பதிவுகளில் அன்று: இரமணிதரன் கந்தையா ( சித்தார்த்த ‘சே’ குவேரா) கவிதைகள்!

– பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர் –

இரமணிதரன் கந்தையா ( சித்தார்த்த 'சே' குவேரா)எழுத்தாளர் இரமணிதரன் கந்தையா புகலிடப் படைப்பாளிகளில் முக்கியமானவர்களிலொருவர். கவிதை, கட்டுரை, சிறுகதை என இவரது இலக்கியபங்களிப்பு பன்முகத்தன்மை மிக்கது. சித்தார்த்த ‘சே’ குவேரா, சிசேகு, ரமணிதரன் போன்ற பெயர்களில் இவர் ‘பதிவுகள்’ இணைய இதழில் எழுதிய கவிதைகள் இவை. இவரது கவிதைகளின் மொழி சொற்களைக் கையாள்வதில் தனித்துவம் வாய்ந்தது. இவரது இன்னுமொரு பெயர் எனக்கு மிகவும் பிடித்த புனைபெயர்களிலொன்று. ‘திண்ணைதூங்கி’ என்னும் புனைபெயரில் இணையத்தில், இணைய இதழ்களில் இவர் விவாதங்கள் பலவற்றில் கலந்துகொண்டிருக்கின்றார்.  சமூக, அரசியல் மற்றும் கலை, இலக்கியம் சம்பந்தமான கருத்துகள் பலவற்றை இவர் திண்ணைதூங்கி என்னும் பெயரில் பதிவு செய்திருக்கின்றார். பதிவுகள் இணைய இதழின் விவாதங்களிலும் (ஆரம்ப காலகட்டத்தில்) இவர் கலந்துகொண்டிருக்கின்றார். விவாதத்தளத்தை நிர்வகித்தவர்களில்  இவருமொருவர். பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியற் பட்டதாரியான இவர் அமெரிக்காவில் அத்துறையில் முனைவர் பட்டமும் பெற்றவர். பதிவுகள் மூலம் எனக்கு அறிமுகமான எழுத்தாளர்களில் இவருமொருவர். – பதிவுகள் – –


1.

பதிவுகள் தை 2001   இதழ்-13
சித்தார்த்த ‘சே’ குவேராவின் (அ)கவிதைகள்

பழைய தெருவுக்கு மீண்டும் தயிருடன்
கூவிக்கொண்டு வருகின்றான் இடையன்.

கடையக் கடைய வழிந்த வெண்ணெயைத்
தொலைத்தபின்னால், முன்னர் மீந்த தயிரை
பின்னும்
இன்னும்
விற்றுப் பிழைக்கும் கலைஞன்.

தெரு தூங்கிக்கிடக்கின்றது கிடையாய்க் கைவிரித்து,
அடித்தோய்ந்து தூங்கிய அரவச்சாட்டையாய்
செட்டைச்செதில் உதிர்த்தும் உரிக்காமலும்.

மேலே விரலொட்ட வொட்ட விற்றுப் போவான்,
புளி சொட்டிக் கண் சுருக்கும் தயிர் – இடையன்.

வீதிக்கு, வீட்டுக்கு விலைப்படுகின்றபோதும்
இவனுக்கு எண்ணமோ, இன்னும்
கடையச் சடைத்துத் தொலைந்த
கட்டி வெண்ணெயில்.

காலமும்கூடக் கடவாய் கசியக்கசியப்
புசிக்கும்
வெண்ணெய்.

2.
விரல்கள் மட்டுமே இருக்கின்றவர்களுக்கு,
சொற்கள் மட்டுமே தேறும்.
கோர்த்த சொற்களைக் குலைத்து,
குலுக்கிப் போட்டு மீட்டுக் கோர்த்தாலும்
சேர்ப்பது விரல்கள் மட்டுமே என்றானால்,
சொற்கள் மட்டுமே குவியற்கற்களாய்த் தேறும்.

விற்காத சொற்களையும் வினையாத விரல்களையும்
வீணுக்கு வைத்துக்கொண்டு விளைமீனுக்காய்க்
காத்திருக்கும் கொக்கொன்றினது எனது கால்.

Continue Reading →