அண்மைய இலண்டன் தூதரகச் சம்பவமும், அது ஏற்படுத்திய அரசியல் அதிர்வலையும்….

அண்மைய இலண்டன் தூதரகச் சம்பவமும், அது ஏற்படுத்திய அரசியல் அதிர்வலையும்....இலங்கையின் சுதந்திர தினநாளன்று இலண்டனிலுள்ள இலங்கைத்தூதுவராலயத்தில் நடைபெற்ற விவகாரமானது தமிழ் ,சிங்கள அரசியல்வாதிகளுக்கு மெல்லக் கிடைத்த அவலாகியுள்ளது. பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் கழுத்தை வெட்டும் சைகை தற்போதுள்ள சூழலில் , யுத்தத்திற்குப் பின்னரான சூழலில் தேவையற்றதொன்று. அவரது செய்கையினை நாட்டில் நல்லெண்ணத்தை ஏற்படுத்துவதற்காகப் பதவிக்கு வந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரி சிறிசேனாவின் அரசில் அங்கம் வகிக்கும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனா வரவேற்றுப் பாராட்டிப் பேசினார். இலங்கை வெளிவிவகார அமைச்சு உடனடியாக அவரைப் பதவியிலிருந்து நிறுத்தி விசாரணையை ஆரம்பித்தது. ஆனால் தென்னிலங்கையில் அரசியல்வாதிகளால் இச்சம்பவம் இனரீதியாக ஊதிப்பெருப்பிக்கப்பட்டதை அடுத்து , அதற்கு அடிபணிந்த ஜனாதிபதி மைத்திரி சிறிசேன அதனை இடை நிறுத்தி அவரை மீண்டும் பதவியில் அமர்த்தினார். இதன் மூலம் அவர் நாட்டின் ஒரினத்துக்குச் சார்பாகச் செயற்படும் ஜனாதிபதியாகவே தென்படுவார். இணக்க அரசியல் பேசும் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனையும் இப்பிரச்சினை விட்டு வைக்கவில்லை. அவரும் சூழலுக்கு அடிபணிந்து உடனடியாகப் பிரிகேடியரை நாட்டுக்குத் திருப்பி அழைக்குமாறு கோரியிருக்கின்றார். இதற்கிடையில் இப்பிரச்சினை பூதாகாரமாக வெளிப்பட்ட நிலையில் தமிழர்கள் மத்தியிலுள்ள புலம்பெயர் அரசியல்வாதிகளும், தென்னிலங்கை அரசியல்வாதிகளைப்போல் இதனைத் தம் அரசியல் நலன்களுக்காகப் பாவிக்கத்தொடங்கினர்.

இலங்கைத் தூதுவராலயத்தின் முன் அமைதியாக புலிக்கொடியுடன் போராட்டம் நடத்துவது அதனை நடாத்துவதற்கு அனுமதியளித்த ஜனநாயக நாடொன்றில் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதே. அதனை இவ்விதமானதொரு சைகையின் மூலம் பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோ வெளிப்படுத்திக் கையாண்டிருக்கத்தேவையில்லை. நாட்டில் விடுதலைப்புலிகளுடான யுத்தம் முடிவுற்ற நிலையில் இன்னும் இவ்வளவுதூரம் பிரிகேடியர் உணர்ச்சி வசப்பட்டிருக்கத் தேவையில்லை. உண்மையில் இச்செய்கையானது சிறுபிள்ளைத்தனமானது. இருவர் வாக்குவாதப்படுகையில் கொல்லுவேன், வெட்டுவேன் என்று பயமுறுத்துவதைப்போன்றது. நாட்டில் 2009இல் யுத்தமே முடிவுக்கு வந்துள்ள நிலையில், அந்த யுத்தத்தின் பாதிப்புகள், யுத்தக் குற்றங்கள், தொடரும் இலங்கையிலுள்ள சிறுபான்மையினப் பிரச்சினைகளுக்கான தீர்வு போன்றவற்றுக்கான தீர்வுகள் இன்னும் உரிய முறையில் கிட்டாத நிலையில் இவ்விதமான பொறுப்பற்ற செயல்கள் , நாட்டில் நல்லெண்ணச் சூழல் ஏற்படுவதைத் தாமதமாக்கும். மேலும் தற்போதுள்ள சூழல் மேலுள்ள கவனத்தைச் சீர்குலைத்து , மக்களுக்கு மத்தியில் இனரீதியிலான முரண்பாடுகளை அதிகரிக்கவெவே வைக்கும். அரசியல் நலன்களுக்காக அனைத்து அரசியல்வாதிகளும் இவ்விடயத்தை இனரீதியாக ஊதிப்பெருப்பிக்கவே முயல்வார்கள்.

இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரிகேடியருக்கு மீள்பதவியை வழங்குவதற்குப்பதில் , நாட்டின அனைத்து மக்களுக்கும் தான் ஜனாதிபதியாகச் செயற்பட்டிருக்க வேண்டும். பிரிகேடியரின் தற்போது பத்திரிகையாளர்களின் சந்திப்பொன்றில் விளக்கமளித்துள்ளார். இவ்விதமான விளக்கங்கள் அளிப்பதற்கு முன்னர் இதுபோன்ற செயலினை அவர் செய்யாமல் இருந்திருக்கலாம். ஏற்கனவே சீர்குலைந்திருக்கும் இனங்களுக்கான உறவுகள் சிறிது சிறிதாகச் சீர்பெற்று வருமொரு சூழலில் இந்தச்சிறு செயலின் மூலம் இலங்கையின் பதவி, இன வெறி பிடித்த அரசியல்வாதிகளுக்கு மீண்டும் மெல்லுவதற்கு அவலைக்கொடுத்துள்ளார் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ.

Continue Reading →

இலக்கிய அரங்கிலிருந்து அரசியல் அரங்கிற்கு வருகைதந்த படைப்பாளி எம்.எச்.எம். அஷ்ரப்: “எழுத்துக்கள் மாத்திரமே என்னை, என் மரணம் வரையிலும் மட்டுமன்றி அதன்பின்னரும் வாழ்விக்கும்”

இலக்கிய அரங்கிலிருந்து அரசியல் அரங்கிற்கு வருகைதந்த படைப்பாளி எம்.எச்.எம். அஷ்ரப்: "எழுத்துக்கள் மாத்திரமே என்னை, என் மரணம் வரையிலும் மட்டுமன்றி அதன்பின்னரும் வாழ்விக்கும்"” பூரணி காலாண்டிதழ் தற்பொழுதுதான் வெளியாகத்தொடங்கியிருக்கிறது. ஒரு சில இதழ்களே வெளியாகியிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் அதன் குறைகளை சுட்டிக்காட்டும் அதேவேளையில், அதன் வளர்ச்சிக்காக உழைக்கும் பூரணி குழுவினருக்கு அதில் உள்ள நிறைவுகளை எடுத்துக்கூறி ஊக்குவிக்கவேண்டியது நம்போன்ற வாசகர்களது கடமையாகும். அதற்கு இப்படியான விமர்சன அரங்குகள் சந்தர்ப்பம் அளிப்பது மகிழ்ச்சிதரக்கூடிய விஷயமாகும். சஞ்சிகைகள் எல்லோருக்கும் புரியக்கூடிய மாதிரி வெளிவருவது சிரமசாத்தியமாகும். வாசகர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். இலக்கியம் மக்களிடம் ஒரு சாதனமாக அறிவிக்கப்படவேண்டும். பூரணியில் ஒரு சில அசட்டுத்தனமான கவிதைகள் இடம்பெற்றது கண்டிப்புக்குரிய விடயம். அதுபோன்றவை இனிமேலும் வெளிவந்து விமர்சகர்களின் கண்டனத்திற்கு ஆளாகக்கூடாது. ” 

