ஈழத்துக்கவிதை இதழ்கள் (மீள்பிரசுரம்)

– ‘திறனாய்வுக் கட்டுரைகள்’ நூலிலிருந்து பெறப்பட்ட இக்கட்டுரையினை நன்றியுடன் காலத்தின் தேவை கருதி மீள்பிரசுரம் செய்கின்றோம். – பதிவுகள் –

-எம்.ஏ.நுஃமான் -அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலைத் தேயங்களில் சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பிருச்தே கவிதைக்கென்று தனிச்சஞ்சிகைகள் வெளிவரத் தொடங்கின. அமெரிக்காவில் இருந்து வெளிவரும் “பொயற்றி”, என்ற கவிதைச் சஞ்சிகை 1912ஆம் ஆண்டு முதல் வெளிவருகின்றது. 1909ஆம் ஆண்டு முதல் “பொயற்றி றிவியு” என்னுஞ் சஞ்சிகை இங்கிலாந்தில் இருந்து வெளிவருகின்றது. கவிதைகளையும், கவிதை பற்றிய விமர்சனங்களையும், புத்தக மதிப்புரைகளையும் இச் சஞ்சிகைகள் தாங்கி வருகின்றன.

தமிழில், கவிதைகளை மாத்திரம் தாங்கிய ஒரு இதழை வெளிக்கொண்டு வரும் முயற்சி, முதன்முதல் தமிழ் நாட்டிலேயே தொடங்கியது. பாரதிதாசனே இதைத் தொடங்கி வைத்தவர். அவர் வெளியிட்ட குயில் பத்திரிகையே தமிழின் முதலாவது கவிதை இதழ் என்று தெரிகின்றது. குயில், பாரதிதாசனின் படைப்புக்களையே பெரும்பாலும் தாங்கி வந்தது. குயிலைத் தொடர்ந்து கவிதை, சுரதா, வானம்பாடி முதலிய கவிதை இதழ்கள் தமிழகத்தில் இருந்து வெளிவந்தன. வானம்பாடி அண்மைக் காலத்து முயற்சியாகும். தமிழ் நாட்டுக் கவிதை உலகில் பரபரப்பை ஏற்படுத்திய வானம்பாடி, வானம்பாடிக் குழுவினருக்கிடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நின்று விட்டதாகத் தெரிகின்றது.

ஆசிரியத் தலையங்கம் முதல் அடுத்த இதழுக்கான அறிவித்தல் வரை அனைத்தையும் செய்யுளிலேயே எழுதுவது தமிழ் நாட்டுக் கவிதை இதழ்களின் பிரதான பண்பாகக் காணப்பட்டது. பாரதிதாசனே இப்போக்கைத் தொடங்கி வைத்தவர் எனலாம். “சுரதா தன் கவிதைப் பத்திரிகையில் விளம்பரத்தைக் கூடக் கவிதையில் தான் பிரசுரிக்கிறார்” என்று நண்பர் ஒருவர் என்னிடம் சிலாகித்துப் பேசினார். அந்த அளவுக்கு ஆசிரியத் தலையங்கம், போட்டி அறிவித்தல், வர்த்தக விளம்பரங்கள் அனைத்தையும் அவை செய்யுளில் எழுதப்பட்ட காரணத்தால் கவிதையோடு சமமாக மதிக்கும் ஒரு சமரச மனப்பான்மை இவ்விதழ்களில் காணப்பட்டது. வானம்பாடி இதில் இருந்து வேறுபட்டது. முற்றிலும் புதுக்கவிதைக்கான ஒரு வெளியீட்டுக் களமாக அது அமைந்தது. ஆயினும் டாம்பீகமான மொழிப் பிரயோகம் அதன் பிரதான பண்பாகக் காணப்பட்டது. சமூக சமத்துவ நோக்கை வானம்பாடிக் குழுவினர் தங்கள் உட்பொருளாகக் கொண்டிருந்த போதிலும் சமூகத்தின் பொது வழக்குக்குப் புறம்பான மொழிப்பிரயோகத்தயும், சிந்தனை முறையையும், கற்பனைப் படிமங்களையும் பெருமளவு கையாண்டதால் வானம்பாடி எழுப்பிய குரல் சமூகத்தோடு ஒட்டாது அந்நியமாகவே ஒலித்தது. வானம்பாடியில் இதற்குப் புற நடைகள் உண்டு. எனினும் இதுவே பொதுப்பண்பு என எனக்குத் தோன்றுகின்றது.

தமிழ் நாட்டைப்போல், ஈழத்தில் இருந்தும் கவிதைக்கென்றே சில கவிதை இதழ்கள் வெளிவந்தன. ஈழத்துக் கவிதை இதழ்களுக்கு ஒரு இருபது வருட வரலாறு உண்டு. 1955ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் “தேன்மொழி”யின் முதல் இதழ் வெளிவந்தது. தேன்மொழியே ஈழத்தின் முதலாவது தமிழ்க் கவிதை இதழாகும். மஹாகவி, வாதர் ஆகிய இருவரும் சேர்ந்து சோமசுந்தரப் புலவரின் நினைவுச் சின்னமாகத் தேன்மொழியை வெளியிட்டனர். “கட்டிளமை செட்டுகின்ற கன்னிகையும் காதலனும் ஒன்று சேர்ந்தது போல எமது உள்ளத்திலே தோன்றிப் பேராவலாய் நிறைந்த இரு எண்ணங்களின் சேர்க்கைதான் இந்த இதழ். கவிதைகளை மாத்திரமே தாங்கிய ஒரு இதழை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பது மற்ற எண்ணம். நவாலியூர் சோமசுந்தரப் புலவருக்கு ஒரு நல்ல நினைவுச் சின்னம் உருவாக்க வேண்டும் என்பது மற்ற எண்ணம். இந்த இரண்டு எண்ணங்களும் சேர்ந்து தேன்மொழியை உருவாக்கிவிட்டன.” என்று முதலாவது இதழில் ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.

Continue Reading →

(கீற்று.காம்) ‘ஈழத் தமிழ் நாவல் இலக்கிய முன்னோடி’ செ.கணேசலிங்கன்

செ.கணேசலிங்கன்“கலை, இலக்கியம், நாடகம், வெகுசன ஊடகம், தீண்டாமை, சுரண்டல், வன்முறை, சித்திரவதை, சிறுவர் மீதான கொடுமை, பெண்கள் மீதான கொடுமை, ஆதிக்கம், தேசிய இனப் பிரச்சினையால் தமிழ் மக்கள் குடும்ப வாழ்விலும், சமூக வாழ்விலும் தோன்றியுள்ள அவலங்கள். தொழில்மயமாக்கலும், நகரமயமாக்கலும், நவீனமயமாக்கலும் தோற்றுவித்துள்ள மாறுதல்களும், பிரச்சினைகளும், மனித பலவீனங்களை வளர்த்துச் சுரண்டும் சந்தைப் பொருளாதார வியாபாரங்கள். நுகர்வுப் பண்பாட்டின் மனித விரோதப் போக்கு, பன்னாட்டு நிறுவனங்களின் மேலாதிக்கம், நவீன ஏகாதிபத்தியச் சுரண்டலின் பன்முகப் பரிமாணங்கள், உலகமயமாதல் என்ற பெயரில் நடைபெறும் அராஜகம். இப்படியான பல்வேறு விடயங்கள் பற்றிய விளக்கங்களாகவும், விமர்சனங்களாகவும் செ.கணேசலிங்கன் எழுத்துக்கள் அமைந்துள்ளன ” எனப் பேராசிரியர் சி.தில்லைநாதன் தமது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.

