கலைஞர் மறைவு: உதயசூரியன் அஸ்தமித்தது!

கலைஞர் மறைவு: உதயசூரியன் அஸ்தமித்தது!கலைஞர் கருணாநிதி  அவர்களின் மறைவுச்செய்தியினை முகநூல் நண்பர்களின் பதிவுகளின் மூலமே முதலில் அறிந்துகொண்டேன். கலைஞர் தமிழக , இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத அரசியல்வாதி. தமிழ்க் கலை, இலக்கிய உலகிலும் தவிர்க்க முடியாதவர்களிலொருவர்தான்.  அவரது கலை, இலக்கிய உலகத்துப் பங்களிப்பின் மூலம்தான் அவரைப்பற்றி முதலில் அறிந்துகொண்டேன். அவற்றின் மூலமே திராவிட முன்னேற்றக் கழகமும் தமிழக அரசியலில் வலுவாகக் காலூன்றியது. வெற்றியையும் அடைந்தது.

ஒரு நாணயத்துக்கு இரு பக்கங்கள் இருப்பதுபோல் எப்பொழுதுமே மனிதர் ஒருவருக்கும் இரு பக்கங்கள் இருக்கும். நேர்மறையான , எதிர்மறையான பக்கங்களிலிருக்கும். கலைஞரும் விதிவிலக்கானவர் அல்லர். ஜெயலலிதா என்றால் பெண் குழந்தைகளைக் காப்பதற்காக உருவாக்கப்பட்ட ‘தொட்டில் சிசு’த்திட்டம் நினைவுக்கு வருவதைப்போல், எம்ஜிஆர் என்றால் ‘சத்துணவுத்திட்டம்’ நினைவுக்கு வருவதைப்போல், கலைஞர் என்றால் எனக்கு நினைவுக்கு வருவது ‘சமத்துவப்புர’த்திட்டம். சாதிப்பிரிவுகளற்று அனைவரும் வாழும் குடியேற்றத்திட்டம் அது. சாதிப்பிரிவுகளால் பிளவுண்டிருக்குமொரு சமுதாயத்தில் மிகவும் முக்கியமானதொரு திட்டமாக அதனை நான் கருதுகின்றேன்.

கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் பன்முக ஆளுமைகளைக் கொண்டவர்கள். கலையுலக, அரசியலுலக வாழ்வினுள் காலடி வைத்தவர்கள். வரலாற்றில் இவர்கள்தம் வாழ்க்கையானது அரசியலில் மட்டுமல்ல கலையுலகிலும் வைத்து நோக்கப்பட வேண்டியதொன்று.

அரசியலைப்பொறுத்தவரையில் இவரைப்பற்றிய விமர்சனங்கள் பல இருப்பினும் ஏனைய கலை, இலக்கியத் துறைகளில் இவர் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மிகுந்த பாதிப்பினை ஏற்படுத்தியவர். ஒரு காலத்தில் பாடல்களால் நிறைந்திருந்த தமிழ்ச்சினிமா உலகை இளங்கோவனின் வசனங்கள் திரும்பிப் பார்க்க வைத்தன. அதன் பின்னர் கலைஞரின் வசனங்கள் தமிழ்த் திரையுலகில் ஐம்பதுகளில், அறுபதுகளின் ஆரம்ப காலகட்டங்களில் கோலோச்சின. பராசக்தி, மருத நாட்டு இளவரசி, மனோஹரா , பூம்புகார், ராஜா ராணியென்று கலைஞரின் வசனங்களின் சிறப்பினை, தாக்கத்தை வெளிப்படுத்த பட்டியலொன்று உண்டு. அண்ணாவின் வசனங்கள் மாற்றியமைத்தன. சமுதாயத்தில் நிலவிய சீரழிவுகளுக்கெதிராக, மூட நம்பிக்கைகளுக்கெதிராக அடுக்குமொழிகளில் எழுதப்பட்ட கனல் பறக்கும் வசனங்களை , தர்க்கரீதியிலான வசனங்களை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.  கலைஞரின் திரைப்படப்பாடல்கள் குறைவாக இருப்பினும் அவற்றுக்கும் முக்கியத்துவமுண்டு. தமிழ்த்திரைப்படத் தயாரிப்பிலும் அவருக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புண்டு,

தமிழ் இலக்கியத்துறையிலும் கலைஞர் நாவல், சிறுகதை, நாடகம், கட்டுரையென்று அவரது இலக்கியத்துறைக்கான பங்களிப்பு பன்முகத்தன்மை வாய்ந்தது. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றில் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றோரின் அடுக்கு மொழி நடைக்கும் ஒரு காலகட்டப்பங்களிப்புண்டு. சமூகச் சீர்கேடுகளை, மூட நம்பிக்கைகளைக்கடுமையாகச் சாடி மக்கள் மத்தியில் மிகுந்த விழிப்புணர்வை அவை ஐம்பதுகளில், அறுபதுகளில் ஏற்படுத்தின. அதன் மூலம் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப்பிடிக்கும் அளவுக்கு முன்னேறியது வரலாறு.

Continue Reading →