யாழ்ப்பாண நூலகத்துக்குத் தீ வைத்தவர் ஒருவரின் வாக்குமூலம்

– எழுத்தாளர் பற்றிய குறிப்பு: வைத்தியர் ருவண் எம்.ஜயதுங்க

கவிதை, சிறுகதை, கட்டுரைகள் ஆகிய துறைகளில் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தனது பங்களிப்பை ஆற்றி வரும் திரு. ருவண் எம் ஜயதுங்க, இலங்கை இராணுவத்தின் மன நலப் பிரிவில் மருத்துவராக கடமையாற்றியவர்.  அத்தோடு இலங்கை சுகாதார அமைச்சின் புத்தளம் மாவட்டத்துக்கான மன நல உத்தியோகத்தராகவும் கடமையாற்றியவர். ஜோன் எப். கென்னடி, வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்ற தலைவர்கள் குறித்தும், மன நல மருத்துவம், சிறுகதைத் தொகுப்புகள்  என சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார். –


எரிந்த நிலையில் யாழ் நூலகம்

வைத்தியர் ருவண் எம்.ஜயதுங்க

யாழ்ப்பாண நூலகத்துக்குத் தீ வைத்த நபரொருவர் எனக்களித்த வாக்குமூலத்தை பல வருடங்களுக்குப் பிறகு நான் எழுதுகிறேன். இந்த நிகழ்வு குறித்து நான் தனிப்பட்ட பதிவேதும் எழுதவில்லை. எனினும் 2002 ஆம் ஆண்டு என்னால் எழுதப்பட்ட எனது ‘பிரபாகரன் நிரூபணம் குறித்த மனோவியல் ஆய்வு’ எனும் தொகுப்பில் நான் குறிப்பிட்டிருக்கிறேன். இந்த நபரை, 1994 ஆம் ஆண்டு நான் மாத்தளை வைத்தியசாலையில் கடமையாற்றிய காலத்தில் சந்தித்தேன். அவர் எனது பகுதி நேர நோயாளியாகவிருந்தார். பகுதி நேர நோயாளி என நான் குறிப்பிடுவது ஏனெனில், அவருக்கு ஆரம்பத்திலிருந்து சிகிச்சையளித்த வைத்தியர் நானல்ல. எனினும் அவரது உடல் ரீதியான வியாதிகள் சிலவற்றுக்கு நான் சில வைத்திய அறிவுரைகளைக் கூறியிருந்ததாலும், அவருக்கு சில மருந்துகளை இலவசமாகக் கொடுத்ததாலும் அவர் எனக்கு சினேகமாகியிருந்தார். நான் இங்கு குறிப்பிடப் போவது அந்த நபர் என்னிடம் கூறியதைத்தான். இந்தத் தகவல்கள் உண்மையானவை, பொய்யானவை போன்ற விடயங்களை வாசகர்களின் தீர்மானத்துக்கு விட்டு விடுகிறேன். (ஓய்வுபெற்ற சிரேஷ்ட போலிஸ் பிரதி காவலதிகாரி எட்வட் குணதிலகவால் முன்வைக்கப்பட்ட ‘ஆய்வறிக்கை’யின் பிரகாரம், யாழ்ப்பாண நூலகத்தை எரித்தது விடுதலைப்புலிகள் இயக்கத்தினரது செயல்பாடாகும். அதற்கு சிங்களவர்கள்தான் காரணம் எனக் காட்டி சர்வதேச மக்களின் அனுதாபத்தை வென்றெடுப்பதே அவர்களது நோக்கமாகும்.)

இந்த வாக்குமூலத்தை அளித்த நபரது உத்தியோகம் என்னவாகவிருந்தது என்பதை நான் கூற மாட்டேன். காரணம் அது சர்ச்சைக்குரியதாகவும், ஈழ ஆதரவாளர்களால் இந்த விடயமும் கூட அவர்களது பிரசார தந்திரமாகப் பாவிக்கப்படக் கூடும் என்பதனாலுமாகும். எவ்வாறாயினும், இந்தச் சம்பவம் நடைபெற்ற போது அவர் வடக்கில்தான் இருந்திருக்கிறார்.

ஒரு இலட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களோடு, ஆசியாவிலிருந்த விசாலமான நூலகங்களிலொன்றான யாழ்ப்பாண நூலகத்துக்கு 1981 ஆம் ஆண்டு, மே மாதம் 31 ஆம் திகதி தீ வைக்கப்பட்டது. அந்தக் கால கட்டத்தில் யாழ்ப்பாண அபிவிருத்திக் குழுத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்ததோடு, கொழும்பிலிருந்து சென்றிருந்த காடையர்கள் யாழ்ப்பாணத்தில் கலவரத்தை ஏற்படுத்தியவாறு இருந்தனர். இந்த நிகழ்வானது இனவாதக் கலவரங்களின் திருப்புமுனையாக அமைந்தது.

Continue Reading →