இவ்வாறு 25-06-1973 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு கொழும்பு சட்டக்கல்லூரி தமிழ்மன்றத்தில் நடந்த ” பூரணி” காலாண்டிதழ் விமர்சன அரங்கில் உரையாற்றிய ஒரு மாணவர் பேசினார். அந்த நிகழ்ச்சிக்கு தலைமைதாங்கியவர் அங்கு சட்டம் படித்துக்கொண்டிருந்த குமாரசாமி விநோதன். அவர்தான் அச்சமயத்தில் தமிழ் மன்றத்தின் தலைவர். அவர் தலைமையுரையாற்றத்தொடங்கியதுமே அடிக்கடி குறுக்கிட்டு இடையூறு செய்துகொண்டிருந்தார் ஶ்ரீகாந்தா என்ற மற்றும் ஒரு மாணவர். இவர் குதர்க்கம் பேசி தலைவருக்கு சினமூட்டிக்கொண்டிருந்தார்.  எனினும் சினம்கொள்ளாமல் பவ்வியமாக நிகழ்ச்சியை விநோதன் நடத்தினார். இந்த விமர்சன அரங்கிற்கு பூரணி இணை ஆசிரியர் என்.கே.மகாலிங்கம் அவர்களுடன் சென்றிருந்தேன். சட்டக்கல்லூரி மாணவர்கள் பலரும் வந்திருந்தார்கள்.  எழுத்தாளர்கள் இளம்பிறை எம். ஏ. ரஹ்மான், எச்.எம்.பி. மொஹிதீன் ஆகியோருடன் சட்டக்கல்லூரி மாணவர்கள் எம்.எச்.எம் அஷ்ரப், பெரி. சுந்தரலிங்கம், மனோகரன், வரதராஜா, சிவராஜா ஆகியோரும் உரையாற்றினர். பின்னாளில் சிறந்த மேடைப்பேச்சாளராக வளர்ந்த செல்வி சகுந்தலா சிவசுப்பிரமணியமும் சபையில் அமர்ந்திருந்தார். அவரும் அங்கு சட்டம் படித்துக்கொண்டிருந்தவர்.

ஏறக்குறைய நாற்பத்தியைந்து ஆண்டுகளுக்குப்பின்னர் அந்த விமர்சன அரங்கை நினைத்துப்பார்க்கின்றேன். அவ்வாறு நினைக்கத்தூண்டியவர்தான் எம்.எச். எம் அஷ்ரப். இந்தப்பதிவின் தொடக்கத்தில் நான் எழுதியிருக்கும் அந்தவரிகளைப்பேசியவர்தான் அஷ்ரப்.  இவர் சட்டக்கல்லூரி மாணவராக அன்று எனக்கு அறிமுகமான இலக்கியவாதி. கவிஞர். பேச்சாளர். 1983 மார்ச் வரையில் இந்த இலக்கியத்தளத்தில்தான் எனக்கு இவர் நெருக்கமானவர்.  1972 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் பூரணி காலாண்டிதழ் கொழும்பில் வெளியாகத்தொடங்கியது. அதன் வெளியீட்டுவிழா கொழும்பு விவேகானந்தா வித்தியாலய மண்டபத்தில் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் தலைமையில் நடந்தவேளையில் அங்குசென்றதனால் பல இலக்கியவாதிகளின் அறிமுகம் கிடைத்தது.  பூரணியிலும் எழுதுவதற்கு களம் கிடைத்தது. இணை ஆசிரியர்கள் என்.கே. மகாலிங்கம் – க.சட்டநாதன், பூரணி குழுவினர் மு.நேமிநாதன், த. தங்கவேல், இமையவன், இரா. சிவச்சந்திரன், கே.எஸ். பாலச்சந்திரன் ஆகியோரும் அறிமுகமாகி இலக்கிய நண்பர்களானார்கள்.  சட்டக்கல்லூரி தமிழ் மன்றம் பூரணிக்காக ஒரு விமர்சன அரங்கை நடத்தும் செய்தியறிந்து, அங்கு சென்றதனால் சில மாதங்களுக்கு முன்னர் சிறையிலிருந்து விடுதலை பெற்று வந்திருந்த எச்.எம்.பி. மொஹிதீனையும் பூரணி விமர்சன அரங்கில் சந்தித்தேன். பூரணி அந்த அரங்குவரையில் மூன்று இதழ்களைத்தான் வெளியிட்டிருந்தது. குறிப்பிட்ட விமர்சன அரங்கு தொடர்பான விரிவான செய்தியை பூரணி ஆடி – புரட்டாசி 1973 இதழில் இரண்டு பக்கங்கள் எழுதியிருந்தேன்.

