நினைவு கூர்வோம்: ஏ.ஈ.மனோஹரன் மறைவு!

நினைவு கூர்வோம்: ஏ.ஈ.மனோஹரன் மறைவு!‘பொப்’ இசைப்பாடகர் ஏ.ஈ.மனோஹரன் மறைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈழத்திசையில் பாடகர் ஏ.ஈ.மனோஹரனின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது. இலங்கையின் பல்லின மக்களாலும் பெரிதும் விரும்பப்பட்ட தமிழ்ப்பாடகராக இவரைக் குறிப்பிடலாம். இலங்கையில் அரசியல்வாதிகளால் ஊதி வளர்க்கப்பட்ட இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை ஓரளவுக்காவது தணிக்க உதவின ஏ.ஈ.மனோஹரன் ., எம்.எஸ்.பெர்ணாண்டோ, சுஜாதா அத்தனாயக்க, நந்தா மாலினி போன்ற கலைஞர்களின் பங்களிப்பு.  கலைஞர்களும் மானுடப் பிரிவினைகளைக் கடந்தவர்கள். கலையும், இசையும் எல்லைகளைக் கடந்தவை.

ஏ.ஈ.மனோஹரனைப்பற்றி எண்ணியதும் எனக்கு ஞாபகமொன்று தோன்றுவது வழக்கம். அப்பொழுது காற்சட்டையும், சேர்ட்டுமாகத்திரிந்து கொண்டிருந்த பருவம். யாழ் இந்துக்கல்லூரிக்கு அண்மையில் நடைபெற்ற திருமணக் களியாட்டமொன்றில் பாடகர் ஏ.ஈ.மனோஹரனும் கலந்துகொண்டிருந்தார். எழுபதுகளிலொருநாள். திருமண நிகழ்வினையொட்டி நடைபெற்ற ஊர்வலமொன்றில் அத்திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் யாழ் கே.கே.எஸ் வீதிவழியாக வந்து கொண்டிருந்தவர்களில் பாடகர் ஏ.ஈ.மனோஹரனும் ஒருவர். ஊர்வலம் எம்மைக் கடந்துகொண்டிருந்தபோது நண்பர்களிலொருவன் விரிந்த சுருட்டைத் தலைமயிர் குடை போல் கவிந்திருக்க வந்துகொண்டிருந்த ஏ.ஈ.மனோஹரனைக் கண்டு விட்டு ‘இங்கே பாரடா ஏ.ஈ.மனோஹரன்’ என்று கத்தி விட்டான். அந்த ஊர்வலத்தின் இரைச்சலிலும் நண்பனின் குரலினைச் செவிமடுத்த ஏ.ஈ.மனோஹரனின் முகத்தில் தன்னை இரசிகனொருவன் கண்டு விட்டதாலேற்பட்ட பெருமிதம் படர்ந்தது. அப்பெருமிதத்தோடு எம்மை நோக்கித் திரும்பிக் கைகளை அசைத்தவாறு சென்றார். அக்கணம் என் நெஞ்சில் அழியாத கோலங்களிலொன்றாகப் படிந்து விட்டது. பாடகர் ஏ.ஈ.மனோஹரனைப்பற்றிய நினைவுகளுடன் கலந்து விட்ட ஞாபகப்படிவம் அது.

Continue Reading →

எதிர்வினை: சருங்கலய திரைப்படம் – முருகபூபதி

 அண்மையில் சுனில் ஆரியரத்தினாவின் இயக்கத்தில், காமினி பொன்செகாவின் நடிப்பில் வெளியான 'சருங்கலய' திரைப்படம் பற்றிய எனது சிறு குறிப்பும், அதற்கான பயன் மிக்க, ஆவணச்சிறப்பு மிக்க எதிர்வினைகளும் இங்கே ஒரு பதிவுக்காகப் பதிவிடப்படுகின்றன.

அன்பின் நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். சருங்கலய படம் பற்றிய குறிப்புகளை பதிவுகளில் படித்தேன். கடந்த கால நினைவுகளை தந்தமைக்கு மிக்க நன்றி. நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் வெளிவந்த படம். வடபகுதியின் சாதிப்பிரச்சினையையும் தென்னிலங்கையின் இனரீதியான கடும்போக்கு வாதத்தையும் சித்திரித்த படம்.  இலங்கை நாடாளுமன்றத்திலும் சில அரசியல் தலைவர்கள் ஏட்டிக்குப்போட்டியாக இந்த திரைப்படத்தை பாருங்கள் என்று அறைகூவல் விடுத்தார்கள். இதில் சம்பந்தப்பட்ட யோகா பாலச்சந்திரன் கனடாவில்தான் வசிக்கிறார். அவரிடம் திரைக்கதையை கேட்டு அறிந்துகொள்ளமுடியும். படத்தின் பல காட்சிகள் மனதில் இருக்கின்றன. குறிப்பாக அதில் வரும் குழந்தை, ஒரு மாம்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டையை வீசும். அதனைக்காணும் நடராஜா (காமினி பொன்சேக்கா) அருகில் வந்து ” மகளே அதனை வீசவேண்டாம். தரையில் புதைத்தால், சிறிது நாளில் ஒரு மாமரம் வரும். நீங்க வளரும்போது மேலும் நிறைய மாம்பழங்கள் அதிலிருந்து உங்களுக்கு கிடைக்கும்” என்று அறிவுறுத்திவிட்டு மாங்கொட்டையை நடுவார். வடக்கின் பொருளாதார சிந்தனையை அக்காலத்தில் குறியீடாக சித்திரித்த இக்காட்சி பற்றி பலரும் சிலாகித்தார்.

இப்படத்தில் நடராஜாவின் முதிய தாயாக வரும் பெண் இயல்பாக நடித்திருப்பார். பம்பலப்பிட்டி கீறின்லண்ட்ஸ் ஹோட்டலில்தான், வீணா ஜெயக்கொடி ( பாத்திரத்தின் பெயர் மறந்துவிட்டது) நடராஜாவை தனது கணவர் எனச்சொல்லி காப்பாற்றுவார். இதுபோன்ற காட்சி நடேசனின் வண்ணாத்திக்குளம் நாவலிலும் வருகிறது. சருங்கலய படத்தில் நடித்தபின்னர் காமினிக்கு மற்றும் ஒரு தமிழ்ப்படம் எடுக்கவேண்டும் என்ற விருப்பமும் வந்தது. நண்பர் தெளிவத்தை ஜோசப்பை தமது வீட்டுக்கு அழைத்து கதையும் சொன்னார். தெளிவத்தை ஜோசப், ஏற்கனவே வி. பி. கணேசனின் புதிய காற்று படத்திற்கு வசனமும் எழுதியவர். ஆனால் அந்த முயற்சி நிறைவேறவில்லை. இந்தச் சம்பவங்கள் 1980 இற்கு முன்னர் நடந்தவை.

Continue Reading →