முகநூல் பதிவு: அம்மா என்றொரு சொல் – மெரீனா காற்றை தொட்டுரசி துயிலும் கனவு

- தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா -பேரும் புகழும் சூழ அரியணையில் வீற்றிருந்த அரசி தான் தலை சாய்த்து ஓய்வெடுக்க ஒரு மகளின் மடி இல்லாமல் போனது. எல்லோருக்கும் அம்மாவாகிப்போன தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா தான் மட்டும் அம்மாவாக வாழமுடியாமல் ஒரு துறவி போல தன் வாழ்வை நிறைவு செய்துள்ளார். மெரீனா கடற்கரையின் காற்றில் தொட்டுரசி ஒரு கனவு சந்தனப்பேழையில் தூங்குகிறது. ஒரு விதையில் மரம் ஒளிந்திருப்பது நம் பார்வைப்புலனுக்கு தெரிவதில்லை.துப்பாக்கி குண்டுகளை முழக்கி அவரது மீளாத் துயிலை திரும்பவும் கலைக்கப்பார்க்கிறீர்கள்.தேசீயக்கொடி போர்த்திய உடலை கட்டிப் பிடித்து முத்தமிட எங்கிருந்தோ ஒரு குழந்தை ஓடி வருகிறது.

2) நடிகை நாடாளலாமா வென ஆணாதிக்க அறங்களைப் பேசிய சனாதனிகளின் மூஞ்சியில் ஓங்கி அறைந்த ஒரு திரை நட்சத்திரம் செல்வி ஜெயலலிதா. தனது இரண்டு வயதிலேயே அப்பா ஜெயராமனை பறிகொடுத்தார். தாயார் வேதவல்லி என்ற சந்தியாவின் அரவணைப்பில் வளர்ந்தவர். அம்மு என்று அன்பால் அழைக்கப்பட்ட ஜெயலலிதா தனது இருபத்துமூன்றாம் வயதில் தாயையும் இழந்தார்.மைசூரில் பிறந்தாலும் இவரது பூர்வீகம் திருச்சி சிறீரங்கமாக இருந்தது.சென்னை சர்ச் பார்க் கான்வென்டில் மெட்ரிக் பள்ளி படிப்பை கற்ற ஜெயலலிதா தனது பனிரெண்டாவது வயதிலேயே நடன அரங்கேற்றம் செய்தார். இசைத்துறையிலும் தேர்ச்சிமிக்கவராக இருந்தார்.2016 ஆகஸ்டில் எழுத்தாளர் வாஸந்தி எழுதிய Amma: Jayalalithaa’s Journey from Movie Star to Political Queen என்ற நூல் ஜெயலலிதாவின் பூர்வீகம் பற்றிய தகவல்களை பதிவு செய்து உள்ளன.

3)முதல்தடவையாக இயக்குநர் சிறீதர் இயக்கிய வெண்ணிற ஆடை படத்தில் நடிகையாக ஜெயலலிதா அறிமுகம் ஆனார். இது 1965 இல் நடந்தது.அன்றுமுதல் 1980 வரையில் முதன்மை கதாநாயகிப் பாத்திரங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.தமிழ் ,தெலுங்கு, கன்னடம் என 127 திரைப்படங்களில் நடித்திருந்தார்.தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களோடு 28 படங்களில் இணைந்திருந்தார். ஆயிரத்தில் ஒருவன் படம் துவங்கி அடிமைப் பெண், கன்னித்தாய், காவல்காரன், அரசக்கட்டளை, தலைவன் , ராமன்தேடிய சீதை என தனது திரையுலக முத்திரையை பதித்துக் கொண்டார். நடிகர்திலகம் சிவாஜிகணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன்,எஸ்.எஸ்.ஆர் போன்ற பிரபலங்களோடு இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றிப்படங்களாயின.

