காலத்தால் அழியாத கானங்கள்: “மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே -“

காலத்தால் அழியாத கானங்கள்: "மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே -"இப்பாடலை எப்பொழுது கேட்டாலும் எனக்குக் காற்சட்டையும், சேர்ட்டுமாகப் பால்ய காலத்தில் வவுனியாவில் வசித்துக்கொண்டிருந்த காலகட்டம் நினைவுக்கு வரும். உண்மையில் இப்பாடலை முதலில் கேட்டபோது நான் நண்பர்களுடன் வவுனியா நகரசபை மைதானத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தேன். பாடசாலை முடிந்து வீடு திரும்புகையில் பல்வேறு வழிகளில் திரும்புவது வழக்கம். அதிலொரு வழி நகரசபை மண்டபத்துக்குப் பின்புறமாக , புகையிரத இருப்புப்பாதைக்குமிடையில் மரங்கள் நிறைந்திருந்த பகுதியினை ஊடறுத்துச் சென்ற பாதை. அப்பாதை வழியாக காமினி வித்தியாயலயத்துக்கு முன்புறமாகச் சென்று கொண்டிருந்த மன்னார் வீதிக்கு வர முடியும்.

அக்காட்டுப்பகுதியில் அக்காலகட்டத்தில் இலங்கை இராணுவத்தினர் தற்காலிக முகாம்களை அமைத்துத் தங்கியிருந்தனர். சில சமயங்களில் நீண்ட தடிகளைக் கால்களில் கட்டி ஒரு சிலர் நடந்து சென்று மாணவர்களான எங்களுக்கு விளையாட்டுக் காட்டுவார்கள். நாமும் செல்லும் வழியில் அவர்கள் இவ்விதம் நடப்பதை வியப்புடன் பார்த்துச் செல்லுவோம்.

அவ்விதமானதொரு நாளில்தான் இப்பாடலும் வவுனியா நகரசபைப்பக்கமிருந்து ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது. நகரசபை மண்டப அரங்கில் சில வேளைகளில் கலை நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். அவ்விதமான சமயங்களில் இவ்விதம் ஒலிபெருக்கிகள் மூலம் தமிழ்த்திரைப்படப்பாடல்களைப்போடுவார்கள். அம்மண்டப அரங்கில்தான் ஒரு முறை நாடகமொன்றும் அப்பாவுடன் சென்று பார்த்திருக்கின்றேன். அதன் பெயர் “உடையார் சம்பந்தம்”. இந்நகர சபை மைதானத்தில்தான் தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் நடைபெறுவதும் வழக்கம். ஜேவிபியினரின் முதலாவது புரட்சியின் போது இலங்கை வான் படையினரின் ஹெலிகொப்டர்கள் அடிக்கடி இம்மைதானத்தில்தான் வந்திறங்கிச் செல்வது வழக்கம்.

Continue Reading →

ஆய்வு: சங்க இலக்கியங்களில் உயிரி நேயம்

முன்னுரை
ஆய்வுக்கட்டுரை படிப்போமா?                        - முனைவர் பெ.கி.கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக்கல்லூரி(தன்னாட்சி), வாணியம்பாடி 635 752, திருப்பத்தூர் மாவட்டம் -இயற்கையின் எழில் காட்சியையும், இயற்கையுடன் இயைந்த வாழ்வு வாழ்ந்த மாந்தரின் பெருமையையும், மனிதகுலத் தோற்றத்துக்கும், செழுமைக்கும், நிலைத்தன்மைக்கும் ஆணிவேரான அன்பையும் காதலையும், பல்லுயிர்க்கும் இரங்கும் பாச மனதையும், மனிதகுலம் போர்க்காயம் படாமல் பூவாசத்தை மட்டுமே நுகரவேண்டும் என்ற கவிஞர்களின் குரலையும் நமக்கு அறிவிக்கிற இலக்கிய வரலாற்று ஆவணமாகத் திகழ்வது சங்க இலக்கியமே. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற இரு பிரிவுகளைக் கொண்டது சங்க இலக்கியம். காதலில் தொடங்கிக் கடிமணத்தில் தொடரும் குடும்ப வாழ்க்கையைப் படம்பிடிக்கும் அகப்பாடல்கள், வீரம், கல்வி, கொடை, புகழ், அரசியல் போன்ற பல வாழ்வியல் கூறுகளைக் கொண்ட புறப்பாடல்களை உள்ளடக்கியது சங்க இலக்கியம்.

