கவிதை: நாக்குகள்

ஒரு நாக்கைப் பல நாக்குகளாகப் பெருக்கும் தொழில்நுட்பம்
தெருக்கோடியில் புதிதாகத் திறந்திருக்கும்
மனிதார்த்த மையமொன்றில் கற்றுத்தரப்படுகிறது என்று
ஒலிபெருக்கியில் அலறிக்கொண்டே போனது ஆட்டோ…
போன வருடம் இதே நாளில் சிறிய விமானமொன்று
துண்டுப்பிரசுரங்களைத் தூவிவிட்டுச் சென்றது.
தாவியெடுத்துப் பார்த்தால் அதில் தரப்பட்டிருந்த
கட்டணத்தொகையில் தலைசுற்றியது.
முற்றிலும் இலவசமென்று இப்போது சுற்றுக்கு விடப்பட்டிருக்கிறது
Pied Piper of Hamelin பின்னே போகும் எலிகளில் ஒன்றாய்
போட்டது போட்டபடி ஆட்டோவைப் பின்தொடர்ந்தேன்.

’பலநேரங்களில் எதிர்வினையாற்றமுடியாமல்தானே இருக்கிறது –
இதில் பல நாக்குகளின் தேவையென்ன?’
என்று தர்க்கம் செய்யத் தொடங்கியது அறிவு.’
ஒரு நாக்கை வைத்துக்கொண்டே
நேற்றொன்றும் நாளையொன்றுமாய்
கருத்துரைத்துக்கொண்டிருக்கிறோம்
இதில் இருபது நாக்குகள் இருந்தாலோ……?’
என்று உறுத்தியது மனசாட்சி.
ஓங்கிக் குட்டியதில் இரண்டும் வாய்மூடி
ஏங்கியழுதபடி தத்தமது மூலையில் ஒடுங்கிக்கொண்டன.

Continue Reading →

கவிதை: சண்டைக்கு அழைக்கும் சமாதானத் தூதுவர்கள்

கையில் கிடைத்த கற்கள் சில;
கவனமாய் கூர்தீட்டிவைத்துக்கொண்ட கற்கள் சில;
உடைந்த கண்ணாடிச்சில்லுகள்,
காலாவதியாகிவிட்ட அம்மிக்குழவிகள்,
அறுந்த சங்கிலிகள்
அம்புகள் விஷம்தோய்ந்த முனைகளோடு….

அத்தனையும் சொற்களாய்
உருமாறி வெளியே தெறிக்கும் வேகத்தில்
அப்பாவி மண்டை பிளந்து
ரத்தம் பெருக்கெடுக்க,
அநியாயமா யொருவரின் விழி சிதைய,
அவனை மனைவி பறிகொடுக்க
இவளைக் கணவன் இழந்தழிய,
கொள்ளைபோகும் மனிதநேயம்.

Continue Reading →

கவிதை: நாமெனும் நான்காவது தூண்

கவிதை: நாமெனும் நான்காவது தூண்

வயிற்றுப்பிழைப்புக்கென இழவு வீடுகளில்
ஒப்பாரி வைப்பவள் ‘ருடாலி’
அப்படியும்
வாய்விட்டுக் கதறிமுடித்துக்
கூலியை வாங்கிமுடிந்துகொண்டு
வழியேகும்போதெல்லாம்
ஒவ்வொரு வீட்டின் ஆற்றொணாத் துயரமும்
அவள் மீதும் தவறாது ஒட்டிக் கொள்ளும்.
இரவு கயிற்றுக்கட்டிலில் படுத்தபடி
ஒரு கையறுநிலை மனதை சுருக்கிட்டு இறுக்க
அண்ணாந்து வானத்தை வெறிக்கும் அவள் கண்களில்
மாட்டிக்கொண்டு பதறும் காலம் உருண்டிறங்கும்
நீர்த்துளிகளாய்.
இழவுவீட்டில் அலறியழும்போதெல்லாம்
இறந்துவிட்ட கணவன்,
இரண்டு பிள்ளைகள்,
இளமை, யதன் இனிய மாலைகள்
வெள்ளம் அடித்துக்கொண்டுபோய்விட்ட தன் ஊர்மக்கள்
பள்ளத்தில் விழுந்து காலொடிந்து மடிந்த ஆட்டுக்குட்டி
மெள்ள மெள்ள அடங்கிப்போன பொன்னியின் உயிர்
எல்லாமும் உள்ளே தளும்பித் தளும்பி மேலெழும்பி
சொல்லுக்கப்பாலான பிளிறலாய் வெளிப்படும்
அவளைப் பிளந்து.

Continue Reading →