4)புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் 1972ஆம் ஆண்டு அக்டோபரில் திமுகவை விட்டு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அக்டோபர் 17ம் தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ( அதிமுக) கட்சியை எம்.ஜி.ஆர்.துவங்கினார். ஏறத்தாழ பத்தாண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக உருவாகினார். கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். 1984 இல் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரானார். 1989 இல் அதிமுக பொதுச் செயலாளரானார். பல்வேறு அரசியல் சமூக நெருக்கடிகளைத் தாண்டி 1991 ஆம் ஆண்டில் முதன்முறையாக தமிழக முதல்வரான செல்வி ஜெ.ஜெயலலிதா 2015 மே 13 இல் ஆறாவது முறையாகவும் முதலமைச்சர் பொறுப்பை ஏற்று செயல்படுத்தி வந்தார். இறுதியாக உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் 75 நாட்கள் சிகிச்சை பெற்றார். 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இரவு நள்ளிரவில் சிகிச்சை பலனளிக்காது மரணமடைந்தார். தமிழக மக்களின் இதயத்தில் நிரந்தர இடம் பிடித்துவிட்ட தமிழகமுதல்வருக்கு லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர்.

Continue Reading →

அரசியல் தலைவர்களினால் ஏற்கவும் இழக்கவும் முடியாத தனித்துவம் மிக்க துக்ளக் சோ. நாடகத்தில் – திரைப்படத்தில் – இதழியலில் அங்கதச்சுவையை இயல்பாக இழையவிட்டவரின் சகாப்தம் நிறைவடைந்தது

சோ” நான் ஒரு பத்திரிகை தொடங்கப்போகின்றேன். நீங்களும் ஆதரவு தரவேண்டும்.”  என்று  35 வயதுள்ள  அவர்,  நடிகர்திலகம் சிவாஜிகணேசனிடம்  கேட்கிறார். நகைச்சுவை நாடகங்களிலும் சில திரைப்படங்களிலும் அறிமுகமாகியிருந்த அவர்,  சட்டமும் படித்திருந்தார். உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். சில வர்த்தக நிறுவனங்களின் சட்ட ஆலோசகராகவும்  விளங்கினார். எதனையும் தர்க்கரீதியில்   விவாதிக்கும் திறமையும் அவருக்கிருந்தது. இவ்வளவு ஆற்றலும்  இருந்தும்,  எதற்காக பத்திரிகையும் நடத்தி வீணாக  நட்டப்படவேண்டும் என்ற நல்லெண்ணத்தின்  அடிப்படையிலேயே சிவாஜி  அவருக்கு  புத்திமதி  சொன்னார்.

” உனக்கு நடிப்பைத்தவிர வேறும்  ஒரு  நல்ல  தொழில் தெரியும்.  நீ பத்திரிகை  நடத்தினால் அது எப்படி இருக்கும் தெரியுமா…? கள் அருந்திய குரங்கை  தேனீக்கள் கொட்டினால் அது என்ன பாடுபடுமோ அப்படித்தான்  இருக்கும்  உனது பத்திரிகையும்” என்றார் சிவாஜி. ஆனால்,  இதனைக்கேட்ட  அவர்  தனது  யோசனையை கைவிடவில்லை. 1970 ஆம் ஆண்டு பிறந்ததும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தில் தனது பத்திரிகையின் முதல் இதழை வெளியிட்டார். நாற்பத்தாறு ஆண்டுகளையும் கடந்து இன்றும் வெளியாகிறது அந்த இதழ். அதன் பெயர் துக்ளக்.

நடிகராகவும்  வழக்கறிஞராகவும்  இயங்கிக் கொண்டே   வெற்றிகரமாக பத்திரிகையும்  நடத்திய  அவர்தான் நேற்று  சென்னையில் தமது 82 வயதில் மறைந்த சோ. ராமசாமி. துக்ளக் என்ற மன்னர் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானவர். இன்று இந்தியாவில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் புதிய நாணயத்தாள் விவகாரம் பற்றி  அறிவோம். இந்தியாவில்  விலங்குகளுக்கென மருத்துவமனை அமைத்த முன்னோடியாக அசோக மன்னன் விளங்குவது போன்று, மன்னர் கியாஸ்தின் துக்ளக்கின் மறைவிற்குப்பிறகு,  கி.பி. 1325 இல் பதவி ஏற்ற  முகம்மது பின் துக்ளக்தான் இந்தியாவில் நாணயத்தாளை அறிமுகப்படுத்திய  முன்னோடி. . கிறுக்குத்தனமாக  முடிவுகளை எடுக்கும்  மன்னர்  என்றே முகம்மது பின் துக்ளக்கை வரலாற்று ஆசிரியர்கள் பதிவுசெய்துள்ளனர். ஆயினும், துக்ளக் –  கணித சாஸ்திரம், தத்துவம், வானவியல், இயற்பியல்   முதலான துறைகளில் நல்ல நிபுணத்துவம் பெற்றிருந்தவர். துக்ளக் சோ  அவர்களும் பல்துறை ஆற்றல் மிக்கவர். அவர் ஒரு நடிகராகவும் வழக்கறிஞராகவும்  மாத்திரம்  இருந்திருப்பாரேயானால்  இவ்வளவு  தூரம் பிரபல்யம்  அடைந்திருக்கமாட்டார். சில  அரசியல்  தலைவர்களுக்கும்  ஆலோசகராக  விளங்கியர்  சோ.

