ஆய்வு: அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் – பத்தொன்பதாம் நூற்றாண்டு பகுத்தறிவு கருத்தியல்

ஆய்வு: அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் – பத்தொன்பதாம் நூற்றாண்டு பகுத்தறிவு கருத்தியல்காலனிய ஆட்சி காலத்தில் இந்து மதத்தின் பண்பாட்டுச் சூழலையும் தகவமைப்புக்களையும் உடைத்தெறிந்து விமர்சனத்துக்குட்படுத்திய நூல் இந்துமத ஆசார ஆபாச தரிசினி. 1882 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இந்நூல் இந்து மதத்தினைக் கடுமையான முறையில் எதிர்த்தும் அ.வெங்கடாசலனார் பொது வெளியில் அடையாளம் தெரியாத நபராகவே இருந்திருக்கிறார்.

இவரது சிந்தனைப்போக்கு 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் மலர்ந்த நவீன அறிவு மரபினையொட்டியதாகவும் சமூகத்தின் அத்தனை செயல்பாடுகளுக்கும் அறிவு தெளிவினைப் பெற வேண்டிய நோக்கத்தினைக் கொண்டதாகவும் இருக்கிறது. மத்திய கால ஐரோப்பாவில் சமூகத்தின் அனைத்து நடைமுறைகளுக்கான விளக்கங்களும் மதத்தில் இருந்து பெறப்பட்டன. ஆனால் 16 ஆம் நூற்றாண்டிற்குப் பின் தத்துவம், மதம், சமூகம் என எல்லாவற்றிற்குமான விளக்கங்கள் விஞ்ஞானங்களில் இருந்து தெளிவு பெற வேண்டும் என்ற தூண்டுகோளை விதைத்தவர் தெகார்த்.

‘பதினாறாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் தோன்றிய முக்கியத் தத்துவவாதிகளை அனுபவ வாதிகள், அறிவுவாதிகள் என வகைப்படுத்தலாம். அனுபவவாதிகள் புலனுணர்வுக்கும் புலனறிவுக்கும் முதன்மை தந்தார்கள். அறிவுவாதிகளோ மனித மனத்தில் உள்ளார்ததும், புறஉலகைப் புரிந்துகொண்டு விளக்கவல்லதும் எனத் தாங்கள் கருதிய அறிவுக்கு முதன்மை வழங்கினர். (எஸ்.வி.ராஜதுரை, இருத்தலியமும் மார்க்ஸியமும், விடியல், ப. 53) இரண்டு அணுமுறையாளர்களும் சமுதாயம், மனிதன், இயற்கை ஆகியன பற்றி அன்றைய கத்தோலிக்கத் திருச்சபை கூறிவந்த பொதுவான விடயங்களை விமர்சித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவரை உலகத்தில் இருந்துவந்த கருத்தியல்களுக்கான மூல ஆதாரங்கள் மதத்தில் இருந்துதான் பெறப்பட்டிருக்கின்றன. இத்தகைய அதிகாரத்துவத்தைப் பெயர்த்துப்போட்ட நிகழ்வுகள் கோப்பர்நிக்கஸ், கலிலியோ, நியூட்டனில் இருந்து காண்ட் அளவிலான தத்துவ விளக்கங்களாக வளர்ச்சியடைந்தது.

இதேபோன்றதொரு உறுதியான சமூக ஊட்டாட்டங்கள் இந்தியச் சமூகத்தில் நடைபெறவில்லையென்றாலும் காலம் கடந்துவிட்ட காலனியக்கால கல்வி வாய்ப்புகளிலும் காலனியத்தின் நிர்வாகம் மற்றும் தொழில் முறைகளினால் இந்தியாவில் சீர்த்திருத்த அமைப்புகளாக உருப்பெற்றன. காலனிய காலத்தில் உண்டான சமூகச் சீர்த்திருத்த அமைப்புகள் பெரும்பாலும் மதத்தைப் புதிய நெறிமுறைகளில் வளர்ப்பதாகத்தான் இருந்தனவேயன்றி விஞ்ஞானப் பார்வையைக் கொண்டதாக இல்லை. இப்படியிருந்த ஒரு சமூகத்தில்தான் அ.வெங்கடாசலனார் இந்து மதத்தின் சடங்குகள், மத நம்பிக்கைகள், ஒழுக்க விதிகளைக் கட்டவிழ்த்து தகர்க்கிறார்.

காலனியத்திற்கு முன்பிருந்த ஆட்சி முறைகள் இத்தகைய சிந்தனை முறைக்கு வழிவகுக்கவில்லை. காரணம் தமிழக நிலங்கள் பாளையங்களாகவும் ஜமீன்களாகவும் பல படித்தான போர்களையும் வரி அழுத்தங்களையும் கொண்டிருந்த சமூகப் பின்னணியில் இனம் சார்ந்த ஒற்றுமை எண்ணங்களைக் காலனிய ஆட்சியால்தான் விதைக்க முடிந்தது.

Continue Reading →

ஆய்வு: ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டாரத்தில் நெடுங்கல் வழிபாடும் வழிபாட்டு மாற்றமும்

ஆய்வு: ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டாரத்தில்  நெடுங்கல் வழிபாடும் வழிபாட்டு மாற்றமும்தமிழரின் பண்பாட்டு மரபாக இருந்து வருவது நடுகல் வழிபாடாகும். இவ்வழிபாடு இன்று ஆண், பெண்  இரண்டு தெய்வங்களுக்கும் நிகழ்த்தப்படுகிறது. ஆனால் தொடக்க காலத்தில் நடுகல் வழிபாடு போரில் உயிர் நீத்த வீரனுக்கும், ஆநிரை மீட்டலின் போது இறந்த வீரனுக்காகவும்  நடுகல் எழுப்பப் பட்டு வழிபடப்பட்டன. இம்மரபு பண்பாட்டில் தொடா்மரபாக இருப்பினும் அதன் தன்மை சிதையும் நிலையில் இருக்கிறது.    நடுகல், நெடுங்கல் என்று பொதுப் பெயா் கொண்டு அழைக்கப்பட்ட நெடுங்கல்கள் எல்லாம் மாற்றுப் பெயா்கள் (நட்டுக்கல் முனியாண்டி, கருப்பசாமி கல், முனிஸ்வரன் கல்) இட்டு அழைக்கப்பட்டு வருகின்றன. அந்நெடுங்கல்லுக்கான தள அதிகாரம் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு முக்கியத்துவப் படுத்தப்படுகிறது. அதில் வழிபாடு நடத்தும் அதிகாரமும் அவா்களுக்கு உரித்தானதாகக் கொள்ளப்படுகிறது. இம்மரபு தொடா்மரபாக பண்பாட்டில் நிகழ்ந்து வந்தால் அதன் தொண்மை மறைக்கபடும். அதன் பெயா் மாற்றமும் மாற்றப்படும். அது குறித்து  களஆய்வு செய்து வெளியிடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகம்.

