வாசிப்பும், யோசிப்பும் 160 : ‘ராமச்சந்திரன்’ ஆட்சி செய்த மண்ணில் ‘ரவிச்சந்திரன்கள்’ மடியும் நிலை இனியும் வேண்டாம். | எழுத்தாளர் ‘சீர்காழி’ தாஜ்…….

1.  ‘ராமச்சந்திரன்’ ஆட்சி செய்த மண்ணில் ‘ரவிச்சந்திரன்கள்’ மடியும் நிலை இனியும் வேண்டாம்.

ரவிச்சந்திரன் என்ற மனிதர் , தன்னுடன் வாழும் மக்களின் உரிமைகளைச் சுட்டிக்காட்டி, அவலங்களைச்சுட்டிக்காட்டிபோராளியாகத்தன்னை மாய்த்துக்கொண்டிருக்கின்றார். அவரது இந்தப்போராட்டம் , இந்த முடிவு தமிழகத்தில் வாடும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு இனியாவது விடிவொன்றினைக்கொண்டு வரட்டும்.

அண்மையில் கனடா அரசு 25,000 சிரிய அகதிகளைப் பெரும் ஆரவாரத்துடன் கை நீட்டி, அரவணைத்து அழைத்தபோது எனக்குத் தமிழகத்தில் அகதிகள் முகாம் என்ற பெயரில் நடாத்தப்படும் தடுப்பு முகாம்களில் வாடும் எம் நாட்டுத்தமிழ் அகதிகளின் நிலைதான் ஞாபகத்துக்கு வந்தது. ஈழத்தில் நிலவிய கொடிய அடக்குமுறைகள் காரணமாகத் தாய்த்தமிழகம் என்ற பெரும் நம்பிக்கையுடன் , அபயம் நாடித்தமிழகம் வந்த அப்பாவி அகதிகள் அவர்கள். அவர்களை இருகரம் நீட்டி அரவணைத்து ஆறுதல் கூறுவதற்குப்பதிலாகத் தடுப்பு முகாம்கள் என்ற ஒருவகைச்சிறைக்கூடங்களில் தடுத்து, உளரீதியாகத்துன்பங்களை அனுபவிக்க வைத்து, அதிகாரிகளின், காவல்துறை அதிகாரிகளின் அடக்கு முறைகளுக்குள் பல்வகைத்துன்பங்களை அனுபவிக்க வைத்து ஏன் தமிழக அரசு இவ்விதம் அந்த அகதிகளுடன் வாழ்வுடன் விளையாடுகிறது?

தமிழக அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் , நடிகர்கள் போன்ற பலர் இவர்களைப்பற்றி எதுவுமே பெரிதாகக் கதைப்பதேயில்லை. இவர்களுக்காகக் குரல் கொடுப்பதேயில்லை. இவ்வளவுக்கும் இவர்களது நிலை பற்றி மானுட உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் சிலர் அவ்வப்போது குரல் எழுப்பித்தான் வருகின்றனர். , ஊடகங்கள் சில இவர்களது நிலை பற்றிக் குரல் கொடுத்துத்தான் வருகின்றன. இருந்தும் ஏன் எல்லாரும் இவர்களின் நிலையினை மாற்றி, பூரண சுதந்திரம் மிக்கவர்களாக இவர்கள் வாழ அனுமதிக்கவில்லை?

அகதி முகாமுக்குத் தாமதமாக வந்த ரவிச்சந்திரனை அதுவும் மிகவும் நியாயமான காரணத்துக்காகத் தாமதமாக வந்தவரைக் கண்டித்து, அவமானப்படுத்தி, அகதி முகாமுக்குள் ஏற்க முடியாது என்று மறுத்த அதிகாரி ராஜேந்திரன் , ரவிச்சந்திரனை ‘வாழ்க்கையின் ஓரத்துக்கே’ ஓடும்படி விரட்டியிருக்கின்றார். அவர் மீது பொலிஸார் வழக்குத்தொடுத்திருப்பதாகத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரைப்போன்ற அதிகாரிகள் மிகவும் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். தன் வாழ்வையே மாய்த்துக்கொண்ட ரவிச்சந்திரனின் குடும்பத்துக்குப் போதிய நட்டஈடு வழங்கப்பட வேண்டும். எந்தக் காரணத்துக்காக ரவிச்சந்திரனுக்கு இந்த நிலை ஏற்பட்டதோ? அந்தக்காரணங்கள் உடனடியாகக் களையப்பட வேண்டும். அகதிகள் பூரண சுதந்திரம் மிக்கவர்களாக வாழ்வதற்கு உடனடியாக அனுமதிக்கப்பட வேண்டும். அதிகாரிகளின் எந்தவிதக் கட்டுப்பாடுகளுமற்று, சாதாரணை குடிமக்களைப்போல் தாம் விரும்பிய இடங்களில் அல்லது அகதி முகாம்களில் சுதந்திரமாக வாழ்வுதற்கு அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.

Continue Reading →