“மனிதனைப் பிணைத்திருக்கின்ற அடிமைச் சங்கிலியைத் தகர்த்தெறிவதற்கான எழுச்சி நசுக்கப்பட்டு, மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்ற மக்களுக்கு, அவர்களது விடுதலைக்கான போராட்ட உணர்வைத் தட்டி எழுப்பி உத்வேகப்படுத்தும் பண்பு மானிட நேயப்படைப்பாளிகளிடமுண்டு. சமூக, பொருளாதார அரசியல் விடுதலைக்கான போராட்டத்தை ஒரு பெரும் சக்தியாக திரட்டுவதற்கு மக்களுக்கு உத்வேகத்தைக் கொடுப்பவனே மானிடநேயப் படைப்பாளி. தோல்வியிலும், அடிமை மனப்பான்மையிலும் நீண்டகாலமாகப் பீடிக்கப்பட்டு, விரக்கியடைந்த நிலையிலுள்ள மக்களின் ஆத்மாவைத் தட்டி எழுப்பி விழிப்படையச் செய்து போராட்டப் பாதையில் அவர்களை இட்டுச் செல்லும் வல்லமை படைத்தவனே மனிதநேயப் படைப்பாளி. ”

மேலும், “ மனித குலத்திற்கு விசுவாசமாக நடப்பது, மக்களுக்கு உண்மையை எடுத்துக் கூறுவது, கசப்பான உண்மையானாலும் அதனைத் துணிவுடன் கூறுவது, மனிதர்களின் உள்ளத்திலே எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை ஊட்டி அதனை உறுதிப்படுத்துவது, அதைக் கட்டுவதிலே அவர்களுக்குள்ள ஆத்மசக்தியைப் பலப்படுத்துவது, உலக சமாதானத்துக்கும், சாந்திக்குமாகப் போராடுவது, எங்கெல்லாம் சமாதானத்துக்கான குரல் ஒலிக்குமோ அங்கெல்லாம் சமாதான வீரர்களை அந்தரங்க சுத்தியுடன் ஆதரிப்பது. முன்னேற்றத்திற்கான உண்மையான நேர்மையான முயற்சியில் மக்களை ஒன்று திரட்டுவது இதுதான் மானிடநேயனின் கடமை. ” என்று ‘ டான் நதி அமைதியாகப் பாய்கின்றது’ என்ற உலகப் புகழ்பெற்ற நாவலைப்படைத்த மிகையில் ஷொலகோ கூறியதை உள்ளத்தில் ஏற்று இலக்கியம் படைத்தவர் செ.கணேசலிங்கன்.

செ.கணேசலிங்கன் இலங்கையில் யாழ்ப்பாணம் அருகில் உள்ள உரும்பிராய் என்னும் கிராமத்தில் 09.03.1928 ஆம் தேதியன்று, க. செல்லையா-இராசம்மா தம்பதியரின் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.

தமது ஆரம்பக் கல்வியை உரும்பிராய் கிராமத்து கிறிஸ்துவப் பள்ளியில் கற்றார்.  சந்திரோதய வித்தியாசாலையில் ஆறாவது வகுப்பு பயின்றார். பின்னர், யாழ்ப்பாணம் பரமேசுவரக் கல்லூரியில் சேர்ந்து எச். எஸ்.சி. பயின்று சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார். மேலும், இவர் லண்டன் மெட்ரிகுலேசன் தேர்விலும் தேர்ச்சியடைந்தார். நாள்தோறும் காலையில் வயலில் விவசாய வேலைகளை செய்த பின்னர், கல்லூரிக்கு நடந்தே சென்று படித்தார்.  இவர் கல்வியில் மிகத் திறமை பெற்ற மாணவராக விளங்கியதால் சிறப்பு வகுப்பேற்றம் ( னுடிரடெந யீசடிஅடிவiடிn) செய்யப்பட்டார்.

எச்.எஸ்.சி. எனும் தேர்வில் தேர்ச்சியடைந்த பின் 1950 ஆம் ஆண்டு இலங்கை அரசின் பாதுகாப்புத்துறையில் எழுத்தராக பணியில் சேர்ந்து கொழும்பு மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களில்  1981 ஆம் ஆண்டுவரை பணியாற்றினார்.

மகாத்மா காந்தி 30.01.1948 அன்று படுகொலை செய்யப்பட்டதையொட்டி தமது உரும்பிராய் கிராமத்தில்  நண்பர்களுடன் இணைந்து நினவேந்தல் கூட்டம் நடத்தினார். அந்த நினைவேந்தல் கூட்டத்தில், “ மகாத்மா காந்தியின் உடல் யமுனா நதிக்கரையில் இப்போது எரியூட்டப்பட்டிருக்கும், அவர் மறைந்தாலும் அவரது கொள்கைகளை நாம் கடைபிடிப்பதனால் இங்கே நிலவும் சாதிவெறி ஒழிக்கப்பட வேண்டும். இங்குள்ள கோவில்கள் தாழ்த்தப்பட்டவர்கள் எனக் கூறப்படும். மக்களுக்குத் திறந்துவிடப்பட வேண்டும். ” என்று தீவிரமாக உரையாற்றினார்.

Continue Reading →

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க வெளியீடான ‘புதுமை இலக்கியத்தில்’யில் வெளியான அ.ந.க’வின் ‘கவிதை’ கட்டுரையிலிருந்து சில பகுதிகள்! (பெப்ருவரி 14 அ.ந.க.வின் நினைவு தினம்)

அறிஞர் அ.ந.கந்தசாமிஅண்மையில் ஜெயமோகன் ஈழத்துக் கவிஞர்கள் பற்றிச் சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி வாதப்பிரதிவாதங்களை  எதிர்கொண்டு வருமிச்சூழலில் எனக்கு அறிஞர் அ.ந.கந்தசாமி 1962இல் வெளியான ‘புதுமை இலக்கியம்’ சஞ்சிகையில் (இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க வெளியீடு)  வெளிவந்த ‘கவிதை’ என்னும் தலைப்பிலான கட்டுரையின் ஞாபகம் வந்தது. அக்கட்டுரையில் அவர் தெரிவித்திருக்கும் ஈழத்துக் கவிதை பற்றிய கருத்துகள் சிலவற்றைத் தொகுத்திங்கே தருகின்றேன். பெப்ருவரி 14 அ.ந.க.வின் நினைவு தினம் என்பதால் அதனையொட்டிய நினைவு கூர்தலாகவும் இப்பதிவினைக் கருதலாம்.


