நூல் அறிமுகம்: அசோகனின் வைத்தியசாலைக்கான பயணம்!

நூல் அறிமுகம்: அசோகனின் வைத்தியசாலைக்கான பயணம்!

[ ‘பதிவுகள்’ இணைய  இதழில் தொடராக வெளிவந்து நூலுருப்பெற்ற நாவல்களிலொன்று எழுத்தாளர் நடேசனின் ‘அசோகனின் வைத்தியசாலை’. அது பற்றிய எழுத்தாளர் டாக்டர்.எம்.கே.முருகானந்தனின் கட்டுரையிது. – பதிவுகள்.காம்]


இந்தப் பயணம் என்னைச் சலிப்படைய வைக்கவில்லை. மாறாக மகிழ வைத்தது. வெளிநோயாளர் பிரிவு, வெளிநோயாளரைப் பார்வையிடும்; மருத்துவரின் அறை, சத்திரசிகிச்சைப் பிரிவு, மருந்தகம், பிரேத அறை என அந்த வைத்தியசாலை முழுவதும் சுற்றி வந்தபோதும். சோர்வு, களைப்பு எதுவும் ஏற்படவில்லை. சுமார் 40 வருடங்கள் மருத்துவனாக பணியாற்றிய, தொடர்ந்தும் பணியாற்றும் எனக்கு மருத்துவமனையை முழுமையாகச் சுற்றுவதில் சலிப்பும் களைப்பும் ஏற்படாதது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் உண்மை. முதன் முறையாக ஒன்றைப் பார்ப்பது போன்ற வற்றாத ஆர்வத்திலும், தேடுதலிலும் என்னை முற்றாக மூழ்கடித்திருந்தேன். பல புதுமைகளும் ஆச்சரியங்களும் தங்கள் ரகசிய வாயில்களைத் திறந்து எனக்காகக் காத்திருந்தன. ஆம் அசோகனின் வைத்தியசாலை விஜயத்தைத்தான் கூறுகிறேன்.

மருத்துவமனைதான் ஆனால் மனிதர்களுக்கானது அல்ல. மிருகங்களுக்கானது. சுமார் 400 பக்கங்கள் கொண்ட நீண்ட நாவல். வண்ணாத்திக்குளம் புகழ் நடேசன் அவர்களது நாவல் இது. 2013ல் வெளியாகி இருக்கிறது. இப்பொழுதுதான் படிக்கக் கிடைத்தது. இது ஒரு புலம்பெயர் எழுத்தாளரின் படைப்பு. இப்பொழுது புலன்பெயர் எழுத்தாளர்கள் பலரின் படைப்புகளை படிக்க முடிகிறது. அவர்களில் சிலர் நன்றாகவும் எழுதுகிறார்கள். இருந்தபோதும் பெரும்பாலனாவர்கள் தமது தாயக நினைவுகளையே படைப்புகளாகத் தந்து எம்மை அலுப்படைய வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மாறாக ஒரு சிலர் தமது புலம் பெயர்ந்த வாழ்வைச் சொல்கிறார்கள். ஆனாலும் அங்கும் தமிழரது வாழ்வு அதுவும் ஈழத்தை தாயகமாகக் கொண்டவர்களின் வாழ்வே படைப்பாகிறது. இருந்தபோதும் தமது புதிய சூழலின் வித்தியாசமான் அனுபவங்களையும், அங்கு அவர்கள் எதிர்நோக்கும் சவால்களையும் படைப்பிலக்கியமாக்கி தரும்போது எங்களுக்கு சில புதிய தரிசனங்களைத் தருகிறார்கள். அவை எமது ஈழத்து தமிழரது வாழ்வின் மற்றொரு அத்தியாத்தை படைப்புலகில் அலங்கரிக்கின்றன. ஆனால் நடேசனின் அசோகனின் வைத்தியசாலை ஒரு முன்னோடியான புதுமை வரவு. முற்று முழுதாக வேறுபட்ட களத்தில் வேற்று மனிதர்களின் கதையாக அமைகிறது. அவுஸ்திரேலியர்களுடன் ஐரோப்பியா, சீனா, மத்திய கிழக்கு போன்ற பல பகுதியினர்;; கதைமாந்தர்களாக உலாவருகிறார்கள். அவர்களின் மாறுபட்ட வாழ்வையும் மனோஉணர்வுகளையும் அறிந்துகொள்ள முடிகிறது. இங்கு ஈழத் தமிழர் சுந்தரம்பிள்ளை என்ற மிருக வைத்தியர் மட்டும்தான். அவரது மனைவி சாருலதாவும் பிள்ளையும் ஓரிரு இடங்களில் தலையைக் காட்டினாலும் முக்கிய பாத்திரங்கள் அல்ல. அந்த மருத்துவமனை புகழ் பெற்றதாக இருந்தாலும் அதற்குள் மறைந்து கிடக்கும் உள் அரசியல், குத்துவெட்டுகள், பழிவாங்கல்கள், சிலரின் பொறுப்பற்ற தன்மை, பொறாமை, காமம், யாவும் நாவலில் பேசப்படுகிறது. அதேபோல நல்ல பக்கங்களும் கதையாகிறது. இவை எமக்கு மருந்தாகவில்லை. விருந்தாகிறது.

