ஒரு புதிய அறிமுகம் – இரண்டு பழையவர்கள்

- வெங்கட் சாமிநாதன் -க. சட்டநாதன், தன் மூன்று சிறுகதைத் தொகுதிகளை சில மாதங்கள் முன் எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அவர் எழுபதுகளிலிருந்து எழுதிவருபவர், யாழ்ப்பாணக்காரர். இது காறும் இவரது சிறுகதைகள் ஐந்து தொகுப்புகளாக வெளிவந்துள்ளன எனத் தெரிகிறது. எனக்கு அவர் அனுப்பி வைத்தவை சமீத்திய மூன்று தொகுப்புகள்,  2010-ல் வெளியான முக்கூடல் என்னும் தொகுப்பையும் சேர்த்து. நாம் அறுபதுகளில் முதன் முதலாக சரஸ்வதி பத்திரிகையில் வெளிவந்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய மௌனிவழிபாடு என்ற கட்டுரை மூலம் தெரிய வந்த ஏ.ஜெ. கனகரத்னா சட்டநாதன் கதைகளைப் பாராட்டி எழுதியிருக்கிறார். சட்ட நாதனின்  புதியவர்கள் என்னும் தொகுப்பு ஒன்றும் நான் பத்து வருடங்களாகத் தங்கியிருந்த சென்னைப் புறநகர் மடிப்பாக்கத்தின் பொன்னி என்னும் பிரசுரம் 2006 – ல் வெளியிட்டுள்ளது. ஆனால் எனக்கு அந்த பிரசுரத்தின் இருப்பே தெரிந்திருக்க வில்லை.  சட்டநாதனும் அவர் சிறுகதைத் தொகுப்புகளை அனுப்பி வைத்த பிறகுதான் எனக்கும் சட்டநாதனையே தெரியவந்துள்ளது. சட்ட நாதனின் சமீபத்திய தொகுப்பான முக்கூடலுக்கு குப்பிழான் ஐ சண்முகம் என்னும் இன்னொரு சிறுகதை எழுத்தாளர் சட்டநாதனின் படைப்பு வெளி என்ற தலைப்பில் ஒரு பாராட்டுரையையும் அறிமுகமாகத் தந்திருக்கிறார். குப்பிழான் ஐ சண்முகமும் 1946- பிறந்த, எழுபதுகளிலிருந்து சிறுகதைகள் எழுதிவரும் அறுபத்து ஏழு வயதினர். அவருடைய தொகுப்பு ஒன்றை, ஒரு பாதையின் கதை, காலச்சுவடு வெளியிட்டுள்ளது சில மாதங்கள் முன்பு. சொல்லி வைத்தாற்போல் அதுவும் ஓரிரு மாதங்கள் முன்பு எனக்குக் கிடைத்துள்ளது. நாற்பது வருடங்களுக்கு மேலாக எழுதி வரும் இவ்விருவரை பற்றி நான் அறிந்தவனில்லை. நாம் அறிந்தவர் இல்லை என்று என் அறியாமையைப் பொதுமைப் படுத்த முடியுமோ என்னவோ தெரியவில்லை. உலகில் எது ஒன்று பற்றியும் அறியாதவர் களேயாயினும், அறியாதவர்கள் என்று யாரும் சொல்லி விட்டால் நம்மவர்களுக்கு அசாதாரண கோபம் வருமாதலால், இந்த அறியாமையை என்னுடனேயே நிறுத்திக்கொள்கிறேன். இவ்விருவர் பற்றியுமோ, அவர்கள் எழுத்துக்கள் பற்றியுமோ இங்கு எந்த தமிழ் பத்திரிகையிலும் படித்ததாக எனக்கு நினைவில்லை. இருந்தாலும். ஒரு பெரும் குற்றச் சாட்டு அறுபதுக்களில் எழுந்ததுண்டு. இலங்கை தமிழ் எழுத்தாளர்களை நாம் அங்கீகரிப்பதில்லை என்று. நியாயமான குற்றச் சாட்டு தான் என்று நான் அப்போது நினைத்ததுண்டு. அதற்குப் பதில் சொல்லும் வகையில் தானோ என்னவோ அறுபதுகளிலிருந்து கலாநிதிகள் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, பின் இவர்களுக்கு எதிர்முனையாக, எஸ் பொன்னுத்துரையும்  ஒரு பெரும் புயலாக நீண்ட காலம் தமிழ் இலக்கிய வெளியில் மிகுந்த  செல்வாக்குடன் பவனி வந்தார்கள்.  அனேகமாக இன்னமும் கூடத்தான்.

Continue Reading →