அ.ந.க.வின் ‘கவிதை’ கட்டுரையிலிருந்து:

“செந்தமிழின் பொற்காலம் என்று புகழப்படும் சங்க காலத்தில் கூட , ஈழத்துக் கவிதையின் நன்மணம் கடல் கடந்து பரவியிருந்தமைகுப் போதிய சான்றுகள் உள்ளன. தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதிலும் நடைபெற்ற இலக்கிய முயற்சிகளின் போக்கை  எடுத்து விளக்க நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, அகநானூறு, கலித்தொகை போன்ற கவிதைத்திரட்டுகளைத் தமிழ்ச் சங்கம்  வெளியிட்டது.  இவற்றில், குறுந்தொகை, அகநானூறு ஆகிய நூல்களில் ஈழத்துப் பூதந்தேவனார் எழுதிய அழகிய பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

ஈழத்துப் பூதந்தேவனார் காலத்தைக் கடந்து நிற்கின்றார்.  தமிழிலக்கியத்தின் சுவையறிந்து போலும் அவாமேலிட்டு நீலக்கடல் அதனைப் பெரும்பாலும்  உட்கொண்டுவிட்டது.  பெரியதோர் கவிஞர் பட்டியலில்  எஞ்சியிருக்கும் ஒரு சில நூற்றுவரில் பூதந்தேவனாரும் ஒருவர்.  ஆனால் அவர் மட்டுந்தானா முன்னாளில் தமிழ்க் கவிதைச் சங்கூதிய பெருமகன்? இன்னும் பலர் இருந்திருக்கலாம். ஆனால் அவர்களைப்பற்றி நாம் இன்று ஒன்றும் அறிய முடியாதிருக்கின்றது.

இன்றைய ஈழத்தில் தமிழின் தலைநகராக விளங்கும் யாழ்ப்பாணம் , ஒரு கவிவாணனின் கவிதையில் மலர்ந்த நாடு என்று கர்ண பரம்பரை கூறுகிறது. ‘மணற்றி’ என்ற பெயருடன் விளங்கிஅ இப்பிரதேசம், அந்தகக் கவி ஒருவனுக்கு அரசனொருவனால் அளிக்கப்பட்ட அன்பளிப்பு. எனவே தமிழ் ஈழத்தின் தந்தை  ஒரு கவிஞனென்று இலங்கைத் தமிழர்கள் பெருமைப்படலாம். “

“இதன் பின்னுள்ள காலத்தில் ஈழத்துக் கவிதை எந்நிலையில் இருந்தது?  இக்கேள்விகளுக்கு நாம் பதிலளிக்க முடியாதிருக்கிறது.  முற்றிலும் இருள் சூழ்ந்த பல நூற்றாண்டுகள் இவ்வாறு கழிந்து போக, அரசகேசரி என்ற குறுநில மன்னன் காலத்தில் மீண்டும் மின்னலடித்தது போல் ஒளி வீசுகிறது.  அவ்வொளியிலே நாம் ஒரு பார காவியத்தைக் காண்கிறோம்.  அப்பாரகாவியத்தின் பெயர் ‘இரகுவம்சம்’. காளிதாசனை முதநூலாகக்கொண்டு புலவனும் புரவலனுமாகிய அரசகேசரியே இதனைத் தமிழுலகத்திற்கு யாத்தளித்தான். அருகிவரும் இந்நூலைத் தமிழர்கள் யாராவது மீண்டும் பதிப்பிக்க முன்வர வேண்டும்.

Continue Reading →

வித்துவான் வேந்தனார் நூற்றாண்டு விழாக்குறிப்புகள்!

வித்துவான் வேந்தனார்- வேந்தனார் இளஞ்சேய் -அன்பிற்குரிய தமிழ் நண்பர்களே! என் தந்தையாரின்  ஐந்து உரைநூல்கள், இலங்கைத் தமிழ் மாணவர்களுக்குப், பாடப் புத்தகங்களாக , 1952  ஆம் ஆண்டிலிருந்து 1980 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இருந்தன. அவர் 1966  ஆம் ஆண்டே காலமாகிவிட்ட  போதும், அவரின் இப் பாட நூல்கள், பாடவிதானங்களில் மாற்றங்கள் ஏற்பட்ட போதும், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தமையால், மீண்டும் மீண்டும் மீள் பிரசுரம் செய்யப்பட்டன. உங்களில் பலர் இந் நூல்களை , உங்கள் 10 ஆம், 11 ஆம், 12 ஆம் வகுப்புக்களில் படித்திருந்திருப்பீர்கள். தாம் படித்த இந்துசமயபாட நூல் , பாரதியார் பாடல்கள் விளக்கவுரை, கம்பராமாயணம் கும்பகர்ணன் வதைப்படலம், கம்பராமாயணம் – சுந்தரகாண்டம்- காட்சிப் படலமும் நிந்தனைப் படலமும், கம்பரிமாயணம் அயோத்தியா காண்டம் – மந்தரை சூழ்ச்சிப் படலமும் கைகேயி சூழ்வினைப் படலமும்  போன்ற சிறந்த உரைநூல்களைப்   பற்றிப் பலர்,  என்னுடன் மிக மிகப் பெருமையாகக் கூறியுள்ளார்கள். இந்த நூல்களை எல்லாம் , அத்துடன் என் தந்தையாரால் சேமித்து வைக்கப் பட்டிருந்த, அவரின் பல நூற்றுக் கணக்கான பத்திரிகைக் கட்டுரைகள் , அவரின் கையெழுத்துப் பிரதிகள் , அவரின் பல புகைப்படங்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிடைத்தற்கரிய பழம் பெரும் தமிழ் இலக்கிய நூல்கள்  , போன்ற அரும் பெரும் பொக்கிசங்களை நாம் 1995 ஆம் ஆண்டுப் பேரழிவில் , குடிப்பெயர்வில் இழந்தோம்.

என் தந்தையாரின் ஆக்கங்களை, கடந்த சில வருடங்களாக நான் மிகச் சிரமப்பட்டுத் தேடியெடுத்து வருவதை நீங்கள் அறிவீர்கள். இன்று நான் சில நல்லுள்ளங்களின் உதவியினால் , என் தந்தையாரின் 5 உரை நூல்களையும் எடுக்க முடிந்துள்ளது. நூலகம் தாபகர் திரு பத்மநாபஜயரின் உதவியினால் மூன்று உரை நூல்களும், எனது நண்பர் திரு அருண் மனோகரனின் உதவியால் ஒரு உரை நூலும், எனது நண்பர் திருமதி குகா நித்தியானந்தன் உதவியால் ஒரு  உரை நூலும்  ஆக , ஜந்து உரை நுல்களும் கிடைத்துள்ளன. இவற்றில் நான்கு நூல்கள், நூலக இணையத்தில் தற்போது பதிவிறக்கம் செய்யப் பட்டுள்ளன. மற்றைய உரைநூல் என்னிடம் கைவசம் உள்ளது.  விரைவில் நூலகம் இணையத்தில் பதிவிறக்கம் செய்ய ஒழுங்குகள் செய்யப்படும். நூலகம் இணையத்தளத்தில், வேந்தனார் அவர்களின் நான்கு உரைநூல்கள், “தன்னேர் இலாத தமிழ்” கட்டுரை நூல், கவிதைப் பூப்பொழில்(1964 & 2010), “குழந்தைமொழி”(2010” திருநல்லூர்த் திருப்பள்ளி எழுச்சி”(1962) என்பன பதிவிறக்கம் செய்யப் பட்டுள்ளன. இவற்றை வாசித்து நீங்கள் பயனடைய முடியும்.

