்கியம் ஆற்றல் மிக்கதாக அமைகிறது என்கிறார். அனால் அவை அனைத்தும் ஒரு படைப்பில் அல்லது படைப்பாளியில் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. எனவே படைப்பை விமர்சிக்க முயலும் ஒருவர் என்ன செய்ய வேண்டும்.

‘படைப்பை எழுதிய கவிஞன் எந்தத் தளத்தின் செல்வாக்கால் பாதிக்கப்டடுள்hன் என்பதை அறிய வேண்டும். மேல்மன அறிவுத் தளமத, உணர்வுத் தளமா, அடிமனத்தளமா, இவற்றையும் கடந்தியங்கும் ஆன்மீகத் தளமா அல்லது வெறும் உருக்க உணர்வு எனப்படும் ளநவெiஅநவெயட தன்மை வாய்ந்த மேலோட்ட உணர்வுத் தளமா என்பதை அறிந்து கொண்டே அதில் புகவேண்டும். அறிவுத் தளத்திற்கு படைப்பை உணர்வுத் தளத்திற்கு உரிய அளவுகோல்களைக் கொண்டு தேவையின்றி அளக்கச் செல்லக் கூடாது. இதே போல ஆன்மீக உணர்வுத்தளங்களுகு உரிய ஒன்றை அதை எட்’ட முடியாத அறிவுத் தளத்தில் மட்டும் வைத்துப் பார்க்க கூடாது’

நிஜ வாழ்விலும் தளங்களை இனம் காணல்

ஆனால் இந்தத் தளவு அளவுகோல்கள் படைப்புகளை விமர்சிக்கும் போது மட்டுமல்ல எமது நிஜ வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று. பல் வேறு தரத்தினருக்கும் பயன்பாடுடைய விடயத்தை மு.பொ கவிதை விமர்சனத்தில் சொல்லியிருப்பதாக எனக்குப் படுகிறது. இந்த இடத்தில் நான் என்னைப் பொருத்திப் பார்த்தேன். எனது தொழில் அறிவியலோடு தொடர்புடையது. மருந்துகள், நோய், விஞ்ஞான ஆய்வுகள் என ஒரு பக்கம். நோயாளிகள் வேறொரு பக்கம். ஆவர்களுக்கு இந்த அறிவியல் தளம் பெரும்பாலும் இருப்பதில்லை. உணர்வுத் தளம் அவர்களது. நோய், வலி, உபாதை, மனக் கவலை, அவர்களது கலாசார நம்பிக்கைகள் என அவர்களது தளம் முற்றிலும் வேறானது. எனவே ஒரு மருத்துவன் தனது அறிவுத் தளத்தை மட்டும் வைத்துக் கொண்டு நோயாளியை குணமாக்கவோ திருப்பதிப்படுத்தவோ முடியாது. ஆவர்களது உணர்வுத் தளத்திற்குள் தானும் இறங்கி வர வேண்டும்.

மருத்துவனுக்கு மட்டுமல்ல. ஆசிரியருக்கு, சட்டத்தரணிக்கு, கடை முதலாளி மற்றொருவருடன் தொடர்புறும் அனைவருக்கும் பொருந்தும். தொழில் மட்டுமல்ல குடும்ப மட்டத்தில் கூட அவசியமானது.

மேற் கூறிய படைப்பாளியினது இயங்கு தளம் பற்றிய கருத்துக்கள் பேராசிரியர் சிவசேகரத்தின் ‘போரின் முகங்கள்’ பற்றிய விமர்சனக் கட்டுரையில் அடங்கியுள்ளது.

படைப்பாளயின் தளங்கள்

மு.பொ இக் கட்டுரையில் எங்கும் சிவசேகரத்தை பேராசிரியர் என்று குறிபிபிடவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். கவிஞர் சிவசேகரம் என்றே குறிப்பிடுகிறார். இதுவும் இயங்கு தளங்கள் பற்றிய மற்றொரு விடயம்தான். பொறியில் பீடத்தில் அவர் பேராசிரியர் என்ற தளத்தில் இயங்குகிறார். இலக்கிய உலகில் அவர் ஓரு கவிஞர். எனவே கவிஞர் எனக் குறிப்பிடுவது பொருத்தமானதே. ஆனால் அவரது படைப்புகளை விமர்சிக்கும்போது அவருக்குள் இருக்கும் அறிவியல் தளத்தை மு.பொ புறந்தள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவியல், உணர்வு, ஆத்மார்த்த தளங்களின் உதாரணங்கள்

