‘வாசிப்பும், யோசிப்பும் 77: டொராண்டோ’வில் நடைபெற்ற ஞானம் சஞ்சிகையின் ஈழத்துப்புலம்பெயர் இலக்கியச்சிறப்பிதழ் வெளியீட்டு விழா பற்றிய சிறு குறிப்பு!

ரொறன்ரோ தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் ஞானம் சஞ்சிகையின் 'ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்' சிறப்பிதழ் அறிமுக விழாஇன்று ஞானம் தனது 175 இதழாக வெளியிட்டிருந்த சிறப்பு இதழான ‘ஈழத்துப்புலம் பெயர் இலக்கியச் சிறப்பிதழின் வெளியீட்டு விழா ‘டொராண்டோ’வில் நடைபெற்றது. கனடாத்தமிழ்ச்சங்க ஆதரவில் வைத்திய கலாநிதி லம்போதரனுக்குச்சொந்தமான ‘டொராண்டோ’ தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில். எழுத்தாளர் அகில் தொடக்கவுரையினையும், வைத்திய கலாநிதி இ.லம்போதரன் தலைமையுரையினையும் ஆற்ற அறிமுக உரையினைப் பேராசிரியர் அ.ஜோசப் சந்திரகாந்தன் ஆற்றினார். அதன்பின்னர் நூல் நிகழ்வுக்கு வந்திருந்தோருக்கு விற்பனைக்கு விடப்பட்டது. தொடர்ந்த நிகழ்வில் கலாநிதி நா.சுப்பிரமணியன் அவர்கள் சிறப்புரையினையும், இறுதியாக நன்றியுரையினை எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி விஜேந்திராவும் ஆற்றினார்கள். நிகழ்வில் கலாநிதி சுப்பிரமணியன் அவர்கள் நீண்டதொரு , சிந்தனையைத்தூண்டும் உரையினை ஆற்றியதும் குறிப்பிடத்தக்கது. அதிலவர் புலம்பெயர் தமிழர்களின் இலக்கியத்தில் ஆரம்பத்திலிருந்து இன்றுவரையில் கருப்பொருளாக அமைந்த பொருளில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி  விரிவாக  அவற்றைப்பிரிவுகளாக்கி எடுத்துரைத்தார். ஆரம்பத்தில் வெளியான படைப்புகள் தாயகமண் பற்றிய கழிவிரக்கமாக அமைந்திருந்தன; அதன் பின்னர் ஈழம் மற்றும் புகலிடச்சூழல்களை உள்வாங்கியவையாக விளங்கின; அதன் பின்னர் புகலிடத்தில் காலூன்றியவர்கள், புகலிடத்தில் தம் தாயகத்தில் நிலவிய பண்பாட்டுச்சூழலை மீண்டும் உருவாக்க முனைவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டனர். அதே சமயம் பெண்ணியம், சாதியம் போன்றவை புலம்பெயர் இலக்கியத்தில் ஏற்படுத்திய பாதிப்புகள் எத்தகையன என்பதுபற்றியும் அவரது உரை ஆராய்திட முற்பட்டது. இவ்விதமாகத்தனது நீண்ட உரையினை ஆற்றிய கலாநிதி நா.சுப்பிரமணியன் அவர்கள் இறுதியில் புலம்பெயர் தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம் பற்றி எழுத்தாளர்களான  தேவகாந்தன் , ஜெயமோகன் ஆகியோர் முறையே 2000ஆம் ஆண்டிலும், 2010இலும் தெரிவித்த கருத்துகளையும் குறிப்பிட்டார். அத்துடன் அவர் எஸ்.பொ/ இந்திரா பார்த்தசாரதியால் தொகுத்து வெளியிடப்பட்ட ‘பனியும், பனையும்’ சிறுகதைத்தொகுப்பு பற்றியும் குறிப்பிட்டார். அத்தொகுப்பில் படைப்புகள் வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா என்று அன்றே குறிப்பிடப்பட்டிருந்ததை எடுத்துரைத்து, இன்று மீண்டும் அவ்விதமான பிரிவுகளை நோக்கித்தான் எமது புலம்பெயர் இலக்கியமும் சென்று கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

Continue Reading →

சிறுகதை: மேலதிகாரி – ஒரு கணித விற்பன்னர்

எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர்அமலனை மேலும் கீழும் பார்த்த மனேஜர், அவன் அந்த வேலைக்குப் பொருத்தமற்றவன் என்பதை உறுதி செய்துகொண்டார். நேர்முகப் பரீட்சைக்காக அந்தத் தொழிற்சாலைக்குப் புறப்படும்போதே அமலனுக்கும் அது தெரிந்திருந்தது. அமலன் ஒரு கணித விரிவுரையாளன். இலங்கையில் இருக்கும்போது பாடவிதானக்குழுவிலும் அங்கம் வகித்திருந்தான்.

