அ.ந.க.நினைவாக (மீள்பிரசுரம்) அ.ந.க. என்ற ஆய்வறிவாளர்

கலை, இலக்கியத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன்

கே.எஸ்.சிவகுமாரனின் ‘பதிவுகள்’ இணைய இதழின் ஆரம்ப காலப்படைப்புகளை இங்கே வாசிக்கலாம்: http://www.geotamil.com/pathivukal/kss_writes.html


அ.ந.கந்தசாமி நினைவு தினம் பெப்ருவரி 14.

 

கலை, இலக்கியத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன்

அறிஞர் அ.ந.கந்தசாமி[ – – எழுத்தாளர் அ.ந.கந்தசாமியை அறிஞர் அ.ந.கந்தசாமி என்று அழைப்பர். இலக்கியத்தின் பல துறைகளிலும் தன் ஆளுமையினைப் பதித்தவர் அ.ந.க. ஆங்கிலத்திலும் மிகுந்த புலமை மிக்கவர். அவரது பன்முகப் புலமை காரணமாகவே அவர் அறிஞர் அ.ந.கந்தசாமி என்று அழைக்கப்பட்டார். அதனால்தான் கலாநிதி க.கைலாசபதி அவர்கள் தனது ‘ஒப்பியல் இலக்கணம்’ நூலினை அ.ந.க.வுக்குச் சமர்ப்பணம் செய்தார். ‘அ.ந.க. என்ற ஆய்வறிவாளர்’ என்னும் ‘தினக்குரலில்’ வெளியான இச்சிறு கட்டுரையில் புகழ்பெற்ற கலை, இலக்கியத்திறனாய்வாளரான கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் ‘அ.ந.க ஓர் அறிஞரே’ என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார். அந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்த இக்கட்டுரை இன்னுமொரு வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் அ.நக.வுடனான தனது அனுபவங்களையும் பதிவு செய்திருக்கின்றார் என்பதுதான் அம்முக்கியத்துக்குக் காரணம். – . – பதிவுகள் -]


INTELLECTUAL என்றொரு ஆங்கில வார்த்தை உண்டு. அகராதியொன்றின் படி “” AN INTELLECTUAL IS ONE WHO THINKS AND ACTS PREDOMINANTLY TO SERVE THE PURSUIT OF KNOWLEDGE AND APPRECIATION OF FINE THINGS IN LITERATURE AND THE ARTS, AND IS LESS CONCERNED WITH THE MUNDANE AND MATERIAL ASPECTS OF LIFE’ தமிழிலே, இந்தப் பதத்திற்குக் கொடுக்கப்பட்ட அகராதியொன்றின் விளக்கம்:  – ” அறிவுத் திறனுடையவர், ஆய்வறிவாளர், அறிஞர்’ மேலும் INTELLECTUALISM என்பதனை விளக்குகையில் அவ்வகராதி இவ்வாறு விளக்குகிறது. அறிவுத்திறம் வாய்ந்த ஆய்வுணர்வுக்குரிய அறிவுக்குகந்த அறிவுத்திறன் நோக்கிய ஒருவரின் ஆய்வறிவுக் கோட்பாடு எல்லா அறிவும் ஆய்வுத் திறத்தின் விளைவே எனுங்கொள்கை’. இவைதான் உண்மையான விளக்கம் என்றிருக்க ஈழத்து இதழியலாளர் பலரும் ஏனையோரும் தப்பும் தவறுமாக இன்டலெக்ஷ?வல் என்பதனை “”புத்திஜீவிகள்’ என்றே எழுதிவிடுகிறார்கள். அர்த்தம் தெரியாமல் ஆங்கிலமொழிப் பரிச்சயம் இல்லாததால் தமிழ் நாட்டுப் பத்திரிகையாளர் சிலர் “”புத்திஜீவிகள் என்று எழுதிவிட கண்மூடித்தனமாக நமது பத்திரிகையாளர்கள் சிலரும் “”புத்திஜீவிகள்’ என்றே எழுதிவிடுகின்றனர். தமிழ்நாட்டு வெகுசனங்களிடையே பிரபல்யம் பெறும் சொற்கள் சிலவற்றை நாமும் பின்பற்றுவது நமது தராதரத்தை கீழிறக்கி விடுவது போலாகிவிடும்.புத்தியை மாத்திரமே முதலாகக்கொண்டு ஜீவிப்பவர்கள் தான் “”புத்திஜீவிகள்’ ஆனால் அதுவல்ல INTELLECTUAL என்ற வார்த்தையின் உட்பொருள் “”ஆய்வறிவுடன் கூடிய அறிஞர்களே “” ஆய்வறிவாளர்’ ஆவர்.