என்னால் தொகுக்கப்பட்டு ,2010 இல் வெளியிடப் பட்ட “வித்துவான் வேந்தனார்” என்ற நூலும் , நூலகம் இணையத் தளத்தில், எனது பெயரின் கீழ் பதிவிறக்கம் செய்யப் பட்டுள்ளது. இந்த நூல் வேந்தனார் பற்றித் தமிழ் அறிஞர்கள், அவரது நண்பர்கள், மாணவர்கள் ஆகியோர் காலத்திற்குக் காலம் எழுதிய ஆக்கங்களின் தொகுப்பாகும். வேந்தனார் பற்றி வருங்காலங்களில் ஆராய விருக்கும் தமிழ் இலக்கிய மாணவர்கட்கும், வேந்தனார் பற்றி அறிய விரும்புவர்களுக்கும் இந்நூல் மிகவும் பயன்தரக் கூடியது. வித்துவான் வேர்தனார் எழுதிய ஆக்கங்களில், எமக்குத் தெரிந்த ஆக்கங்கள் பற்றிய விபரம், இந்த நூலில் பக்கம் 146 – 154 வரை, பட்டியலிடப் பட்டுள்ளன. இவற்றில் தினகரன் பத்திரிகைக் கட்டுரைகளில்  ஓர் தொகுதியும், ஈழநாடு பத்திரிகை தொல்காப்பியக் கட்டுரைகளும், வரும்  28 சித்திரை 2019 இல், இரு கட்டுரை  நூல்களாக , இலண்டனில் வெளியிடப்படவுள்ளன. இவை இலக்கியப் பிரியர்களுக்கு பெருவிருந்தாக அமையும் என்பது எனது திடமான  கணிப்பாகும். மீதமுள்ள அவரின் பத்திரிகைக் கட்டுரைகளும் இரண்டு – மூன்று  நூல்களாக , வருங் காலங்களில் வெளியிடப்படும். அவரின் குழந்தைப் பாடல்கள் 35 இல் 13 பாடல்களை, எனதருமைத் தமக்கையார் , இறுவெட்டில் வெளியிட்டிருந்தார். எனது கடந்த மூன்று வருட தேடல்களில், அவரின் மூன்று குழந்தைப் பாடல்கள்  மேலதிகமாக , ஈழநாடு , தினகரன் பத்திரிகைகளில் இருந்து கண்டெடுக்கப் பட்டுள்ளன . ஆக அவரின் 38 குழந்தைப் பாடல்களில், இசையமைக்கப் படாத 25 பாடல்களும், தற்போது இசையுடன் இறுவெட்டில் வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். அந்தவகையில் அவரின் 38 குழந்தைப் பாடல்களும் , பிள்ளைகளின்வயதிற்கேற்ப  ,மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு , ஒவ்வொரு நூலுடனும் இறுவெட்டுக்களும் இணைக்கப்பட்டு, வரும் நூற்றாண்டு விழாவில் வெளியிடப்படவுள்ளன. இந்நூல்கள் இலங்கை, இந்தியா மற்றும் உலகெங்கும் சிதறுண்டு வாழும் நம் தமிழ்  சிறார்களுக்கு மிக மிகப் பயனுள்ளதாக அமையும்  என்பதில், எனக்கு எவ்வித ஜயப்பாடும் இல்லை. இவற்றில் கணிசமான பாடல்கள், கடந்த 65 வருடங்களாக, உங்களில் பலராலும், சிறுவயதில்  பாலர் பாடப் புத்தகத்தில், நீங்கள் படித்த பாடல்களாகும். ( காலைத்தூக்கிக் கண்ணில் ஒற்றிக் கட்டிக் கொஞ்சும் அம்மா, கும்பிடு நீ கும்பிடென்று குனிந்து சொல்லும் பாட்டி, சின்னச் சின்னப்பூனை, வெண்ணிலா, பறவைக்குஞ்சு, புள்ளிக்கோழி, மயில், கரும்பு தின்போம்  போன்ற பாடல்கள்).

Continue Reading →

அஞ்சலி: எழுத்தாளர் சீர்காழி தாஜ் மறைவு! இனிய நண்பரை, உடன் பிறவாச் சகோதரரை இழந்தோம்!

எழுத்தாளர் சீர்காழி தாஜ்இன்று மாலை முகநூலுக்குள் நுழைந்த என்னை துயரகரமான, அதிர்ச்சியினையூட்டிய செய்தியொன்று எதிர்கொண்டது. எழுத்தாளரும், இனிய நண்பரும், உடன் பிறவாச் சகோதரருமான சீர்காழி தாஜ் அவர்களின் மறைவுச் செய்திதான் அது. எழுத்தாளர் அனார் தனது முகநூற் பதிவில் தாஜ் அவர்களின் மறைவுச்செய்தியினைப் பகிர்ந்துகொண்டிருந்தார். செய்தியினை உள்வாங்குவதற்கே சிறிது கஷ்ட்டமாகவிருந்தது. நேற்றும் தி.ஜானகிராமனின் படைப்புகள் பற்றிய முகநூற் குழுமத்தில் நான் பதிவிட்டிருந்த முகநூற் பதிவொன்றுக்குத் தன் கருத்துகளை ‘அன்பு  கிரி’ என்று ஆரம்பித்துப் பகிர்ந்துகொண்ட எழுத்தாளர் சீர்காழி தாஜ் அவர்களா மறைந்து விட்டார். அவரது அங்கத்தம் தவழும் எழுத்து நடைக்கு நான் எப்பொழுதுமே அடிமை. நண்பர் எழுத்தாளர் தாஜ் அவர்கள் மறைந்த செய்தி ஏற்படுத்திய துயரத்தை  அளவிட வார்த்தைகளேதுமில்லை.

சிந்தனைக்குருவி தன் சிறகுகளை அடிக்கின்றது. நண்பர் தாஜை முதன் முதலில் அறிந்த காலகட்டம் நினைவுக்கு வருகின்றது. தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடுகளாக வெளியான எனது ‘அமெரிக்கா (தொகுப்பு) மற்றும், மறும் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு நூல்களைத் தமிழக நூல் நிலையக் கிளையொன்றில் கண்டு, வாசித்துவிட்டுத் தன் கருத்துகளை ஆக்கபூர்வமான முறையில் நீண்ட இரு கடிதங்களாக எழுதி அனுப்பியிருந்தார். பின்னர் வைக்கம் முகம்மது பசீரின் ‘எங்கள் தாத்தாவுகு ஆனையொன்றிருந்தது’ நூலினைக் கனடாவில் வசிக்கும் தனது நண்பர் ஒருவர் மூலம் அனுப்பிருந்தார்.