பூர்வாங்க உரையாடல்கள் முடிவடைந்ததும் மனேஜர் அமலனை ஒரு அறைக்குக் கூட்டிச் சென்றார். அந்த அறைக்குள் ஒரு வாட்டசாட்டமான இளைஞன் ஒரு இயந்திரத்துடன் போராடிக் கொண்டிருந்தான். அவனுக்கு உதவியாக இரண்டு முதியவர்கள் நின்றிருந்தார்கள். அங்கு நுழையும்போதே அமலனின் கண்கள் அடுத்த அறையில் உள்ளவர்களைத்தான் நோட்டமிட்டன. அந்த அறைக்குள் இளம்பெண்கள் நிறைந்திருந்தார்கள். ‘கொன்வேயர்’ ஒன்றில் வரிசையாக போத்தல்கள் வந்து கொண்டிருந்தன. ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும், அவை மந்திரத்தால் கண்டுண்டவை போல நின்றன. அந்தப் போத்தல்களுக்குள் இரசாயனக்கலவை நிரம்பின. நிரம்பியவுடன் அந்தப்பெண்கள், அந்தப் போத்தல்களை எடுத்து பெட்டியொன்றில் அடிக்கி வைத்தார்கள். அவனது கண்கள் அங்கே சென்றதை மனேஜர் கண்டுகொண்டார். உடனே அவன் தன் கவனமெல்லாவற்றையும் அவர்மீது திருப்பினான்.

Continue Reading →

படைப்பாளி ராஜாஜி ராஜகோபாலனின் ‘உபயகாரன்’ சிறுகதை பற்றிய எனது பார்வை!

ராஜாஜி ராஜகோபாலன்முல்லை அமுதன் , 'காற்றுவெளி' ஆசிரியர்சிறுகதைக்கான களமுனைகள் தாராளமாக ஒரு நெறிப்படுத்தப்பட்ட செல்நெறியில் சென்றுகொண்டிருப்பதை உணர்கிறேன். கல்வி, கணினி வசதிகள், இனமுரண்பாட்டின் வன்மங்கள், வலிகள், வாழ்க்கை தந்து கொண்டிருக்கும் நோவுகள் பலரை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் சூழலில் பலர் தங்களின் இடப்பெயர்வு/புலப்பெயர்வு நகர்வுகளின் இருப்பில் இருந்துகொண்டு தங்களை/தங்கள் சிந்தனையை கட்டமைக்கப்பட்ட வடிவத்திற்குள் கொண்டுவருகின்றனர். அது எழுத்தாகவும், வேறு வடிவங்களாகவும் இருக்கலாம். அந்த வகையில் புலம் பெயர் வாழ்வின் இறுக்கத்திற்குள் இருந்துகொண்டு வனைகின்ற பல படைப்பாளர்கள் வரிசையில் இன்று சிறப்பாகத் தன்னை வடிவமைத்துக்கொண்ட படைப்பாளனாக நிமிர்ந்து வருகிறார் நம்மவர் திரு.ராஜாஜி ராஜகோபாலன். யாழ் புலோலி கிழக்கில் பிறந்து தன் கல்வி, சட்டத்துறை சார் தொழில் எனத் தன்னை நிறுத்திக்கொண்டாலும் எழுத்தின் மீதான தாகம் அதிகமாகவே அவ்வப்போது தினகரன், கவிஞன், வீரகேசரி, மல்லிகை, திண்ணை, காற்றுவெளி, சங்கப்பொழில், ஈழநாடு ஆகியவற்றில் எழுதினார். வேலைப்பளு அவரை குந்தியிருந்து எழுதுவதைத் தடுத்தது. ஆனால் அவரின் ஓய்வு தற்போது நிறையவே எழுதவைக்கிறது. அவரின் பாசையில் ‘ஊறப்போட்ட’ கற்பனைகள் வடிவம் பெறுகின்றன. தான் பார்த்த, கேட்ட அனுபவங்கள் நிதானமாகக், கவனத்துடன் எழுத முனையும் முயற்சி பாராட்டும்படி உள்ளது. எனக்குப் பிடித்த இன்னொரு விடயம் வழக்கு மொழி மீதான பற்று, அதனை தேவையான இடத்தில் பயன்படுத்தும் முறைமை அலாதியானது. ஒரு படைப்பு அது சார்ந்த களம், அந்தக் களத்தில் வாழுகின்ற பாத்திரங்கள், அப்பாத்திரங்களின் மொழி, அவற்றை வெளிப்படுத்தும் முறை கூர்ந்து கவனிக்கப்படாவிட்டால் படைப்பின் வீரியம் குறைந்துவிடும். இங்கு திரு.ராஜாஜி கோபாலனின் பார்வை கவனிப்புக்குரியது. கவிதையாயினும் சிறுகதையாயினும் அவர் தெர்ந்தெடுத்த பாத்திரங்கள் கதைக்களத்துடன் ஒத்துப்போவதாகவே அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.  எப்போதோ நிகழ்ந்த அனுபவத்தைப் பலவருடங்களாக அசைபோட்டு, மீட்டு எழுதுவது முடியாத காரியம்தான். எனினும் இவர் எழுதிருக்கிறார். அச்சம்பவத்தை அப்படியே எழுதுவதிலும் அபாரத் துணிவு வேண்டும். கதை, மொழி இரண்டும் சிதையாமல் வடிவமைப்பதில் சிரமம் இருக்கிறது. சொல்ல வந்ததைச் சொல்லாமல் திசை திருப்பிவிடும் அபாயமும் உள்ளது. கத்திமேல் நடக்கும் விளையாட்டு. மேலும், சம்பவக் கோர்வை கவனத்தில் மையம் கொள்கிறது.

Continue Reading →