Continue Reading →

நூல் அறிமுகம்: அர்த்தமுள்ள அனுபவங்கள் நூல் பற்றிய கண்ணோட்டம்

நூல் அறிமுகம்: அர்த்தமுள்ள அனுபவங்கள் நூல் பற்றிய கண்ணோட்டம்திரு. ஈஸ்வரன் அவர்கள் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர். வல்லநாடு என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர் 1949 இல் கொழும்புக்கு வந்தார். புனித பெனடிக்ஸ் பள்ளியில் படித்த இவர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்தார். தற்போது ஈஸ்வரன் பிரதர்ஸ் என்ற தேயிலை நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கும் இவர் பேருபகாரியும் கூட. எழுத்தாளரான இவர் ஏனைய எழுத்தாளர்களுக்கும் கரம் கொடுத்து உதவும் ஒரு வள்ளல். பல முக்கிய சம்மேளனங்களில் தலைவராகவும் இருக்கிறார்.

இலங்கையின் இந்துக் கலாசார அமைச்சின் இறைப்பணிச் செம்மல் விருது, சிறந்த வணிக ஏற்றுமதியாளருக்கான இலங்கை ஜனாதிபதி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். இவரது அனுபவங்களைக் கூறும் நூலாக அர்த்தமுள்ள அனுபவங்கள் என்ற கனதியான தொகுதி 264 பக்கங்களில் காந்தளகம் வெளியீடாக வெளிவந்துள்ளது. முயற்சி திருவினையாக்கும் (பக்கம் 19) என்ற அவரது முதலாவது அனுபவத்தில் பல வியக்கத்தகு விடயங்கள் கூறப்பட்டுள்ளன. அதாவது இறைவனின் சித்தம் இருந்தால் எந்தக் காரியமும் கைகூடும் என்பது எல்லா மதத்தவரதும் நம்பிக்கை. திரு. ஈஸ்வரன் அவர்கள் தொழில் செய்துகொண்டிருந்த ஆரம்ப காலத்தில் இலங்கை அரசாங்கத்தைச் சேர்ந்த மாவு திரிக்கும் கூட்டுத்தாபனத்தினால் அனுப்பப்பட்ட மூடைகளில் பல இறாத்தல் எடை குறைவாக இருந்திருக்கின்றது. அதற்கு எதிராக செயல்பட்டால் அரசாங்கத்தின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். அந்த சந்தர்ப்பத்தில் தான் அவர் தனது தந்தையைப் பார்;க்கச் செல்லும் நேரம் அங்கிருந்த வரதராஜ விநாயகர் ஆலயத்திலிருந்து கேட்ட மணியோசை அவரை ஈர்த்திருக்கிறது. அப்போது ஒரு சட்டத்தரணியைச் சந்தித்துப் பேசியதில் அவரது பிரச்சினை தீரும் வழி கிடைக்கின்றது. இது வரதராஜ விநாயகரின் அருள் என்று எண்ணிய ஈஸ்வரன் அவர்கள் கோயிலுக்கு தன்னாலான பங்களிப்பை நல்கினார். ஆனால் அவரைவிட இன்னொருவர் பெரிய தொகையைக் கொடுத்த போது தன் இறைவனுக்கு அதைவிட மேலானதைக் கொடுக்க வேண்டும் என்று எண்ணிய இவர், தான் அடிமைப்பட்டிருந்த விஸ்கி குடிக்கும் பழக்கத்தை அன்று முதல் விட்டொழித்தாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.