‘பதிவுகள்’ இதழில் அவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.  இந்நிலையில் நண்பர் தாஜிம் மறைவுச் செய்தி மிகுந்த அதிர்ச்சியினையே தந்தது. அச்செய்தினைக் கனவில் கூட எதிர்பார்த்திராத நிலையில் அச்செய்தி மிகுந்த அதிர்ச்சியினைத்தந்தது. கூடவே அளவிட முடியாத துயரையும் தந்தது.

நண்பர் தாஜின் சிறுகதைகள், குறுநாவல் ஆகியன உள்ளடங்கிய தொகுதியின அண்மையில்தான் காலச்சுவடு பதிப்பகத்தினர் வெளியிட்டிருந்தனர். தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் தொகுதிகளிலொன்று அத்தொகுதி.

சீர்காழி தாஜ் கவிதைகள், கதைகள் என்று இவரது எழுத்துப்பங்களிப்பு பன்முகத்தன்மை வாய்ந்தது. இணைய இதழ்கள் (பதிவுகள் உட்பட) , தமிழகத்து வெகுசன மற்றும் சிற்றிதழ்கள் எனப்பல ஊடகங்களில் இவரது பல படைப்புகள் வெளியாகியுள்ளன. ஆனந்த விகடனின் பவளவிழாப்போட்டிகளில் இவரது கவிதைகள் முத்திரைக்கவிதைகளாக வெளியாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. தாஜ் அவர்கள் ‘தமிழ்ப்பூக்கள்’ என்னும் வலைப்பதிவினையும் நடாத்தி வருகின்றார். http://tamilpukkal.blogspot.ca/

எழுத்தாளர் தாஜ் அவர்களின் மறைவினால் துயருறும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் (முகநூல் நண்பர்களுட்பட) அனைவருக்கும் எனது மற்றும் ‘பதிவுக’ளின் ஆழ்ந்த இரங்கல்கள். கூடவே ‘பதிவு’களில் , முகநூலில் வெளியான அவர் பற்றிய குறிப்புகளையும் மீண்டுமொருமுறை பகிர்ந்துகொள்கின்றேன்.

Continue Reading →

பெண் சாதனையாளர் முனைவர் நா.நளினிதேவி

பெண் சாதனையாளர் முனைவர் நா.நளினிதேவி  - முனைவர் இர.ஜோதிமீனா -சாதனைப் பெண்கள் வரிசையில், முன்னிலையில் வைத்துக் கொண்டாடப்பட வேண்டியவர் முனைவர் நா.நளினிதேவி ஆவார். இவர் மிகச் சிறந்த ஆய்வறிஞர். படைப்பிலக்கிய வித்தகர். பெண்ணியத்தையும் பெரியாரியத்தையும் தன்னிரு விழிகளாகப் போற்றி வருகிற பேரறிஞர். எழுபதைக் கடந்த நிலையிலும் இருபதிற்கே உரிய இளமை வேகத்தோடு இவர் இலக்கிய வெளியில் இடையறாது இயங்கி வருவது பாராட்டுக்குரியது.

‘தமிழே நீ ஓர் பூக்காடு நான் அதிலோர் தும்பி’ எனும் தமிழ்ப்பற்று மிக்க பாரதிதாசனைப் போன்று தமிழுணர்வோடு தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும் பணிகளைச் செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இயங்கி வருகிறார் முனைவர் நா.நளினிதேவி அவர்கள்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் 1945ஆம் ஆண்டு சூன் திங்கள் 26ஆம் நாள் நாகரத்தினம்-சுப்புலெட்சுமி இணையருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். உடன் பிறந்தோர் இருவர். தங்கையும் தம்பியும். இவரது துணைவர் வiலாற்றுப் பேராசிரியர்.வே.மாணிக்கம் அவர்கள். வரலாறு தொடர்பான ஆய்வு நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் எழுதியிருக்கிறார்

1962 முதல் 1968 வரை மதுரை பாத்திமா கல்லூரியில் புகுமுக வகுப்பு தொடங்கி முதுகலை வரை பயின்றுள்ளார். மதுரை பல்கலைக்கழகத்தின் முதல் முதுகலை பட்டதாரிகளுள் ஒருவரான இவருக்கு வாய்த்த பேராசிரியர்கள் அ.சிதம்பரநாத செட்டியார், அ.கி.பரந்தாமனார், சுப.அண்ணாமலை, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், மொ.துரையரங்கனார், விசயவேணுகோபால் முதலான தமிழ் ஆளுமைகளிடம் தமிழ் கற்றதால் இவருக்குள் இருந்த தமிழ்ப்பற்று ஆழமாக வேரூன்றிச் செழுமைப் பெற்றது.

கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் 1965இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு எழுச்சியில் கலந்து கொண்டு சிறை சென்றார். ஈழத்தமிழர்கள் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்ட இவர் 1980இல் நடந்த ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

1969இல் அருள்மிகு மீனாட்சி அரசு கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியேற்ற இவர் சேலம், திருப்பூர், நாமக்கல், புதுக்கோட்டை எனப் பல அரசு கல்லூரிகளில் பணியாற்றி 2004இல் பணி நிறைவு பெற்றார்.

தமிழறிவும் தமிழ்ப்பற்றும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே தமிழ் தழைக்கும் என்பது இவரது கருத்து. விளைநிலங்களாகிய மாணவர் சமுதாயத்திற்கு, தமிழ்ப்பற்று, தமிழறிவு எனும் உரமிட்டு செழித்து வளம் பெறவேண்டும் என்பது இவரது நிலைப்பாடு. கற்பித்தல் பணியில் முழுமையாக ஈடுபட்ட பல ஆசிரியருள் இவரும் ஒருவர். வழக்கமான ஒரு தமிழ்ப்பேராசிரியர் போல் அல்லாமல் தனக்கெனத் தனி பாதை வகுத்துக்கொண்டு, மாணவர்களிடம் நேசமும் தமிழ்உணர்வைத் தட்டியெழுப்புவதுமாய் இவரது தமிழ்ப்பணி அமைந்தது. காலங்காலமாய் ஒடுக்கப்பட்டு வந்த தமிழ்த்துறைக்கும் தமிழ் மாணவர்களுக்கும் தமிழ் என்பது உரிமையுணர்வு, தன்மதிப்புமிக்கது என்பதை உணர்த்தும் முறையில் செயல்பட்டதால் பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டார்.

Continue Reading →

எண்பது அகவையில் பேராசிரியர் சண்முகதாஸ்! நினைவழியா நாட்களில் நீடித்து வாழும் கலை, இலக்கிய சகா!

