நூல் அறிமுகம்: பாரதியும் ஷெல்லியும் – தொ.மு.சி. ரகுநாதன்

நூல் அறிமுகம்: பாரதியும் ஷெல்லியும் – தொ.மு.சி. ரகுநாதன்-  முனைவர் போ. ஜான்சன், உதவிப் பேராசிரியர் , தமிழ்த்துறை, பெட்ரீசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அடையாறு, சென்னை – உம் என்ற இடைச்சொல்லை எட்டு நிலைகளில் பயன்படுத்தலாம் என்பார் தொல்காப்பியர் (எச்சம், சிறப்பு, ஐயம், எதிர்மறை, முற்று, எண், தெரிநிலை, ஆக்கம்). நூலாசிரியர் தொ.மு.சி. அவர்கள் சிறப்பு கருதி நூலின் தலைப்பினைக் கொடுத்துள்ளார். ஒப்புமை செய்ய எடுத்துக்கொண்ட இரு கவிஞர்களுமே சிறப்பு வாய்ந்தவர்கள். ஒப்புயர்வு அற்றவர்கள். ஒப்புமையாக்க நூல்களுள் ஆகச்சிறந்த படைப்பு இந்நூல் என்பது மிகையில்லை.

பாரதிக்கும் ஷெல்லிக்கும் கிட்டத்தட்ட ஓர் நூற்றாண்டு இடைவெளி உள்ளது (90 ஆண்டுகள்). இதனால் ஷெல்லி காணத பல புரட்சிகளையும், வெற்றிகளையும், அவன் காணவிரும்பிய பல்வேறு நிகழ்வுகளையும் பாரதி கண்டான் என்பது தொ.மு.சி. அவர்களின் கூற்று. இரு கவிகளையும் ஒப்புமையாக்கம் செய்யும்போது ஷெல்லியின் கவிதைகளையும் முதலிலும் அதன்பின் பாரதியின் படைப்புகளை அதனோடு ஒப்பிட்டும் காட்டியுள்ளார். பல்வேறு தலைப்புகளில் பல்வேறு செய்திகளைப் பற்றிய விரிவான விளக்கச் செய்திகளாகப் பதிவு செய்துள்ளார்.

பாரதியையும், ஷெல்லியையும் பற்றிய அறிமுகம், அவர்களின் வாழ்க்கைச் சூழல், அவர்களின் படைப்புப் பின்னணி போன்றவற்றை ஒப்புமையோடு விரிவாகக் கூறித்தொடங்கும் நூலாசிரியர், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்றவற்றில் இருவரின் மனப்பாங்கு எவ்வாறு இருந்தது என்பதை மிகவிரிவாக அழகாக எடுத்துக்காட்டுகிறார். அதேநேரத்தில் அவர்கள் எக்கருத்தில் மாறுபடுகிறார்கள் என்பதைக் காட்டி அதற்கான காரணத்தையும் முன்வைக்கிறார். காட்டாக, மன்னர்கள், மதகுருமார்கள் பற்றிய கருத்து நிலைப்பாடு இருவருக்கும் வெவ்வேறாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இருவருமே அவரவர் காலத்தைக் காணும்போக்கில் மிகத்தீவிரமாக இருந்துள்ளனர்.

பெண்விடுதலை பற்றிய கருத்துநிலையில் ஒரேமாதிரியாக சிந்திக்கும் திறம்பெற்றும், குறிப்பாக, பாரதி அதில் தமிழக நிலையைக் கருத்தில்கொண்டு தம்முடைய படைப்புகளைப் படைத்துள்ளார் என்றும் பாரதியை உயர்த்திக் காட்டுகிறார் நூலாசிரியர். காதல் நிலையில் இருவரும் சற்று முரண்படுகின்றனர். அதற்கான காரணம், இயல்பிலேயே (இளமையிலேயே) ஷெல்லி கடவுள் மறுப்புக் கொள்கை உடையவராக இருந்து, இயற்கையையே காதல் என்று கூறியதும், பாரதி பராசக்தியையே காதல் வடிவமாகக் கண்டதுமே இம்முரண்பாடு.