நெடுங்கல் நடும் மரபு
“பெருங்கற்காலப் பண்பாட்டின் தொடக்கம் காலம் கி.மு. ஆயிரம் ஆகும். இப்பண்பாடு தமிழகத்தில் வடக்கிலிருந்து தெற்காக முன்னேறிச்சென்றதாகும். அவ்வாறு செல்லச் செல்ல இதன் காலம் பின்னோக்கிச் சென்றன என்று தொல்லியல் அறிஞர் க. ராஜன் அவர்கள் கூறுகிறார்.”1 ஏனென்றால் வடக்கில் தகடூரிலிருந்து கொங்கு நாடு வரையிலுள்ள பகுதிகளில் தான் அதிகமான நடுகற்கள் கிடைத்துள்ளன. தெற்கு மதுரை, திருநெல்வேலி ஆகிய ஊா்களுக்கு இடம் பெயரும்போது அதிகமாக முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. இத்தன்மையைக் கொண்டு தென்பகுதிகளில் கிடைக்கும் நடுகல்கள் அனைத்தும் காலத்தால் பிந்தியவை எனக் கருதமுடிகிறது. பெரும்பான்மையான தொல்லியல் அறிஞகர்கள் இக்கருத்துக்களுக்கு உடன்படுகின்றனர்.

தமிழகத்தில் கிடைக்கின்ற பெருங்கற்கால சின்னங்களில் நெடுங்கல், நடுகல், கற்பதுக்கை ஆகிய அனைத்தும் தகடூர் பகுதியிலும், கொங்கு நாட்டில் கொடுமணல் பகுதிகளிலும் அதிகம் கிடைத்துள்ளன. தென்னாட்டில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, விருதுநகா் மாவட்டம் குன்னூர் போன்ற ஊர்களிலும் இந்நடுகல்கள் நெடுங்கல்லாகக் கிடைத்துள்ளன. இவ்விரு பகுதிகளும் குறிஞ்சி, முல்லை நிலத்தோடு தொடர்பு கொண்டுள்ள நிலமாகும். இந்நிலங்கள் கால்நடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. சங்க காலத்தில் முல்ல நிலத்தில் ஏற்பட்ட ஆநிரை கவர்தல், கவா்ந்த பசுக்களை மீட்டல் இவைகளினால் இறப்பவர்க்கு நடுகல் நடுவதும், கற்பதுக்கை அமைப்பதும் பண்டைய மரபாக இருந்துள்ளன. இது குறித்து சங்க இலக்கியமும் தொல்காப்பியமும் திறம்படக் உறுதி படுத்துகின்றன.

“பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் குறித்து அன்மையில் களஆய்வு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர்கள் கொங்கு நாட்டில்  அதிகமான பெருங்கற்காலச் சின்னங்களும் அதன் அருகிலே நீண்ட நெடிய நெடுங்கல்லும் இருப்பதை கண்டறிந்தனர்.”2 நினைவுச் சின்னங்கள் அமைக்கும்போது அதன் அருகில் நீண்ட நெடிய நெடுங்கல் அடையாளமாக அமைக்கும் பழக்கத்தையும் பண்டையோர் மரபாகக் கொண்டுள்ளதுடன் அந்நெடுங்கல்லிற்கு நீர்ப்படையிட்டு படையல்கள் படைத்து வழிபட்டு வந்துள்ளனர். ஆகையால் வடபகுதியில் நெடுங்கல்லுக்குச் செய்துவந்த சடங்குகள் போன்று பாண்டிய நாட்டில் கிடைத்த நெடுங்கல்லிற்கும் இச்சடங்குகள் முறையாகச் செய்து வந்துள்ளனர். சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவன் வடக்கில் இமய மலையிலிருந்து கண்ணகிக்கு கல்லெடுத்து கங்கையில் நீராட்டி சேரநாட்டில் கோவில் அமைத்து வழிபட்டு வந்தான் என்று சிலப்பதிகாரம் வாயிலாக அறியமுடிகிறது. ஆகையால் நடுகல் நட்டு வழிபடும் மரபு வடக்கிலிருந்தே தொடங்கப் பட்டவையாகும்.

Continue Reading →

ஆய்வு: கருத்துக் களவோ….? எனக்கது தெரியாது…!”

எழுத்தாளர் க.நவம்ஒருநாள் இளைஞனொருவன், ஒரு பத்திரிகை  ஆசிரியரிடம் கவிதை ஒன்றைப்.பிரசுரிப்பதற்கெனக் கொண்டுபோய்க் கொடுத்தான்.

அதனைப் படித்துவிட்டு, “இந்தக் கவிதையை நீயே எழுதினாயா?” என்று ஆசிரியர் கேட்டார்.

“ஆம், ஒவ்வொரு எழுத்தும்” என்று அழுத்தம் திருத்தமாகப் பதிலளித்தான், இளைஞன்.

ஆசிரியர் மிக மரியாதையுடன் எழுந்து நின்றார். “வணக்கம், உங்களைச் சந்திப்பதில் நான் பெருமகிழ்ச்சி  அடைகிறேன், எட்கார் அலன்போ அவர்களே! நீண்ட
நாட்களுக்கு முன்னரே நீங்கள் இறந்துவிட்டதாக நான் நினைத்தது தவறுதான்!”

எழுத்து என்பது மனித நாகரிக வளர்ச்சிப் போக்கின் ஒரு பிரதான மைல்கல். இது உணர்வுகள், சிந்தனைகள், செய்திகள் என்பவற்றைப் பரிமாறிக்கொள்வதற்கான ஒரு வழிமுறை. இந்த உணர்வுகளும், சிந்தனைகளும், செய்திகளும் புதுமையானவையாகவும் கட்டுக்கடங்காதவையாகவும் மனதில் பொங்கிப் பிரவகிக்கின்றபோது, அவற்றை எழுத்தில் பதிக்க வேண்டும் என்ற உந்துலையும் உத்வேகத்தையும் பெறுகின்றவர்கள், எழுத்தாளர்கள்.

