வாசிப்பும் யோசிப்பும் 327: வாசித்ததில் பிடித்தது 1 – ‘காண் என்றது இயற்கை’யில் கனவு பற்றி எஸ்.ரா.

எஸ்.ராமகிருஷ்ணன்எனக்கு எழுத்தாளர்களின் அபுனைவுகளில் அவர்கள் தம் வாழ்க்கை அனுபவங்களை மையமாக வைத்து எழுதும் சுய அனுபவங்களை வாசிப்பது மிகவும் பிடிக்கும். சமகாலத்தமிழ் இலக்கியத்தில் அவ்விதம் எழுதியவர்களில் முதலிடத்திலிருப்பவர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். தன் ஆரம்பகால வாசிப்பு, சென்னை போன்ற பல்வேறு நகரங்களுக்கான பயணங்கள் பற்றிய அனுபவங்களையெல்லாம் விபரித்து அவர் நிறைய கட்டுரைகள் எழுதியுள்ளார். மிகவும் சுதந்திரமாக, எவ்விதக் கட்டுப்பாடுகளுமற்றுத் தன் உணர்வுகளை அபுனைவுகளில் அவர் வெளிப்படுத்தியிருப்பார். ஆனால் இதுவரை அவர் தன் சொந்த அனுபவங்களை மையமாக வைத்து ஏதாவது நாவல்கள் எழுதியதாகத் தெரியவில்லை. அவ்விதம் அவர் எழுதுவாரானால் அது மகத்தான நாவல்களிலொன்றாக அமையுமென்ற நம்பிக்கை எனக்குண்டு.


புனைவுகளில் கூட இவ்விதம் ஆசிரியர் தன் சொந்த அனுபவங்களை மையமாக வைத்து எழுதும் புனைவுகள் மிகவும் பிடிக்கும். வெகுசனப்படைப்புகளைப்பொறுத்தவரையில் அகிலனின் ‘பாவை விளக்கை’ இவ்விதம் கூறுவர். நா.பார்த்தசாரதியின் பாத்திரப்படைப்புகளில் சில அவரையே பிரதிபலிப்பதாக நான் எண்ணுவதுண்டு. உதாரணத்துக்கு அவரது ‘பொன்விலங்கு’ நாவலில் வரும் நாயகனான சத்தியமூர்த்தியைப்பற்றிய அவரது விபரிப்பு அவர் தன்னையே விபரிப்பதைப் போலிருக்கும்.


உயர்ந்த, சிவந்த அவரையே சத்தியமூர்த்தி பாத்திரம் எனக்குப் புலப்படுத்துவதுண்டு. நீல.பத்மநாபனின் ‘தேரோடும் வீதி’யையும் இவ்விதமான புனைவுகளிலொன்றாகக் கூறலாமென்று கருதுகின்றேன். ஹெர்மன் மெல்வில்லின் ‘மோபி டிக்’ அவரது கடற்பயண அனுபவங்களின் வெளிப்பாடு. இவ்விதமாக ராமகிருஷ்ணனும் தன் சொந்த அனுபவங்களை மையமாக வைத்து , விரிவான நாவலொன்றினை எழுதினால் நன்றாகவிருக்குமென்று நினைப்பதுண்டு.

Continue Reading →

கவிஞர் மருதூர்க்கனி (1942 – 2004) நினைவுகள்! கல்முனையில் மருதூர்கனியின் நூல்கள் வெளியீடு! கவிஞரின் ஞாபகார்த்தமாக தொடரும் சமூக நலப்பணிகள்!

கவிஞர் மருதூர்க்கனி (1942 - 2004) நினைவுகள்! கல்முனையில் மருதூர்கனியின் நூல்கள் வெளியீடு! கவிஞரின் ஞாபகார்த்தமாக தொடரும் சமூக நலப்பணிகள்!( இம்மாதம் 24 ஆம் திகதி கல்முனையில் கவிஞர் மருதூர்கனியின் ஞாபகார்த்தமாக நடைபெறும் நிகழ்வை முன்னிட்டு எழுதப்படும் பதிவு)