‘உணர்வும் அறிவும் ஒன்றையொன்று பின்னிச் செல்லும் தன்மையை இவரது கவிதைகளில் காணலாம்.’ கூடுதலாக அறிவியல் ஆட்சி இதில் ஆளுமை செலுத்தினாலும் உணர்வுத் தளமும் கை கொடுப்பதாகவும் கூறுகிறார். ஆனால் சிவசேகரத்தின் கவிதைகளில் ஆத்மார்த்த தளமும் இடையிடையே இனம் காட்டுவதைக் காணலாம் என மு.பொ கூறியது எனக்கு ஆச்சரியமூட்டியது. ஆனால் அதற்கு அவர் உதாரணமும் காட்டுகிறார். மெக்சிக்கோ புரட்சி பற்றிய கவிதையில்

‘இலையுதிர்ந்து பட்டதுபோல் நின்ற நெடுமரத்;தில் 
வசந்தத்தின் செந்தழல்கள் கிளை மூடப்
பரந்துவிரிந்தது எவ்வாறு?’

உணர்வு தளத்தின் வெளிப்பாடாக அவர் சுட்டிய கவிதை வரிகள் எனக்கு மிகவும் பிடித்தமாதாக இருந்தது

‘வாழ்வின் மீதான ஆசை
மண்ணை விட்டு விரட்டியது
இரவின் முகத்தைச் சூடிக்கொண்டு
கொழும்புக்கு ஓடினான்.

அறிவுத்தளத்திற்கு உரியதாக மு.பொ எடுத்துக் காட்டும் மற்றொரு அருமையான கவிதை இது

‘அடையாள அடடையில் இருந்த முகம்
தனதென்றான் அவன்
இல்லை என்றார்கள் அவர்கள்
அட்டை 10வருடம் பழையது ஆயினும்
முகம் தனதென்று வாதாடினான்
அவனது முகம் வாவியில் மிதந்தபோது
அவனுடையதாக இருக்கவில்லை.’
கவிதையை விட்டு நாவல் விமர்சனத்தில் நுழையலாம்.

நல்ல படைப்பின் சில அம்சங்கள்

ஜெயமோகனின் காடு, எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி பற்றிய ஒப்பீட்டு விமர்சனக் கட்டுரை என்னைக் கவர்ந்தது. காடு நாவலை 2005 காலப்பகுதியில் வாசித்தபோது, அதைப் படித்து முடித்த பின்னரும் சில மாதங்கள் நீலியின் நினைவுகளுடன் காடுகளில் அலைந்து திரிவதான மனநிலையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதே போல நெடுங்குருதியும் ஒரு சிறப்பான படைப்புத்தான். ஆனால் இவை ஏன் சிறந்த நாவல்களாக இருக்கின்றன என்பதை மு.பொ கட்டுரையைப் படித்த பின்தான் என்னால் உணர முடிந்தது.

முதலாவது காரணம் அதில் வரும் மாந்தர்கள் இயல்பான மனிதர்களாக இருப்பதாகும். ‘ஒழுக்கம், கட்டுப்பாடு என்று நாம் அவர்களுக்குள் இடைச் செருக முயலும் அனைத்தையும் தூக்கி எறிந்தவர்களாக நடமாடும்’ அந்த மனிதர்கள். ‘தீராத பெருங்காமம் பசித்தலைந்தபடியும், பொருந்தாத உறவுகளும் இணையாத மனங்களுமான மனிதர்கள்’ எனக் குறிப்பிடப்படுகிறது.

இரண்டாவது காரணம்’ ஆங்காங்கே அவற்றுள் இழையோட விடப்படும் மனித ஐதீகங்கள், தொன்மங்கள், மாந்திரீக நம்பிக்கைகள் எனலாம்’ என்கிறார் (உதா: இளையராஜாவிற்கு செய்யப்பட்ட காஞ்சிமரக் கட்டில், அதோடு வந்ததாகக் கருதப்படும் அரூப வனநீலி, அதோடு அவர் கூடுதல்) மூன்றாவது சிறப்பாக சொல்லப்படுவது அவை எழுதப் பட்ட கலைத்துவமான நடை பற்றியதாகும். மழை, வெயில், காடு வெயில் ஆகியவை பற்றிய விபரணைகள் கவிதையாக எழுந்து விரிவதாக மு.பொ குறிப்பிடுகிறார்.

