The return of the English Disease? உலககோப்பை கால்பந்து போட்டியும் அதன் பின் உள்ள ஆபத்து அரசியலும்

“காலடியில் வந்து சேரும் பந்து என்னுடையதல்ல, அது என் குழுவினுடையது என்று எப்போதும் நினை. நீதான் கோல் போட வேண்டுமென ஒரு போதும் நினைக்காதே. உனக்குப் பெரும் தடைகள் சூழ்ந்து வரும்போது, பந்தை மேல் எடுத்துச் செல்ல வசதியுடன் உன் சக ஆட்டக்காரர்கள் காத்துக் கொண்டிருப்பதை ஒரு கணமும் மறக்காதே”.  – சுந்தரராமசாமி ( ஜே.ஜே. சில குறிப்புக்களில்) –


The return of the English Disease?  உலககோப்பை கால்பந்து போட்டியும் அதன் பின் உள்ள ஆபத்து அரசியலும்  மீண்டும் உலக கால்பந்து போட்டியொன்று ஆரம்பமாகியுள்ளது. உலகின் பெரும்பாலான மக்கள் அதனால் பின்னப்பட்ட மாய வலையின் பிரமிப்பிலிருந்து விடுபடாமல் குடும்பங்கள், வேலைகள், நோய்கள், கடன் சுமைகள் என அனைத்து பிரச்சினைகளையும் மறந்து அதில் லயிக்க ஆரம்பித்து விட்டனர். சாதாரண அடித்தட்டு மக்கள் மட்டுமன்றி, படித்தவர்கள், அறிவு ஜீவிகள், சமூக அக்கறையுள்ளவர்கள் கூட அதன் பிடியில் சிக்குண்டு ஒரு வித போதையுணர்வோடு தமக்கு பிடித்தமான அணியின் வெற்றி தோல்விகளுக்கு பின்னான களிப்பிலும் கலக்கத்திலும் மாள்ந்து போயுள்ளார்கள்.

கால்பந்து – ஆதியில் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சீனாவில் ஆரம்பிக்கப் பட்டு பின்பு இங்கிலாந்தில் நவீனமயப்படுத்தப் பட்டு இன்று People Game  என்று சொல்கின்ற அளவிற்கு உலகின் பெரும்பாலான மக்களின் வாழ்வில் (அமெரிக்கா, இந்தியா போன்ற ஒரு சில நாடுகளைத் தவிர) பின்னிப் பிணைந்துள்ள ஒரு அற்புதமான விளையாட்டு ஆகும். ஆயினும் இம் மக்கள் விளையாட்டானது இன்று முற்று முழுதாக வணிகமயப் படுத்தப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களினதும் பல வணிக நிறுவனங்களினதும் கைகளுக்குள் சிக்குண்டு அதன் தனித் தன்மையை இழந்து வருகின்றது. அத்துடன் ஊழல் மிகுந்த பல அரசியல்வாதிகளினதும் அதிகாரிகளினதும் கறை இதற்குப் பின்னால் எவ்வளவு தூரம் உள்ளன என்பதுவும் இன்று மக்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படத் தொடங்கியுள்ளன. இதற்கு உதாரணமாக 2022 உலக பந்து தொடரிற்காக Qatar தெரிவு செய்யப்பட்ட முறையும் அதன் பின்னால் நடை பெற்ற பல்லாயிரக்கணக்கான கோடி டொலர்கள் ஊழலையும் நாம் குறிப்பிடலாம். இதன் காரணமாக உலக கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பில் இருந்து அதன் தலைவர்  Sepp Platter  அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டமையும் நாம் அறிந்தவையே.

