நினைவு கூர்வோம்: எங்கள் தோழன் கார்த்தி!

கார்த்திகேசன் மாஸ்ட்டர்– கார்த்திகேசன் ‘மாஸ்ட்டர்’ அவர்களின் நினைவாக வெளிவந்த நூலில் எழுத்தாளர் நீர்வை பொன்னையன் எழுதிய இக்கட்டுரை கார்த்திகேசன் ‘மாஸ்ட்டர்’ அவர்களின் ஆளுமையை , அவர் ஏன் இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களின் ஆதர்ச மனிதராக விளங்கினார் என்பதை நன்கு பிரதிபலிக்கும் கட்டுரை. இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அவரது சமூக, அரசியற் செயற்பாட்டினை நன்கு விளக்குமொரு கட்டுரை. இதனையும் கூடவே அவரது புகைப்படத்தையும் எம்முடன் பகிர்ந்துகொண்ட அவரது புதல்வி ஜானகி பாலகிருஷ்ணனுக்கு நன்றி. – பதிவுகள் –


‘மனிதனது மதிக்க முடியாத இனிய உடமைகளில் சிறந்தது அவனது வாழ்வாகும் அவன் ஒரு தடவைதான் வாழமுடியும். காலமெல்லாம் குறிக்கோளில்லாமல் பாழாக்கிவிட்டேனென்ற வருத்தம் வதைப்பதற்கு இடம் கொடுக்காத வகையில் அவன் சீராக வாழவேண்டும். அற்பனாக வாழ்ந்து இழிவு தேடினேன் என்ற அவமானம் உள்ளத்தை எரிப்பதற்கு இடமில்லாத வகையில் அவன் நேராக வாழவேண்டும். உலகத்தின் தலைசிறந்த லட்சியத்துக்காக, மனிதகுலத்தின் விடுதலைப் போராட்டம் என்ற பொன்னான மார்க்கத்துக்காக என் வாழ்வு முழுவதையும் சக்தி அனைத்தையும் அர்ப்பணித்தேன் என்று இறக்கும் பொழுது கூறும் உரிமைபெறும் வகையில் அவன் வாழவேண்டும். திடீர் நோயோ, சோக விபத்தோ வாழ்வுக்கு வெடிவைக்கக் கூடுமாதலால், மனிதன் தன் வாழ்வின் ஒவவொரு வினாடியையும் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.’ நிக்கொலாய் அஸ்றாவஸ்க்கிய் என்ற சோவியத் எழுத்தாளன் ‘வீரம் விளைந்தது’ என்ற தன் நவீனத்தில் மேற்கண்டவாறு கூறியுள்ளான்.

எங்கள் தோழன் கார்த்திகேசன் அவர்களும் தன் வாழ்வு முழுவதையும் தனது இறுதி மூச்சுவரை மனித குலத்தின் விடுதலைக்கான போராட்டம் என்ற பொன்னான லட்சியத்துக்காக அர்ப்பணித்துள்ளார். தோழர் கார்த்தி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவர். அது மாத்திரமல்ல அவர் இலங்கையின் வடபுலத்தில் இடதுசாரி இயக்கத்தைப் பரப்பிய முன்னோடிகளில் முதன்மையானவர். அவர் ஓர் ஆழமான கல்விச் சிந்தனையாளர். தலைசிறந்த ஆசிரியன், அர்ப்பணிப்புள்ள சமூகத்தொண்டன், மனித நேயப்பண்பாளர், எளிமையான தூய வாழ்வைக் கடைப்பிடித்தவர். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் ஓர் உன்னத மார்க்ஸிசவாதி. அற்புதமான கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளன்.

மலேசியாவில் பிறந்து வளர்ந்து கல்விகற்று உயர்கல்வியை மேற்கொள்வதற்காக இலங்கை வந்தார் மு. கார்த்திகேசன். இலங்கைப் பல்கலைகக்கழக கல்லூரியில் அவர் மாணவனாக இருந்த காலத்திலேயே தனது லட்சியப் பயணமான மார்க்ஸிசப் பாதையில் காலடியெடுத்து வைத்தார். அன்று ஆரம்பித்த அவரது மகத்தான நீண்ட பயணத்தில் எண்ணற்ற இன்னல்களும் இடையூறுகளும் நேரிட்ட போதிலும், அவர் உறுதி தளராது, அர்ப்பணிப்புடனும், உளத்தூய்மையுடனும் விடாப்பிடியாக செயலாற்றி முன்னேறிச் சென்றுள்ளார்.

கொழும்பிலமைந்திருந்த இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில், ஏகாதிபத்திய பாசிச எதிர்ப்பு மாணவர் அமைப்பு ஒன்றை உருவாக்கி செயல்பட்டவர்களின் முன்னணியில் நின்றார் கார்த்திகேசன். அந்த மாணவர் அமைப்பின் குரலான ‘மாணவர் செய்தி’ (Student News) என்ற ஒரு பத்திரிகையை ஆரம்பித்து அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார். இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் ஆங்கிலம், கணிதம் முதலிய பாடங்களைக் கற்றார். ஆங்கிலத்தில் சிறப்புப் பட்டதாரியாக வெளியேறிய கார்த்திகேசன் அன்று இலங்கை அரசாங்க நிர்வாக சேவையில் சேர்ந்திருந்தாரானால் அவர் தனக்கு ஒரு வளமான சொகுசு வாழ்க்கையை இலகுவில் அமைத்திருக்க முடியும். பதிலாக மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற லட்சிய வேட்கையுடன் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தம்மை இணைத்துக்கொண்டார்.