பேராசிரியர் அ.சண்முகதாஸ்பேராசிரியர் சண்முகதாஸ், வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் 1950 களில் எனக்கு மூன்று வகுப்புகள் மூத்தவராகக் கல்வி பயின்றவர். நான் எனது 11ஆவது வயதில் அப்பாடசாலையுள் தயங்கித் தயங்கிக் கண் விழிக்காத பூனைக்குட்டியாகக் காலடி வைத்தபோது எனக்கு வயது 11. சண்முகதாஸுக்குவயது 14. தன் இனிய குரலால் அனைவரையும் வசீகரித்து அனைவரும் அறிந்த சிறுவனாக இருந்தார் சண்முகதாஸ். அண்ணன் என்றுதான் நாம் அவரை அன்று அழைத்தோம். என்னைப்போல அவரும் கட்டையானவர். வண்டுகள் போல நாம் அங்கு ஓடித்திரிவோம். 6 வருடங்கள் அந்த விடுதியில் நாங்கள்ஒன்றாக வளர்ந்தோம். 1954 ஆம் ஆண்டு மஹா பாரதம் தழுவிய நச்சுப் பொய்கை எனும் பாடசாலை நாடகம் ஒன்றில் 15 வயது சண்முகதாஸ் கதாயுதம்தாங்கி ஹா ஹா என்று சப்தமிட்டபடி வீமனாக மேடைப் பிரவேசம் செய்தமையும், கையினால் தண்ணீர் பருகாது பொய்கையிலிருந்த தண்ணீரைகதையினால் அடித்து அடித்து வாயினால் ஆவ் ஆவ் எனப் பருகிய காட்சியும் இப்போது ஞாபகம் வருகிறது.

திருகோணமலைக் கிராமம் ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பெற்று அக்கல்லூரிக்கு அவர் வந்திருந்தார். அவர் வந்து மூன்றுவருடங்களின் பின் மட்டக்களப்புக் கிராமம் ஒன்றிலிருந்து நான் ஐந்தாம் வகுப்புப் புலமைபரிசில் பெற்று, புலமைப்பரிசில் பெற்றோர் பயில கன்னங்கரா திட்டத்தில் உருவான அந்த மத்திய கல்லூரியில் கல்வி பயிலச் சென்றேன். விடுதி வாழ்க்கை. சண்முகதாஸ் அவரது வகுப்பில் என்றும் முதன்மாணவர். அவருடன் போட்டிக்கு நின்றார் அருணாசலம் என்ற மாணவர். படிப்பில் இருவரும் தீரர். அருணாசலம், சண்முகதாஸின் உயிர் நண்பன். திரியாயைச் சேர்ந்த இருவரும் கெட்டிக்காரர்கள். இணைபிரியா இரட்டையர்கள். அவர்களை எமக்குமுன்னுதாரணங்களாக ஆசிரியர்கள் காட்டுவர். இருவரும் ஒரு நாள் சாரண இயக்க காரியமாகச் சென்றபோது, ஒருகுளத்தில் இருவரும்சிக்குப்பட்டுக்கொண்டனர். அருணாசலம் காலமானர். சண்முகதாஸ் அதிஷ்டவசமாகத் தப்பித்துக்கொண்டார். அருணாசலத்தின் உடல் பாடசாலைமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தபோது சண்முகதாஸ் நண்பனுக்காக இரங்கி குலுங்கிக் குலுங்கி அழுத குரல் இன்னும் காதில் கேட்கிறது. கல்விப்பொது சாதாரண தர வகுப்பு சித்தியடைந்ததும், வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்பு அன்று இன்மையினால் மட்டக்களப்புசிவானந்தா கல்லூரியில் இணைந்து அங்குள்ள விடுதியில் சேர்ந்து இரண்டு வருடங்கள் கல்வி கற்றார் சண்முகதாஸ். அது அவருக்கு இன்னுமோர் அனுபவமாயிற்று.

இராமகிருஷ்ண மிசன் வளர்ப்பு அவரை மேலும் பதப்படுத்தியது. வளப்படுத்தியது. அங்கிருந்து பல்கலைக்கழகம் தெரிவாகிப்பேராதனைப் பல்கலைக்கழகம் சென்றார். அங்கு அவர்தன் கூரிய அறிவாலும் நல்ல குணங்களாலும், பேராசிரியர் கணபதிப்பிள்ளை, வித்தியானந்தன், கைலாசபதி, செல்வநாயகம் ஆகியோரின் மிக விருப்புக்குரிய மாணவரும் ஆனார். 1961 இல் அவர் பேராதனைப் பல்கலைத் தமிழ்ச்சங்கத் தலைவராயிருந்தார். அப்போது அவர் மாணவர்.

அவர் தலைமையில் பட்டப்பகலில் பாவலர்க்குத்தோன்றுவது எனும் கவி அரங்கு நடைபெற்றது. அக்கவி அரங்கப்போட்டியில் முதற்பரிசு பெற்ற என் கவிதையை நான் அரங்கேற்றினேன். மூன்றாவது பரிசு பெற்ற அவரது கவிதையை மனோன்மணி முருகேசு அரங்கேற்றினார். இவரே பின்னர் மனோன்மணி சண்முகதாஸ்  ஆனார். அது ஓர் காதல் காவியக் கதை. பேராசிரியர் வித்தியானந்தன் 1960 களில் கூத்து மீளுருவாக்க இயக்கம் ஆரம்பித்தபோது, அதன் உள் விசைகளில் சண்முகதாஸும் ஒருவரானார்.  1960 களில் பேரா.வித்தியானந்தன் தயாரிப்பில் கர்ணன் போரில் அவர் கிருஸ்ணனாக வர, நான் கர்ணனாக வந்து இருவரும் பலமேடைகளில் ஆடிப் பாடியமை ஞாபகம் வருகிறது.

Continue Reading →

முகநூல்: தொடக்கமும் தொடர்ச்சியும் விடை பெறுதல் ​ – பிரபஞ்சன்

– எழுத்தாளர் பவா செல்லத்துரை எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவையொட்டி எழுதிய முகநூற் பதிவிது. நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம். – பதிவுகள்.காம்

நெருக்கடிமிக்க சென்னை அண்ணா சாலையின் தென்புறம் நாங்கள் நான்கைந்து நண்பர்கள் நிற்க, மார்பில் அணைக்கப்பட்ட நான்கு பீர் பாட்டில்களோடு சாலையைக் கடந்த பிரபஞ்சனிடம் அந்த இரவு பத்துமணிக்கு சிலர் நின்று ஆட்டோகிராப் கேட்டார்கள். பீர் பாட்டில்களை அவர்கள் கையிலேயே தற்காலிகமாகத் தந்துவிட்டு சாலை ஓரமாக நின்று கையெழுத்திட்டுத் தந்த பிரபஞ்சனைப் பார்த்து, “இதெல்லாம் வேணாம் சார், உங்களுக்கென்று தமிழ்நாட்டில் ஒருபெரிய இமேஜ் இருக்கு ” என்று சொன்ன என்னை தடுத்து, “அப்படி ஒரு பொய்யான இமேஜை நான் வெறுக்கிறேன் பவா. நான் எதுவாக இருக்கிறேனோ அப்படியான பிம்பம் மட்டுமே வெளியிலேயும் பதிவாக வேண்டும். நான் எப்போதாவதுதான் குடிப்பவன். அது வெளியே தெரிய வேண்டாமெனில் இதை இனி தொடக்கூடாது இல்லையா” என்ற அப்படைப்பாளியின் கையிலிருந்த பாட்டில்களை கொஞ்சநேரம் என் கைகளுக்கு மாற்றி நடந்தது நினைவிருக்கிறது. எவர் கைகளிலேயும் நிரந்தரமாக அடக்கிவிட முடியாத நீர் தான் பிரபஞ்சன் எனத் தோன்றும். என் கல்லூரிப் படிப்பை முடித்து, இலக்கியம் நோக்கி வெறிகொண்டலைந்த காலத்தில் கி.ரா. பற்றிய ஒரு இலக்கியக்கூட்டத்தில்தான் பிரபஞ்சனை முதன்முதலில் பார்த்தேன். பட்டு வேட்டி, பட்டுச் சட்டை போட்டு கையில் புகைந்த ஒரு சிகரெட்டோடு அரங்கவாசலில் நின்றிருந்த அவரை ஏனோ அப்படிப் பிடித்துவிட்டது. எனக்கு அது இத்தனை ஆண்டுகளாகியும் அகல மறுக்கும் அன்பின் அடர்த்தி. பத்தாயிரம் ரூபாயை கவரில் வைத்து கொடுப்பார்கள் என்ற நிச்சயத்திற்காக, ஒன்றுமேயில்லாத ஒருவனை உலகக்கவி என்றும், தன் படைப்பு அவன் அதிகாரக் காலடியில் அச்சேறக்கூடும் என்ற எதிர்பார்ப்பில், அவன் எழுத்து நோபலுக்கும் மேலே என எழுதுகிற பலபேருக்கு மத்தியில் பிரபஞ்சன் என்ற அசல் இன்றளவும் தமிழ்வாசிக்கும் பலராலும் நேசிக்கப்படுவதற்கு அவரிடம் இயல்பிலேயே இன்றளவும் இருந்து வருகிற இந்த எளிமையும் உண்மையும்தான் காரணம்.