முயற்சி திருவினையாக்கும் என்பது பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும் விளக்கம் சிந்திக்கத்தக்கது. இதை நூலாசிரியருக்குக் கற்றுக்கொடுத்தவர் சுவாமி வாகீசானந்தர். முயற்சி வினையாக்கும் என்று எங்கும் சொல்லப்படவில்லை. முயற்சி திருவினையாக்கும் என்றுதான் சொல்லப்படுகின்றது. திரு என்பதன் அர்த்தம் இறைவனின் ஆசி என்பதாகும். முயற்சியும், இறைவனின் ஆசியும் இருந்தால்தான் எந்த காரியமும் வெற்றியடையும் என்கிறார் நூலாசிரியர்.

Continue Reading →

ஆய்வு: சிற்பியின் மார்க்சிய நோக்கில் கவிஞர் தத்துவச் சிந்தனைகள்

ஆய்வு: சிற்பியின் மார்க்சிய நோக்கில் கவிஞர் தத்துவச் சிந்தனைகள்முன்னுரை
கவிஞர் சிற்பியின் சிந்தனைகள் பரந்த அனுபவமும் மனித வாழ்க்கை குறித்த காலத்திற்கேற்ற மதிப்பீடுகளும் கொண்டவை. தனிமனித வாழ்க்கையில் உள்ள பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் போக்கில் அவருடைய கவிதைகள் அமைந்துள்ளன. இவை சமூகம் சார்ந்த பல்வேறு சிந்தனைகள், வரலாறுகள், மரபுகள், தொன்மங்கள், சமயம், சமயமறுப்பு, அரசியல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மனிதனின் தற்கால வாழ்க்கைக்கும் எதிர்கால சமூக நலனுக்கும் ஒரு தீர்வு சொல்கின்ற வகையில் அமைந்துள்ளன. அவருடைய கவிதைகளில் அவர் சார்ந்திருந்த சில இயங்கங்களின் செயல்பாடுகளும், கொள்கைகளும், தத்துவங்களும் எதிரொலிக்கின்றன. இவ்வகையில் அவ்வியக்கம் சார்;ந்து, இவர் கவிதைகளை ஆராய்வது இங்கு பொருத்தமுடையதாகிறது.

தத்துவம் – விளக்கம்
“தத்துவம் என்ற சொல் நெடுங்காலமாகவே ஆன்மீக வாதிகளால் பிரம்மத்தைச் சுட்டப் பயன்படுத்தப்பட்டு வந்தள்ளது. சாமவோ சாந்தோக்கிய உபநிடதத்தில் வேதாந்த மகாவாக்கியமான தத்துவம்சி (தத் – இறைவன், துவம் – நீ, ஆசி – ஆகிறாய்) இறைவன் ஒருவன் உள்ளான் என்பதை வலியுறுத்துகிறது”1 மாணிக்கவாசகரும், “தாயிற் சிறந்த தயாவண தத்துவனே என்ற பிரமத்தைச் சுட்ட தத்துவம் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்”.2

பழங்காலத்தில் ‘மெய்’ என்னும் சொல், உட்பொருளை உணர்த்திற்று, உட்பொருள் என்பது உண்மைப்பொருள் என்று பொருள் தருகிறது. இந்த அடிப்படையில் தத்துவம் என்ற வடசொல்லை விடுத்துத் தமிழ்ச் சொல்லான ‘மெய்ப்பொருளியல்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதனை ‘மெய்யியல்’ என்றும் வழங்குவர்.
மேலும் ‘Philosophy’ என்னும் ஆங்கிலச் சொல் ‘பிலாஸ்’, ‘சோமியா’ என்னும் இரு கிரேக்கச் சொற்களாலானது. இதன் தமிழாக்கம் ‘பேரறிவுக்காதல்’ என்பதாகும். ‘ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள அளப்படும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆக’ என்ற பெரிய புராணச் சொற்றொடரில் பேரறிவு என்னும் சொல் ஏறத்தாழ இதே பொருளைத் தாங்கி வந்துள்ளது”3.

‘Philosophy’ என்னும் சொல் தத்துவம் என்றும் மொழியாக்கம் செய்யப்படுகிறது. தத்துவம் என்பது ‘தத்வ’ என்ற வடசொல்லின் தற்பவம் ஆகும். ‘நீயே அது’ என்பது இச்சொல்லின் உண்மைப் பொருளாகும்.

Continue Reading →