பயணத்தொடர்: நேபாளம் – பயணக்குறிப்புகள் (1)

அத்தியாயம் ஒன்று: காட்மாண்டு பள்ளத்தாக்கு

நேபாளம், இமயமலையின் தென் பகுதி அடிவாரத்தில் உள்ள நாடு. ஐம்பது மில்லியன் வருடங்கள் முன்பாக புவியின் வடகண்டம் தென்கண்டம் ஆகிய இரண்டும் கண்ட நகர்வினால் ஒன்றுடன் ஒன்று மோதியபோது ஏற்பட்ட அமுக்கத்தால் புவியின் மேற்பகுதி மேலெழுந்து 2900 கிலோ மீட்டர் நீளமான மலைத் தொடர் உருவாகியது.

அந்த மலைத்தொடரின் வடபகுதி திபேத் பீடபூமி. தென்பகுதியில் நேபாளம் மற்றும் இந்தியா உள்ளது. உலகத்தில் 14 மலைச்சிகரங்கள் 8000 மீட்டருக்கு மேற்பட்டவை அதில் எவரெஸ்ட் உட்பட 8 மலைச்சிகரங்கள் நேபாளத்தில் உள்ளன.

விமானத்தில் பறக்கும்போது யன்னல் கண்ணாடியூடாக பார்க்கும்போது, பனிபடர்ந்த அந்தச் சிகரங்கள் தொடர்ச்சியாக பளிங்கில் செதுக்கி வைத்திருப்பதுபோல் அழகான காட்சியாக தென்படும். அந்த மலைத்தொடரின் மேலுள்ள பனிப்படலத்தில் உதயசூரியன் பட்டு கண்ணாடியின் மேல் வைத்த வைரமாலையாக ஒளிரும் காட்சி எக்காலத்திலும் மனதை விட்டு அகலாது .

புவியின் அசைவியக்கத்தால் உருவாகிய பிரதேசமானதால் இங்கு தொடர்ச்சியான கண்ட நகர்வு நடந்து கொண்டிருக்கிறது. அத்துடன் இந்தச் சிகரங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. இப்படியான தொடர் மாற்றத்தினால், இந்தப் பிரதேசத்தில் பூகம்பம் வருவது வழக்கம்.

நான் அங்கு சென்றபோது 2015 இல் ஏற்பட்ட பூகம்பத்தின் அழிவுகளை காட்மண்டு நகரத்தினருகிலேயே காணமுடிந்தது.

ஒரு காலத்தில் கடலாக இருந்த பிரதேசமென அறியப்பட்ட இந்நகரத்தில் வாழ்ந்த பல கடல் வாழ் உயிரினங்களது சுவடுகளை மியூசியங்களில் பார்க்கக்கூடியதாக இருந்தது. .அவுஸ்திரேலியாவில் இமய மலையில் இருந்து எடுத்த உப்பு பாளங்களில் இருந்து விளக்கு உருவாக்கப்படுகிறது. அவை காற்றின் மாசுகளை நீங்குமென அறிந்து ஒரு காலத்தில் கட்டிலருகே அத்தகைய ஒரு விளக்கை வைத்திருந்தேன் . இமய மலை, அதனது சிகரங்கள் பற்றிய படங்கள், நூல்கள் மற்றும் புனைவுகள் என்பன சிறு வயதிலிருந்தே என்னைப் பாதித்தவை. அறிந்தும் அறியாத ஒரு புதிராக மனதில் கூடு கட்டியிருந்தது. மற்றவர்களது கற்பனைகளின் மீது நான் கற்பனை செய்வதைவிட , நான் நேரில் காணும் காட்சியில் எனது எண்ணங்களை மற்றும் கற்பனைகளை மனதில் வரைபடமாக்க விரும்பியதால் அங்கு சென்றேன் . எனவே பல காலமாக எதிர்பார்த்திருந்த பயணம் இந்த நேபாளப் பயணம்.

Continue Reading →

அ.யேசுராசாவின் ‘பனிமழை’ (2002) – மொழிபெயர்ப்புக் கவிதைகள்

எழுத்தாளர் அ.யேசுராசாவின் தமிழ் இலக்கியத்துக்கான முக்கிய பங்களிப்புகளாக அவர் வெளியிட்ட அலை சஞ்சிகை, கவிதைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், உலக சினிமா பற்றிய கட்டுரைகளைக் குறிப்பிடுவேன். அவரது ‘நல்லம்மாவின் நெருப்புச் சட்டி’ அவரது கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை. உண்மையான உணர்வுகளின், அனுபவங்களின் வெளிப்பாடாக அமைந்த சிறந்ததொரு கவிதை. அண்மையில் அவரது மொழிபெயர்ப்புக் கவிதைகளின் தொகுப்பான ‘பனிமழை‘ தொகுப்பினை வாசித்தேன். எண்ணிம நூலகமான நூலகம் தளத்திலுள்ளது. அதற்கான இணைய இணைப்பு: http://www.noolaham.net/project/01/45/45.htm


நூலின் என்னுரையிலிருந்து அ.யேசுராசவின் ஏனைய புனைபெயர்களையும் அறிய முடிகின்றது. அலை, புதிசு, களனி, திசை, தாயகம், கவிதை ஆகிய இதழ்களில் சொந்தப்பெயரிலும் , கடலோடி, ஜெயசீலன் ஆகிய புனைபெயர்களிலும் வெளியான மொழிபெயர்ப்புக் கவிதைகள் இவை. இவற்றை இந்தியா, இலங்கை, ரஷ்யா, ஸ்பெயின், இங்கிலாந்து, சீனா, அமெரிக்கா, யூகோஸ்லாவியா, உருகுவே ஆகிய நாடுகளைச் சேர்ந்த பதினான்கு கவிஞர்களின் கவிதைகளை ஆங்கிலத்திலருந்து தமிழுக்குக் கொண்டு வந்திருக்கின்றார் அ.யேசுராசா. அட்டைப்பட ஓவியத்தை ஓவியர் ரமணி வரைந்திருக்கின்றார்.