அறிவு, ஆர்வம், ஆற்றல், தேடல், தெளிவு கொண்டவர்களுக்கு எழுத்துக்கலை கைகூடிவர வாய்ப்பு உண்டு. இவையேதுமின்றி, முடவன் கொம்புத் தேனுக்குக் கொண்ட ஆசை போன்று, குறுக்கு வழியில் எழுத்தாளராக வேண்டும் என்ற சிலரது பேராசையே, எட்கார் அலன்போ போன்ற புகழ்பூத்த எழுத்தாளர்கள் பலரும் இந்நாட்களில் அடிக்கடி புத்துயிர் பெற்றுவரக் காரணமாகிப் போய்க் கிடக்கின்றது!

இவ்வாறான எழுத்துச் சூழலில், எழுத்தாளர்களும் படைப்பாளர்களும் பத்திரிகையாளர்களும் பிரசுரிப்பாளர்களும் அறிந்து வைத்திருக்க வேண்டிய – கருத்துக் களவு, பதிப்புரிமை, ஆக்கவுரிமை, சர்வதேச நியம நூல் இலக்கம், சர்வதேச நியமத் தொடர் இலக்கம் போன்றன குறித்த, சில முக்கிய தகவல்களை முன்வைப்பதே இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும்.

கருத்துக் களவு (Plagiarism)
இன்னொருவரது மொழிப் பாவனைகளை, எழுத்துக்களை, சிந்தனைகளை, கருத்துக்களை அல்லது படைப்புக்களை அச்சொட்டாகப் பிரதிசெய்து, அவற்றைத் தமதென்று உரிமை பாராட்டி, வெளிப்படுத்துவது கருத்துக் களவு எனப்படும்.

ஒரு தவறான அபகரிப்பு நடவடிக்கையான இக்கருத்துக் களவானது, எழுத்துத்துறையில் இந்நாட்களில் சர்வ சாதாரணமாக இடம்பெற்றுவரும் பெருத்த மோசடி; ஒழுக்கம், சட்டம்சார் விதிமுறைகளுக்கு முரணான, கண்ணியமற்ற செயற்பாடு. இது பதிப்புரிமைச் சட்டங்களை மீறுவதனால், சம்பந்தப்பட்டவர்களைச் சில சமயங்களில் பாரதூரமான சட்டப் பிரச்சினைகளுக்குள் இட்டுச் செல்லக்கூடிய ஆபத்துக்களைக் கொண்டது.

கருத்துக் களவில் பல வகைகள் காணப்படுகின்றன. அவற்றுள் சுயகருத்துக் களவு (Self Plagiarism), தற்செயலான கருத்துக் களவு (Accidental Plagiarism), நேரடியான கருத்துக் களவு (Direct Plagiarism) என்பன பிரதானமானவையாகும்.  ஒருவர் தனது சொந்தக் கருத்தினை அல்லது எழுத்தினை, அது முன்னர் பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஏற்கனவே தம்மால் பயன்படுத்தப்பட்டது என்பதைக் குறிப்பிடாமல், மீண்டும் பயன்படுத்துதல் சுயகருத்துக் களவு எனப்படும். ஓர் எழுத்தின் மூலத்தைக் குறிப்பிடாமல் அலட்சியம் செய்தல், தவறாகக் குறிப்பிடுதல், அல்லது உள்நோக்கமின்றி மூலப் பிரதியுடன் ஒருமைப்பாடுடைய சொற்களை, சொற்றொகுதிகளை, வாக்கிய அமைப்புக்களைப் பயன்படுத்துதல் தற்செயலான கருத்துக் களவு எனப்படும். எங்கிருந்து பெறப்பட்டது என்ற பண்புக்கூற்றோ அல்லது மேற்கோள் குறியோ இன்றி, இன்னொருவரது கருத்தை, வார்த்தைக்கு வார்த்தை படியெடுத்தும், வெட்டியொட்டியும் தனதென உரிமை பாராட்டிப் பயன்படுத்துதல், நேரடியான கருத்துக்களவாகும். இதுவே மிகவும் பாரதூரமான கருத்துக் களவு எனக் கருதப்படுகின்றது.

Continue Reading →

ஆய்வு: சங்க இலக்கியங்களில் சான்றாண்மை

ஆய்வு: சங்க இலக்கியங்களில் சான்றாண்மைதனிமனிதனின் சுயஒழுங்கு கட்டுப்பாடே அறத்திற்கு வித்தாக அமைகின்றது. சுயஒழுங்கு ,கட்டுப்பாடு,அறம், நாகரிகம் போன்றவை ஒன்றையொன்றுச் சார்ந்தவை. அறம் என்பது தனிப்பட்ட மனிதனுக்காக உருவாக்கப்பட்டதல்ல. இரண்டுக்கு மேற்பட்ட நபர்களுக்கிடையே சமூக உறவுகள் நிலவும்வேளையில் அறம் தோற்றம் பெறுகின்றது. அறங்கள் சமூக ஒழுங்கை அல்லது நடப்பில் நிகழ்கின்ற ஆதிக்க அடிமை உறவுகளை வெளிப்படுத்துகின்றன எனலாம். தனிமனித அறம், ஈகை, நட்பறம், துறவறம், வணிக அறம் போன்ற அறங்களில் சமூகத்துடன் தொடர்புடைய சான்றாண்மை அறம் குறித்து இக்கட்டுரை ஆராய்கிறது.

சான்றாண்மை :
‘சால்பு ( Good) என்னும் பொருளைத் தருகின்ற உலகமொழிகளின் சொற்களின் மூலப்பொருள் சான்றோர், சான்றாண்மை ( noble,aristocrat) என்றும், இதற்கு எதிர்மறையான புன்மை ( evil,bad) எனும் சொல் பல மொழிகளில் புலைமை, புலையன் ( low,plebean) என்ற மூலப்பொருளையும் குறிப்பிட்டது.’

(ராஜ்கௌதமன் – தமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும், ப.எ: 255)

என்னும் நீட்சேவின் கருத்து குறிப்பிடத்தக்கது. இலத்தீன் மொழியில் சால்பு என்ற சொல் போர்வீரர்கள் என்ற பொருளில் வழங்கப்படுகிறது. சான்றாண்மை என்றால் ‘சால்பு’. தன்னை ஆளுதல் என்று பொருள.; சான்றாண்மை என்பது இனக்குழுச் சமூகத்தில் வேட்டை- பாதீடு என்றும் வீரயுகத்தில் வீரம், மறம் என்றும் மன்னராட்சியில் உயர்ந்தோரின் அறம் என்றும் மாற்றமடைந்துள்ளது. சான்றாண்மை சமூகத்தில் உயர்ந்த விழுமியமாக போற்றப்பட்டது.

