‘குடிவரவாளன்’ பற்றி குப்பிழான் சண்முகம்!; கனடாவில் ‘தாய்வீடு’!

'ஓவியா' பதிப்பக வெளியீடாகத் தமிழகத்தில் வெளிவருகிறது வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

எழுத்தாளர் குப்பிழான் சண்முகம் அவர்கள் அண்மையில் தனது முகநூல் பதிவொன்றில் எனது ‘குடிவரவாளன்’ நாவல் பற்றிய தனது கருத்துகளைப்பகிர்ந்திருந்தார். அப்பதிவினை இங்கு நான் ‘பதிவுகள்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

எழுத்தாளர் குப்பிழான் சண்முகத்தின் குறிப்பு!

மே மாதம் 24, இன்று வ.ந. கிரிதரனின் ‘குடிவரவாளன்’ நாவலை வாசித்து முடித்தேன். சட்ட பூர்வமாகக் கனடாவுக்கு புலம் பெயரும் வழியில், எதிர் பாராத விதமாக அமெரிக்காவில் அகதித் தஞ்சம் கோர நேரிடுகிறது. ஒரு வருடம் அமெரிக்காவில் சட்ட பூர்வமற்ற அகதியாக வாழ்ந்த அனுபவங்களை நாவல் பேசுகிறது. புலம்பெயர் அகதி வாழ்வின் வித்தியாசமான அனுபவங்கள், வித்தியாசமான மனிதர்கள்.

எதனாலும் சலிக்காத கதாநாயகனின் உறுதி. இயற்கைக் காட்சிகளின் இரசிப்பு. தமிழ் கவிதைகளினதும்- குறிப்பாக பாரதி- இசை, இயற்கை மீதான ஈடுபாடு.. என விரியும் கதை. ‘ மீண்டும் தொடங்கும் ‘மிடுக்காய்’ தொடரும் வாழ்வு.

Continue Reading →

ஆய்வு: வன்னியின் சமூகவாழ்வுச் சித்திரமாக விரியும் முல்லைமணியின் கமுகஞ்சோலை!

நூல் அறிமுகம்: வன்னியின் சமூகவாழ்வுச் சித்திரமாக விரியும் முல்லைமணியின் கமுகஞ்சோலைதே.கஜீபன்முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளையில் பிறந்த முல்லைமணி என்னும் புனைபெயரைக் கொண்ட வே.சுப்பிரமணியம் இலங்கைப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் சிறப்புக்கலைமாணிப் பட்டத்தைப் பெற்றதோடு இவரது கலை இலக்கிய ஆய்வுப்பணிகளை அங்கீகரித்து 2005ல் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப் பட்டத்தையும் வழங்கியது. பாடசாலை அதிபராகவும், ஆசிரியகலாசாலை விரிவுரையாளராகவும், பிரதம கல்வி அதிகாரியாகவும், மாவட்டக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றிய இவர் நாடகம், சிறுகதை, நாவல், கவிதை, வரலாற்று ஆய்வுகள், இலக்கியத்திறனாய்வு போன்ற துறைகள் மூலம் தமிழ் எழுத்துலகில் கால் பதித்தார். இவர் மல்லிகைவனம், வன்னியர்திலகம், மழைக்கோலம், கமுகஞ்சோலை போன்ற நாவல்களைப் படைத்துள்ளார். இவற்றுள் “கமுகஞ்சோலை” என்னும் நாவல் இங்கு அலசப்படுகிறது.

இந்நாவலின் கதைச்சுருக்கத்தை நோக்கின் கதிராமனும் கற்பகமும் திருமணம் செய்து கொள்கின்றனர். கதிராமனது அண்ணி அனைத்து பாத்திரங்களுக்கும் எதிர்ப்பாத்திரமாகக் காணப்படுவதோடு கற்பகத்தை வீட்டைவிட்டு துரத்த தன் கணவனுடன் இணைத்து சந்தேகப்பட்டம் கட்டுகிறாள். அதனை யாருக்கும் வெளிப்படுத்தாது கணவன் கதிராமனுடன் வீட்டைவிட்டு வெளியேறிய கற்பகம் சிறிதுகாலம் தன் தாய் தந்தையருடன் இருந்துவிட்டு தனிக்குடித்தனம்  போகிறார்கள். கதிராமனின் தந்தை நோய்வாய்ப்பட்டு இருக்கும் நிலையில் அக்குடும்பத்தினர் பெரும் வறுமைக்கு உட்படுகின்றனர். சீதனம் மூலமாக கதிராமனுக்கு கிடைத்த கமுகஞ்சோலை நல்ல விளைச்சலைக் கொடுத்ததால் குடும்பம் செழிப்பாகவே இருந்தது. தனது மாமா, மாமியின் நிலையினைக் கேள்வியுற்ற கற்பகம் வண்டி நிறையப் பொருட்களோடு அவர்களுக்கு உதவுவதற்காகச் செல்கிறாள். மறைந்து போன சந்தோசம் மீண்டும் அக்குடும்பத்தினரிடம் துளிர்விடுகின்றது.

இதற்கிடையில் கற்பகத்தின் திருமணத்திற்கு முன்னரான காலப்பகுதியில் செந்தில் என்பவனிடம் அவள் காதல் வயப்படுகின்றாள். ஆனால் அவன் ஆசை வார்த்தைகளைக் கூறி பல பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியவன். அவனது குழந்தை கமலத்தின் வயிற்றில் வளர்வதை அறிந்த கற்பகம் தன்னை காத்துக் கொண்டதோடு அவனை அவமதித்தாள். இவ் அவமானத்திற்கு பழிதீர்க்க எண்ணிய செந்தில் கற்பகத்தை கடத்துவதற்கும், திருமணத்தை குழப்புவதற்கும் போட்ட சூழ்ச்சிகள் எவையும் நிறைவேறாமல் போகவே நெல் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சிரமமாக இருப்பதோடு ஆங்கிலேயர்களுக்கு அதன் மூலம் எந்த வருமானமும் இல்லை எனவும் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி கதிராமனின் கமுகஞ்சோலையை அழிப்பதற்கான சூழ்ச்சியை மேற்கொள்கின்றான். அதிகாரியின் கட்டளை கிடைத்தததும் கமுகஞ்சோலை அழிக்கப்படுகின்றது. மக்கள் எவ்வாறான போராட்டங்களை மேற்கொண்டும் அவர்களது முயற்சி பயனின்றியே போனது. ஆனால் செந்தில் ஒரு பைத்தியக்காரியின் கத்தி குத்திற்கு இலக்காகி உயிரை விடுகின்றான். அவள்தான் இவனால் ஏமாற்றப்பட்ட கமலம். கதிராமன் பழுத்த பாக்குகளை அள்ளிக்கொண்டு ஏதோ ஒரு காலத்தில் அவற்றை பயிரிடப்போவதாக கூறிக்கொண்டு செல்கின்றான். இவ்வாறாக இந்நாவலின் கதை அமைந்து விடுகின்றது.

Continue Reading →