வாசிப்பும், யோசிப்பும் 358: பூந்துணர் 2010 பற்றிச் சில கருத்துகள்…

வாசிப்பும், யோசிப்பும் 358: பூந்துணர் 2010 பற்றிச் சில கருத்துகள்...

அண்மையில் இலண்டனிலிருந்து பேராசிரியர் கோபன் மகாதேவா அனுப்பிய ‘பூந்துணர் ‘(Perceptions in Bloom) தொகுப்பு நூல் கிடைத்தது. எழுத்தாளர் சின்னையா சிவனேசன் மூலம் அனுப்பியிருந்தார். இருவருக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன். ‘பிரித்தானிய ‘ஈழவர் இலக்கியச் சங்க எழுத்தாளர்கள்’ அமைப்பு மாதாமாதம் நடத்திய இலக்கிய நிகழ்வுகளில் வாசிக்கப்பட்ட 61 படைப்புகளின் தொகுப்பு நூலே இத்தொகுப்பு நூல். இவ்வமைப்பின் தலைவர் பேராசிரியர் கோபன் மகாதேவா, இணைப்பாளராக விளங்கிய அமரர் நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்களின் பெருமுயற்சியினால் இத்தொகுப்பு நூல் வெளியாகியுள்ளது. இத்தொகுப்பில் ஆங்கில மற்றும் தமிழ்ப்படைப்புகளுள்ளன. தமிழ்த்தொகுப்புகளைப் பொறுத்தவரையில் பேராசிரியர் கோபன் மகாதேவா, திருமதி அமரர் சீதாதேவி கோபன்மகாதேவா , இணைப்பாளராக விளங்கிய அமரர் நுணாவிலூர் கா.விசயரத்தினம் மற்றும் திருமதி தமிழரசி சிவபாதசுந்தரம் ஆகியோரின் படைப்புகளை அதிகமாகக் காணமுடிகின்றது. இந்நூலின் முன்னுரையில் முதற்தொகுப்பு 2007 மார்கழியில் வெளிவந்ததாகவும், இது 2011ற்கான தொகுப்பு என்றும், 2008, 2009 & 2010 ஆண்டுகளில் தொகுப்பு நூல் வெளியாகவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ‘பூந்துணர் 2010’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் நூலின் உள்ளே முதற் பதிப்பு 2011 என்றும் , காப்புரிமை 2010 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. இது தொகுப்பு வெளியான ஆண்டு பற்றிய குழப்பத்தை ஏற்படுத்துகின்றது.


நூலின் கட்டுரைகளின் கூறுபொருளைப்பற்றிப்பார்க்கையில் அவை பன்முகத்தன்மை வாய்ந்தவை. இலக்கியம், அரசியல், சமூகம், அறிவியல் , புகலிடம் அனுபவம், இயற்கை ,நூல் விமர்சனம் என்று அவை பல்வகையின. இவை பற்றிய படைப்புகளுடன், அத்துறைகளில் சிறந்து விளங்கிய ஆளுமையாளர்களைப்பற்றிய கட்டுரைகள் பலவற்றையும் காணமுடிகின்றது. தொகுப்பின் முதற்கட்டுரையினை அமரர் திருமதி சீதாதேவி கோபன்மகாதேவா எழுதியுள்ளார். தலைப்பு ‘காந்தியும் விடுதலை வேட்டைகளும்; என்றுள்ளது. ‘காந்தியும் விடுதலை வேட்கைகளும்’ என்றிருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன். மகாத்மாவைப்பற்றிய நல்லதொரு கட்டுரை. கட்டுரை சுருக்கமாக (ஆனால் சுவையான நடையில்) காந்தியைப்பற்றி ‘உயிரினமும் சுதந்திரமும், ‘காந்தியின் வாழ்க்கையும் முயற்சிகளும் சாதனைகளும் என்னும் உபதலைப்புகளில் ஆராய்கிறது. சுருக்கமான ஆனால் தெளிவான கட்டுரை. மகாத்மாவின் வாழ்வு பற்றிய நல்லதோர் ஆவணக்கட்டுரை. அதனைத்தொடர்ந்து பேராசிரியர் கலாநிதி கோபன் மகாதேவா ‘மகாத்மா காந்தியின் வாழ்க்கை ஆராய்ச்சிக்காக உகந்த சில கருவூலகங்கள்’ என்றொரு கட்டுரை எழுதியுள்ளார். இதுவொரு வித்தியாசமான கட்டுரை. காந்தியைப்பற்றிய ஆராய்ச்சி செய்யும் எவரும் எடுக்க வேண்டிய பல்வகைத் தலைப்புகளைப் பட்டியலிடும் கட்டுரை. இவர் குறிப்பிட்டுள்ள தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதி, அதனைப் பல தொகுப்பு நூல்களாக்கலாம், அவ்விதம் செய்யின் அவை மகாத்மா காந்தி பற்றிய விரிவான அவரது குறை , நிறைகளை வெளிப்படுத்தும் தொகுப்புகளாக அமையும். இவ்விதம் செய்வதாயின் அதற்கு எவ்வளவு செலவாகும் என்பது பற்றியும் தன் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார் கட்டுரையாசிரியர் இக்கட்டுரையில். நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்களும் ‘பார் போற்றும் சாதனையாளர் மகாத்மா காந்தி’ என்று நல்லதொரு கட்டுரையினை எழுதியுள்ளார். மகாத்மா காந்தியின் வாழ்க்கை பற்றி, அவரது சமூக, அரசியல் மற்றும் பொருளியற் கோட்பாடுகள் பற்றி அறிய விரும்பும் எவருக்குமுரிய நல்லதொரு அறிமுகக் கட்டுரை.

Continue Reading →