சங்க இலக்கியங்களில் சான்றாண்மை :
சங்க இலக்கியங்களில் சான்றான் என்றால் வீரன், அறங்கள் மிக்கவன் என்ற இருபொருளில் கையாளப்பட்டுள்ளது. உயர்ந்த அறங்களைக் கொண்டவன் என்ற பொருளிலேயே அதிகம் சான்றோன் என்ற சொல் வழங்கப்பட்டுள்ளது. பொருள்வயின் பிரிய முற்படும் தலைவனிடம் தோழி பெரியோரின் ஒழுக்கம் குறித்து எடுத்துரைப்பதில் சான்றாண்மை புலப்படுகிறது.

‘ விழையா உள்ளம் விழையும் ஆயினும்
என்றும் கேட்டவை தோட்டியாக மீட்டுஆங்கு
அறனும் பொருளும் வழாமை நாடி
நற்கதவு உடைமை நோக்கி மற்றதன்
பின் ஆகும்மே முன்னியது முடித்தல்
அனைய பெரியோர் ஒழுக்கம்’
(அக.பா.எ-286)

இயல்பாகவே தீயனவற்றை விரும்பாத பெரியோரின் உள்ளம் எப்போதாவது அவற்றை விரும்பினும் அறத்தை அங்குசமாகக் கொண்டு யானை என்னும் ஐம்பொறிகளை அடக்குவர். அறத்தையும் பொருளையும் தக்கவழிகளில் நாடி தமக்கு வேண்டியவற்றை முறையாகச் செய்து கொள்வர். ஆராய்ந்து தீநெறிகளை விலக்கி நன்னெறிகளைப் பின்பற்றுவர். இதுவே பெரியோர் ஒழுக்கம். நினைத்ததைச் செய்துமுடித்தல், மனத்தை அடக்குதல் இரண்டும் வௌ;வேறு எல்லைகளைக் கொண்டது. நினைத்ததை முடிக்கும் செயலில் ஆதிக்கவுணர்வு மேம்பட்டிருப்பினும் அறத்தைப் பின்பற்றுவதில் அடக்கம் இருப்பதாலேயே சான்N;றார் எனப்பட்டனர். அறத்தையும் பொருளையும்  மிகுதியாக உடைமை கொண்டவர்கள் சான்றோர்கள். இவர்கள் அரசராகவோ, அந்தணராகவோ, வணிகராகவோ இருந்தார்கள். மன்னராட்சி காலத்தில் கல்வி, கேள்வி, அனுபவத்தில் வெற்றி பெற்ற சிறந்த இலட்சிய  ஆண்களே சான்றோராக ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.

Continue Reading →

ஆய்வு: பிரபஞ்சன் நாவல்களில் பெண்ணியம்

எழுத்தாளர் பிரபஞ்சன்குடும்பத்தினரை உயர்த்தும் குலவிளக்காய் சமுதாயத்தினை வழிநடத்தும் விடிவெள்ளியாய் குவலயத்தில் திகழ்பவர்கள் பெண்களே. இத்தகு பெண்கள் கடந்து வரும் பாதைக் கரடுமுரடானது, ஏனெனில் வேறு எந்த உயிரினங்களிலும் இல்லாத ஆண், பெண் என்ற பேதம் மனித இனத்தில் மிகுதியாக வளர்ந்து வந்துள்ளது. இப்பேதத்தை உருவாக்கியுள்ள இன்றைய சமுதாயத்தில் ஆண், பெண் வேற்றுமைகளை நீக்கி காலங்காலமாக அடிமைக் கூண்டில் அகப்பட்டு அல்லலுறும் பெண்ணை விடுவித்து, அவர்களுக்கு முதலிடம் கொடுத்து, அவளுக்காகவே குரல் கொடுப்பது முன்னேற்றச் சிந்தனையாகக் கருதப்படுகிறது. இச்சிந்தனை இன்று வேரூன்றி நின்று, பரவலாகப் பேசப்பட்டு, முக்கியத்துவம் பெற்று வருகின்றது. இச்சிந்தனைக் காலத்தின் தேவையை உணர்ந்து எழுந்தது எனில் மிகையில்லை. பெண்ணியத்தின் மையக் கருத்தாக அமைவது பெண்களைச் சமுதாய அளவில் முன்னேற்றுவதுதான் சமூகத்தில் பெண்களின் இடத்தை இனம் காட்டுதல், அவற்றால் பெண்கள் அடையும் பாதிப்புகள் அவற்றின் ஆழம் மற்றும் அதற்குக் காரணமான நிறுவன மரபு போன்றவற்றையே இக்கட்டுரை முன்வைக்கிறது. 

பெண்ணியம்
“Feminism” என்ற ஆங்கிலச் சொல் “Femina” என்ற இலத்தின் சொல்லிலிருந்து மருவி வந்ததாகும். Femina என்ற சொல் முதலில் பெண்களின் குணாதிசயங்களைக் குறிப்பிடவே இந்த சொல் வழங்கப்பட்டது. பின்பு பெண்களின் உரிமைகளைப் பேசுவதற்கு வழங்கப்பட்டது.

“பெண்ணியம் என்ற இச்சொல் 1890இல் இருந்து பாலின சமத்துவக் கோட்பாடுகளையும், பெண்ணுரிமைகளைப் பெறச் செயற்படும் இயக்கங்களையும் குறிக்கப் பயன்பட்டு வருகின்றது”.1

பெண்ணியம், பெண்விடுதலை, பெண்ணுரிமைப் போராட்டம், பெண்நிலை பேதம் போன்ற சொற்றொடர்கள் பெண் விடுதலையைக் குறிக்கும். பெண் விடுதலை என்ற கருத்து மேல்நாட்டுச் சிந்தனையின் தாக்கமாகும். பெண்ணியம் என்பது ஆண்களை எதிர்க்கும் அபாயமானக் கூறு என்று பலர் கருதுகின்றனர். காலங்காலமாக அடிமைப்பட்டு வதைக்கப்பட்டு வாழும் பெண்களை அடிமைக் களத்திலிருந்து விடுவித்து சமூகத்தில் ஆண்களுக்கு இணையான மதிப்பினைப் பெற்றுத் தருவதே பெண்ணியத்தின் செயற்பாடாகும்.

