முற்றுப் பெறாத உரையாடல்கள் – ௦3: இசை உலகம் – இரகசியங்களும் இருட்டடிப்புக்களும் கௌசல்யா சுப்ரமணியனின் இரு நூல்களின் அறிமுக விழா தொடர்பாக ..

முற்றுப் பெறாத உரையாடல்கள் - ௦3: இசை உலகம் – இரகசியங்களும் இருட்டடிப்புக்களும் கௌசல்யா சுப்ரமணியனின் இரு நூல்களின் அறிமுக விழா தொடர்பாக ..

மீண்டும் ஒரு நூல் அறிமுக விழா கடந்த வாரம் சனிக்கிழமையன்று (23.06.2018) ஈஸ்ட்ஹாம் இல் உள்ள Trinity Centre இல் நடைபெற்றது. கௌசல்யா சுப்ரமணியனின் ‘இசைத்தமிழ் சிந்தனைகள்’ ‘தமிழ் இசைப்பாடல் வகைகள்’ என்ற இரு நூல்களே அவை. இசை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ரசிப்பதுடன் சரி. இப்போது கொஞ்சம் எனது வாசிப்பு எல்லைகளை விரிவு படுத்திய காரணத்தினால் இசையை ரசிப்பது என்பதுவும் அறவே இல்லாமல் போய்விட்டது. எனவே வேண்டா வெறுப்பாகத்தான் அரங்கில் போய் உட்கார்ந்தேன். 4 மணிக்கு ஆரம்பமாக வேண்டிய நிகழ்வு மிகவும் தாமதமாக 6 மணிக்கே ஆரம்பமாகியது. இந்நிகழ்ச்சியின் இறுதியில் பேராசிரியர் நா.சுப்பிரமணியம் அவர்கள் ‘ஒரு கால கட்டத்து நாவல்கள்’ என்ற தலைப்பில் பேசுவதாக இருந்தது. எனவே அவர் உரையைச் செவி மடுப்பதே எனது நோக்கமாக இருந்தது.

Continue Reading →

ஆய்வு: புலம்பெயர் தமிழர்களின் பண்பாட்டுக் கல்வியில் திருக்குறளுக்கு அளிக்கப்படவேண்டிய முக்கியத்துவம்.

கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன்  [ஐக்கிய ராச்சியம் லிவர்ப்பூல் ஹோப் பல்கலைக் கழகத்தில் 2018ஜூன் 27,28,29 நாள்களில்  நடைபெற்ற இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாட்டு ஆய்வரங்கில் வாசிக்கப் பட்ட ஆய்வுக்கட்டுரை. கட்டுரையாளர் :  கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன்   ]

தோற்றுவாய்
தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தங்கள் பண்பாட்டம்சங்களைப் பேணிக் கொள்வதற்கு திருக்குறள் எவ்வகையில் துணபுரியக் கூடியது என்பதை எடுத்துப்பேசும் முயற்சியாக எனது இக்கட்டுரை அமைகிறது.

‘பண்பாடு’ என்பது தனிமனித அறஒழுக்கநெறிகள், குடும்ப-சமூக உறவு முறைகள் அவை தொடர்பினாலான சடங்கு சம்பிரதாயங்கள்–விழாக்கள், வாழ்வியல் முறைமைகள், கலைக் கோலங்கள் முதலான பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கியதாகும். இவ்வாறான பண்பாட்டம் சங்களின் இயல்பு மற்றும் அவை காலம்தோறும் அடைந்துவந்த வளர்ச்சி மற்றும் மாற்றம் ஆகிய வற்றைப் பதிவுசெய்து பேணி நிற்கும் செயன்முறைகளில் ஒருவகையாகத் திகழ்பவை இலக்கிய ஆக்கங்கள் ஆகும். அவ்வகையில் தமிழரின் பண் பாட்டைப் பொறுத்தவகையில் முக்கியமான அற இலக்கியப் பதிவாக அமைந்த நூல் திருக்குறள் ஆகும்.