அ.ந.க.
அமரர் அ.ந.கந்தசாமி நாம் பெருமைப்படக்கூடிய நமது மார்க்சியத் திறனாய்வாளர்/படைப்பாளி ஆவர். அவர் உண்மையிலேயே ஓர் ஆய்வறிவாளராவர்.

இற்றைக்கு 48 வருடங்களுக்கு முன்னர் அ.ந.கந்தசாமி அவர்களை முதன்முறையாக சந்தித்தேன். மறைந்துபோன தீவிர மார்க்சிய இலக்கியவாதியான எம்.எஸ்.எம். இக்பால், அ.ந.க.வை அறிமுகப்படுத்திவைத்தார். அந்நாட்களில் இப்பொழுது இல்லாமலே போய்விட்ட அன்றைய உள்ளூராட்சிச்சேவை அதிகாரசபையின் அலுவலகத்திலே நான் தமிழ் மொழிபெயர்ப்பாளராகத் தொழில் பார்த்து வந்தேன். அந்த அலுவலகம் கொழும்பு கோட்டை கபூர் கட்டிடத்தில் செயற்பட்டது.எனது அலுவலகத்திற்கு பக்கத்தில் எம்.எஸ்.எம். இக்பால் பணிபுரிந்த அலுவலகம் இருந்தது. அக் கட்டிடத்தின் மேல் மாடியிலே மறைந்துபோன “ரெயின்போ’ கனகரத்தினம் ஓர் அலுவலகத்தில் வரவேற்பாளராக பணிபுரிந்துவந்தார்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 271 :’கந்தசாமியைக் காண நேர்ந்தது (ஒரு சிறு கனவு)’: கவிஞர் முருகையனின் நினைவுக்கவிதையும் அதன் சிறப்பும்!

கவிஞர் இ.முருகையன்அறிஞர் அ.ந.கந்தசாமிஈழத்தமிழ் இலக்கியத்தில் முக்கிய ஆளுமைகளிலொருவரான  கவிஞர் இ.முருகையன் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி மறைந்து ஒரு மாதம் கழிந்த சூழலில் அ.ந.க. நினைவாகக் ‘கந்தசாமியைக் காண நேர்ந்தது (ஒரு சிறு கனவு)’ என்னும் கவிதையொன்றினை மார்ச் 14, 1968 தினகரன் பத்திரிகையில் எழுதியுள்ளார். மிகவும் சுவையான நினைவு கூரல். கவிஞரின் கனவில் ஒரு மாதம் முன் மறைந்த அ.ந.க தோன்றுகின்றார். நோய்வாய்ப்பட்டு மறைந்த அ.ந.க தேகசுகத்துடன் தோன்றுகின்றார்.  “நோயெல்லாம் தீர்ந்து மாயமாய் மறைந்த யாக்கைய ராகி இருந்தார்” அ.ந.க.  அவருடன் கவிஞர் கதைக்கத் தொடங்கினார்.

“இப்போ தெப்படிச் சுகம்?” எனக் கேட்கின்றார். அதற்கு அ.ந.க

அதற்கு அ.ந.க “நல்ல சுகம்” என்று நவில்கின்றார்.

கவிஞருக்கோ ஒரு மாதத்தின் முன் “அன்பர், சுவைஞர், ஆதரவாளர் துன்ப முகத்தராய்ச் சூழ்ந்து நிற்கையில், மூண்டெரி சூழ்ந்து முறுகிப் படர அன்னார் உடலம் தகனம் ஆனமை”  நினைவுக்கு வருகின்றது. இருந்தாலும் அ.ந.க.விடம் எப்படி அதை கூறுவதென்று கவிஞருக்கு ஒரு தயக்கம். கவிஞர் முன் தோன்றிய அ.ந.க.வே செளக்கியம் என்று கூறும்போது எவ்விதம் அவரது உடலம் சிதையில் எரிந்ததை எடுத்துக் கூறுவது?  இருந்தாலும் சொல்லாமலிருப்பதும் நல்லது அல்லவே. தயக்கத்தை நீக்கியவராகக் கவிஞர் அ.ந.க.விடம் கூறுகின்றார்: “உடலம் எரிந்ததை நான் கண்டேன்!”