தகுதிபெறாத படைப்புகள் எதுவாயினும், அதை எழுதியவன் இந்தியாவின் பிரதமரேயாயினும் தன் கால் சுண்டுவிரலால் அவர் எத்தித் தள்ளிய சம்பவங்கள் இலக்கிய உலகம் அறிந்தவைதான். எதிலும் எங்கும் நிலைத்திருக்கத் தெரியாத படைப்பாளிகளுக்கேயுள்ள அலைவுறும் மனம் கொண்டவர் பிரபஞ்சன். முறையாகத் தமிழ் படித்து, முதன்முதலில் மாலைமுரசு பத்திரிகையில் ஒரு நிருபராகத் தன் வாழ்வைத் துவக்குகிறார். துவக்கத்திலேயே உண்மையின் குரூர முகம் அச்சேற்ற மறுத்து அவரை வெளியேற்றுகிறது; அல்லது அவரே வெளியேறுகிறார். மானுட ஜீவிதத்தின் இந்த எழுபத்து மூன்று வயது வரை அவருக்கு ஏற்பட்ட முரண்பாடுகளையும், சமூக வாழ்வில் ஒரு படைப்பாளியால் சகித்துக்கொள்ள முடியாத அருவருப்பு மிக்க சமரசங்களையும் உதறித் தள்ளுபவராகவும், எதிர்கால லௌகீக வசதிகளைப் பற்றி எந்தக்கவலையுமின்றி ஆரம்பத்தில் தன் உடல் மீதேறிய அதே உற்சாகத்துடன் கடற்காற்றின் குளுமையுடனும், சுதந்திரத்துடனும் நம்மோடு அலைந்து திரியும் எளிய படைப்பாளியாகவும்தான் பிரபஞ்சனை ஒவ்வொருவருமே உணரமுடியும்.

Continue Reading →

தமிழச்சி தங்கபாண்டியனின் கவிதை உலகம்! கவி காளிதாசரின் “சகுந்தலை”யை பெண்ணடிமை கோட்பாடுகளிலிருந்து விடுவிக்கும் கவிஞர்!

உயிரிபமும் எப்பொழுதே தான் வசிப்பதற்கு ஓரில்லத்தைக் கண்டடையும்.(மெல்பனில் நடைபெற்ற தமிழச்சி தங்கபாண்டியனுடனான இலக்கியச் சந்திப்பில் சமர்ப்பிக்கப்பட்ட நயப்புரை)


சாந்தி சிவக்குமார்கவிதை நான் பயணப்படாத தளம். சிறுகதைகளிலும் புதினங்களிலும் இயல்பாக இலகுவாக பயணிப்பதுபோல், கவிதை கைவரவில்லை. மனம் இன்னும் அதற்குப் பக்குவப்படவில்லை என்று நினைக்கிறேன். தமிழச்சி தங்கபாண்டியனின் பல கவிதைகள் ஒரு சிறுகதைக்குரிய கருவை தாங்கியிருப்பதும், என் மனம் அதை சிறுகதையாய் மாற்ற முயற்சித்ததும், பின் அதை நான் கட்டியிழுத்து அடுத்த கவிதைக்கு இட்டுச்செல்வதும் என முதல் நான்கு நாட்கள் ஓடியேவிட்டது. தமிழச்சி, தன் மனதிற்குள் பல நாட்களாய் பொத்திவைத்து அடைகாத்ததை கவிதை முத்துக்களாய் ஒரு சில வரிகளில் படைப்பது பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆடம்பரமற்று, எளிமையான வார்த்தைகளால் எல்லோரும் அனுகும்விதமாக , எல்லோருக்கும் புரியும் விதமாக இவரது கவிதைகள் உள்ளன. எப்படி எளிமையான சொற்களால் ஆனதோ, அதேமாதிரி எளிமையான மனிதர்கள், அன்றாட நிகழ்வுகள், வாழ்க்கைப்பாடுகள், சின்னச்சின்ன இழப்புகள் என இவர் கவிதைகளாலும், நாம், நம் அன்றாட வாழ்க்கையுடனும் எண்ணங்களுடனும் இணைத்துக்கொள்ளலாம்.

இவரது கவிதைகளை வாசிக்கும்பொழுது, தமிழச்சி மறைந்து, கிராமத்துப்பெண்ணான சுமதியே மனதில் வலம்வருகிறார். கிராமத்திலிருந்து பெருநகரத்திற்கு இடம்பெயர்ந்தமையால் அவரது மனதிற்குள் தோன்றும் உணர்வுகளை கவிதையாக பதிவுசெய்கின்றார்.  

தீப்பெட்டி பொண்வண்டு என்ற கவிதையில்,

அதிகாலைத் தூக்கம்… அசங்கியிருக்கும்
வானம் பார்த்துக் கலைகின்ற வரம்
கிராமம்விட்டு நகரத்தில் குடிவந்த நாள் முதல்
பக்கத்துக் குடியிருப்பும் பார்க்காதிருக்க இறுகப்பூட்டப்படும்
சன்னல்களின் உயிரற்ற திரைச்சேலைகளில் நிலைக்கின்ற சாபமானது.  

இக்கவிதையில் கவிஞர், பெருநகரத்து வாழ்வில் தான் இழந்ததை கூறுகிறார். ஆனால், இன்றைய சென்னை வாழ்க்கையும் அன்று நான் வாழ்ந்த சென்னை வாழ்க்கையும் வேறு வேறு! தமிழச்சி தனது கிராமத்து வாழ்க்கையை கூறும்போது, நான் வளர்ந்த சென்னை வாழ்க்கையைத்தான் நினைத்துக்கொள்கிறேன்.

