வாசிப்பும், யோசிப்பும் 290: வெற்றிமணி சிறுவர் சஞ்சிகையின் பரிணாம வரலாறு பற்றிய சில தகவல்களும், எண்ணங்களும்!

 1.12.1956 இதழில் ஆசிரியர் ஏ.கே.சாமி '1957 தை மாதம் தொடக்கம் கெளரவ ஆசிரியராக வித்துவான் மு.கந்தையா அவர்கள் கடமையாற்றுவார் என்று அறிவித்திருக்கின்றார்.‘வெற்றிமணி’ சஞ்சிகையின் 22.2.1955 இதழ் எம்.எம்.பாரிஸ் ((M.M.Faries)  என்பவரை ஆசிரியராகக்கொண்டு நாவலப்பிட்டி மிட்லண்ட் அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு அவராலேயே வெளியிடப்பட்டுள்ளது. இதில் மலர் 1, இதழ் 1 என்றிருப்பதால் இதுவே அவர் ஆசிரியராகவிருந்து , வெளியிட்ட முதலாவது இதழென்பது தெரிகின்றது. (ஆதாரம் – நூலகம் தளத்திலுள்ள வெற்றிமணி சஞ்சிகைகள்) 20-10-1955  இதழ் எம்.எம்.பாரிஸ் ஆசிரியராகவிருக்கின்றார். அச்சடிக்கப்பட்டது ஆனந்த, யாழ்ப்பாணத்தில்.

20.12.1955 இதழ் நாவலப்பிட்டி மிட்லண்ட அச்சகத்திலேயே அச்சிடப்பட்டு வெளியாகியுள்ளது. ஆனால் ஆசிரியரின் பெயர் ஏ.கே.சாமி என்றுள்ளது. 22-2-1955 தொடக்கம் 21_11_1955 வரை வெளியான இதழ்களுக்கு ஆசிரியராகவிருந்தவர் எம்.எம்.பாரிஸ். 20-10-1955 இதழ் தவிர அவ்வருடத்தில் வெளியான ஏனைய இதழ்கள் அச்சடிக்கப்பட்டதும் மிட்லண்ட் அச்சகத்திலேயே.


வெற்றிமணி சஞ்சிகையின் முதலாம் ஆண்டு மலராக 14.1.1956 இதழ் வெளியாகியுள்ளது. ஆசிரியர் ஏ.கே.சாமி. இவ்விதழில் அட்டைப்படம் அழகாக வந்துள்ளதுடன், சஞ்சிகையின் வடிவமைப்பும் மாறியுள்ளதையும் காண முடிகின்றது. அட்டையில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பொங்கல் கவிதையும் வெளியாகியுள்ளது. முதலாவது ஆண்டு மலர் பொங்கல் மலராக வெளியாகியுள்ளது. 1.12.1956 இதழில் ஆசிரியர் ஏ.கே.சாமி ‘1957 தை மாதம் தொடக்கம் கெளரவ ஆசிரியராக வித்துவான் மு.கந்தையா அவர்கள் கடமையாற்றுவார் என்று அறிவித்திருக்கின்றார்.

வெற்றிமணி சஞ்சிகையின் 1.9.1956 இதழில் இலங்கை அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த செய்தியொன்று முன் பக்கத்தில் வெளியாகியுள்ளது. “தமிழ் பேசும் இனத்தின் உரிமைப்போராட்டத்தை  நிர்ணயிக்கும் தமிழரசுக் கட்சியின் சரித்திரப்பிரசித்தி பெற்ற மாநாடு திருகோணமலையில் 18,19-8-1956 இல் நடைபெற்றது.  தமிழ்பேசும் இனத்தின் உரிமைப்போராட்டத்திற்குச் செல்லும் “திருமலை யாத்திரை” என்னும் அறிவிப்புடன் நெடுங்கவிதையொன்றின் முதற்பகுதி  , நவாலியூர் பண்டிதர் சோ.இளமுருகனார் எழுதியது, வெளியாகியுள்ளது. கவிதை “திருமலைக்குச் செல்லுவோம். சிறுமை அடிமை வெல்லுவோம்” என்று ஆரம்பமாகியுள்ளது.

இவ்விதழில் “எங்கள் ஊர் வவுனியா” என்னுமொரு கட்டுரையினை மாணவர் மன்ற உறுப்பினரான செல்வி.சே.சிவநேசமணி என்னும் மாணவி எழுதியிருக்கின்றார். சுருக்கமான , சுவையான கட்டுரை . அதில் அவர் வன்னிக்கு ‘அடங்காப்பற்று’ என்னும் காரணம் வந்த காரணத்தைக் குறிப்பிட்டிருப்பார். இதுவரை நான் கேட்காத விளக்கம். தர்க்கபூர்வமானது. அதனை இங்கு தருகின்றேன்: “வன்னிநகர் “அடங்காப்பற்று” எனும் மங்காப்பெயர் கொண்டது. இப்பெயர் பெறுவதற்குக் காரணம் அவர்கள் பேராசையன்று. முற்காலத்தில் பல்வகைச்செல்வங்களும் நிறைந்து விளங்கிய வன்னியிலே உள்ள மக்கள் ஈதலையே தலை சிறந்த அறமாகக் கொண்டிருந்தனர். இரப்போர்க்கு இல்லையென்னாது ஈந்தனர். ஈகையின்மேல் அவர்கள் கொண்டிருந்த அடங்காப்பற்றினாலேயே அவர்களது நாடாகிய வன்னிக்கு ‘அடங்காப்பற்று’ எனப்பெயர் உண்டாகியதென்று பலர் கூறுவர்”.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 289: மறக்க முடியாத ‘வெற்றிமணி’