Continue Reading →

ஆய்வு: சென்ரியு கவிதைகளின் உள்ளடக்கங்கள்

ஆய்வு: சென்ரியு கவிதைகளின் உள்ளடக்கம்.மானுடத்தை அடிப்படையாக கொண்டு படைக்கப்படுவது சென்ரியு. ஹைக்கூவிலிருந்து தோற்றம் பெற்ற புதிய இலக்கிய வகையான சென்ரியு, ஹைக்கூவின் இயற்கை, ஜென்தத்துவம், உயர்ந்த நடை, குறிக்கோள் போன்ற கட்டுப்பாடுகளை துறந்து சுதந்திரமாக செயல்படும் போக்கினைக் கொண்டிருக்கின்றது. ஹைக்கூவும் சென்ரியுவும் மூன்றடிகளை உடைய கவிதைகளாக இருப்பினும் கருத்தளவில் இரண்டும் வெவ்வேறானவை. மானுடத்தினை நடைமுறையில் மனிதன் பயன்படுத்தும் வார்த்தைகளைக் கொண்டு வெளிப்படையாகப் படைக்கப்படுகின்ற சென்ரியுவின் இத்தகையத் தன்மையே பிற கவிதை இலக்கியங்களிலிருந்து சென்ரியு கவிதை வேறுபடக் காரணமாகின்றது. சென்ரியுவின் உள்ளடக்கங்களாக உண்மையை உரைத்தல், அங்கதம், நகைச்சுவை, வேடிக்கை, விடுகதை, பொன்மொழி ஆகியவற்றை இக்கட்டுரையின் வாயிலாக விரிவாக காணலாம்.

உண்மையை உரைத்தல்
சென்ரியு கவிதைகள் உண்மையினை வெளிப்படையாக உள்ளபடியே உரைத்திடும் கவிதை இலக்கியமாகும். மானுட நடத்தைகளை பாடுபொருளாகக் கொண்டு உண்மைத்தன்மையுடன் சென்ரியு படைக்கப்படுவதால் கற்பனை, வர்ணனை ஆகியவற்றிற்கு இடம் தராது கூறவந்த செய்தியை வெளிப்படையாக உண்மைத்தன்மையுடன் எடுத்துக்கூறும் தன்மைக் கொண்டது. இதனை, 

‘பேச்சாளரின் பேருரை
கேட்டுக்கொண்டே இருக்கலாம்
நல்ல உறக்கம் வரும் வரை ‘1

என்னும் கவிதை வரிகள் அமைந்திருப்பதைக் காணமுடிகின்றது. இன்றைய காலக்கட்டத்தில் பேச்சாளர்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நற்சிந்தனைகளுடன் மக்களை மகிழ்விக்கும் வகையில் பேசுவதில்லை என்பதனை இக்கவிதை வரிகள் எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

Continue Reading →

ஆய்வு: தமிழ் இலக்கியச் செய்யுட்களைப் பாரதக்கதையோடு தொடர்புபடுத்தும் முறைமை

- முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -இவர் பாஞ்சால நாட்டரசன் யாகசேனனின் மகள் பாஞ்சாலி எனவும் குறிக்கப்படுவாள்; இவளைப் பஞ்ச கன்னியரில் ஒருத்தி என்றும் கூறுவர்; அகலிகை, திரெளபதி, சீதை, தாரை, மண்டோதரி என்பவர்கள் பஞ்ச கன்னியர்களாகக் கூறப்படுகிறார்கள். இவள் யாகசேனன் வளர்த்த வேள்வித் தீயினில் தோன்றியவள். இவள் முற்பிறப்பில் நளாயினி என்னும் பெயர் உடையவளாக இருந்து மெளத்கல்ய முனிவரைக் கணவராகப் பெற்றிருந்தாள். அவர் மெளத்கல்ய முனிவர் நளாயினியின் கற்புடைமையைச் சோதித்தறிய விருப்பம் கொண்டார். குட்ட வியாதி கொண்டவர் போல் நடந்தும் நளாயினியின் கற்புடைமையைக் கண்ட முனிவர் மனம் மகிழ்ந்து உனக்கு வேண்டியது என்ன? என்று கேட்க, அவள் நின் நீங்காத அன்பே வேண்டும் என்று கேட்டாள். நளாயினி இப்பிறப்பு முடிந்து இறந்தாள். பின் இந்திரசேனை என்னும் பெயருடன் மறு பிறப்பை அடைந்து மெளத்கல்ய முனிவரையே சார்ந்தாள். அவர் இல்வாழ்வைத் துறந்து தவ வாழ்க்கையை மேற்கொண்டிருந்தார். எனவே, இந்திரைசேனையின் கருத்திற்கு இணங்காமல் சிவபெருமானை நோக்கித் தவம் செய்யும்படி கூறினார் சிவபெருமான். சிவபெருமான் இவள் முன் தோன்றி அருள் செய்தபோது, ‘எனக்குக் கணவனைத் தருவீராக’ என்று ஐந்து முறை வேண்டினாள். இவர் முற்பிறப்பில் இவள் தன் கணவனின் ஐந்து வடிவங்களோடு இன்பம் நுகர்ந்தமையைக் கருத்தில் கொண்டு அவ்வாறே ஆகுக என்றார்; சிவபெருமானால் பிலத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்திரர்கள் ஐவரையும் பார்த்து ‘நீவிர் இந்திர சேனைக்குக் கணவர் ஆகுங்கள்’ என்றார். அவ்வாறே அந்த ஐவரும் நிலவுலகத்தில் பாண்டவர்களாகப் பிறந்து திரெளபதியைத் திருமணம் செய்தார்கள் என்று ஒரு புராதனக்கதை கூறப்படுகிறது. இக்கதை முற்பிறப்புடன் தொடர்புபடுத்திக் கூறப்படுவதாகும்.