இந்நூலுக்குச் சிறப்பான முன்னுரையொன்றினை எழுதியிருக்கின்றார் கவிஞர் சோ.பத்மநாதன். அவரும் கூட சிறந்த மொழிபெயர்ப்பாளர். அவர் தனது முன்னுரையில் மொழிபெயர்ப்பு பற்றிக் கூறிய கூற்றுகள் என்னைக் கவர்ந்தன. படைப்புகளை மொழிபெயர்க்க விரும்பும் எவரும் கவனிக்க வேண்டிய கருத்துகள் அவை. அவற்றில் சிலவற்றை இங்கு தருகின்றேன்:

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன் – அங்கம் 08: சொல்ல மறந்த பல கதைகளைச்சொல்லும் பண்டாரநாயக்கா மாவத்தை !

இன்று மே மாதம் 01 ஆம் திகதி. உலகத்தொழிலாளர் தினம்! உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்ற கோஷத்துடன் எமது தாயகம் இலங்கையில், தொழிலாளர்கள் ஒன்றுபடாமல், பிளவுபட்டு, ஏழெட்டு ஊர்வலங்களும் பொதுக்கூட்டங்களும் நடத்தும் நாள். கொரொனா வந்து அந்தத் தொழிலாளர்களையும் ஒன்றுபடவிடாமல் தடுத்து வீடுகளில் முடங்கியிருக்கச் செய்துள்ளது. ஒரு காலத்தில் தந்தை செல்வநாயகமும் பிரதமர் பண்டாரநாயக்காவும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக பண்டா – செல்வா ஒப்பந்தம் என்ற இன்றும் வரலாற்றில் பேசப்படும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டபோது ஜே.ஆர். ஜெயவர்த்தனா அதனை எதிர்த்து பிக்குகளையும் அழைத்துக்கொண்டு, கண்டி தலதா மாளிகை நோக்கி பாதயாத்திரையை ஆரம்பித்தார். அக்காலப்பகுதியில் நடந்த மேதின ஊர்வலங்களில் அவருடைய யூ. என். பி. கட்சியினர் “ பண்டாரநாயகம் – செல்வநாயகம் ….  ஐயா…. தோசே மசாலவடே “ என்று இனவாதம் கக்கி கோஷம் எழுப்பிச்சென்றனர். அந்த ஒப்பந்தம் பின்னர் கிழித்தெறியப்பட்டது. ஆனால், பண்டாரநாயக்காவும் செல்வநாயகமும் தமது காணிகளை பூர்வீக சொத்துக்களாக ஒரே வீதியில் முன்னர் வைத்திருந்தனர் என்ற செய்தி யாருக்காவது தெரியுமா..?
அந்த வீதிக்குப்பெயர்தான் பண்டாரநாயக்கா மாவத்தை!

அண்மைக்காலமாக உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும் நெருக்கடியை ஏற்படுத்தியதனால், நாடாளுமன்றமும் இயங்காமல் முடங்கியிருப்பதுடன், தலைநகரத்தில் பல பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை அறிவோம். கொழும்பில் உயர் நீதிமன்றம் உட்பட மேலும் சில நீதிமன்றங்கள் அமைந்துள்ள பிரதேசம் உட்பட அதற்கு அண்மித்த பண்டாரநாயக்கா மாவத்தையிலிருந்த ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாப்பு தரப்பினர், அழைத்துச்சென்று முல்லைத்தீவில் தனிமைப்படுத்தி தடுத்து வைத்துள்ளனர். அவ்வாறு அங்கு சென்றவர்களில் எனது உறவினர்கள், நண்பர்கள் பலரும் அடங்கியுள்ளனர். ஒரு காலத்தில் தட்டாரத்தெரு என அழைக்கப்பட்ட இந்தப்பிரதேசத்தில் தமிழ் – முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்கின்றனர். இந்தப்பிரதேசத்திற்கும் எனக்கும் நீண்டகாலமாக நெருக்கமான உறவு நிலைத்திருக்கிறது. அதனால், அவ்வாறு முல்லைத்தீவுக்கு அழைத்துச்செல்லப்பட்ட எனது சித்தப்பாவின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் தொடர்புகொண்டு உரையாடினேன். தம்மை முகாமில் தடுத்துவைத்து நன்கு பராமரிப்பதாகவும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி படுக்கை தரப்பட்டு தினமும் மூன்று வேளையும் மருத்துவர்களும் தாதியர்களும் சிகிச்சை தந்து கண்காணிப்பதாகவும் தெரிவித்தனர்.

Continue Reading →