வாசிப்பும், யோசிப்பும் 324: ஈழத்துத்தமிழ்க் கவிதையும் , ஜெயமோகனின் கூற்றும்!

ஜெயமோகன்ஜெமோ எதற்காகத் தூண்டிலைபோட்டாரோ அது நன்றாகவே வேலை செய்கிறது என்பதை முகநூலில் நம்மவர்கள் ஆக்ரோசத்துடன் போடும் கூச்சல் புலப்படுத்துகின்றது. ஜெயமோகன் தனதுரையில் ஈழத்துப்படைப்புகள், கவிதைகள் பற்றிக் கூறியதன் சாரம் இதுதான்.


“திரும்பி இலங்கை எழுத்துகளைப்பார்க்கின்றோம். இலங்கையில் ஐம்பதாண்டு காலமாக எழுதப்படுகின்றது. இலங்கையில் ஐம்பதாண்டு காலமாக எழுதப்படும்போது இலங்கேசனிலிருந்து ஆரம்பித்து அ.முத்துலிங்கம், சோபாசக்தி, அனோஜன் பாலகிருஷ்ணன் வரைக்கும் ஒரு மரபு அங்கே இருக்கு. ஆனால் இன்றைக்கு வரைக்கும் அங்கு ஒரு விமர்சன வரிசை உருவாக்கப்படவில்லை. யார் யார் எங்கே இருக்கிறார்கள் என்றிருக்குதில்லே.. . ஒரு பட்டியல் இருக்கு . அந்தப்பட்டியல் ரொம்பப் பிரமாண்டமாயிருக்கும் ” இவ்விதம் குறிப்பிடும் ஜெயமோகன் தான் காலம் இதழில் இலங்கைக் கவிஞர்களைப்பற்றி எழுதுகையில் , குறிப்பிட்டிருந்த சில கவிஞர்களைப் பட்டியலிட்டிருந்ததாகவும், அதற்கு எதிர்வினையாற்றிய எழுத்தாளர் மு.பொன்னமப்பலம் எழுதிய கடிதத்தில் சுமார் 200 கவிஞர்களுக்கும் அதிகமானவர்களைப் பட்டியலிட்டதாகவும் குறிப்பிட்டார். அது பற்றி மேலும் குறிப்பிடுகையில் தான் அக்கடிதத்துக்கு அளித்த பதிலில் அவ்விதம் 200ற்கும் அதிகமான சிறந்த கவிஞர்கள் இருப்பின் அதற்கான தேவை அங்கில்லை. அவர்களைப் பூச்சி மருந்து கொடுத்து அழிக்கத்தான் வேண்டும் என்று கூறியதாகவும் கூறினார். மேலும் தொடர்கையில் ‘ஒரு நகரத்தில் இருநூறுக்கும் அதிகமான கவிஞர்கள் அலைந்தால் நாட்டின் சட்ட ஒழுங்கு என்னாவது? மகளிரின் கற்புக்கு என்ன பாதுகாப்பிருக்கு?’ என்றும் வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.


இக்கூற்று யாவரும், வல்லினம் இணைந்து நடத்திய மூன்று நூல்கள் அறிமுக விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன் ஆற்றிய உரையிலுள்ளது.