யாகசேனன் நடத்திய சுயம்வரத்தில் அர்ச்சுனனால் வெற்றிபெற்றுக் கொண்டுவரப்பட்ட திரெளபதி குந்தியின் கட்டளைப்படி ஐவரையும் மணக்க வேண்டியவளானாள். அப்போது வியாசர் திரெளபதியின் முற்பிறப்பை யாகசேனனிடம் எடுத்துச்சொல்லி இத்திருமணத்தை நடத்துக என்றார். தெளமிய முனிவர் தருமனுக்கு முறைப்படி திருமணச்சடங்குகளை நடத்திப் பின் முறைப்படி மற்றைய நால்வருக்கும் திருமணம் நடந்தது. பாண்டவர்கள் செய்த இராசசூய வேள்விக்கு வந்திருந்த துரியோதனனை இவள் இகழ்ந்து நகைத்தற்காக அவன் சினங்கொண்டான். துரியோதனன் பாண்டவர்களைச் சூதாட்டத்திற்கு அழைத்து அவர்களின் நாடு நகரங்களை இழக்கச் செய்து அடிமைப்படுத்தினான். அவன் திரெளபதியைத் தன்தொடையின்மீது அமரச்சொல்லியும் தன்னைக் கணவராக ஏற்றுக்கொள்ளும்படியும் துன்புறுத்தினான். திரெளபதி மறுத்ததால், அவன் துச்சாதனனை ஏவி அவளது துகிலை உரியச் சொன்னான். கிருட்டிணன் அருள்பெற்றுத் துகில் வளரப்பெற்றாள். மறுபடியும் சூதாடி அடிமையிலிருந்து விடுபட்டுச் சபதங்கள் பல செய்து அவள் பாண்டவருடன் வனவாசம் சென்றாள்.

வனவாசத்தின் இறுதியாண்டில் மறைந்து வாழ்வதற்காக விராடநாட்டினைப் பாண்டவர்கள் அடைந்தனர். விராடன் மனைவி சுதேட்டிணைக்கு வண்ணமகளாக விரதசாரிணி என்ற பெயரில் திரெளபதி மறைந்து வாழ்ந்தாள். கீசகன் என்பவன் இவளை அடைய முற்பட்டபோது வீமன் (பீமன்) அவனை வதம்செய்து கொன்றான். பாண்டவர்கள் வெளிப்பட்டுத் தங்கள் உரிமைகளுக்காகப் பாரதப்போரில் ஈடுபட்டுத் துரியோதனனை அழித்தனர். அவன் அழிவிற்குப் பின்னரே தன்னுடைய அவிழ்ந்த கூந்தலைத் திரெளபதி முடிந்து கொண்டாள். திரெளபதிக்கும் பாண்டவர்களுக்கும் தோன்றிய குழந்தைகள் உபபாண்டவர்கள் எனக் குறிக்கப்பட்டனர். தருமனுக்குப் பிரதிவிந்தனும் பீமனுக்குச் சுருதசோமனும் அர்ச்சுனனுக்குச் சுருதகீர்த்தியும் நகுலனுக்குச் சதாநீகனும் சகாதேவனுக்கு சுருதசேனனும் பிறந்தனர். பாரதப்போரின் முடிவில் உபபாண்டவர்களைப் பாண்டவர்கள் எனத் தவறுதலாகக் கருதி அசுவத்தாமன் கொன்றான். திரெளபதியைத் திரெளபதியம்மன் என்ற பெயரில் கருநாடகத்திலும் தமிழ்நாட்டிலும் தெய்வமாக வணங் கப்படுகிறாள். கும்பகோணத்தில் உள்ள திரெளபதியம்மன் கோவிலில் அர்ச்சுனன் சிலையும் அரவான் சிலையும் இருக்கின்றன. சில இடங்களில் விழாவின் போது தீமிதித்தல் முக்கிய நிகழ்ச்சியாக இடம்பெறுகிறது (பாலுசாமி, 2009: 607 – 608).

Continue Reading →

ஆய்வு: சென்ரியு கவிதைகள்

ஆய்வு: சென்ரியு கவிதைகள்தமிழ் கவிதை இலக்கியம் காலந்தோறும் புதுப்புதுப் மாற்றங்களைப் பெற்று வருகின்றது. ஹைக்கூ கவிதை வடிவத்திலிருந்து பிரிந்து சப்பானில் மாபெரும் கவிதைவடிவமாகச் சென்ரியு கவிதைகள் வளர்ச்சி நிலை அடைந்துள்ளன. இக்கவிதை வடிவமானது, தமிழில்  புதிய கவிதை வடிவமாக  தோற்றம் பெற்று தொடக்ககால வளர்ச்சி நிலையினை அடைந்துள்ளது. ஆகையால், எந்த ஒரு இலக்கியத்தை  எடுத்துக்கொண்டாலும் அதற்கான தோற்றம், வரலாறு மற்றும்  அறிமுகம் இன்றியமையாதது. ஆகையால், தமிழில் சென்ரியு கவிதைகளின் தோற்றம் வளர்ச்சி குறித்து  சென்ரியு சொற்பொருள் விளக்கம், சென்ரியு கவிதையின் தோற்றம்,  காரை சென்ரியு வரலாறு,  சென்ரியு வரையறை, ஹைக்கூ சென்ரியு வேறுபாடு,  சென்ரியு கவிதையின் வளர்ச்சி நிலை ஆகிய தலைப்புகளின் வாயிலாகக்  காணலாம்.

சென்ரியு சொற்பொருள் விளக்கம்
சென்ரியு கவிதை ஜப்பானிய இலக்கிய வடிவமாகும். மானுடம் சார்ந்த சமூகம், பொருளாதாரம், அரசியல், மனித நடத்தை என உண்மை நிகழ்வை நகை உணர்வு தோன்ற வெளிப்படுத்துவது சென்ரியு கவிதையாகும். சென்ரியு என்னும் பெயர் காரை ஹச்சிமோன் என்னும் கவிஞரின் புனைப்பெயராகும். இவர் கி.பி 18ம் நூற்றாண்டில் இக்கவிதை  இலக்கியத்தை அறிமுகம் செய்தார். பின்னர், கவிஞரின் புனைப்பெயரே  இக்கவிதை  வகைகளுக்குப்  பெயராயிற்று.  சென்ரியு என்னும் சொல்லானது சப்பானிய மொழியில் ஆற்றோரத்து வில்லோ மரம் என்று பொருள் தரும்.

சென்ரியு பெயர்க்காரணம்
மாக்கூ சுகே என்னும் முன்ஒட்டு கவிதைக்கு எழுதப்படும் தொடர் கவிதைகளை தேர்ந்தெடுப்பதில் திறம் பெற்றவராக காரை சென்ரியு விளங்கினார். ஆகையால், காரை சென்ரியு பெயரில் உள்ள சென்ரியு என்னும் சொல்லே இக்கவிதைகளுக்குப் பெயராக வழங்கப்படுகின்றது. இதனையே வில்லியம் ஜெ.ஹிக்கிசன் என்பவர் தனது  ஹைக்கூ பருவங்கள் என்ற நூலில் சென்ரியு பெயர்காரணத்தைப் பற்றி பின்வறுமாறு கூறுகிறார். ‘சென்ரியு என்பது ஒருவருடைய இயற்பெயர் என்றும் அப்பெயரே இவ்வகை கவிதைக்கு  பெயராயிற்று ’1 என்று கூறுகிறார்.

