கலைஞனுக்கு அழிவில்லை: சினிமா நெறியாளர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்

கலைஞனுக்கு  அழிவில்லை: சினிமா  நெறியாளர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்பேராசிரியர் மெளனகுரு2012  ஆம் ஆண்டு என நினைக்கிறேன். கொழும்பில் அசோகா  ஹந்தகமயின்  இனி அவன்  எனும் திரைப்படம் முன்னோடிக்காட்சியாக  கொழும்பு  புல்லர்ஸ்  வீதியில்  இருந்த  இலங்கைத்  திரைபடக் கூட்டுத்தாபன  சினிமா திரைஅரங்கில்    திரையிடப்படுகிறது. நண்பர்  அசோகா ஹந்தகம எனக்கும் ஓர் அழைப்பு அனுப்பியிருந்தார். இடையில்  சந்தித்தபோது  அவசியம் வாருங்கள் என்றும் கூறியிருந்தார். திரை அரங்கினுள்ளே  சிங்கள சினிமாவை உலகத் தரத்திற்கு  உயர்த்தியவர்களான அசோகா ஹந்தகம, தர்மசேன பத்திராஜா,  தர்மசிரி  பண்டாரநாயக்க,  சுனில் ஆரியரத்தினா முதலான சிங்கள சினிமா நெறியாளர்களும்  ,சுவர்ணமல்லவாராய்ச்சியும்   அமர்ந்திருந்தனர். (இவர்கள் அனைவரும்  நாடகத்தால்  எனக்கு நண்பரானவர்கள்)  மற்றும் நான் அறியாத  சிங்கள பிரபல சினிமா நடிகர்களும் ,சினிமா விமர்சகர்களும்,பத்திரிகையாளர்களும் பிரசன்ன விதானகே முதலான முக்கிய சிங்கள சினிமா நெறியாளர்களும் காத்திரமான சினிமா ரசிகர்களும் அரங்கை நிறைத்த வண்ணம்  அமர்ந்திருந்தனர். அரங்கு நிறைந்த சபை.  படம் இன்னும் ஆரம்பமாகவில்லை. திடீரென  அனைவரும் எழுந்து நின்றனர். மகிழ்ச்சியோடு  கர ஒலி  எழுப்பினர்.  யாரையோ வரவேற்றது போல இருந்தது. பின் வாசல் வழியாக தொண்டு கிழவரான லெஸ்டர்  ஜேம்ஸ் பீரிஸை  அவர் மனைவி  சுமித்ரா சக்கர நாற்காலிவண்டியில் வைத்துத் தள்ளிய வண்ணம் அரங்கினுள்  பிரவேசித்தார்,

இப்பெரும் நெறியாளர்களும் நடிகர்களும் தம் இரு கைகூப்பி அவரைப் பக்தியோடு குனிந்து  வணங்கினர். அது ஓர் உணர்ச்சிகரமான கணம். தங்களுக்கு காத்திரமான சினிமா எடுக்க வழிகாட்டிய தமது பாட்டனாரைப் பேரக் குழந்தைகள் அன்பு பொங்க மிக மரியாதையுடன்  வரவேற்ற கணங்கள் அவை. அவரும் ஒரு குழந்தைபோல கை அசைத்து  சக்கர நாற்காலி வண்டியிலிருந்து  சற்று எழும்பி அனைவரதும் வரவேற்பை அன்போடு ஏற்றுக்கொண்டார். ஒரு முது  கலைஞரை இளம்  கலைஞர்  தலைமுறை  மதித்துப்போற்றும்  அப்பண்பு என்னை வெகுவாக ஆகர்சித்தது. நாமும்  அவர்களுடன் கலந்து எழுந்து நின்று   பெரு மகிழ்ழ்சியோடும் மரியாதையோடும்  கைதட்டி  லெஸ்டரை  வரவேற்றோம். குனிந்து  வணங்கினோம். அவ்வணக்கமும் கைகுவிப்பும் நம் நெஞ்சின் அடி ஆழத்திலிருந்து  வந்தவை. அந்த அளவு சினிமா ரசிகர்களின் மனதில் ஓர் பெரும் இடம் பிடித்து வீற்றிருந்தார்  லெஸ்டர் ஜேம்ஸ்  பீரிஸ்.

1960  களில்  பேராதனைப்பல்கலைக்க்ழகத்தில் நான் படித்துக்கொண்டிருந்த காலத்தில்  சிங்கள  சினிமாக்களுக்கு அறிமுகமானேன். அப்போது சிங்களம் புரியாவிடினும்  சில நல்ல  சிங்கள சினிமாக்களுக்கு எமது  சிங்கள  நண்பர்கள் எம்மை அறிமுகம் செய்தனர். அவற்றுள் ஒன்றுதான் லெஸ்டரின்  இரண்டாவது படமான  சந்தேசிய (தூது)  இப்படத்தை நான் 1961 இல் பார்த்தேன். தமிழ் சினிமா பார்த்து அதன் மனோரதிய உலகில் இருந்த என்னை சந்தேசிய  படம்  நிஜ உலகுக்கு இழுத்து  வந்தது. உள்ளூரிலிருந்த போர்த்துக்கேசிய  கோட்டை ஒன்றை உள்ளூர்க் கிராமப் புரட்சிகர இளைஞர்கள் ஒன்று  சேர்ந்து  தாக்கி அழிக்கும்  கதை. அந்த இளைஞர்களுள் ஒருவராக வந்து அப்போரில் இறப்பவராக மறைந்த நடிகர்  காமினி பொன்சேகா நடித்திருந்தார். அதற்காக அக்கிராமம்  தலைநகரில் இருந்து வந்த  போர்த்துக்கேய இராணுவத்தால்  ஈவு இரக்கமின்றி அழித்தொழிக்கப்படுகின்றது. அந்த அழித்தொழிப்பும் மக்கள் அவலமும் மனதில் ஆழமாகப்பதிந்தன. அந்தப்படத்தின் தயாரிப்பாளர் குணரத்தினம். அதன் இசையமைப்பாளர்கள்: முத்துசாமி , மொஹிதீன்பெக், லதாவல்பொல, தர்மதாச  வல்பொல   ஆகியோராவர். அதில் வந்த “போர்த்துக்கீசக்காரயா ரட்டவல்லல் யன்ன  சூரயா” என்ற பாடல் சிங்கள மக்கள் நாவெல்லாம் நடமாடிய பாடல்.

Continue Reading →