எழுத்தாளர் தேவகாந்தனுடான நேர்காணல் (மூன்றாம் பகுதி)!

எழுத்தாளர் தேவகாந்தன்பதிவுகள்:  அண்மையில் வெளியான அ-புனைவுகளில் மிகவும் வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பிய நூல் தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’.  விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியமான ஆளூமையொருவரின் சுயசரிதையான இந்த நூல் அதன் காரணமாகவே வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக்கருதுகின்றோம். தன்னைச்சுயவிமர்சனம் செய்வதன் மூலம் மெளனிக்கப்பட்ட தமிழரின் ஆயுதப்போராட்டத்தின் முக்கிய அமைப்பான விடுதலைப்புலிகள் பற்றிய விமர்சனமாகவும் இந்த நூல் விளங்குவதாகக் கருதுகின்றோம். இது போன்ற நூல்கள் ஆரோக்கியமான விளைவுகளையே தருவதாகவும் நாம் கருதுகின்றோம். மேலும் ஒரு குறிப்பிட்ட கால வரலாற்றை ஆவணப்படுத்தும் வகையிலும் இந்த நூல் முக்கியத்துவம் பெறுவதாகவும் கருதுகின்றோம். இந்த நூலை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததா? வாசித்திருந்தால் இந்நூல் பற்றிய உங்கள் எண்ணங்களையும் ‘பதிவுகள்’ வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?

தேவகாந்தன்: தமிழ்நாட்டில் நான் தங்கியிருந்தபோதுதான் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ நூல் வெளியீட்டுவிழா  (பெப். 27, 2016ல் என்று ஞாபகம்) காலச்சுவடு பதிப்பகம் சார்பில் சென்னை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் நடந்தது. அந்நிகழ்வுக்குப் போக முடியாதிருந்தபோதும், மறுநாள் மாலைக்குள்ளேயே நூலை நான் வாசித்துவிட்டேன். அதுபற்றிய என் அபிப்பிராயங்களை அன்று பின்மாலையில் சந்தித்த சில நண்பர்களிடமும் பகிர்ந்திருந்தேன்.

ஒரு வாசகனாய் அந்த நூலை வாசித்தபோது என் ரசனையில் அதன் பின்னைய மூன்றில் இரண்டு பகுதியின் உணர்வோட்டத்தில் அது விழுத்தியிருந்த மெல்லிய பிரிநிலை துல்லியமாகவே தெரிந்தது.  நீண்ட இடைவெளிவிட்டு எழுதப்படும் ஒரு நூலும் அம்மாதிரி வித்தியாசத்தைக் கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது. தமிழினியின் சுகவீனம் அந்த உணர்வுநிலை மாறுபாட்டின் காரணமோவெனவும் அப்போது நான் யோசித்தேன். அது எது காரணத்தால் நடந்திருந்தாலும் அந்த உணர்வு மாற்றம் அங்கே நிச்சயமாக இருந்தது.

இதற்குமேலே நாமாக யோசித்து எந்தவொரு முடிவுக்கும் வந்துவிடக்கூடாது. எழுதியவர் ஜீவியந்தராக இருக்கிறபட்சத்தில் அந்நூல் குறித்து எழக்கூடிய சந்தேகங்களை அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ள முடியும். அல்லாத பட்சத்தில் அதுகுறித்த சந்தேகங்களையும், கேள்விகளையும் நூலின் தரவுகள்மூலமாகவேதான் நாம் அடையவேண்டியவர்களாய் உள்ளளோம். ஆசிரியர் அந்நூலை எழுதத் தொடங்கிய காலம், எழுதிமுடித்த காலம், பிரசுரப் பொறுப்பைக் கையேற்றவர் யார், எப்போது என்ற விபரம், பிரசுரத்திற்கு கையளிக்கப்பட்ட காலம் என்பவற்றை உள்ளடக்கிய ஒரு பதிவு பதிப்பினில் இடம்பெற்றிருக்க வேண்டும். இது முக்கியமான அம்சம். அதுவும் இல்லாத பட்சத்தில் அப்பிரதி சந்தேகத்திற்கு உரியதுதான். அதற்கும் நியாய வரம்புகள் உள்ளன. அந்த நியாய வரம்புகளை எமது நிலைப்பாட்டினடியாக அல்லாமல் உண்மையின் அடிப்படையில் பார்க்கவேண்டுமென்பது இதிலுள்ள முக்கியமான விதி.

Continue Reading →

நேதாஜிதாசன் கவிதைகள் மூன்று!

நேதாஜிதாசன் கவிதைகள் மூன்று!1. அப்படியில்லை நான்

அப்படியில்லை நான் என பேசுகின்றான்
ஆடை கிழிந்து
கூந்தல் கலைந்து
அனுமதி மீறலை கடந்த
வண்ண சேலைக்காரி
கண் கலங்கி நிற்கின்றாள்
அப்படியில்லை நான் என கதறுகின்றாள்
கூட்டம் யோசிக்கிறது நாமும் அன்று அப்படியில்லை நான் என சொல்லியவர்கள் தானே
நானும் அப்படியில்லை  என என்னிடமே சொல்லி பார்க்கிறேன்
அவர்கள் நம்ப மறுப்பதை போல
நான் நம்ப மறுக்கிறேன்
முதலில் அப்படியில்லை என்பதன் அர்த்தம் என்ன
மருத்துவமனையில் ஆய்வு அறிக்கை வாங்குமிடத்தில் சொல்லும் அப்படியில்லையா
காவல் அதிகாரி கைது செய்யும் போது சொல்லும் அப்படியில்லையா
கடன் கொடுத்தவன் கடனை திருப்பி கேட்கும் போது சமாளிக்கும் படி சொல்லும் அப்படியில்லையா
முதலில் அப்படியில்லையின் அர்த்தம் பகிருங்கள்
இந்த காகங்களை பாருங்கள் அரிதான சாப்பாடை பகிர்ந்து உண்கிறது
உங்களிடம் நான் சாப்பாடை கேட்கவில்லை
அர்த்தம் கேட்கிறேன்
நீங்கள் தயவு செய்து விட்ஜென்ஸ்டீனை படித்து விட்டு என்னை குழப்பும் படி அர்த்தம் உரைக்காதீர்
இதில் உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் இதோ பிடித்துக்கொள்ளுங்கள் “அப்படியில்லை நான்”

Continue Reading →