சங்க இலக்கியங்கள் அக்கால மக்களின் பண்பியல் கூறுகளைப் படம்பிடித்த ஓவியங்கள் ஆகும். காதலும் வீரமும் இரண்டு கண்களாக எண்ணப்பட்ட காலம் அது. சங்கப் புலவர்கள் நாத்தழும்பேற அவற்றைப் பாடியுள்ளனர். அவர்கள் பாடல்களில் மிகுந்து காணப்படும் உயிரி நேயச் சிந்தனைகளை ஆய்வோம்.

சங்ககாலப் பெண்டிர்
மனமொத்த கிழவனும் கிழத்தியும் கருத்தொருமித்து ஆதரவுபட்ட இன்பத்தைப் பண்டைய தமிழர் ஊக்குவித்தனர். தலைவிக்குத் துணையாக இருக்கும் தோழி அவளுடைய காதலுக்குத் தூதாக மட்டுமின்றி, விரைவில் காதலர்களின் திருமணத்தை நடத்தச் செவிலியிடமோ தாய் தந்தையரிடமோ எடுத்துரைத்து முனைந்த காட்சிகளைச் சங்க இலக்கியம் பதிவு செய்திருக்கிறது. உடன்போக்கு செல்வதை வெறுக்காமல் வாழ்த்திய நெஞ்சங்களைக் காட்டும் வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது கலித்தொகை.

வீட்டைத் துறந்து தலைவனோடு சென்று விடுகிறாள் தலைவி. தேடி வருகிறாள் செவிலி. எதிர்வரும் அந்தணரிடம் என் மகள் பிற ஆடவன் ஒருவருடன் சென்றதைக் கண்டீர்களா எனக் கேட்கிறார்.

Continue Reading →

ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் ஐந்து!

1. பழுதடையும் எழுதுகோல்கள்‘

லதா ராமகிருஷ்ணன்

[ “படித்தவன் சூதும் வாதும் செய்தால்… போவான் போவான் அய்யோன்னு போவான்” -பாரதியார்]

மக்களாட்சியும் மதச்சார்பின்மையும் மாட்சிமை பொருந்தியவை என்று
24X7 முழங்கிக்கொண்டிருப்போர் சிலரின் மனங் களில்
மலிந்திருக்கும் மூர்க்கமான அதிகாரவெறி
ஆயிரம் வாள்களைக் காட்டிலும் அதிகூர்மையாய்
அங்கங்கே தலைகளைக் கொய்தபடியே……

அவரவருக்குத் தேவைப்படும்போது மட்டும்
அகிம்சை underline செய்யப்படும்.

‘பிரபலங்கள் சுதந்திரமாக நடமாட வழிவகுக்கும் கருவி யென

’புர்கா’வுக்குப் பதவுரை வழங்கியும்,
’ஜெய் ஸ்ரீராம்’ இந்த நூற்றாண்டின் குரூர வாசகம்’ என்று
மதிப்புரை யெழுதியும்

நிதமொருவிதமாய் வெறுப்பை வளர்த்து
எழுத்தில் மனிதநேயத்தையும் பெண்ணியத்தையும்

முன்னிறுத்திக்கொண்டிருக்கும்

படைப்பாளிகளும் உளர்.

அன்பையே வளர்ப்பதாகச் சொன்னவண்ணமிருக்கும்
என்புதோல் போர்த்திய உடலங்களாய்
முழுப்பிரக்ஞையிலான Selective amnesia வில்
மும்முரமாய் சில காட்சிகளை மட்டுமே
மீண்டும் மீண்டும் அதிகவனமாகப் பதிவேற்றுவதில்
முந்துவது யார்? _

மூத்த படைப்பாளியா?
முளைவிட்டுக்கொண்டிருக்கும் படைப்பாளியா?

Continue Reading →