ஆய்வு: வைரமுத்து கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள்

- முனைவர் இரா.பிரியதர்ஷினி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஜி.டி.என். கலைக் கல்லூரி, திண்டுக்கல். -தமிழ் இலக்கியம் சங்க இலக்கியம், அற இலக்கியம், காப்பிய இலக்கியம், பக்தி இலக்கியம் என பல முகங்களைக் கொண்டது ஆகும். இவற்றுள் இக்கால இலக்கியமும் ஒன்று. கவிதை, சிறுகதை, நாவல் முதலானவை இவ்வகையைச் சாரும். கவிதை படைப்பாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் கவிஞர் வைரமுத்து. இவரது படைப்புகளில் ஒன்றான ‘இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல’ என்னும் நூலில் அமைந்த சமுதாயச் சிந்தனைகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது

கவிதை
கவிதை என்பது ஒரு கலையாகும். கவிஞர் தான் பெறும் அனுபவங்களைக் கற்பனை நயத்துடனும், கருத்துச் செறிவுடனும் ஒலிநயம், உணர்ச்சி, இனிமை, எளிமை ஆகியவற்றைக் கலந்து கவிதை வடிவங்களாகத் தருகின்றார். கவிதை குறித்து கவிமணி,

உள்ளத் துள்ளது கவிதை – இன்பம்
உருவெ டுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை
தெரிந்து ரைப்பது கவிதை (மலரும் மாலையும், ப.51)

என்று கூறுகின்றார். கவிஞரின் கருத்திற்கேற்ப கவிதையின் பாடுபொருள் அமையும்.

கவிதையின் வகைகள்
கவிதை இரண்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. யாப்பிலக்கணத்தோடு வரையறைக்கு உட்பட்டு அமைவது மரபுக்கவிதை என்றும், இலக்கணமின்றி வரையறையற்று அமைவது புதுக்கவிதை என்றும் வழங்கப்படுகின்றது. புதுக்கவிதைக்கு இலக்கணம் கூறுகையில் பாரதியார்,

சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது
சொல் புதிது சோதிமிக்க நவ கவிதை
எந்நாளும் அழியாத மகா கவிதை (பாரதியார் கவிதைகள், பக்.318-319)

என்று கூறுகின்றார். பாரதியைத் தொடர்ந்து பல கவிஞர்கள் புதுக்கவிதை இலக்கியத்திற்கு வலுசேர்த்தனர். இவர்களுள் குறிப்பிடத்தக்கவர் வைரமுத்து ஆவார்.

கவிஞர் வைரமுத்து
புதுக்கவிதை இலக்கியத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர். தற்காலக் கவிஞர் பெருமக்கள் வரிசையில் முதலிடம் பெறுபவர். வானம்பாடி இயக்கத்தைச் சார்ந்தவர். இவர் மரபுக்கவிதை, புதுக்கவிதை இரண்டிலும் படைப்புகளைப் படைத்துள்ளார்.
சமுதாய முன்னேற்றத்தில் இலக்கிய படைப்பாளர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் இலக்கியம் அன்றி மக்களின் வாழ்க்கையையும் கவிஞர் வைரமுத்து தம் கவிதைகள் உலகிற்குப் படம்பிடித்துக் காட்டுகின்றார்.

Continue Reading →

ஆய்வு: சங்கப் புறப்பாடல்கள் புலப்படுத்தும் தமிழர் பண்பாட்டில் மலர்கள்

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
பழந்தமிழரின் வாழ்வியலைச் சித்திரிக்கும் இலக்கியச் சான்றுகளுள் மிக முக்கியமானவை சங்க இலக்கியங்களாகும். இவை அகம், புறம் என்னும் இருகூறுகளை கொண்டு விளங்குகின்றன. இயற்கையை மையமிட்ட அக்கால வாழ்க்கைச் சூழலில் எங்கும் எழிலுற விளங்கிய இயற்கைவளமே தமிழரின் வாழும் இடமாகவும் பண்பாட்டின் உறைவிடமாகவும் திகழ்ந்துள்ளது. நாட்டையாளும் வேந்தர்கள் முதல், பொது மாந்தர்கள் வரை இவர்களின் புறவாழ்க்கையை விளக்கும் பகுதியாகச் சங்கப்பாடல்கள் இருக்கின்றன. அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை எட்டுத்தொகையில் அமையபெறும் புறநானூறு மற்றும் பதிற்றுப்பத்து நூல்களாகும். இவ்விரு புறநூல்களை முதன்மையாகக் கொண்டு வேந்தனின் அடையாளம் மற்றும் போர்குறிப்பு அவனது நாட்டுவளம், கொடைத்தன்மை என மன்னர்களின் புறவாழ்க்கையையும் உணவு, உடை, அணிகலன்களிலும் கணவன் இல்லாதபொழுது பெண்களுக்கு நடத்தப்படும் சடங்குமுறைகள் என மாந்தர்களின் புறவாழ்க்கையிலும் பண்பாட்டைக் கட்டமைக்கும் ஒரு கருவியாக மலர்கள் இருந்துள்ளன என்பதைத் தக்கச் சான்றுகள் கொண்டு விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

வேந்தனின் அடையாளம் மற்றும் போர் நிகழ்வுகள்
தன்னைப் பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் பண்புகளில் ஒன்றாகத் திகழ்வது அடையாளப்படுத்துதல் என்பதாகும். நாட்டையாளும் மன்னனுக்குக் கொடி, குடை, முரசு, தார், முடி ஆகிய ஐந்தும் சின்னங்களாக விளங்கியுள்ளன. இவற்றில் தார், முடி ஆகிய இரண்டும் மலர்களால் அலங்கரிக்கப்படுவதன் மூலம் அம்மன்னர்களை அடையாளங் காணும் முறை வழக்கில் இருந்துள்ளது என்பது தெளிவாகிறது. மேலும் மூவேந்தர்களுக்குள் எழும் பகையின் போது வீரர்களின் போர் நோக்கத்தைப் புலப்படுத்த மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை,

வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்து புகழ்ப்
போந்தே வேம்பே ஆர் என வரூஉம்
மாபெருந் தானையர் மலைந்த பூவும் (தொல். புறம். 1006)

எனும் தொல்காப்பிய நூற்பாவும்,

இரும் பனை வெண் தோடு மலைந்தோன் அல்லன்
கருஞ் சினை வேம்பின் தெரியலோன் அல்லன்
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே (புறம். 45)

எனும் கோவூர் கிழாரின் புறநானூற்றுப் பாடலும் மூவேந்தர்கள் சூடிய அடையாள மலர்களுக்குச் சான்றாகத் திகழ்கின்றன.

Continue Reading →