இம்முறை இங்கிலாந்து அணியானது பல தடைகளையும் தாண்டி மிகவும் இலகுவாக கால் இறுதி ஆட்டத்திற்கு நுழைந்துள்ளது. இன்னும் எவ்வளவு தூரம் இவர்கள் முன்னேருவார்களோ தெரியாது. ஆனால் இங்கிலாந்து கால்பந்து ரசிகர்களின் வன்முறையும் இனவாதச் செயல்களும் நிறவெறிக் கூச்சல்களும் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. இங்கிலாந்து கால் பந்து ரசிகர்கள் சங்கங்களும் அணிகளும் ஏற்கனவே 1985 இல் Heysel Stadium disaster, 1989 இல் Hillsborough disaster என பல நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலி கொண்ட, பல கறுப்பு அத்தியாயங்களை தனது வரலாறாக கொண்டுள்ளது. இதனால் பல வருடக் கணக்காக பல நாடுகளிலும் தடை செய்யப்பட்ட சம்பவங்களும் வரலாற்றில் நிறையவே உண்டு. இன்றும் இவர்களால் கறுப்பு விளையாட்டு வீரர்கள் குரங்குகளாக எள்ளி நகையாடப்படுகிரார்கள். அவர்கள் மீது வாழைப்பழத்தோல்கள் வீசப்படுகின்றன. இனவாதத்தை கக்கும் Anti Semitism சுலோகங்களும் ஆசியர்களுக்கு எதிரான சுலோகங்களும் இன்னமும் பாடப்படுகின்றன. 

“நான் யூதர்களை வெறுக்கிறேன். ஆனால் இந்தியருடனும் பாகிஸ்தானியுடனும் ஒப்பிடும்போது அவர்கள் பரவாயில்லை”

போன்ற இனவாத சுலோகங்கள் இன்னமும் பாடப்படுகின்றன. இதனை அரசுகளும் அதிகாரிகளும் வெறும் வேடிக்கைதான் பார்க்கின்றனர். ஒரு சில பத்திரிகைகள் மட்டும் இவை கொஞ்சம் அதிகமாகப் போகும்போதும் எல்லைகளை மீறும்போதும் மேற்குறித்த தலைப்பில் The Return of the English Disease  என்ற செய்தியினை மட்டும் பகிர்ந்து விட்டு பேசாமல் இருந்து விடுகின்றன.

நேற்று ( 07.07.2018) நடந்த காலிறுதி ஆட்டத்தில் சுவீடன் அணியினரை வென்ற பின்பு இவர்கள் நடாத்திய வன்முறையின் உச்சக்கட்டம் அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த பல Ikea நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. போக்குவரத்துக்கள் தடை செய்யப்பட்டன. சுவீடனின் தேசியக்கொடியின் கலராகிய மஞ்சள் நிறத்தைக் கொண்டிருந்த ஒரேயொரு காரணத்திற்காக ஒரு அம்புலன்ஸ் வண்டியொன்று அடித்து நொறுக்கப்பட்டது. எவ்வளவு பாமரத்தனம்? இது எமது மக்களுக்கு சேவை செய்யும் எமது மக்களின் உயிரைக் காக்கும் ஒரு வாகனம் என்ற அடிப்படை அறிவு கூடவா இவர்களுக்கு இல்லை. 

இன்று இங்கு இங்கிலாந்தில் மட்டுமல்ல அநேகமான ஐரோப்பிய நாடுகளில் நியோ நாசிக்கட்சியினரும் நிறவாத, இனவாதக் குழுக்களும் கால் பந்து ரசிகர்களாக உருவாக்கப்பட்டு உள்வாங்கப்பட்டு தமது இனவாத, நிறவெறிப் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். ரஷ்சியா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, மற்றும் பல கிழக்கைரோப்பிய நாடுகளில் இதன் உக்கிரம் மிக அதிகமாக உள்ளது. 2081 உலக கோப்பைத் தொடர் ரஷ்சியாவில் நடைபெறும் என்ற அறிவிப்பு வந்தவுடனேயே, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற அணிகளில் விளையாடும் பல கறுப்பு அணி வீரர்கள், தாம் ரஷ்சியாவில் நடைபெறும் போட்டியில் பங்கு கொள்ளப் போவதில்லை என்று அறிவித்திருந்தனர். பின்பு அவர்களுக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குரிய உறுதி மொழிகள் அறிவிக்கப்பட்ட பின்பே அவர்கள் இன்று அங்கு கலந்து கொள்கிறார்கள் என்பதுவும் குரிப்பிடந்தக்கது. 