Continue Reading →

ஆய்வு: பிரபஞ்சன் நாவல்களில் சமுதாயச் சூழல்!

எழுத்தாளர் பிரபஞ்சன்நாவல் என்னும் இலக்கிய வடிவம் இக்கால இலக்கிய வகைகளுக்குள் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். படைப்பாளிகள் மனிதநேய உணர்வு மிக்கவர்களாய் சமூக மாற்றத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று எண்ணியே நாவல் இலக்கியத்தை ஒரு கருவியாகக் கையாண்டனர். நாவல் என்னும் இலக்கியவகை இன்று மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. சமகால வாழ்வின் எதிரொலியான இன்றைய நாவல்கள் காலத்திற்கு ஏற்ப பலவகைகளைக் கொண்டு சிறந்து விளங்குகின்றன. அவ்வகையில் பிரபஞ்சன் நாவல்களில் சமுதாயச் சூழல் எவ்வாறெல்லாம் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது என்பதை வெளிக்காட்டுவதே இக்கட்டுரையாகும்.

சமூகப் பின்னணியும் நாவலும்
கல்வியினால் ஏற்பட்ட மாறுதல்கள் ஆளும் வர்க்கத்தினரோடு ஒத்துப்போதல், சமுதாய மாற்றத்திற்குள் தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டுமென உந்துதல் போன்றவற்றால் தமிழ் நாவல் உலகில் மறுமலர்ச்சி உருவாயிற்று. இத்தகைய மாறுதல்கள் நிகழ ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆனாலும் இம்மறுமலர்ச்சி இலக்கிய உலகில் நிரந்தரமாக்கப்பட்டது. புதிய சமூக சிந்தனைகள் மக்கள் மனதில் உருவான பொழுதே மனிதனை மையமாகக் கொண்டு படைப்பிலக்கியங்கள் தோன்றின. சமகால வாழ்வைச் சித்தரிக்கும் போது அந்த வாழ்வின் இயற்கை உந்துதலால் விளையும் தீமைகளை அகற்றுவதற்கான தேவையை உணர்த்துவதே நாவல் இலக்கியங்களின் நோக்கமாக அமைகின்றன.

“நாவல் இலக்கியம் சிறுகதையை விட சமுதாயப் பிரச்சனையை முழுமையாகப் பிரதிபலிக்கும் இலக்கிய வகையாகும்”  (தமிழ் நாவல்கள்-ஓர்அறிமுகம்.ப.10) என்று கோ.வே.கீதா விளக்கம் தருகிறார். நாவல் வடிவத்தின் தனித்துவ நிலையே சமூக நடப்பியலை வெளிக்காட்டுவதே இந்த நெறிமுறை பிரபஞ்சன் நாவல்களில் நிறைய காணக் கிடைக்கின்றன.

சமய நிறுவனம்
ஒரு சமுதாயத்தை எதார்த்தமாகப் படைக்க விழையும் எழுத்தாளன் மதம் புனிதமானது சக்தி வாய்ந்ததெனினும் அதன் நன்மை, தீமைகளையும் தன் எழுத்தில் வடிக்க வேண்டிய பொறுப்பிற்கு ஆளாகிறான். சமுதாயங்களின் மையத்தில் அமையும் பல சிக்கல்களை வரையறுத்து ஒழுங்குபடுத்துவதற்குச் சமுதாயங்கள் பயன்படுத்தும் நம்பிக்கைகள், நெறிகள், மதிப்புகள் இவற்றின் தொகுதிகளே சமயம் சார்ந்த சமுக நிறுவனங்களாக அமைகின்றன. அந்த வகையில் ‘சந்தியா’ நாவலில் பிரபஞ்சன் இயேசு கிறிஸ்து பிறக்கின்ற மாதம் பற்றியும் அதனை மகிழ்ச்சியுடன்  வரவேற்கும் நிலையில் மக்கள் இருப்பதைப் பற்றியும் சுட்டிக் காட்டியுள்ளார்.

“கிறிஸ்து புதுவருடத்தை உடன் கொண்டு வருகிறார். பழையன கழிந்து வாழ்வில் புதியதைப் புக வைக்கும் காலம் குளிர்காலம்”  (சந்தியா.ப.201)

கோயில்கள் கலைகளின் பிறப்பிடம் என்பதை நினைவூட்டும் விதமாக பிரபஞ்சன் ‘கனவு மெய்ப்பட வேண்டும்’ நாவலில் இறைவனின் உருவத்தை சிறுகுழந்தையின் தோற்றமாக எடுத்துக் காட்டுகிறார்.

“உச்சியில் விநாயகர் கோயில் ஒன்று இருந்தது சின்னஞ்சிறு பிள்ளையார் ஒரு பத்துமாதக் குழந்தை உட்கார்ந்து இருப்பது போல அத்தோற்றம் இருந்தது”   (கனவு மெய்ப்பட வேண்டும்.ப.231).

கல்விச்சூழல்

கல்வி என்பது சமுக மரபுகளை ஒரு தலைமுறையினர் அடுத்த தலைமுறையினருக்கு அளிப்பதே ஆகும். மனித சமூகம் நீண்ட நெடுங்காலமாக முயன்று தேடி வைத்திருக்கும் அறிவுச் செல்வத்தை மக்களிடையே வழங்கும் சாதனமாகக் கல்வி அமைகிறது.  கல்வி என்பது வேலைக்கு மட்டுமல்ல, சமுக சேவைக்கும் பயன்படும் என்பதை ‘சந்தியா‘ நாவலில் பிரபஞ்சன் சுட்டிக் காட்டியுள்ளார்.

“கிருஷ்ணமூர்த்தி எம்.ஏ., வரை படித்த இளைஞன் அவன் வேலை இல்லாத இளைஞனாகச் சொல்லப்பட்டான். ஏதோ ஒரு படிப்பைப் படித்துவிட்டு வேலைகிடைக்கும் என்று எதிர்பார்த்து ஊரில் சோம்பிக் கிடக்கும் லட்சோப லட்சம் இந்திய இளைஞர்களில் ஒருவனாக அவன் இருக்க விரும்பவில்லை. இயல்பாகவே அவனுக்குள் இருந்த கருணை உள்ளம் அந்த அனாதை ஆசிரமத்தின்பால் சென்றது” (சந்தியா.ப.224).