புதிய வகை இலக்கயத்தின் தேவை

இன்றைய இலக்கிய உலகில் அத்தகைய மாற்றத்திற்கான தேவை எழுந்துள்ளது. ஒரு அறிவியல் கட்டுரையை எழுதும்போது அதை வெறும் விபரங்களின் கோவையாகத் தரும்போது அதற்கு வரவேற்பு இருப்பதில்லை. அதற்குள் வாழ்வனுபவங்களை, கவர்சியான நடைiயை. கவிதை அழகைச் சேர்க்கும்போதே பலதரப்பட்ட மக்களை அடைந்து பலன் அளிக்கிறது என உணரப்படுகிறது.

இத்தகைய நிலையில் படைப்பு இலக்கியங்களும்  தமது பழைய கட்டுக்கோப்புகளிலிருந்து விடபட வேண்டும். ‘இன்று பல்வகை இலக்கியங்களான கவிதை, கதை, கட்டுரை, நாடகம் என்பவை எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று தலைநீட்டி, உருவக் கலப்பு நிகழ்த்தி வேறொன்றின்  வருகையை புது ஓழங்கின் வருகையை இருக்கிற ஒழுங்ககளைச் சிதைத்து….’ வர வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.

‘இந்தக் கவித்துவ வீச்சுக் கொண்ட விபரணை, அதன் சாத்தியம், சாத்தியமற்ற எல்லா நிகழ்வுகளையும் சத்தியப்படுத்துகின்ற ஆத்மார்த்த தளத்திற்கு இட்டுச் செல்வதன் மூலம் வெற்றி பெறுகிறது. ஆத்மார்த்த தளம் என்பது ஆன்மீகத் தளமல்ல, ஆனால் அதனோடும் ஒட்டுறவு கொண்டுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை’ என்கிறார். இந்த இரண்டு விடயங்கள், அதாவது இன்றைய இலக்கிய வடிவங்கள் உருவக் கலப்பு நிகழ்த்தி ஒரு புதிய வடிவம் அல்லது ஒழுங்கிற்கு வருவது மற்றும், ஆத்மார்த் தளம் என்பது மு.பொ. மு.த விலிருந்து பெற்றுக் கொண்ட கருத்துக்களாகும்.

புதிய சிந்தனை

இவற்றைப் புரிவதற்கு ‘தமிழ் இலக்கிய விமர்சனம்: மு.த வின் சிந்தனை ஒரு திருப்புமனையா?’ கட்டுரைக்குள் நாம் புக வேண்டும். இதனை முழமையாகப் புரிந்து கொள்ளும் இலக்கியக் கோட்பாட்டு அறிவு எனக்கில்லை. ஆயினும் இது தொடர்பான எனது அறிவுக்கு அகப்பட்ட சில கருத்துக்களை சொல்ல விரும்புகிறேன். தவறுகள் இருந்தால் பின்னர் பேச இருக்கும் சண்முகலிங்கம் அவர்களும் மு.பொ சுட்டிக் காட்டுவார்கள் என நம்புகிறேன்.

நாம் அறிந்துள்ள பார்வைகள் எவை? மரபு ரீதியான மார்க்கீசப் பார்வை, கருத்துமுதல் கோட்பாடு, இவற்றின் அடிப்படையில் இன்று இருக்கும் யதார்த்த, சமூகயதார்த்த இலக்கியக் கோட்பாடுகள் ஆகும். இவற்றில் உள்ள குறைபாடுகளை மு.பொ இக் கட்டுரையில் விபரித்துள்ளார். நீங்களே படித்துப் பாருங்கள். ஆனால் அதற்குப் பதிலாக முன் வைக்கப்படுவது மெய்முதல் வாதம் எனும் கோட்பாடு ஆகும். இந்த முறையில் படைப்பபடுபவை ‘மெய்யுள்’ வகைப் படைப்புகள் என்கிறார்.

மெய்யுள்

மெய்யுள்ளின் பண்பு என்ன?

‘இப் பெருந்தத்துவம் ஆதமீகப் போர்வையில் முதலாளித்துவத்திற்கும், மனித வளர்ச்சியைத் தடுத்து வைக்கும் அர்த்தமற்ற சமய ஆசாரங்களுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் முண்டு கொடுத்த கருத்து முதல்வாதத்தின் பிற்போக்குத் தனங்களை உதறிக் கொண்டும், மனித சாராம்சமான ஆத்மீகப் பண்பை ஒதுக்கிவிட்டு மனிதனை வெறும் பொருளாதார மனிதனாக் காணும் பொருள் முதல் வாதத்தின் பிற்போக்குத் தனங்களையும் உதறிக் கொண்டும் எழுவதாகும்.’ என்கிறார் மு.பொ.

