ஆய்வு: பொய்கையார் வலியுறுத்திய போர் அறம்

- முனைவர் திருமதி பா.கனிமொழி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, (தன்னாட்சி), விருதுநகர் - 626001. - பதினெண் மேற்கணக்கு எனப்படும் சங்கஇலக்கியத்திற்குப் பிறகு பதினெண்கீழ்க்கணக்கில் இடம்பெற்றுள்ள ஒரேயொரு புறநூல் களவழிநாற்பது ஆகும். சோழமன்னனான  கோச்செங்கணானுக்கும்,  சேரமான் கணைக்காலிரும் பொறைக்கும்  இடையே  கழுமலத்தில்  இடம்பெற்ற போரின் பின்னணியில் எழுதப்பட்டது இந்நூல். இதை எழுதியவர்  பொய்கையார்  என்னும்  புலவர். இவர்  சேரமன்னனுடைய நண்பன் ஆவார். கழுகலத்தில் நடைபெற்ற போரில் சேரன் தோற்றுக் கைதியாகிறான். அவனை விடுவிக்கும் நோக்கில் பாடப்பட்டதே இந்நூல் எனக் கருதப்படுகின்றது. இதிலுள்ள நாற்பது பாடல்கள் அக்காலத்துப் போர்க்களக் காட்சிகளையும், சோழனும் அவனது படைகளும்  புரிந்த வீரப்போர் பற்றியும் கவி நயத்துடன் எடுத்துக்காட்டுகின்றன. இந்நூலிலுள்ள மிகப் பெரும்பாலான பாடல்களில் யானைப் படைகள் பற்றிக் குறிப்பிடப்படுவது அக்காலத்தில் போர்களில் யானைப் படைகள் பெற்ற முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இந்நூல் பண்டைத்தமிழரின் அரசியலையும், ஆட்சிமுறையையும், அவற்றில் இடம்பெற்றுள்ள களப்போர் நிகழ்வுகளையும் விரிவாகச் சுட்டிக்காட்டுகிறது. “களவழி என்பது ஏர்க்களம் பற்றியும், போர்க்களம் பற்றியும் பாடுவதாகத் தொல்காப்பியத்திற்கு உரையெழுதிய இளம்பூரணர் குறிப்பிடுகிறார்.” (இளம்.தொல்.பொருள்.ப.115) அவற்றை ஏரோர் களவழி, தேரோர் களவழி எனக் குறிப்பிடும்; இளம்பூரணர், ஏரோர் களவழி என்பது நெற்களத்தினை இடமாகக் கொண்டு பாடுவதென்றும், தேரோர் களவழி என்பது போர்க்களத்தினை இடமாகக் கொண்டு பாடுவதாகவும் குறிப்பிடுகிறார். இதனை,

“ஓஓ உவமை உறழ்வின்றி ஒத்ததே
காவிரி நாடன் மலங் கொண்டநாள்
மாவுதைப்ப மாற்றார் குடையெலாங் கீழ் மேலாள்
ஆவுதை காளாம்பி போன்ற புனல் நாடன்
மேவாரை அட்ட களத்து”    (களவழி நாற்பது. 36)

என்ற களவழி நாற்பது பாடலும் குறிப்பிடுகிறது. இதற்கு உரையெழுதிய நச்சினார்க்கினியர் “வேளாண் மக்கள் விளையுங் காலத்துச் செய்யும் செய்கைகளைத் தேரேறிவந்த கிளைப் பொருநர் முதலியோர் போர்க்களத்தே தோற்றுவித்த வென்றியன்றிக் களவழிச் செய்கைகளை மாறாது தேரேறிவந்த புலவர் தோற்றுவித்த வென்றி” எனக் கூறுகிறார். வெள்ளைவாரணர் உரையில், “போர்க்களத்தில் நிகழ்த்த வேண்டிய போர் முறைகளை ஆராய்ந்தறிந்த இயல்பும், ஏர்த்தொழில் புரிபவனாகிய உழவர் வினையுட் காலத்துச் செய்யும் வென்றியன்றித் தேரோராகிய பொருநர் போர்க்களத்து நிகழ்த்தும் வென்றியும் என்கிறார்.”  ( சு.தமிழ்வேலு – களவழி களமும் காலமும். ப.37 )

Continue Reading →