Continue Reading →

ஆய்வு: சாமானியரின் குரலாக ஒலிக்கும் சமூக ஊடகம்

எழுத்தாளர் க.நவம்சமூக ஊடகங்களில் வேண்டியதெல்லாம் ஒரு ‘பிம்பம்’ மட்டுமே; அதுவே பிறரைப் பெரிதும் கவர்கிறது. உள்ளடக்கத்தைவிட, உருவம்தான் அங்கு முக்கியத்துவம் பெறுகின்றது. சமூக ஊடகங்களில் பதியப்படும் இலக்கியங்கள் பொதுவாகப் பலரது கவனத்தைப் பெறுவதில்லை; பகிரப்படுவதில்லை; ஒருசில வரிகளுக்கப்பால் படிக்கப்படுவதுமில்லை. அரிதாகக் கிடைக்கும் விருப்புக் குறிகள்கூட (likes), பெரும்பாலும் படிக்கப்படாமலே கிடைக்கப்பெறுவன. எனவே, படிக்கப்படா இலக்கியங்களையும் இலக்கிய விமர்சனங்களையும் சமூக ஊடகங்களில் பதிவுசெய்து என்ன பயன்? அன்றாடம் அவற்றில் இடம்பெற்றுவரும் சுயபுராணங்களுடன், கடிபாடுகளும், கிசுகிசுக்களும், வசைகளும், வக்கிரங்களும் மட்டும்தானா இலக்கியம்? இந்நாளைய இலக்கியக்காரர் சிலரது மனக் கவலை, இது! ஒருவகையில், நியாயமான கவலையுங்கூட!

ஒத்த விருப்புக்களையும் பின்னணிகளையும் கொண்ட பாவனையாளர்கள் தம்மை இணைத்து, தமக்கிடையே பகிர்வுகளை மேற்கொள்ள அனுமதிக்கும் சமூக வலைத் தளங்களை சமூக ஊடகங்கள் என்பர். இன்னொரு வகையில் கூறுவதாயின், சமூக ஊடகங்கள் என்பன பாவனையாளர்களால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களைத் தாங்கிவரும் இணையத் தளங்கள் எனலாம். மிகப் பிரபலமானவை என Facebook, Facebook Messenger, Instagram, WhatsApp, Google+, Myspace, LinkedIn, Pinterest, Snapchat, Tumblr, Twitter, Viber, VK, WeChat, Weibo, Baidu Tieba, Wikia போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள், தமிழ்மொழிப் பாவனையாளர்கள் பெருவிருப்புடன் ஊறித்திளைப்பது முகநூல் எனப்படும் Facebook ஆகும். இணைய இணைப்பினைக் கொண்ட ஒரு கணினியில், ஒருவர் தாம் விரும்பிய உள்ளடக்கங்களைத் தாமே உருவாக்கி, அவற்றை உலகுடன் பகிர்ந்துகொள்ளச் சமூக ஊடகங்கள் உதவுகின்றன. இவ்வூடகங்கள் பிறருடன் நெருக்கமான ஊடாட்டங்களை மேற்கொள்ளும் வாய்ப்பினை வழங்கக்கூடிய சாதனங்களாக இருப்பதனால்தான், பலரும் இவற்றைப் பெரிதும் விரும்புகின்றனர். இலக்கியப் பரப்பிலும் இவை கால் பதிக்கத் தவறவில்லை. படைப்பாளிகள் பலரும் தமது மூலப் படைப்புக்களை இப்போது சமூக ஊடகங்கள் வழியாகப் பகிர்ந்து கொள்கின்றனர். இது இலக்கியத்தின் பாரம்பரிய வடிவத்தில் மட்டுமன்றி, அதன் கருத்துருவாக்கத்திலும் கணிசமான மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது.

சமூக ஊடகங்களிலிருந்து இலக்கியப் படைப்புக்களைப் படிக்கும் வாசகர்களது எண்ணிக்கை நாளுக்கு நாள் பல்கிப்பெருகி வருகின்றது. படைப்பாளிகள் வாசகர்களோடு உடனுக்குடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்த முடிவதால் கிடைக்கும் பலாபலன்கள் பெரிதும் சிலாகிக்கப்படுகின்றன. முன்னர் எப்போதுமில்லாத வகையில், தாம் வாசகர்களுக்கு மிகக் கிட்ட நெருங்கியிருப்பதாகப் படைப்பாளிகள் உணர்கின்றனர். வாசகர்களிடமிருந்து உடனுக்குடன் கிடைக்கும் காத்திரமான பின்னூட்டங்கள் தமக்கு உற்சாகமளிப்பதாகக் கூறுகின்றனர். அவை வாசகர்களின் நாடித் துடிப்பை உணர்ந்தறிய உதவுவதுடன், அவற்றிற்கேற்ப தமது படைப்புக்களை அவ்வப்போது இற்றைப்படுத்தி மாற்றியமைக்கவும், புத்தாக்கம் செய்யவும், செவ்விதாக்கம் செய்யவும், இதனால் தமது எழுத்தாற்றலை மென்மேலும் மேம்படுத்தவும் முடிவதாகக் குறிப்பிடுகின்றனர். இந்த நேரடித் தொடர்பாடலாலும் உறவாடலாலும் படைப்பாளிக்கும் வாசகர்களுக்கும் இடையே இருந்துவந்த பாரம்பரியத் தடைச்சுவர் தற்போது தகர்ந்துவிட்டதாகக் கருதும் இவர்கள், பாரிய செலவுகளேதுமின்றித் தமது படைப்புக்களை வாசகர்களுக்கு எடுத்துச் செல்லச் சமூக ஊடகங்கள் உதவுவதாகத் தெரிவிக்கின்றனர். காத்திரமான விமர்சனங்கள், கருத்தாடல்கள் என்பன ஊடாக, வாசகனும் படைப்பாளியும் கூட்டாக இணைந்து படைப்பின் தரத்தை மேம்படுத்த முடிகின்றது என்றும், ’நான் என்றிருப்பதைவிட நாம் என்றிருப்பது எப்போதும் ஒருபடி உயர்ந்ததுதானே’ என்றும் இவர்கள் கருதுகின்றனர்!

Continue Reading →