மு.பொவின் விமர்சனங்களில் நான் காண்பவை

மு.பொவின் விமர்சனக் கட்டுரைகளில் நான் இனம் காணும் நல்ல போக்குகளை இவ்வாறு கூறலாம்.

1. ஆத்மார்த்தம். 
2. முற்போக்கு கொள்கைகளுக்கு எதிரானவர் அல்ல. முற்போக்கு என்ற போர்வையில் செய்யப்பட்ட ஆனாலும் அது முழமையான பார்வை அல்ல என்கிறார்.
3. தமிழ் தேசிய உணர்வு
4. சத்தியத்திற்கு எதிரானவற்றைப் பொறுக்க முடியாமையும் அதற்காகக் ஓங்கிக் குரல் கொடுப்பதும், உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசாமல் வெளிபடையாகச் சொல்லுதல்.
5. கருத்து ரீதியாகவும் படைப்பாக்க முறை ரீதியாகவும் ஒரு படைப்பாளியை விமர்சிக்கும் போதும் அவரில் உள்ள நல்ல அம்சங்களையும் சுட்டிக் காட்டத் தவறுவதில்லை. உதாரணங்கள் கே.எஸ்.சிவகுமாரன், உமா வரதராஸன், சோலைக்கிளி, சில்லையூர் செல்வராசன், முருகையன், க.கைலாசபதி,சிவத்தம்பி 
6.  ஆழ்ந்த ரசனை. ஆழ்ந்த ரசனையுள்ளவன்தான் நல்ல படைப்பாளியாக முடியும். அவனால்தான் திறமையாக விமர்சிக்க முடியும். நூல் முழவதும் அவர் எடுத்துக் காட்டியுள்ள படைப்புதாரணங்களைப் படித்தாலே உதவாக்கரைப் படைப்பாளியும் உச்சந்தரத்தவனாகி விடுவான் எனப்படுகிறது.
7. சமுத்திரத்தையும் நாண வைக்கும் அவரது வாசிப்பின் பரப்பளவு எனக்கு மலைப்பைத் தருகிறது. அவரது குறிப்பிடும் படைப்பாளிகளின் எண்ணிக்கையும், அவற்றிலிருந்து எடுத்தாளும் உதாரணங்களும் ஒரு மனிதனால் இவ்வளவு அகலமாகவும் ஆழமாகவும் படிக்க முடியுமா என்ற மலைப்பைத் தருகிறது.
8. ஈழத் தமிழ் இலக்கியத்தின் முக்கியமாக கவிதை, சிறுகiது, விமர்சனப் போக்குகள் 20ம் 21ம் நூண்றாண்டுகளில் எவ்வாறு இருந்தது, இருக்கிறது, இருக்க வேண்டும் என்பது பற்றிய ஒட்டுமொத்தப் பார்வையை இந்த நூலைப் படிப்பதன் மூலம் ஒவ்வொரு வாசகனும் பெற முடியும்.
9. பழைய கழிதலும், புதியன கழிதலும் வழுவல கால வகையிலானே என்பதை ஏற்றுக் கொள்ளல். மரபு சார்ந்த அல்லது வழமையான படைப்பு வடிவங்களுக்கு அப்பாலான படைப்புகளைப் படித்து ரசிப்பதும் பாராட்டுவதும். தனது படைப்புகளிலும் அத்தகைய மாற்றங்களுக்கு இடம் அளிப்பது. இறுதியாகச் சொல்வதாயின் இந்தக் கூட்டத்தில் பேச என்னை அழைத்ததற்கு மு.பொ அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. ஆழமான இலக்கிய அறிவும் தேடலும் நிறைந்த பேச்சாளர்களும், பார்வையாளர்களும் கலந்து கொள்ளும் இந்நக் கூட்டத்தில் நுனிப் புல் மேயும் என்னையும் பேச அழைத்தது என்னை இக்கட்டான நிலையில் மாட்டிவிட்டாலும் பெருமைப்பட வைக்கிறது.

நூல் வெளியீடு
எஸ்.கொடகே சடீகாதரர்கள்
675,பி.டி.எஸ் குலரத்ன மாவத்த
கொழும்பு 10

விலை:- ரூபா 850.00

[ வெளியீட்டு விழாவில் நான் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம் ]
kathirmuruga@hotmail.com