Continue Reading →

திருப்பூர் அரிமா விருதுகள் 2018 – ரூ 25,000 பரிசு

திருப்பூர் மத்திய அரிமா சங்கம்: ஆண்டுதோறும் சிறந்த குறும்பட விருது, மற்றும் பெண் எழுத்தாளர்களுக்கான ”சக்தி விருது” ஆகியவற்றை வழங்கி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் வெளிவந்த…

Continue Reading →

கவிதை: குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.

கவிதை: குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.– அண்மையில் முகநுலில்  இலக்கியத்திருட்டு பற்றியொரு பதிவிட்டிருந்தேன். அதற்கு எதிர் வினையாற்றியிருந்த பிரபல கலை இலக்கிய விமர்சகரும், எனது மதிப்புக்குரியவருமான இந்திரன் (தமிழ்நாடு) அவர்கள் பினவருமாறு கூறியிருந்தார் ” Indran Rajendran நல்ல குதிரையைத்தான் திருட முடியும்…உங்களுடையது நொண்டி குதிரையல்ல என்று தெரிகிறது…விடுங்கள்…”. நன்றி திரு இந்திரன் அவர்களே. அதன் பாதிப்பிது. –


குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.
நானொரு குதிரை வளர்ப்பாளன்.
வியாபாரியல்லன்.
நாணயமான குதிரை வளர்ப்பாளன்..
என்னிடம் நல்ல குதிரைகள் பல உள்ளன.
இருப்பவை அனைத்துமே நல்லவைதாம்.
ஆனால் அவை நொண்டிக்குதிரைகளல்ல.
என்னிடமுள்ள குதிரைகள் அனைத்துமே
என் பிரியத்துக்குரியவை.
அவற்றில் வேறுபாடு நான் பார்பபதில்லை.
நான் நொண்டிக்குதிரைகளை வளர்ப்பவனோ,
விற்பவனோ அல்லன்.
இருந்தும் குதிரைத் திருடர்களே!
உங்களின் தொல்லை
அதிகமாகிவிட்டது.

 

Continue Reading →

நிழல் முற்றம் புலப்படுத்தும் சிறுவர்களின் வாழ்வியல்

 நா.கிருஷ்ணராஜ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) கோயம்புத்தூர் – 641 048  -முன்னுரை
சமகால வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டுவன நவீன இலக்கியங்கள். கால மாற்றத்திற்கு ஏற்ப, இலக்கண வரைமுறைகளைக் கட்டுடைத்துப் படைக்கப்பட்டவையே நவீன இலக்கியங்கள். சமூகத்தின் மூலை முடக்குகளில் காணலாகின்ற வாழ்வியல் சிக்கல்களை அடையாளப்படுத்துவதில் புனைகதைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. சிறுகதை, புதினம் எனும் பிரிவுகளைக் கொண்ட புனைகதைகளுள், சமூகத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் உள்ளவறே எடுத்தியம்புவன புதினங்கள். வாழ்வியல் என்று பொதுமையோடு நோக்கும் படைப்புகள் எண்ணில. எதிர் காலத் தலைமுறைகள் என்றும் நாளைய சமூகமென்றும் கருதப்படுபவர்கள் சிறுவர்கள். அத்தகைய சிறுவர்களின் இளம் வயதுக் காலம் செம்மையாக அமைந்தால்தான், முழுமையான வாழ்க்கையினை அடைவார்கள். சிறுவர்களின் வாழ்க்கையினைக் கருவாகக் கொண்டு படைக்கப்பட்ட பெருமாள் முருகனின் ‘நிழல் முற்றம்’ புதினம் புலப்படுத்தும் சிறுவர்களின் வாழ்வியலைப் பற்றி இக்கட்டுரை வழி அறிவோம்.