இலங்கை அரசியல், ஈழத்தமிழர் பிரச்சனை எதுவும் அழுத்தமாகப் பேசப்படவில்லை. இன்றைய ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புலுகப் போக்கில் இது மிகவும் ஆச்சரியமாகப் பார்க்கப்பட வேண்டிய விடயமாகும். தனது படைப்பு பேசும் விடயத்திற்கு தேவையற்றதை வலுக்கட்டாயமாகக் கொண்டுவந்து இணைத்து வாசகனைக் கவர வேண்டிய அவசியம் நாவலாசிரியருக்கு வேண்டியிருக்கவில்லை. மாற்றாக ஒரு பரந்த உலகை எங்கள் முன் விரித்து வைக்கிறார் நடேசன். தமிழர்கள் என்ற கூட்டிற்குள் முடங்கிக் கிடந்த எங்களை இறக்கை கட்டிப் பறக்கவிட்டு உலகளாவிய மாந்தர்களிடையே சுற்றுலா செல்ல வைத்துள்ளார். புதிய அனுபவங்களைப் பெற முடிந்தது.

Continue Reading →

காதலர்தினக்கதை : மனம் விரும்பவில்லை சகியே!

- எழுத்தாளர் குரு அரவிந்தன் -நான் கன்னத்தைத் தடவிப் பார்த்தேன்.

‘ஏன் வலிக்கவில்லை?’

‘என்கிட்ட வேண்டாம்’ என்பது போல் அவள் என்னை முறைத்தபடி நகர்ந்தாள். நல்ல காலம் கன்னத்தில் அறையவில்லை. அவள் என்னைப் பார்த்த பார்வை கன்னத்தில் அறைந்தது போல இருந்தாலும் ஏனோ எனக்கு அது வலிக்காத ஒருவித சுகத்தைத் தந்தது.

நான் என்னை மறந்து அவளைப் பார்த்தபடியே நின்றதை அவள் கவனித்திருக்க வேண்டும். அதனால்தான் இந்த முறைப்போ என்று நினைத்தேன். நாகரிகம் கருதி நான் அவளை அப்படி வைத்தகண் வாங்காது ஒரேயடியாகப் பார்த்திருக்கக்கூடாது என என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன். ஆனாலும் என்ன செய்வது, பொம்மைகளுக்கு நடுவே பொம்மைபோல நின்ற, பிரமிக்கத்தக்க அவளது அழகுதான் என்னை அப்படி வெறித்துப் பார்க்க வைத்தது.

உள்ளக கணக்குப் பரிசோதனைக்காக நாங்கள் அந்த நிறுவனத்திற்கு அடிக்கடி  செல்வதுண்டு. எங்களுக்காகத் தனியாக ஒரு தடுப்பறையை அவர்கள் ஒதுக்கித் தந்திருந்தார்கள். ஆடைகள் தயாரிக்கும் நிறுவனம் என்பதால் முன்பக்கத்தில் கண்ணாடி யன்னல்கள் ஓரமாக அழகான ஆடைகள் அணிந்த அலங்காரப் பொம்மைகளை வைத்திருந்தார்கள்.

அந்தப் பொம்மைகளுக்கு நடுவேதான், ஆடை மாற்றிக் கொண்டிருந்த அவள் தற்செயலாக எனது கண்ணில் பட்டாள். புதியவளாக இருக்கலாம், அவளும் ஒரு அழகிய பொம்மைபோலக் கண்ணாடி யன்னலுக்கு வெளியே எதையோ பார்த்துக் கொண்டு நின்றதால், முதலில் நான் அதில் கவனம் செலுத்தவில்லை. அவள் அசைந்த போதுதான் அவள் நிஜம் என்பதைப் புரிந்து கொண்டேன். புதிதாக அவர்கள் அறிமுகப் படுத்தும் ஆடைகளை இப்படித்தான் அடிக்கடி பொம்மைகளுக்கு மாற்றிக் காட்சிக்கு வைப்பார்கள். அன்று அதைத்தான் அவள் செய்து கொண்டிருந்தாள், அதாவது அலங்காரப் பொம்மைகளுக்கு ஆடை மாற்றிக் கொண்டிருந்தாள்.

அவளது அழகை நான் ரசித்தேன். இவ்வளவு கொள்ளை அழகை எங்கிருந்து இவள் பெற்றாள்? சொற்ப நேரம் பார்த்த அவளது அசைவுகள் ஒவ்வொன்றும் எனது மனத்திரையில் பதிந்து என் உணர்வுகளைத் தூண்டி எனக்குள் என்னவோ செய்தது. அன்று மதியம் உணவருந்திய பின் ஓய்வெடுக்கும் அறையில் நாங்கள் சற்று நேரம் கரம் விளையாடினோம். தண்ணீர் எடுப்பதற்கு தற்செயலாக உள்ளே வந்தவள், அருகே வந்து எங்கள் ஆட்டத்தைப் பார்த்து ரசித்தாள்.

‘ஹாய். ஐயாம் தீபா’ என்று ஆங்கிலத்தில் தன்னை அறிமுகம் செய்தவள், ‘நானும் உங்களோடு விளையாட்டில் பங்குபற்றலாமா?’ என்று கேட்டாள்.
‘கோலக் குயிலோசை உனது குரலினிமையடீ!’ சட்டென்று பாரதியின் கவிதை வரிகள் ஞபகம் வந்தது. இவளுடைய நடையுடை பாவனையைப் பார்த்தபோது  பாரதியின் புதுமைப் பெண்ணாக இவளும் இருப்பாளோ என்று எண்ணத்தோன்றியது.

Continue Reading →