தமிழில் நாலடியார், நான்மணிக்கடிகை, ஆத்திசூடி முதலான பத்துக்கும் மேற்பட்ட அறநூல்கள் பண்டைய காலப்பகுதிகளில் எழுந்திருப்பினும் வாழ்க்கை தொடர்பான முழு நிலைப்பார்வையை முன்வைத்துள்ள ஆக்கம் என்ற வகையில் தலைமைத்தகுதியுடையதாகத் திகழ்ந்துவருவது திருக்குறளேயாகும். இவ்வாக்கம் பண்டைத்தமிழர் பேணிநின்ற உலகியல் வாழ்க்கை சார்ந்த பண்பாட்டம்சங்கள் பலவற்றைத் தொகுத்துரைப்பது. இவ்வாறான இந்நூலா னது, இன்றைய சூழலில் புலம்பெயர் தமிழரின் பண்பாட்டுக் கல்விக்கு எவ்வெவ்வகைகளில் பயன்படக்கூடியது என்பதைக் கவனத்திற்கு இட்டுவருவதே இவ்வாய்வுக் கட்டுரையின் குறிக்கோளாகும்.

இவ்வகையில் இக்கட்டுரையிலே முதலில், திருக்குறளின் பண்பாட்டுப் பார்வை தொடர்பான பொது விளக்கம் முன்வைக்கப்படவுள்ளது. குறிப்பாக, அந்நூல் இல்லறத்தார், துறவறத்தார், ஆட்சியாளர் மற்றும் நிர்வாகப்பணியாளர் முதலான அனைத்துவகை சமூக மாந்தர்க்குமுரிய அறங்களை எடுத்துக் கூறும் முறைமை இம்முதற்பகுதியிலே கவனத்துக்கு இட்டு வரப்படவுள்ளது. 

இக்கட்டுரையின் இரண்டாம் பகுதியானது, திருக்குறள் புலப்படுத்தி நிற்கும் மேற் சுட்டிய பண்பாட்டம்சங்களின் பரப்பிலே புலம்பெயர்தமிழ்ச் சமூகச்சூழலில் கல்விகற்கும் மாணவர் களுக்கு அழுத்திப் பேசப்படவேண்டிய அம்சங்கள் எவையெவை என்பதைச் சுட்டிக்காட்டும் செயற்பாடாக அமையவுள்ளது.

Continue Reading →

ஆய்வு: இல்வாழ்க்கைக்குத் திருக்குறள் அளித்துள்ள முதன்மை நிலை -இந்திய மற்றும் உலகளாவிய சிந்தனைகளுடனான ஒப்புநோக்கு

கலாநிதி நா. சுப்பிரமணியன்[ஐக்கிய ராச்சியம் லிவர்ப்பூல் ஹோப் பல்கலைக் கழகத்தில் 2018ஜூன் 27,28,29 நாள்களில்  நடைபெற்ற இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாட்டு ஆய்வரங்கில் வாசிக்கப் பட்ட ஆய்வுக்கட்டுரை. கட்டுரையாளர் : பேராசிரியர் கலாநிதி நா. சுப்பிரமணியன் ]


தோற்றுவாய்
திருக்குறள் பற்றிய பார்வைகளிலே கவனத்துட் கொள்ளப்படவேண்டிய ஒரு முக்கிய அம்சத்தை ஆய்வுநிலையில் முன்வைப்பதாக இக்கட்டுரை அமைகிறது. அந்நூலைப் பற்றி இதுவரை மேற்கொள்ளப்பட்டுவந்துள்ள ஆய்வுப் பார்வைகள் பலவும் அதனை ’உலகப் பொதுவானஒரு அறநூல் ’ஆக, சரியாகவே இனங்காட்டிவந்துள்ளன. அவ்வகையில் அப் பார்வைகள் பலவும் அந்நூலின் ’அறவியல் சார்ந்த உள்ளடக்க அம்சங்களின் சிறப்பு’களை, உலகளாவியநிலைகளிலான அத்தகு சிந்தனை மரபுகளுடன் தொடர்புறுத்தி நோக்கித் தெளிவாகவே எடுத்துரைத்துள்ளன என்பதும் வெளிப்படை. இவ்வாறு அதனை உலகப் பொது வானஒரு அறநூலாகக்கொண்டு நிகழ்த்தப் பட்டு வரும் ஒப்பியல்சார் பார்வைகளிலே, ‘இதுவரை தனிநிலையில் உரிய கவனத்தைப்பெறாத’ ஒரு அம்சத்தை அடையாளங் காட்டும் ஆய்வுமுயற்சியாகவே இக்கட்டுரை அமையவுள்ளது. அந்தஅம்சம், அந்நூலின் ’வாழ்க்கை பற்றிய நோக்கு நிலை‘ தொடர்பானதாகும். குறிப்பாக, ’இல்வாழ்க்கை’ எனப்படும் ’குடும்பக் கட்டமைப்பு சார்’ வாழ்வியலுக்கு அந்நூல் அளித்துள்ள முதன்மையே  இவ்வாய்விலே நமது கவனத்துட் கொள்ளப்படுகிறது. இவ்வாறாக அவ்வாக்கம் அளித்துள்ள அம்முதன்மை நிலையின் வரலாற்று முக்கியத்துவத்தை நுனித்து நோக்கும் முயற்சியே இங்கு மேற்கொள்ளப்படவுள்ளது. 