வாசிப்பும், யோசிப்பும் 289: மறக்க முடியாத 'வெற்றிமணி'இலங்கையில் வெளிவந்த ‘வெற்றிமணி’ சிறுவர் சஞ்சிகைக்கு முக்கியமானதோர் இடம் இலங்கைத் தமிழ் இலக்கியத்திலுண்டு. தமிழகத்தில் வெளியான ‘கண்ணன்’ சிறுவர் இதழ் எவ்விதம் எழுத்தாளர்கள் பலரை உருவாக்கியதோ அவ்விதமே ‘வெற்றிமணி’ சஞ்சிகையும் பலரை உருவாக்கியுள்ளது. வெற்றிமணியின் ‘பாலர் பக்கத்தில்’ இளம் எழுத்தாளர்கள் பலர் தமது ஆரம்பகாலப்படைப்புகளை (கட்டுரை, சிறுகதை, விமர்சனம், நாடகம் , உருவகக் கதை போன்ற படைப்புகளை) எழுதியுள்ளார்கள். கிழக்கு மாகாணம், மலையகத்திலிருந்தெல்லாம் இளம் எழுத்தாளர்கள் பலர் எழுதியுள்ளார்கள். முஸ்லீம் இளம் எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் பலவற்றை ‘வெற்றிமணி’ இதழ் தாங்கி வெளியாகியுள்ளது. ‘கவிதை’ அரங்கம்’ பகுதியிலும் பலர் இவ்விதமே எழுதியுள்ளார்கள். இலங்கையின் பிரபல எழுத்தாளர்களான திக்குவல்லை கமல், காரை செ.சுந்தரம்பிள்ளை, சாரதா, கவிஞர் புதுவை இரத்தினதுரை, கோப்பாய் சிவம் எனப்பலர் ‘வெற்றிமணி’ சஞ்சிகையில் சிறுவர் பாடல்களை எழுதியுள்ளார்கள். ஏழாம் வகுப்பு மாணவனான எனது குட்டிக்கதையொன்றும், பொங்கல் பற்றிய கட்டுரையொன்றும் ‘வெற்றிமணி’ சிறுவர் சஞ்சிகையில் வெளியாகியுள்ளன. கவிஞர் வி.கந்தவனம், இரசிகமனி கனக செந்திநாதன் , த. அரியரத்தினம், ஏ.ரி.பொன்னுத்துரை, மு.க.சுப்பிரமணியம் போன்றொர் தொடர்ச்சியாக ‘வெற்றிமணி’யில் எழுதி வந்துள்ளார்கள். குறமகளின் சிறுவர் சிறுகதையொன்றினையும் ஓரிதழில் காண முடிந்தது.

அவ்வயதில் வவுனியா மகா வித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்தேன். விடுமுறைகளில் யாழ்ப்பாணத்துக்குச் செல்லுகையிலெல்லாம் யாழ் நகரிலிலிருந்த ‘அன்பு புத்தகசாலை’க்குச் சென்று ‘வெற்றிமணி’யை வாங்குவதுண்டு. ‘அன்பு புத்தகசாலை’ எழுத்தாளர் செங்கை ஆழியானின் அண்ணரான எழுத்தாளர் ‘புதுமைலோலன்’ அவர்களுடையது. அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த இளைஞரொருவர் எப்பொழுதும் சஞ்சிகைகள், நூல்கள் வாங்க அங்கு செல்லும்போதெல்லாம் அன்புடன் வரவேற்றுதவுவார். பின்னர் யாழ் இந்துக்கல்லூரியில் என் கல்வி தொடர்ந்த என் பதின்ம வயதுக் காலகட்டத்திலும் அங்கு செல்வதுண்டு. அங்குதான் செங்கையாழியானின் முதலாவது நாவலான ‘நந்திக்கடல்’ சரித்திர நாவலினை வாங்கியதுண்டு. மார்க்சிம்கார்க்கியின் புகழ்பெற்ற நாவலான ‘தாய்’ (தொ.மு.சி.ரகுநாதன் மொழிபெயர்த்தது) நாவலை அவ்விளைஞரே எனக்கு வழங்கியவர்.

அறிஞர் அண்ணாவின் மறைவின் போது அவரது புகைப்படத்தை அட்டையிலிட்டு ‘வெற்றிமணி’ சஞ்சிகை அஞ்சலி செய்ததையும் அறிய முடிகின்றது.

‘வெற்றிமணி டாணெனவே விண்முட்ட ஒலித்திடுவாய்.
நற்றமிழாம் எங்கள்மொழி நலமுற ஒலித்திடுவாய்’

என்னும் தாரகமந்திரத்துடன், குரும்பசிட்டி மு.க சுப்பிரமணியத்தைக் கெளரவ ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘வெற்றிமணி’ சஞ்சிகையின் பழைய இதழ்கள் என்னை அக்காலத்துக்கே இழுத்துச் சென்றுவிட்டன.

Continue Reading →