கோடைகாலம் முழுவதும் மொட்டை மாடியில் தண்ணீர் ஊற்றி தரையை குளிர்வித்து, பக்கத்து மாடியில் உள்ளவர்களிடம் கதைபேசி, Transistor இல் பாட்டுக்கேட்டு, தூங்கிய நாட்கள். காலைக்கதிரவனின் வெளிச்சம் படரும்பொழுது, விழித்ததும் – விழித்தும் விழிக்காமலும் சுகமாய் படுத்திருக்கும் அந்த பத்து நிமிடம்….! பக்கத்துவீட்டு தொலைக்காட்சி செய்திவாசிப்பதும், எங்கிருந்தோ வரும் கோயில் மணியோசையும், உடன் ஒலிக்கும் மசூதியின் பாங்கு சத்தமும் என இவரது கிராமத்து வாசனை கவிதைகள் அனைத்தும் எனக்கு என் கிராமத்து சென்னையை நினைவுபடுத்தின.

Continue Reading →

தமிழ் எழுத்துலக எழிச்சியின் வடிவம் எஸ்.பொ

– புரட்சிகரமான எழுத்தால் புதுவித உத்திகளைக் கையாண்டு தமிழ் எழுத்து உலகில் தனக்கென ஒரு இடத்தினை பெற்று நின்ற ஈழத்து எழுத்துலகச் சிற்பி  எஸ்.பொ அவர்களின் நினைவு தினமான இன்று (நவம்பர் 26)  அவருக்கு இக்கட்டுரை சமர்ப்பிக்கப்படுகிறது. –

தமிழ் எழுத்துலக எழிச்சியின் வடிவம் எஸ்.பொ     - எம். ஜெயராமசர்மா... மெல்பேண் ... அவுஸ்திரேலியா , முன்னாள் கல்வி இயக்குநர் -எஸ்.பொ என்னும் பெயர் எழுத்துலகில் ஒரு முத்திரை எனலாம்.அவரின் முத்திரை எழுத்துக்கள் அத்தனையும் தமிழ் இலக்கியப்பரப்பில் தனியான இடத்தினைத் தொட்டு நிற்கிறது என்பதை அவரை விமர்சிப்பவர்களும் ஏற்றுக்கொள்ளுவார்கள். 1947 இல் கவிதை மூலமாக எழுத்துத் துறைக்குள் புகுந்து – சிறுகதை, நாவல் , விமர்சனம், கட்டுரை, உருவகக்கதை,மொழிபெயர்ப்பு , நாடகம், என அவரின் ஆற்றல் பரந்துவிரிந்து செல்வதையும் காண்கிறோம். எஸ்.பொ என்னும் பெயரைக் கேட்டாலே பலருக்கும் ஒருவித பயம் ஏற்படுவது உண்டு. அவரின் காரசாரமான அஞ்சாத விமர்சனமேயாகும். எழுத்திலோ பேச்சிலோ பயங்காட்டாத தனிப்பட்ட ஒருவராக இவர் இருந்தார்.  இதுவே அவரின் தனித்துவமும் பலமாகவும் பலவீனமாகவும் இருந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

ஈழத்தில் இலக்கிய வரலாற்றில் பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி இருவரும் என்றுமே ஒருவரப்பிரசாதமாகவே இருந்தார்கள். அவர்களை எதிர்க்கும் துணிச்சல் யாருக்கும் இருக்கவில்லை.ஆனால் எஸ். பொன்னுத்துரை மட்டும் தனது ஆற்றலின் துணிச்சலால் இவர்களையே ஒருபக்கம் வைத்துவிட்டார். இதுதான் எஸ்.பொ என்னும் இரண்டெழுத்தின் வீறுகொண்ட படைப்பாற்றல் என்றே எண்ண வேண்டி இருக்கிறது. ஆங்கிலமொழியில் நல்ல பாண்டித்தியமும் தமிழில் அதே அளவு ஆற்றலும் மிக்கவராக இவர் இருந்தமையும் இவரின் துணிவுக்கு ஒரு காரணமாகவும் இருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது. பல தமிழ் எழுத்தாளர்கள் தம்மைப் பல்கலைக்கழக மட்டத்திலுள்ள பேராசிரியர் எதிர்த்தால் துவண்டுவிடுவார்கள். ஆனால் எஸ்.பொ இதற்கு விதிவிலக்காகி தனித்து நின்று தனக்கென ஒருவழியில் பயணித்து உச்சியைத் தொட்டு நின்றார். இவருக்கு இதனால் பல எதிர்ப்புகள் வந்தன. இதனாலேயே பல அரச விருதுகளும் வழங்கப்படாநிலையும் காணப்பட்டது. ஆனாலும் எஸ். பொ இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தனது எழுத்தூழியப் பணியினை வீறுடன் செய்து வெற்றிவீரனாகவே விளங்கினார். எழுதினார் எழுதினார் எழுதிக் குவித்தார் எனலாம்.எதையும் எழுதுவார். எப்படியும் எழுதுவார். எதிர்த்தாலும் எழுதுவார். ஏசினாலும் எழுதுவார். எழுத்தை எஸ்.பொ.ஒரு தவமாகவே கருதினார் என்றுகூடச் சொல்லலாம். பொன்னுத்துரை பச்சை பச்சையாகவே எழுதுகிறார். படிக்கவே கூசுகிறது என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தாலும் பொன்னுத்துரையின் எழுத்தை யாவருமே ரசித்தார்கள். 1961 ஆம் ஆண்டில் ” தீ ” என்னும் நாவல் வெளிவந்து யாவரையும் திக்குமுக்காடச் செய்தது. இப்படியும் எழுதுவதா ? இது ஒரு எழுத்தா ? இவரையெல்லாம் எப்படி எழுதுவதற்கு அனுமதித்தார்கள் என்றெல்லாம் மிகவும் கடுமையான, காரசாரமான, விமர்சனங்கள் எல்லாம் பறந்து வந்தன.எஸ்.பொ.வை யாவருமே வித்தியாசமகவே பார்த்தார்கள்.ஆனால் பொன்னுத்துரையின் மனமோ தான் எழுதியது தர்மாவேஷம் என்றே எண்ணியது. ” தனது பலவீன நிலைகளில் செய்வனவற்றையும் அனுபவிப்பனவற்றையும் சொல்லவும், ஒப்புக்கொள்ளவும் ஏன் கூச்சப்பட வேண்டும் ? ” என்று எஸ்.பொ. வே தீயின் முன்னுரையில் எழுதுவதை நாம் உற்று நோக்குதல் வேண்டும். இந்த நாவலை எஸ்.பொ இன்று உயிருடனிருந்து மீண்டும் எழுதினாலும் வேறு மாதிரியாக எழுதியிருக்க மாட்டார். காரணம் அதுதான் அவரின் எழுத்தின் சத்திய ஆவேஷம். வேஷம் தரித்து அவரால் எழுதமுடியவில்லை. முகமூடி அணிந்து எழுதுவதையும் அவர் தனதாக்கிக் கொள்வதில்லை.

Continue Reading →