1960 களில் ஈழத்தில் அலையடித்த கவித்துவ வெள்ளத்தின் கிழக்கிலங்கை ஊற்றுக்களில் மருதூர்க்கனியும் ஒருவர். மருதூர்க்கனியின் கவித்துவம் கற்பனைகளின் இரசனைக்கூடாரமாக அமையவில்லை. அது சமத்துவமான ஒரு சமூகத்தேடலுக்கான ஒரு ஆயுதமாக அமைந்தது என்று சொல்கிறார் பேராசிரியர் கா. சிவத்தம்பி. முற்போக்கு இலக்கிய சித்தாந்தத்தின் இலட்சிய வாதத்தினால் ஈர்க்கப்பட்ட மருதூர்க்கனி தனது பிரதேசத்தில் தனது மருதமுனைக்கிராமத்தில் தான் கண்ட ஏழை மக்களை நெசவாளிகளை – மீனவர்களை – பாய்பின்னிப்பிழைத்தாலும் சுயகௌரவத்துடன் வாழ்கின்ற பெண்களை தனது கதைகள் ஊடாக இனம் காட்டுகிறார். அவர்கள் பக்கம் நின்று குரல் கொடுக்கிறார். என்று சொல்கிறார் பேராசிரியை திருமதி சித்திரலேகா மௌனகுரு. இளம் பருவத்திலிருந்தே நாடகப்பிரியர் மருதூர்க்கனி. மனித இயக்கத்தை அவரது கண்கள் நாடகமாகக் கண்டன. மனிதர்களின் குணாதிசயங்கள் – ஆளுமை – துலங்கித்தெரியும் குணப்பாங்கு – என்பனவற்றை இதனால் வெகு நுணுக்கமாக அவர் கவனிக்கலானார். என்று எழுத்தாளர் செ. யோகநாதன் தெரிவித்துள்ளார். மருதூர்க்கனி – காணும்தோறும் பேசும்தோறும் உள்நெக்க நின்று உருகும் மனிதனாக இலக்கிய உலகில் தன்னை இனங்காட்டி வந்தவர். இவரை அரசியலிருந்து பிரித்து கவிஞனாக மட்டும் காண முடியாது. இவர் ஒரு தேசிய அரசியற் கலாசாரத்தின் மூலவிசை என்கிறார் வீரகேசரி – தினக்குரல் நாளேடுகளின் முன்னாள் பிரதம ஆசிரியர் ஆ.சிவநேசச்செல்வன். புலவர்நாயகம் மருதூர்க்கனியின் கவித்துவத்தை உரைத்துப்பார்க்க எந்த ஓர் உரைகல்லும் தேவையில்லை. அவர் எப்போதோ அங்கீகரிக்கப்பட்டுவிட்டார். அவரே ஒரு கவிதைதான் என்று எம். எச். எம். அஷ்ரப் சொல்லியிருக்கிறார். மகா கவிகளான இக்பாலும் பாரதியும் காட்டிய பாதையிலே பயணம் மேற்கொள்ளவிழையும் மருதூர்க்கனி மானிட மேம்பாட்டுக்காகத் தன்னுடைய எழுத்தாற்றல் பயன்படும் என்ற வேட்கை மீதூரப்பெற்றவராகவும் காணப்படுகிறார் – என்று பேராசிரியர் எஸ். தில்லைநாதன் பதிவு செய்கிறார். முஸ்லிம்கள் மத்தியில் முன் என்றும் இல்லாத அளவு இனத்துவ உணர்வு மேலோங்கி எழுந்தவேளையில் அதன் ஸ்தாபன வெளிப்பாடாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உதயமாகி இக்கட்சியின் தொடக்க காலத்திலிருந்தே அதனுடன் இணைந்து செயற்பட்டு – அதன் மூத்த துணைத்தலைவரானவர் மருதூர்க்கனி என்று குறிப்பிடுகிறார் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான். இங்கே நான் மருதூர்க்கனி பற்றி முக்கியமான ஏழு ஆளுமைகள் தெரிவித்த கருத்துக்களைத்தான் வாசகர்களிடம் பகிர்ந்துகொண்டேன்.

மருதூர்க்கனி தொழில் ரீதியாக ஒரு பாடசாலை ஆசிரியர். அத்துடன் கவிஞர். நாடகாசிரியர். சிறுகதை எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர், அரசியல் இயக்கம் ஒன்றின் ஸ்தாபகத்தலைவர். இவ்வாறு பன்முகத்தோற்றம் மிக்க ஒருவர் இன்று எம்மத்தியில் இல்லை. எனினும் அவரது நினைவுகள் எம்முடன் இணைந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அவரது இலக்கிய வாரிசுகள் இன்றும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவரது குடும்ப வாரிசுகள் இன்றும் அவரது நினைவாக அவரது படைப்புகளை அச்சிலே பதிவுசெய்துகொண்டிருக்கிறார்கள். இந்தப்பலனை வரம் என்றும் சொல்லலாம். அவருடைய அன்புத்துணைவியாரும் பிள்ளைகளும் மருமக்களும் மருதூர்க்கனிக்கு கிட்டிய பெரும் பேறு.

Continue Reading →