இதே போன்றே ஜெர்மனி ரசிகர்களின் இனவாத, நிறவெறி வன்முறைச் செயற்பாடுகளும் உலகம் அறிந்தவை.

“அவர்கள் உள்ளிப் பூண்டை உண்டு கொண்டு இங்கு வருகிறார்கள். அவர்கள் தொடுவதெல்லாம் அசுத்தமாகின்றன.” 

போன்ற வெளிநாட்டவர்க்கு எதிரான நிறவெறி சுலோகங்களை அவர்கள் பகிரங்கமாக பாடுகிறார்கள். வெளிநாட்டவர்கள் மீதான தாக்குதல்களையும் எந்த வித தடைகளுமின்றி மேற்கொள்ளுகிறார்கள்.

The return of the English Disease?  உலககோப்பை கால்பந்து போட்டியும் அதன் பின் உள்ள ஆபத்து அரசியலும்

உலகெங்கிலும் நிலைமை இவ்வாறு மோசமடைந்து செல்கின்ற போதிலும் அரசுகளும் அதிகாரங்களும் இதைத் தடுக்கின்ற அல்லது இல்லாமற் செய்கின்ற நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்வதில்லை. அவர்களைப் பொறுத்தவரை கால்பந்து என்பது பல கோடிகளைப் போட்டு அதனிலும் பன்மடங்கு கோடிகளைச் சம்பாதிக்கும் ஒரு வியாபார சூதாட்டம். மக்கள் மீதான அக்கறை எவரிடமும் இல்லை. 

இன்று இந்த விளையாட்டில் பரபரப்பும் விறுவிறுப்பும் இருக்கின்றதோ இல்லையோ இதற்கு வெளியேதான் அதிக சுவாரஷ்யமான போட்டிகள் நடைபெறுகின்றன. வீரர்களை விலை கொடுத்து வாங்குதல், விளம்பர உரிமைகளைப் பெறுதல், தொலைக்காட்சி ஒலிபரப்பு உரிமங்களை பெறுதல், சூதாட்டங்கள் என்று இதற்கு வெளியே நடக்கு அப்பட்டமான வியாபாரங்கள் அவமானகரமானவைகள். ஆயினும் அது பற்றி யாரும் கண்டு கொள்வதேயில்லை. ஏனெனில் பணத்தை எவ்வழியிலும் சம்பாதிக்கலாம் என்ற தாரக மந்திரத்தை கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனங்களில் ஏற்றுவதும் இவர்கள் வித்தைகளில் ஒன்று.

ஆயினும் அற்புதமான இந்த குழு விளையாட்டானது ஒரு பக்கம் கோடி கோடியாக பணத்தைக் குவித்தாலும் மறுபக்கம் மிகவும் நலிவடைந்து வருவதையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது. பல விளையாடுக் கழகங்கள் பல கோடி கடன்களில் சிக்கித்தவித்து மீளும் வழி தெரியாமல் திகைத்து நிற்கின்றன. பல உள்ளூர் அரசாங்க மானியத்தை மட்டும் எதிர்பார்த்து அதுவம் கிடைக்காமல் கையறு நிலையில் இருக்கின்றன. எனவே உலக அரங்கில் உன்னதமான விளையாட்டாக உலகின் அனைத்து தரப்பு மக்களாலும் விளையாடப்படும் இந்த Peopel Game இணை நிறவெறியர்களிடமிருந்தும் இனத்துவேஷிகளிடம் இருந்தும் ஊழல் மிகுந்த வியாபார நிறுவனங்களிடம் இருந்தும் மீட்டெடுத்து மீண்டும் மக்களின் கைகளில் ஒப்படைக்க வேண்டிய அவசியமான சூழல் ஒன்று இன்று உருவாகியுள்ளது. 

யார் நிறைவேற்றுவார்???