உருவகங்களையும் உவமைகளையும் பயன்படுத்துவதில் ஷெல்லி முன்னனியில் இருக்கிறார். அதனை அடியொற்றியே பல்வேறு இடங்களில் பாரதி தன்னுடைய உவமைகளையும், உருவகங்களையும் படைக்கிறான். ஷெல்லியின் கவிதைகளில் மனங்கசிந்த பாரதி, ஷெல்லியின் அனைத்துத் திறங்களையும் அப்படியே தமிழில் கொண்டுவர முயற்சித்திருக்கிறான்.

Continue Reading →

கைக்கோளர் படை

வரலாறுகைக்கோளர் என்போர் இந்நாளில் செங்குந்த முதலியார் என அறியப்படுகின்றனர். அண்மைக் காலம் வரை தறி நெசவு இவர்க்கு தொழிலாய் இருந்துள்ளது. ஆனால் பல்லவர் ஏற்படுத்திய  இந்த சாதிமார் ஒரு படைக்குடி ஆவர். கல்வெட்டில் இவர்கள் பட்டடைக்குடி என தெளிவாக குறிக்கப்பட்டுள்ளது.  ‘குந்தம்’ என்பதற்கு வேல் என்ற பொருளே இதற்கு சான்று. கள்ளர் படை, மறவர் படை என்பது போல 12 ஆம் நூற்றாண்டு வரை கைக்கோளப் படை என்று தனியாகவே இருந்துள்ளது. இப்படி போர்க்குடிகளாக இருந்த இவர்கள் சைவ சமய எழுச்சியின் காரணமாக அதன்பால் மிக்க ஈடுபாடு கொண்டதனாலும், இவர்கள் நம்பி இருந்த பல்லவர்கள் வேந்தர் என்ற நிலையும் மன்னவர் என்ற நிலையும் இழந்து அரையர்களாக, கிழார்களாக சிதறுண்டு போனதன் காரணமாகவும் போர்த் தொழிலை விட்டு வணிகத்தைப் பிழைப்பாக மேற்கொண்டனர்.  இதாவது, நெய்த ஆடைகளை விற்பதைத் தொழிலாக மேற்கொண்டனர். ஆனாலும் கைக்கோளர் சிலர் மட்டும் பல்வேறு ஆட்சியாளரிடம் படைத்தலைவர்களாகவும் படைஆள்களாகவும் தொடர்ந்து வேலை செய்தனர். இப்படி தொழில் மாறி பிழைப்பு மேற்கொண்டாலும் அதிக வரி, பிற மொழித் துணி வணிகரின், சிறப்பாக சௌராட்டிரர், பத்மசாலி ஆகியோரின் தொழிற் போட்டி ஆகியன இவர்களை வறுமையின் பிடிக்கு தள்ளியது.  இவற்றுக்கும் சான்று கல்வெட்டுகள் உண்டு. கைக்கோளரைப் போலவே சேனைக்கடையார், செட்டியார், வாணியர் போன்ற போர்க்குடிகளும் போர்த் தொழிலை விட்டுவிட்டு வணிகத்தை மேற்கொண்டனர். கைக்கோளர் படைத்தொழிலை விட்டதுமுதல் பல்லவர் ஆட்சி போலவே சோழர் ஆட்சியும் விரைந்து சரிந்தது. அதன் பின் வடக்கே இருந்து இசுலாமியப் படையெடுப்பு, விசயநகர படையெடுப்பு ஆகியவற்றால் தமிழராட்சி அறவே தொலைந்து போனது.  அரையர்கள் பலரும் பல்லவர் வழிவந்தவர் என்ற வகையில் கூட்டரசை (confederacy) அமைத்திருக்க முடியும். ஆனால் படைஆளுக்கு எங்கே போவது? பட்டடைக்குடி சாதிகள் படைத்தொழிலை விட்டதனால் அதற்கும் வழி இல்லாமல் போனது. உண்மையில், வட தமிழ்நாட்டில் தமிழர் படை சுருங்கிப் போயிருந்தது. சம்புவராயர் ஆட்சியும் குறுகிய காலத்தில் வீழ்ந்ததற்கு தம் படையை மேலும் பெருக்க முடியாமல் போனதே முதற் காரணம் ஆகும். 