கதைக்களமும் கருவும் :
“வட்டார இலக்கியமானது ஒரு பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறைகளோடும் அவர்கள் வாழும் பகுதிகளின் அழகுகளோடும் எதார்த்தமாக வெளிப்படுவது”(தமிழில் வட்டார நாவல்கள், ப.2.) என்ற கூற்றுக் கேற்ப நிழல் முற்றம் புதினத்தின் கதைக்களமாக கொங்கு வட்டாரத்திற்குட்பட்ட திருச்செங்கோடு பகுதி இடம் பெற்றுள்ளது. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், அப்பகுதியில் உள்ள விஜயா திரையரங்கத்தில்தான் கதை நிகழ்கிறது. நவீன இலக்கியங்களில், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு மிகக் குறைந்த இலக்கியங்களே,சிறுவர்களின் வாழ்வியலைக் கருவாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளன என்றால் அது மிகையன்று. ‘ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?’ என்பதற்கேற்ப, இளம் வயதில் வாழ்வில் நிகழக்கூடிய நிகழ்ச்சிகளும் அமையக்கூடிய வாழ்வியல் சூழல்களும்தான், ஒரு மனிதனின் எதிர் காலத்தைத் தீர்மானிக்கும். வாழ்வின் முற்பகுதியான இளம்வயது வாழ்க்கைதான் ஒருவரது ஆயுள் முழுமைக்குமான வாழ்கையையும் வாழ்க்கை முறையையும் உருவாக்கும். சிறுவர்களைக் கதை மாந்தர்களாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ள நிழல் முற்றம் புதினத்தில், இம்மாந்தர்களின் வாழ்வியல் சிக்கல்களைக் கொண்டே கதையை நகர்த்திச் செல்கிறார் பெருமாள் முருகன். கணேசன், சக்திவேலு, மணி,பூதன் போன்ற சிறுவர்கள் திரையரங்கிலுள்ள சோடாக் கடைகளில் பணிபுரிகின்றனர். இம்மந்தார்களையும் இத்திரையரங்கையும் மையமாகக் கொண்டே கதை சித்தரிக்கபட்டுள்ளது.

சிறுவர்களின் வாழ்வியல்
‘திரையரங்கே உலகம்; தங்கள் முதலாளியும் உடன் பணி புரியும் சிறுவர்களுமே உறவுகள்’ என்று வாழ்ந்து வருபவர்கள்தான் இச்சிறுவர்கள். இக்குழந்தைத் தொழிலாளர்களின் பணி வரையறுக்கப் பட்டதன்று. பெரியவர்களாக இருந்தால் பணிப்பளு என்பது வரையறுக்கப்பட்டிருக்கும். ஊதியமும் சரியாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால், உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். ஆனால் சிறுவர்களுக்கு இது முற்றிலும் முரணானது. அதுவும், கேட்பதற்கு யாருமில்லையென்றால், அவர்களின் நிலை மிகவும் பரிதாபமாகத்தான் இருக்கும். திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன்பும், இடைவேளை நேரத்திலும் திரையரங்கில் சோடா விற்பதுதான் சிறுவர்களின் வேலை. சோடா விற்பதில் இவர்களுக்குள் போட்டியும் ஏற்படும். வாழ்க்கையில் சிக்கல்கள் இருப்பது இயல்பே. இச்சிறுவர்களுக்கு வாழ்க்கையே சிக்கலாக இருப்பதை ஆசிரியர் புதினத்தில் சித்திரித்துள்ளார். ஒரு வேலை முடியும் முன்பே, இன்னொரு வேலை தயாராக இருக்கும் இந்தக் குழந்தைத் தொழிலார்களுக்கு. அது மட்டுமன்று. கடைப் பணிகள் முடிந்தால், முதலாளியின் வீட்டுப் பணிகளியும் செய்ய வேண்டும். “ஒரு வேலையுங் கெடையதுடா, சும்மா ராஜாவாட்டம் சுத்திக்கிட்டு இருக்கற வேலதான். நாலு ஆடு இருக்குது. வெளியுட்டா அதும்பாட்டுக்கு மேயும். நெவுலுக் கண்ட எடத்துல உக்கோந்து பாத்துக்கிட்டாப் போதும் என்னோ” (நிழல் முற்றம்,ப.33) என்பது, சோடக்கடையில் வேலை செய்யும் சிறுவனை வற்புறுத்தி, ஆடு மேய்க்கத்தான் ஊருக்கு அழைத்துச் செல்வதைப் புலப்படுத்துகிறது.

Continue Reading →