விலக்கப்பட்ட வேதாகமங்கள்: சயந்தன் கதிரின் ‘அர்த்தம்’ சிறுகதைத்தொகுதி குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்

எதேச்சையாகத்தான் அந்த நூல் எனது கண்ணில் பட்டது. ஆனாலும் புறந்தள்ள முடியவில்லை. எமது மறக்கப்பட்ட, அல்லது மறக்கடிக்கப்பட்ட வரலாற்றின் பெரும்பகுதி இது போன்ற இலக்கியப்பிரதிகளுக்குள்தான் புதையுண்டு கிடப்பதாக எனக்குள் ஒரு நம்பிகை. எனவே இது பற்றி ஒரு சிறு குறிப்பொன்றினை எழுதலாம் எனது மனதில் தோன்றியதால், அதனை எழுதுவதற்கு எண்ணாமல் துணிந்தேன். இதற்குமப்பால் அந்த நூலின் வடிவமைப்பும் மிகவும் விசித்திரமாக இருந்தது. மற்றைய நூல்களைப் போல் அல்லாமல், 6’*6’ என்ற அங்குல அளவுத்திட்டத்தில் பதிப்பிக்கப்பட்ட அந்நூலானது அச்சு அசலாக ஒரு இறுவெட்டு(DVD) அல்லது குறுந்தகடு(CD) ஒன்றின் உறையின் வடிவத்திலேயே மிகவும் சிறியதாகவும் கவர்ச்சிகரமாகவும் தோற்றமளித்தது. அந்த நூலின் பெயர் : அர்த்தம் ஆசிரியர் : கதிர் சயந்தன் (இப்போது சயந்தன் கதிர் ) வெளியீடு : நிகரி பதிப்பகம் (2003)

சயந்தன் கதிரிற்கு இப்போது அறிமுகம் தேவையில்லை. ஆரம்பத்தில் பல்வேறுபட்ட சிறுகதைகளையும் எழுதிய அவர் இன்று ‘ஆறாவடு’ ‘ஆதிரை’ போன்ற நாவல்களின் மூலம் நவீன தமிழ் இலக்கிய உலகில் தனது தடத்தை ஆழமாகப் பதித்து, தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமையாக உருப்பெற்றுள்ளார்.

6 சிறுகதைகளை மட்டும் கொண்ட இந்த 84 பக்கங்கள் அடங்கிய இந்த நூல் பற்றி நான் எழுத ஆரம்பிக்கும் போதே என்னுள் ஏதோ உறைத்தது. பல வருடங்களுக்கு முன்பு சயந்தனின் ‘ஆதிரை’ நாவல் வெளிவந்த போது ‘பதிவுகள்’ இணையத்தளத்தில் ஒரு சிறு குறிப்பொன்றினை எழுதியிருந்தேன். அந்த குறிப்பின் ஆரம்பத்தில் பின்வருமாறு எழுதியிருந்தேன். “இன்றைய நவீனதமிழ் இலக்கிய உலகில் சயந்தன் மிகவும் கவனத்திற்குரிய ஒரு எழுத்தாளர். இவரது ஏனைய நூல்களை நாம் கண்ணுற்ற போதும் அது மிகப் பெரிய பாதிப்புக்களை எம்மிடையே ஏற்படுத்தவில்லை. ‘அர்த்தம்’ சிறுகதைத்தொகுதி தமிழ்த்தேசியத்தின் பிரச்சார ஊதுகுழல்களாக விளங்கிய பல சிறுகதைகளையும் ‘ஆறாவடு’ நாவல் பலத்த சிரமமான வாசிப்பனுபவத்துடன் கடக்க வேண்டிய ஒரு நாவலாகவும் விளங்கியது”. இப்போது நினைத்துப் பார்க்கும் போது ஒரு தவறான தகவலை இதனை வாசித்தவர்களிடம் பகிர்ந்து கொண்டதற்காக மனம் மிகவும் வருந்தியது. நான் அதில் எழுதியது போல் இந்தச் சிறுகதைகள் ஆனது தமிழ்த்தேசியத்தின் அல்லது விடுதலைப்புலிகளின் பிரச்சார ஊது குழழ்களாக அமைந்திருக்கவில்லை. மாறாக தம்மீது வலிந்து திணிக்கப்பட்ட போரை எதிர்கொண்ட மக்களின் போராட்ட வாழ்வினையும், அவ்வாழ்வில் அவர்கள் எதிர்கொண்ட வலிகளையும் துயரங்களையும் கூடவே அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளையும் வெற்றியை நோக்கிய அவர்களது கனவுகளையும் குறித்தே இது பேசுகின்றது.

Continue Reading →

புதுமை காட்டும் பாங்குடனே புதிய வருடம் பிறக்கட்டும் ! இரண்டாயிரத்து இருபதை இன்முகமாய் வரவேற்போம் !

- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

1. புதுமை காட்டும் பாங்குடனே புதிய வருடம் பிறக்கட்டும் !

வெடித்துச் சிதறும் பட்டாசு
விடியல் காட்டும் குறியல்ல
இடக்கு முடக்கு வாதங்கள்
எதற்கும் தீர்வு வழியல்ல
நினைப்பில் மெய்மைப் பொறியதனை
எழுப்பி நின்று பார்திடுவோம்
பிறக்கும் வருடம் யாவருக்கும்
சிறப்பை ஈந்து சிரிக்கட்டும்  !

அறத்தைச் சூது கவ்வுமெனும்
நினைப்பை பொசுக்கி எரித்திடுவோம்
உளத்தில் உறுதி எனுமுரத்தை
இருத்தி வைக்க எண்ணிடுவோம்
வறட்டு வாதம் வதங்கட்டும்
வெறுக்கும் எண்ணம் மடியட்டும்
சிரிப்பு மலராய் மலரட்டும்
பிறக்கும் வருடம் இனிக்கட்டும்  !

Continue Reading →