ஒரு தொழிலை செய்யும் ஒரு கூட்டத்து மக்கள் அத்தொழிலை விடுத்தால் மாற்று ஏற்பாடாக வேறு ஒரு கூட்டத்தாரை அத் தொழிலில் ஈடுபடுத்தி சமூகத்தில் தொழில் சம நிலையை பேண வேண்டும். ஒரே தொழிலில் அதிகம் பேர் ஈடுபட்டாலோ அல்லது ஒரு தொழிலில் தேவைப்படும் பணிஆள்களில் பற்றாக்குறை ஏற்பட்டாலோ தொழிற் சமநிலை இழப்பு ஏற்படும்.  அதனால் தான் பண்டு ஒரு தொழில் செய்தவர் மாற்று தொழில் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டதில்லை. அதனால் தொழில் அடிப்படையில் சாதிகள்  உண்டாயின என்பதுஉண்மை தான். வேந்தர் அனுமதித்தால் சில தனிஆள்கள் மட்டும் தொழில் மாறலாம் மற்றபடி அது பொதுவான வழக்கம் அல்ல. கைக்கோளரை தொழில் மாறவிட்டதன் விளைவாக தமிழக வரலாற்றில் பிற மொழியாளருக்கு அடிமைப்படும் அளவிற்கு தன்னாட்சியை மாபெரும் விலையாகத் தமிழகம் கொடுத்தது ஒருவரலாற்றுப் பிழையே. அந்த மாபெரும் பிழையால் தமிழகம் வந்து புகுந்த அயலவர் பொன்னான வாழ்வு பெற்றுவிட்டார்கள்.  இந்த வரலாற்று உண்மைகளை தெளிவுபடுத்தவே கீழ்காணும் கல்வெட்டுகளின் விளக்கம்.

Continue Reading →

அஞ்சலி: நினைவுகளில் ஓவியமாகிவிட்ட ஓவியர் மொராயஸ்! நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களின் கதைகளுக்கு உயிர் வழங்கிய ஓவியர்! எம்.ஜி.ஆரின் விருப்பத்தில் அவரது ‘ தாய் ‘ இதழுக்கும் படம் வரைந்தார்!

நினைவுகளில் ஓவியமாகிவிட்ட  ஓவியர் மொராயஸ்! நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களின் கதைகளுக்கு உயிர் வழங்கிய ஓவியர்!  எம்.ஜி.ஆரின் விருப்பத்தில் அவரது ' தாய் ' இதழுக்கும் படம் வரைந்தார்!உலகப்பிரசித்திபெற்ற ஓவியர் பிக்காசோ, மொனாலிசா ஓவியம் பற்றி அறிந்திருப்போம். ஆனால், இந்தப்பெயர்களை லங்கையில் பிறந்து, தனது வாழ்நாள் முழுவதும் ஓவியராகவே வாழ்ந்த ஒருவர் தமது பிள்ளைகளுக்கு வைத்து அழகு பார்த்த செய்தி தெரியுமா…? வீரகேசரியுடன் எனக்கு உறவும் தொடர்பும் ஏற்பட்ட 1972 ஆம் ஆண்டு முதல் என்னுடன் நட்புறவாடியவரான  ஓவியர் மொராயஸ்  கடந்த 26 ஆம் திகதி  திங்கட்கிழமை  மறைந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். சிலர் தமது முன்னாள் காதலிகள், காதலர்களின் அல்லது தமது விருப்பத்துக்குரிய கடவுள்களின் பெயர்களை -வாசித்து அனுபவித்த கதைப்பாத்திரங்களின் பெயர்களை அல்லது குடும்பத்தின் பரம்பரை பெயரை தமது பிள்ளைகளுக்கு வைப்பார்கள். அவ்வாறு தமக்குப் பிடித்த ஓவியத்துறை சார்ந்த பெயர்களை மொராயஸ் தமது பிள்ளைகளுக்குச் சூட்டியது வியப்பல்ல.

