கனடாத் தமிழ் இலக்கியத்தில் ‘தாயகம் (கனடா)வின் பங்களிப்புப் பற்றியதொரு சுருக்கமான அறிமுகம்!

'தாயகம்' (கனடா) – எழுத்தாளர் தேவகாந்தனை ஆசிரியராகக் கொண்டு , ஆண்டுதோறும் வெளியாகும் இலக்கிய இதழான ‘கூர் 2018’ இதழில் வெளியான கட்டுரை இது. ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரமாகின்றது. – பதிவுகள் –


கனடாத்தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகவும் தவிர்க்க முடியாத , காத்திரமாகத்தடம் பதித்த, ஜோர்ஜ் இ.குருஷேவ்வை ஆசிரியராக கொண்டு வெளியான  சஞ்சிகை, பத்திரிகை ‘தாயகம்’ (கனடா).  புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த தமிழர்களால் நடத்தப்பட்ட பத்திரிகை / சஞ்சிகைகளில் தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகைக்கு முக்கியமானதோரிடமுண்டு. இருந்தும் கனடியத் தமிழ் இலக்கிய வரலாறு பற்றிக் கட்டுரைகள் எழுதுவோர் தம் கட்டுரைகளில் மிகவும் இலகுவாக மறந்து விடும் பத்திரிகை, சஞ்சிகையும் ‘தாயகம்’ தான். மிகவும் வேடிகையான விடயமென்னவென்றால் ‘தாயகம்’ வெளிவந்தபோது, ‘தாயகம்’ களம் அமைத்துக்கொடுத்துத் ‘தாயக’த்தில் எழுதிய எழுத்தாளர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களில் பலர்  கூட இவ்விதம் மறப்பதை எண்ணவென்பது. இந்நிலையில் ‘தாயகம்’ பற்றிய முறையான ஆய்வு நடத்தப்பட வேண்டிய தேவை இருப்பதால், அது பற்றிய ஆர்வத்தினை ஏற்படுத்த வேண்டிய தேவை இருப்பதால், ‘தாயகம்’ பற்றிய சிறியதோர் அறிமுகம் தேவை என்பதால் உருவான கட்டுரையே இக்கட்டுரை. இக்கட்டுரையின் முக்கிய நோக்கங்களிலொன்று ‘தாயகம்’ பத்திரிகை/ சஞ்சிகை பற்றிய விரிவான ஆய்வுக்கு எதிர்காலத்தில் மேலும் பலரைத் தூண்டுவதாகும்.

‘தாயகம்’ பத்திரிகை /சஞ்சிகைக்கு இன்னுமொரு முக்கியமான சிறப்புண்டு. கனடாவில் இலக்கியச்சேவை செய்வதாகச் சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளும் பல பத்திரிகைகளின் முக்கிய நோக்கம் பணமீட்டுவதே. விளம்பரங்களால் பக்கங்களை நினைத்து,  இலவசமாக விநியோகிக்கப்பட்டுவரும் கனடியத்தமிழ்ப் பத்திரிகைகளுக்கு மத்தியில் , காசு கொடுத்து வாங்கிக் கனடியத்தமிழ் மக்கள் படித்த ஒரேயொரு பத்திரிகை ‘தாயகம்’ (கனடா). இதற்காகத் ‘தாயகம்’ ஆசிரியர் ஜோர்ஜ் இ.குருஷேவ்வைப்பாராட்டலாம். அதுவும் சுமார் ஆறுவருடங்கள் வரையில் ‘தாயகம்’ இவ்விதம் விற்பனையில் இருந்ததே குறிப்பிடத்தக்க சாதனைதான்.

‘தாயகம்’ பத்திரிகை, சஞ்சிகை பல விதங்களிலும் தனித்துவம் மிக்கதாக , ‘உண்மையைத் தேடி’ என்னும் தாரக மந்திரத்துடன் வெளிவந்தது. அதற்கென்று உறுதியான கொள்கையொன்றிருந்தது. அரசியல் ஆதிக்கம் மிக்க சக்திகளால் மறைக்கப்பட்ட விடயங்களை அது வெளிக்கொணர்ந்தது. அதே சமயம் அது விடுதலைப்புலிகளை விமர்சித்த பத்திரிகை, சஞ்சிகை. அதற்காக அதனைத் தமிழ் மக்களின் விடுதலைக்கு எதிரான பத்திரிகை என்று யாரும் தவறாக எண்ணி விடவேண்டாம். அது தமிழ் விடுதலை அமைப்புகளில் நிலவிய மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பதையே முக்கியமான நோக்கங்களிலொன்றாகக்கொண்டிருந்தபோதும், அனைத்துப்பிரிவினருக்கும் இடமளித்தது என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். பல்வேறு அரசியல் கொள்கை கொண்டவர்களும் ‘தாயக’த்தில் எழுதினார்கள்.

Continue Reading →

சிற்றிதழ்கள் பற்றிய புரிதலும் கனடியத் தமிழ்ச் சிற்றிதழ்கள் பற்றிய அறிதலும்!