திருக்குறளின் கட்டமைப்பிலே – குறிப்பாக பால் மற்றும் இயல்களுக்குப் பெயரிடுவ திலும் அவற்றின் வைப்பு முறைகளிலும் – வேறுபாடுகள் நிலவி வருவதால் இங்கு எனது இப்பார்வைக்கு பரிமேலழகருரையுடனான கட்டமைப்பையே ஆதாரமாகக் கொண்டுள் ளேன் என்பதை முதலிலேயே தெரிவித்துக்கொள்கிறேன். 

1. திருக்குறள்  இல்வாழ்க்கைக்கு தந்துள்ள முதன்மை –சில சான்றுகள் 

வாழ்க்கை பற்றிய நோக்குநிலைகளை முக்கியமான இரு வகைகளில் அடக்கலாம். அவற்றுள் முதலாவது நிலையானது கணவன்>மனைவி> பிள்ளைகள் மற்றும் சுற்றத்தினர் ஆகியோரை உள்ளடக்கியதான ‘குடும்பம்’ என்ற கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளும் நிலையாகும். மேற்படி குடும்பக்கட்டமைப்புசார் நிலையே தமிழில் இல்வாழ்க்கை எனப்படு கிறது. இதிலே உலகியல்சார்ந்த நடைமுறை அனுபவங்கள், அவைசார்ந்த அற-ஒழுக்க நியமங்கள் மற்றும் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் ஆற்றவேண்டிய கடமைகள் முதலியன முக்கியத்துவம் பெறுகின்றன.

இரண்டாவது நிலையானது ‘குடும்பம்’ என்ற கட்டமைப்பை  ஏற்காத – அதாவது அதற்குப் புறத்தே நிற்கும் – நிலையாகும். இந்த நிலையானது மேற்படி உலகியல்சார் அனுபவங்களினின்று விலகிநிற்பதாகும். குறித்த சில அற – ஒழுக்கநியமங்களைப் பேணிக் கொள்வது மற்றும் சமூகத்துக்கான சில கடமைகளை ஆற்றுவது ஆகிய எல்லைகளுடன் இந்த இரண்டாவது நிலை நிறைவுபெற்றுவிடுகிறது.

Continue Reading →

கடித இலக்கியம்: வடமராட்சி ” ஒப்பரேஷன் லிபரேஷன் “! பேரழிவுக்காக 1987 இல் நடந்த ஒத்திகை! ராஜஶ்ரீகாந்தன் (1948 – 2004) எழுதிய ஈழப்போர்க்கால கடிதம்!