இதற்கு அ.ந.க என்ன பதிலைக்கூறுகின்றார் தெரியுமா? கவிஞரின் வரிகளிலேயே படிப்போமா?

“இதற்கு விடையாய்க்
கலைஞர் சொன்ன பதிலைக் கேள்மினோ:
உடலம் எரிந்ததும் உண்மை தான். ஆயினும்
என் உட லாலே வீசப் பட்ட
மின்காந்த விம்ப மீதிலே, டாக்டர்
ஒப்ப ரேஷன் ஒன்றை ஆற்றினார்.
அதன் பின் எனக்கு நோய் அனைத்தும் முழுச் சுகம்”

அ.ந.க.வின் இப்பதிலுடன் கனவு நிலை நீங்கி நனவுலகுக்கு வருகின்றார் கவிஞர் இ.முருகையன். கவிஞரின் கனவில் தோன்றும் அ.ந.க கூறும் இப்பதில் என்னை மிகவும் கவர்ந்தது. அ.ந.க.வின் ஆளுமையினை எடுத்தியம்புவது. ‘எதிர்காலச்சித்தன் பாடல்’ என்னும் சிறந்த அறிவியல் மிகுந்த கவிதையினைத் தந்த கவீந்திரன் (அ.ந.க) நிச்சயம் இவ்விதமொரு அறிவியல் பூர்வமான பதிலைக் கூறியிருக்கக் கூடும்தான். அ.ந.க.வின் உடல் சிதையில் எரிந்ததைக் கூறிய கவிஞர் முருகையனைப்பார்த்து அ.ந.க. கூறுவதாகக் கவிஞர் சித்திரித்துள்ள பதிலில் தொனிக்கும் அறிவியல் என்னை மிகவும் கவர்ந்தது. கவிஞரின் கற்பனைச்சிறப்பினையும் கூடவே வெளிப்படுத்துவது. அ.ந.க கூறுகின்றார் ‘உண்மைதான். என் உடல் எரிந்தது உண்மைதான். அவ்விதம்  எரிந்தபோது வெளிப்பட்ட மின்காந்த அலைகளின் விளைவாகத் தோன்றிய விம்பத்தின் மீது டாக்டர் ‘ஒப்பரேஷன்’ செய்து மீண்டும் உயிர்ப்பித்து விட்டார்’. உண்மையில் இப்பதிலில் தொக்கி நிற்கும் உண்மை என்னை மிகவும் பிரமிக்க வைத்தது. ‘தொலைகாவும்’ (Teleporting) தொழில்நுட்பம் மூலம் மானுடர்களும் அலைகளாகக்  (வானொலி அலைகளைப்போல்) காற்றினூடு பயணித்து மீண்டும் சுய உருவுக்கு வரும் வகையிலான தொழில்நுட்பம் (ஸ்டார் வார்ஸ் போன்ற அறிவியல் திரைப்படங்களில் வருவது போன்ற) மானுட வரலாற்றில் நிச்சயம் சம்பவிக்கும் என்பதில் முழு நம்பிக்கை கொண்டவன் நான். அது போல் மானுட மரணத்தையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மாற்றும் தொழில் நுட்பமும் சாத்தியம் என்பதில்  மிகுந்த நம்பிக்கை கொண்டவன் நான். அ.ந.க.வும் கூட இவ்விதமான நம்பிக்கையினைக் கொண்டிருந்தவர். ‘வெற்றியின் இரகசியங்கள்’ என்னும் தான் எழுதிய உளவியல் மற்றும் வாழ்க்கையினை முன்னேற்றும் சிந்தனைகள் மிக்க நூலில் அ.ந.க கூறியிருக்கும் பின்வரும் கூற்று அவரது சாவை வெல்லுதல் சாத்தியம் என்னும் நம்பிக்கையினை வெளிப்படுத்தும் கூற்று எனலாம்:

Continue Reading →