வத்தளை புனித அந்தோனியார் வித்தியாலயத்தில் தனது ஆரம்பக்கல்வியை முடித்திருந்த மொராயஸ் விரும்பியவாறு இவரது தந்தையார் தமிழ்நாட்டுக்கு இவரை அனுப்பி படிக்கவைத்தார். இளம் வயதுமுதலே இவருக்கு ஓவியம் வரைவதில் இருந்த நாட்டம்தான் பின்னாளில் ஓவியக்கல்லூரியிலும் இணையச் செய்திருக்கிறது. பொதுவாக எமது தமிழ் சமூகத்தில் தமது பிள்ளைகள் மருத்துவர்களாக பொறியியலாளராக சட்டத்தரணிகளாக கணக்காளராக வரவேண்டும் என்ற எதிர்பார்ப்புத்தான் அந்நாளைய பெற்றோர்களிடம் இருந்தது. காரணம் இந்தத்துறைகளில் நிறைய சம்பாதிக்கமுடியும் சமூக அந்தஸ்தை வளர்த்துக்கொள்ளவும் முடியும் என்ற மனப்பான்மைதான். ஓவியம், கலை, ஊடகம் முதலான துறைகள் புகழை மட்டும்தான் தரும், சோற்றுக்கு திண்டாட்டத்தைதான் தரும் என்று அந்நாளைய பெற்றோர்கள் நினைத்தார்கள்.

தமது மகனின் விருப்பம் அறிந்து தமிழ்நாட்டில் ஓவியக்கல்லூரியில் இணைத்துவிட்ட அந்தத் தந்தை சற்று வித்தியாசமானவர்தான். அத்துடன் மொராயஸின் அண்ணன் லெனின் மொராயஸ், இலங்கையில் பிரபலமான சினிமா இயக்குநர். சுமார் நாற்பது சிங்களப்படங்களை இயக்கியிருப்பவர். அவர் இறுதியாக இயக்கிய படம் ‘நெஞ்சுக்குத்தெரியும்’ என்ற தமிழ்ப்படம். ஆனால், அது வெளியாகவில்லை. எஸ்.ரி.ஆர். பிக்சர்ஸ் ( எஸ்.ரி. தியாகராஜா தயாரித்த) படம் வத்தளை சினிமாஸ் ஸ்டுடியோவில் 1983 வன்செயலில் எரிந்து சாம்பரானது.

ஒகஸ்டின் மொராயஸ் இலங்கை பத்திரிகை ஊடகத்துறையில் ஓவியர் மொராயஸ் என்றே அறியப்பட்டவர். அண்ணன் காட்டிய வழியில் அவர் தம்பி மொராயஸ_ம் ஆரம்பத்தில் இலங்கையில் திரைப்படத்துறையில் கலை இயக்குநராகவும் திரைப்படங்களுக்கு டைட்டில் எழுதுபவராகவும் தொழிற்பட்டிருக்கிறார்.

தமிழ்நாடு ஓவியக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் ஓவியம் பயின்றுவிட்டு அங்கேயே இரண்டு ஆண்டுகாலம் ஓவிய ஆசிரியராகவும் பணியாற்றிய பின்னரே நாடு திரும்பிய மொராயஸ், கொழும்பில் வெளியான சிங்களப்படங்களுக்கு சுவரொட்டிகள் வரைந்தார். அக்காலத்தில் வெளியான  தமிழ்ப்படம் ‘மஞ்சள் குங்குமம்’. இந்தப்படத்திற்குரிய சுவரொட்டிகளை வரைந்துகொண்டிருந்தபொழுது, அதில் நடித்த நடிகர் ஸ்ரீசங்கர், இவரை அழைத்துக்கொண்டு வீரகேசரி  அலுவலகம் வந்து, அச்சமயம் அங்கு செய்தி ஆசிரியராக இருந்த டேவிட் ராஜூவிடம் அறிமுகப்படுத்தினார். 1969 இலிருந்து வீரகேசரியில் ஓவியராக பணியாற்றிய மொராயஸ்1982 ஆம் ஆண்டிலேயே அங்கு நிரந்தர ஊழியரானார்.

Continue Reading →