இவ்வுரையினை முறையாக உள் வாங்கி , அதனை ஏற்கவில்லையென்றால் ஏன் ஏற்கவில்லையென்று தர்க்கரீதியாக எதிர்வினையாற்றுவதற்குப்பதில் ‘200ற்கும் அதிகமான சிறந்த கவிஞர்கள் இருப்பின் அதற்கான தேவை அங்கில்லை. அவர்களைப் பூச்சி மருந்து கொடுத்து அழிக்கத்தான் வேண்டும்’ என்று கூறியதைத் தூக்கிப்பிடித்துத் துள்ளிக் குதிக்கின்றார்கள். உண்மையில் இக்கூற்றினை அப்படியே விளங்கிக்கொள்ளக் கூடாது. பொதுவாக நாம் பேச்சு வழக்கில் ‘இதற்குப் பதில் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு செத்துப்போகலாம்’ என்போம். அதற்காக அதனை அப்படியே உண்மையில் நாக்கைப்பிடுங்கிக்கொண்டு செத்துப்போக வேண்டுமென்று கூறுவதாக நாம் அர்த்தப்படுத்தக் கூடாது. ஆனால் ஜெயமோகன் கூறியதைப்போல் ‘பூச்சி மருந்து கொடுத்து அழிக்கத்தான் வேண்டும்’ என்பதுபோன்ற சொற்பதங்களை யாரும் பாவிப்பதில்லை. அதுவும் அழிக்க வேண்டும் என்று யாரும் கூறுவதில்லை. 200 கவிஞர்கள் ஊரில் இருக்கிறார்கள் என்ற செய்தியைக் கேட்பதற்குப்பதில் கிருமிநாசினி குடித்து விடலாம் என்று ஜெயமோகன் கூறியிருந்தால் அதனைக் கேட்டு யாரும் கொதித்திருக்க மாட்டார்கள். ஜெயமோகனின் தாய்மொழி மலையாளம் என்பதால் அங்கு இவ்விதம் கூறுபவர்களைக் கிருமி நாசினி கொண்டு அழிக்க வேண்டும் என்று கூறுவதுபோன்ற வார்த்தைப்பிரயோகங்கள் பாவிக்கப்படுகின்றனவா, வழக்கிலுள்ளனவா என்பதை முதலில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதனால்தான் ஜெயமோகனும் இவ்விதம் கூறினாரா என்பதும் தெரியவில்லை. மேலும் எதற்காக ஜெயமோகன் அடுத்து ‘ஒரு நகரத்தில் இருநூறுக்கும் அதிகமான கவிஞர்கள் அலைந்தால் நாட்டின் சட்ட ஒழுங்கு என்னாவது? மகளிரின் கற்புக்கு என்ன பாதுகாப்பிருக்கு’ என்று கூறினாரோ தெரியவில்லை. ஜெயமோகனுக்குக் கவிஞர்கள் மேல் அப்படியென்ன கோபமோ? மேலும் கற்பு என்னும் சொற்பதம் பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடு என்று புரிந்துகொள்ளப்பட்டுள்ள இக்காலகட்டத்தில் , அச்சொல்லுக்குப்பதில் ‘பாலியல் வன்முறை’ என்னும் சொல் பாவிக்கப்படும் இக்காலகட்டத்தில் இன்னும் எதற்காக ஜெமோ அச்சொல்லில் தொங்கிக்கொண்டிருக்கின்றார்?

Continue Reading →

கனடாத் தமிழர்தம் வரலாறும் , ஆனந்தன் கிருஷ்ணப்பிள்ளையின் அனுபவமும்!

ஆனந்தன் கிருஷ்ணபிள்ளைஎனது ‘அஞ்சலி: மறக்க முடியாத ‘ராஜு அங்கிள்’ (1946 -2019)’ பதிவினைப்பார்த்துவிட்டு நண்பர் ஆனந்தன் கிருஷ்ணப்பிள்ளை (Ananthan Krishnapillai) என்னைத்தொலைபேசி மூலம் அழைத்து தனது ராஜு அங்கிள் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார். ஆனந்தன் பகிர்ந்து கொண்ட எண்ணப்பதிவுகள் முக்கியமாவையாகப் படுவதால் அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

ஆனந்தன் அவர்கள் நாமெல்லாரும் இங்கு வருவதற்கு முன்பே வந்தவர். ஐரோப்பாவிலிருந்து வந்தவர் சட்டவிரோதமாக நாட்டினுள் நுழைந்த குற்றத்துக்காக, நாடு கடத்தப்படுவதற்காக, நாடு கடத்தும் பத்திரங்களிலும் அவரது கையெழுத்தைப்பெற்ற பின்னர் அவரைத் தடுப்பு முகாமில் தடுதது வைத்திருந்தார்கள். ராஜு அங்கிளின் மூத்த அண்ணர் ராமநாதன் முத்துச்சாமிப்பிள்ளையின் மனைவியார் அக்காலகட்டத்தில் யாழ் பொது வைத்தியசாலையில் ‘மேற்ரன்’ ஆகப்பணியாற்றிக்கொண்டிருந்தார். அங்குதான் ஆனந்தன் அவர்களின் அன்னையாரும் நீண்ட காலமாகப்பணியாற்றிக்கொண்டிருந்தார். தனது தாயாரிடம் தனது இக்கட்டான நிலையினைக் கூறியிருக்கின்றார் ஆனந்தன். பதிலுக்கு அவரது தாயார் ‘மேற்ரனா’கப் பணிபுரிந்து கொண்டிருந்த ராஜு அங்கிளின் அண்ணியாரிடம் விடயத்தைக் கூறியிருக்கின்றார். மூத்த அண்ணர் உடனடியாகவே கனடாவிலுள்ள ராஜு அங்கிளுடன் தொடர்புகொண்டு நிலைமையை எடுத்துக்கூறியுள்ளார்.

Continue Reading →