ராஜஶ்ரீகாந்தன்ஈழத்து தமிழ் இலக்கியம் மற்றும் ஊடகத்துறைகளின் வளர்ச்சியில் காத்திரமான பங்களிப்புகளை வழங்கியவர்களின் வரிசையில் ராஜஶ்ரீகாந்தன் அவர்களும் குறிப்பிடத்தகுந்தவர். வடமராட்சியில் வதிரி என்னும் கிராமத்தில் 1948 ஆம் ஆண்டு பிறந்து தனது 56 ஆவது வயதில் கொழும்பில் மறைந்தார். சிறுகதை, கட்டுரை, விமர்சனம், திறனாய்வு, இதழியல், மொழிபெயர்ப்பு முதலான துறைகளில் ஈடுபட்டவர். வடமராட்சியில் அடிநிலை மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காகவும் மறுமலர்ச்சிக்காகவும் கடுமையாக உழைத்த பெரியார் சூரன் அவர்களினால் எழுதப்பட்ட சுயசரிதையை கையெழுத்துப்பிரதியிலிருந்து அச்சுப்பிரதியாக பதிப்பித்து வெளியிட்டவரும் ராஜஶ்ரீகாந்தன்தான்! அழகு சுப்பிரமணியத்தினால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சிறுகதைகள் ( நீதிபதியின் மகன்), நாவல் (மிஸ்டர் மூன்) ஆகியனவற்றை தமிழில் மொழிபெயர்த்தார். இவரது காலச்சாளரம்  சிறுகதைத்தொகுதிக்கும் நீதிபதியின் மகன் மொழிபெயர்ப்பு நூலுக்கும் தேசிய சாகித்திய விருதுகள் கிடைத்துள்ளன. கொழும்பில் சோவியத் தூதரகத்தின் தகவல் பிரிவில் இவர் பணியாற்றிய காலத்தில் சோவியத் நாடு, சோஷலிஸம் – தத்துவமும் நடைமுறையும், மற்றும் புதிய உலகம், சக்தி ஆகிய இதழ்களின் ஆசிரியர்குழுவிலும் பணியாற்றி ஊடகவியலாளராக தனது எழுத்துப் பணிகளைத் தொடர்ந்தார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை பாடநெறியிலும் பயிற்சி பெற்றிருந்த ராஜஶ்ரீகாந்தனின் சிறுகதைகள் ஆங்கிலம், ருஷ்யா உக்ரேய்ன், சிங்களம் ஆகிய மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சர்வதேச செயலாளராகவும் இயங்கியிருக்கும் ராஜஶ்ரீகாந்தன், கொழும்பில் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றியவர்.  2004 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 20 ஆம் திகதி மறைந்தார். எனது நெஞ்சத்துக்கு நெருக்கமான ராஜஶ்ரீகாந்தன் மறைந்ததையடுத்து, ராஜஶ்ரீகாந்தன் நினைவுகள் என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளேன்.

அவுஸ்திரேலியாவுக்கு நான் 1987 இல் புலம்பெயர்ந்து வந்தபின்னர், குறிப்பிட்ட ஆண்டு முதல் அவர் மறைந்த 2004 ஏப்ரில் மாதம் வரையில் அவர் எனக்கு எழுதியிருக்கும் கடிதங்கள் ஏராளம். அவை இலக்கியம், சமூகம், அரசியல், எழுத்துலகம் பற்றிய செய்திகளையும் ஆவணப்படுத்தியிருக்கும். அழகிய சின்னச்சின்ன எழுத்துக்களில் அவரது கடிதங்கள் அவரது எளிமையான இயல்புகளையும் பேசியிருக்கும்.  1987 ஆம் ஆண்டில் அன்றைய ஜே.ஆர். ஜெயவர்தனாவின் பதவிக்காலத்தில் வடமராட்சியில் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியின் உத்தரவின்பேரில் இடம்பெற்ற ” ஒப்பரேஷன் லிபரேஷன் ” தாக்குதல் ஆக்கிரமிப்பை பற்றி ராஜஶ்ரீகாந்தன் எனக்கு எழுதிய இக்கடிதம் தெரிவிக்கும் செய்திகளிலிருந்து ஈழப்போராட்டத்தை முற்றாக நசுக்குவதற்காக 1987 இலேயே நடத்தப்பட்ட ஒத்திகையாகவும் அந்த ” ஒப்பரேஷன் லிபரேஷன் ” தாக்குதல் ஆக்கிரமிப்பை அவதானிக்கலாம். குறிப்பிட்ட ” ஒப்பரேஷன் லிபரேஷன் ” தாக்குதல் ஆக்கிரமிப்பினையடுத்தே, இந்தியா வடமராட்சியில் விமானங்கள் மூலம் உணவுப்பொட்டலங்களை வீசி மற்றும் ஒரு ஆக்கிரமிப்புக்கு அடிகோலியது. அதன்பின்னர் அமைதி காக்க வந்த இந்தியப்படைகளின் காலம், அதன் பின்னரும் நீடித்த போர்க்காலம், இறுதிக்கட்ட முள்ளிவாய்க்கால் அவலம் பற்றி தொடர்ச்சியாக ஆவணங்களும் நூல்களும் பத்தி எழுத்துக்களும் வெளியாகின்றன.   ராஜஶ்ரீகாந்தன் கொழும்பிலிருந்து 14-07-1987 ஆம் திகதி எனக்கு எழுதிய இக்கடிதம் அன்றைய வடமராட்சி சம்பவங்களையும் தொகுத்துச்சொல்கின்றது. 


Continue Reading →