வாசிப்பும், யோசிப்பும் 219: தி.ஜா.வின் ‘அன்பே! ஆரமுதே!’

தி.ஜா.வின் ‘அன்பே! ஆரமுதே!’

தி.ஜா.வின் 'அன்பே! ஆரமுதே!'தமிழில் எனக்குப் பிடித்த முக்கியமான நாவலாசிரியர் தி.ஜானகிராமன். இவரது ‘செம்பருத்தி’, ‘மோகமுள்’, ‘மலர் மஞ்சம்’, மற்றும் ‘அன்பே ஆரமுதே’ ஆகிய நாவல்கள் இவரது நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தவை. ‘அன்பே ஆரமுதே’ நாவலை என் பதின்ம வயதுகளில் வாசித்திருக்கின்றேன். கல்கி சஞ்சிகையில் தொடராக வெளிவந்த நாவலை அழகாக ‘பைண்டு’ செய்யப்பட்ட நிலையில், ஓவியங்களுடன் வாசித்திருக்கின்றேன். அன்று இந்த நாவலை வாசித்ததற்கும், இன்று வாசிப்பதற்குமிடையில் நாவலை அனுபவிப்பதில், புரிந்து கொள்வதில் நிறையவே வித்தியாசங்களுள்ளன. ஏனென்றால் இந்த நாவலின் பிரதான பாத்திரங்கள் இளம் வயதினரல்லர். முதுமையை எட்டிப்பிடிக்கும் நடுத்தர வயதினர். இவ்வயதினரின் உளவியலை பதின்ம வயதுகளில் புரிந்து கொள்வது வேறு. பாத்திரங்களின் வயதில் புரிந்து கொள்வதென்பது வேறு 🙂

கதை இதுதான். அனந்தசாமி என்னும் சன்யாசி, சென்னையில் வாழும் மக்களுக்கு வர்க்க, சமூக வேறுபாடுகளற்ற நிலையில் நாட்டு வைத்தியம் செய்பவர். பந்தங்களைத் தன் இளவயதில் துறந்தவருக்குப் பந்தங்கள் அவரிடம் வைத்தியம் பார்க்கும் சென்னைவாசிகள்தாம். நாவல் அனந்தசாமியின் தாயாரின் மரணத்துடன் ஆரம்பமாகின்றது. அவருக்குச் சகோதர, சகோதரிகள் நல்ல நிலையில் இருந்தாலும், யாருமே வயதான தாயாரைத் தம்முடன் வைத்துப்பார்க்கத்தயாரில்லை. அனந்தசாமியே தாயாரைத்தன்னுடன் கூட்டி வந்து பராமரிக்கின்றார். இந்நிலையில்தான் தாயாரும் இறந்து விடுகின்றார். இவரிடம் வைத்தியம் பார்க்கும் செல்வந்தப்பெண்மணியொருத்திதான் நாகம்மாள். அவளுக்கு ஒரு மகள் சந்திரா.  காதல் தோல்வியால் துயரத்துக்குள்ளாகியிருப்பவள் சந்திரா.

Continue Reading →