நூல் அறிமுகம்: சங்ககாலத் தமிழர் வாழ்வியல் (Living Codes of Sangam Era Tamils.)

நூல் அறிமுகம்: சங்ககாலத் தமிழர் வாழ்வியல் (Living Codes of Sangam Era Tamils.)

இலக்கிய ஆய்வு நூலுக்கான ‘எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்’ வழங்கிய ‘தமிழியல் விருது – 2011’, தமிழ் இலக்கிய மேம்பாட்டுக்கான ‘ தமிழியல் விருது – 2014’, இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவனமும், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவனமும் இணைந்து வழங்கும் ‘ இரா. உதயணன் இலக்கிய விருது – 2016’ என்ற மூன்று விருதுகளையும் பெற்றவர் ஆவார்.

தமிழன் தாயகமாம் ஈழத் திருநாட்டின் வடமாகாணத்தின் தென்மராட்சிப் பகுதியில் புகழ் பூத்த நகரான சாவகச்சேரி மண்ணில் நுணாவிலூர் என்னும் பூங்காவில் மலர்ந்தெழுந்த நுணாவிலூர் கார்த்திகேயன் விசயரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட ‘சங்ககாலத் தமிழர் வாழ்வியல்’ என்ற ஆய்வு நூலொன்று அண்மையில் வெளிவந்துள்ளது.

Continue Reading →

மெல்பனில் மூத்த – இளம் தலைமுறையினர் சங்கமித்த அனைத்துலக பெண்கள் தின விழா! பொன்மணி குலசிங்கம் – அருண். விஜயராணி நினைவுகூரப்பட்ட ஒன்றுகூடல்!

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நேற்று முன்தினம் சனிக்கிழமை மெல்பனில் நடத்திய அனைத்துலக பெண்கள் தினவிழாவில் இளம் தலைமுறையினரும் மூத்த தலைமுறையினரும் சங்கமிக்கும் நிகழ்ச்சிகள்  இடம்பெற்றன. சங்கத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதியின் தலைமையில் நடைபெற்ற இவ்விழா, மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் நடைபெற்றது. மெல்பனில் வதியும் கலை, இலக்கியம் மற்றும் கல்வி சார்ந்த துறைகளில் ஈடுபட்ட மூத்த பெண்மணிகள் மங்கல விளக்கேற்றி விழாவை தொடக்கிவைத்தனர். திருமதிகள் இந்துமதி கதிர்காமநாதன், கனகமணி அம்பலவாண பிள்ளை, மெல்பன் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், ஞானசக்தி நவரட்ணம், செல்வி கமலா வேலுப்பிள்ளை ஆகியோருடன், இவ்விழாவுக்கென சிங்கப்பூரிலிருந்து வருகை தந்திருந்த எழுத்தாளரும் பெண்ணிய செயற்பாட்டாளருமான திருமதி கௌரி அனந்தனும் விளக்கேற்றி வைத்தனர்.

திருமதி ஞானசக்தி நவரட்ணம் இலங்கையில் உரும்பராயைச்சேர்ந்தவர். தமது தாயாரிடமும் பாட்டியாரிடமும் தையல் நுண்கலையை இளமைக்காலத்தில் பயின்றவர். அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த அவர், தாம் பெற்ற அந்தப்பயிற்சியிலிருந்து, இயற்கை, சுற்றுச்சூழல், வீதிப்போக்குவரத்து, மற்றும் குழந்தைகள்,  தெய்வங்களின்  படிமங்களையும் தையல் பின்னல் வேலைப்பாடுகளில் வடிவமைத்துவருபவர். அவரது கைவண்ணத்தில் உருவான படங்கள் இவ்விழாவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சங்கத்தலைவரின் தொடக்கவுரையையடுத்து திருமதி மங்களம் வாசன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் அவுஸ்திரேலியாவில் நீண்ட காலம் வாழ்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு இறுதியில் மறைந்த எழுத்தாளர் திருமதி அருண். விஜயராணியின்  “சமூகம் சார்ந்த வாழ்வும் படைப்புலகமும்” என்ற தலைப்பில் செல்வி மோஷிகா பிரேமதாசவும்-  ” பாரதியும் பெண்விடுதலையும்”  என்ற  தலைப்பில் செல்வி மதுபாஷினி பாலசண்முகனும்  உரையாற்றினர்.  இந்த இரண்டு மாணவிகளும் கடந்த ஆண்டு இறுதியில் விக்ரோரியா மாநிலத்தில் நடந்த V.C.E பரீட்சை,  தமிழ்ப்பாடத்தில் கூடுதல் புள்ளிகள் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading →

பாரதியாரின் பெண் விடுதலைச்சிந்தனைகள்

 மதுபாஷினி பாலசண்முகன்– அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அண்மையில் நடத்திய அனைத்துலக பெண்கள் தினவிழாவில் செல்வி மதுபாஷினி பாலசண்முகன் நிகழ்த்திய உரை. இவர், கடந்த ஆண்டு நடைபெற்ற பல்கலைக்கழக பிரவேசப்பரீட்சையில் தமிழ்ப்பாடத்தில் சிறந்த புள்ளிகளைப்பெற்றவர். மொனாஷ் பல்கலைக்கழகத்தில் தற்பொழுது பயிலும் இவர், மெல்பனில் நடைபெற்ற இளம் எழுத்தாளர் விழாவில் நடைபெற்ற போட்டியில் சிறந்த இளம் எழுத்தாளருக்கான விருதையும் பெற்றவர். ஆங்கில இலக்கியத்திலும் ஈடுபாடும் ஆர்வமும் மிக்க மதுபாஷினி பாலசண்முகன், தமிழ் இலக்கியத்திலும் தமது ஆர்வத்தை வெளிப்படுத்திவருபவர். -முருகபூபதி –


“நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
நிமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவதில்லையாம்”

பாரதியார் எழுதிய புதுமைப்பெண் பாடலில் இருந்து சில வரிகள் இவை. சுப்ரமணிய பாரதி 19 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் புரட்சிக் கவிதை  எழுதிய கவிஞர் மற்றும் சுதந்திர வீரர் ஆவார். பண்டைத் தமிழ் வரலாற்றையும் பாரதப் பண்பாட்டினையும் நன்கு அறிந்திருந்த பாரதி, நாட்டின் ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்களின் நிலையைக் கண்டு மனம் வெதும்பினார், வேதனைப் பட்டார். பெண் விடுதலைக்காக எழுச்சி மிகுந்த பாடல்களை பாடினார்.

பாரதியார் தமது கவிதைகளிலும் கட்டுரைகளிலும் பெண்ணுரிமைக் கருத்துகளை அவருக்கே உரித்தான கவியழகோடும், அழுத்தத்தோடும், வீராவேசத்தோடும், படிப்போரின் மற்றும் கேட்போரின் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் கனல் தெறிக்க எழுதினார்.

நான்  உங்களுடன் உரையாடவிருப்பது பாரதியாரின் பெண் விடுதலைக் கருத்துகளைப் பற்றி. உப தலைப்புகளாக, பாரதியார் சமூக சீர்திருத்த வாதத்தை, முக்கியமாக பெண் விடுதலையை ஆதரித்த காரணம், அவரது பெண் விடுதலை வாதம் சார்ந்த கருத்துக்கள் மற்றும் அவற்றுக்கு உதாரணமான பாடல்கள் என்பன பற்றிக் கலந்துரையாட உள்ளேன்.

Continue Reading →