சிற்றிதழ்கள் பற்றிய புரிதலும் கனடியத் தமிழ்ச் சிற்றிதழ்கள் பற்றிய அறிதலும்! கனடியத் தமிழ்ச் சிற்றிதழ்கள் பற்றிய எனது பார்வையைப்பகிர்ந்துகொள்வதற்கு முன் சிற்றிதழ்கள் என்றால் எவை? என்பது பற்றிச் சிறிது பார்ப்போம். சிற்றிதழ் என்பதற்கு இரு அர்த்தங்களைக் கூறலாம். சிறிய இதழ் என்னுமொரு கருத்தும் உண்டு. இவ்வடிப்படையில்தான் பலர் சிற்றிதழ்களை, சிறுசஞ்சிகைகள் என்று அழைக்கின்றார்கள். சிற்றிதழ் என்றால் சிறந்த இதழ் என்றும் அர்த்தம்கொண்டு அதனை நோக்குவோர் சிலருமுண்டு. உதாரணத்துக்கு “சிற்றிதழ் என்றாலே சிறந்த இதழ் என்றுதான் அர்த்தம். இதைத்தான் தற்போது சீரிதழ் என்றும் சொல்லி வருகிறார்கள். ” என்று விக்கிபீடியா சிற்றிதழ்கள் பற்றிக் கூறும். ஆனால் என்னைப்பொறுத்தவரையில் சிற்றிலக்கியம், சிற்றிதழ், சிற்றன்னை என்பவற்றில் சிறிய எனும் அர்த்தத்திலேயே இச்சொற்கள் பாவிக்கப்படுகின்றன. சிறந்த இதழ் என்றால் சிறப்பிதழ் . சிற்றிதழ் அல்ல. சிறு சஞ்சிகை என்று கூறும்போது அது சஞ்சிகையின் உள்ளடக்கத்தின் தரத்தைக் கொச்சைப்படுத்தி விடுவதாக எதற்காகக் கருத வேண்டும்? சிறு சஞ்சிகை சிறந்த சஞ்சிகையாக இருப்பதில் என்ன தடை இருக்க முடியும்? சிறு சஞ்சிகை என்றாலும் அதன் உள்ளடக்கத்தைப்பொறுத்தவரையில் அது ஒரு பேரிதழ்.

சிற்றிதழ் அல்லது சிறு சஞ்சிகை என்றால் என்ன? அது ஏன் உருவாகின்றது? என்பது பற்றிச் சிறிது பார்ப்போம்./

வெகுசன இதழ்கள் , வணிக இதழ்கள் வருமானத்தைக் குறி வைத்து வெளியாகும் இதழ்கள். மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு (குறிப்பாக இனம் , மதம், மொழி மற்றும் பால்) , மக்கள் மத்தியில் புகழடைவதுடன , அதிக வருமானத்தையும் பெறும் நோக்குடன் அவை செயற்படுகின்றன; வெளிவருகின்றன. இந்நிலையில் வணிக இதழ்களில் தீவிர , காத்திரமான இலக்கியப்படைப்புகளுக்கு இடமில்லை. இவ்விதமான சூழலில்தான் சிற்றிதழொன்று உருவாகின்றது. காத்திரமான , தீவிரமான கலை, இலக்கிய, அரசியற் கோட்பாடுகளை உள்ளடக்கிய, சார்ந்த படைப்புகளைத்தாங்கிப் பல்வகைச் சிற்றிதழ்கள் வெளியாகின்றன. சிற்றிதழ்கள் பொருளீட்டி, இலாபம் சம்பாதிப்பதை மையமாக வைத்து உருவாவதில்லை. ஆர்வமுள்ளவர்களில் சிலர் ஒன்றிணைந்து வெளியிடும் இதழாக, அல்லது தனிப்பட்ட  ஒருவர் வெளியிடும் இதழாக இருப்பதால் ஒரு சிற்றிதழானது அது வெளியாகும் காலத்திலிருந்து அதன் முடிவு வரை பொருளியல்ரீதியில் போராடவே வேண்டியிருக்கின்றது. வாசகர்களை, புரவலர்களை நம்பியே, நாடியே அது இயங்க வேண்டிய சூழலும், தேவையுமுள்ளதால்தான் பெரும்பாலானவை ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்பு மூச்சடங்கிப்போகின்றன. அவ்விதம் அவை இயங்காது போயினும் அவை ஏற்படுத்திய தாக்கங்கள் வரலாற்றில் நிலைத்து நின்று விடுகின்றன. அவற்றின் ஆரோக்கியமான பங்களிப்புகள் எப்பொழுதும் நன்றியுடன் நினைவு கூரப்படுகின்றன. கலை, இலக்கிய வளர்ச்சியில் அவை படிக்கட்டுகளாக அமைந்து விடுகின்றன. உதாரணத்துக்கு மணிக்கொடி, சி.சு.செல்லப்பாவின் எழுத்து, இலங்கையில் வெளியான மறுமலர்ச்சி, அலைகள், தீர்த்தக்கரை,  ஜோர்ஜ் இ.குருஷேவின் தாயகம் (கனடா) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

Continue Reading →