Continue Reading →

அமரர் நுணாவிலூர் கா.விசயரத்தினம் ஒரு நூல்வழிப் பதிவு

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

சங்க இலக்கியம் பற்றிய ஆழ்ந்த தேடல் அனுபவம் மிக்கவராக 2006இல் எனக்கு அறிமுகமானவர் நுணாவிலூர் தமிழறிஞர் கா.விசயரத்தினம் அவர்கள். அவரது தொடர்பினை எனக்குப் பெற்றுத்தந்தவர் அவரது ஆஸ்தான பதிப்பாளரான மணிமேகலைப் பிரசுர அதிபர், இரவி தமிழ்வாணன் அவர்கள். நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்களின் நூலொன்றை கணினியை விஞ்சும் மனித மூளை என்ற தலைப்பில் அவர் 2005 இல் அச்சிட்டிருந்தார். தான் வெளியிட்ட ஈழத்தவரின் பல நூல்களை எனது நூல்தேட்டம் பதிவுக்காக ரவி தமிழ்வாணன் ஒரு தடவை தமிழகத்திலிருந்து அனுப்பிவைத்திருந்தார். அதில் கிடைத்ததே நுணாவிலூராரின் இலக்கியத் தொடர்பு. அத்தொடர்பினைத் தொடர்ந்து தனது ஒவ்வொரு நூலையும் தவறாமல் எனக்குத் தபாலில் அனுப்பிவைப்பார். நூல்பற்றிய விமர்சனங்களை நேரில் கேட்டறிவதில் அலாதிப் பிரியம் கொண்ட வித்தியாசமான படைப்பாளி அவர். நானும் எனது விமர்சனங்களுடன் ஐ.பீ.சீ. காலைக்கலசம் வானொலி உரைகளில் அவ்வப்போது அறிமுகப்படுத்தி வந்திருந்தேன். இத்தொடர்பு காலக்கிரமத்தில் அவரை எனது வானொலிவழி நட்புவட்டத்திற்குள் கொண்டுவந்தது. அவரது மறைவுச்செய்தியை வவுனியூர் இரா.உதயணன் ஓரிரவு தெரிவித்திருந்தார். அவரது மறைவு உடனடிச் சோகத்தை எம்மிடம் விட்டுச்சென்றாலும் அவர் தன் வாழ்நாட்தேடல் வழியாக தமிழ் இலக்கிய உலகிற்கு வழங்கிய ஒன்பது நூல்களும் அவரை நீண்டகாலம் எம்மிடையே நிலைகொள்ள வைத்திருக்கும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.

வடபுலத்தில் சாவகச்சேரி, மேற்கு நுணாவிலைப் பிறப்பிடமாகக்கொண்ட கா.விசயரத்தினம் அவர்கள் 02.03.1931இல் பிறந்தவர். சாவகச்சேரி ட்ரிபேர்க் கல்லூரியின் பழைய மாணவன். அரச கணக்காய்வுத் திணைக்களத்தில் கணக்காய்வு அத்தியட்சகராகப் பணியாற்றி 1991இல் ஓய்வுபெற்றவர். இரு ஆண்களும் ஒரு பெண்ணுமாக மூன்று பிள்ளைகள். மூவரையும் உயர்கல்விக்காக லண்டனுக்கு அனுப்பிவைத்த இவர், 1998இல் துணைவியார் சிவபாக்கியம் அவர்களுடன் லண்டனுக்கு வந்து தமது மூன்று பிள்ளைகளுடன் இணைந்துகொண்டார். லண்டனில் பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கத்தில் இணைப்பாளராக இயங்கி இலக்கியப் பசியாறியவர். கனடா ‘பதிவுகள்” இணைய இதழின் ‘நுணாவிலூர் கா.விசயரத்தினம் பக்கம்”  என்ற தனிப் பக்கத்தில் சங்க இலக்கியம் சார்ந்த தன் தேடல்களை உடனுக்குடன் பதிவுசெய்து பின்னூட்டங்களைப் பெற்றவர். அதன்வழியாகத் தன் படைப்புக்களுக்கு மெருகேற்றிக் கொண்டவர். பதிவுகள் இணையம் வழியாக பல இலக்கிய உறவுகளையும் ஏற்படுத்திக்கொண்டவர். இவரது நட்புவட்டம் விசாலமானது.  துணைவியார் சுகவீனமுற்றகாலத்தில் அவரை உடனிருந்து கண்ணும் கருத்துமாகப் பேணியவர். 22.07.2015இல் தனது அன்புத் துணைவியாரை இழந்த இரண்டாண்டுகளில் 7.10.2017இல் குடும்ப உறவுகளையும், தான் நேசித்த தமிழ் இலக்கிய உலகையும் பிரிந்து கா.விசயரத்தினம் அவர்களும் லண்டனில் அமரத்துவமடைந்துவிட்டார்.

Continue Reading →

மெல்பனில் இலக்கியச்சந்திப்பு – வாசிப்பு அனுபவப்பகிர்வு

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் இலக்கியச்சந்திப்பும் வாசிப்பு அனுபவப்பகிர்வும் கலந்துரையாடலும் எதிர்வரும் 19 ஆம் திகதி (19-11-2017) ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் VERMONT SOUTH COMMUNITY HOUSE (Karobran Drive, Vermont South, Victoria 3133) மண்டபத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும்.அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் இலக்கியச்சந்திப்பும் வாசிப்பு அனுபவப்பகிர்வும் கலந்துரையாடலும் எதிர்வரும் 19 ஆம் திகதி (19-11-2017) ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் VERMONT SOUTH COMMUNITY HOUSE (Karobran Drive, Vermont South, Victoria 3133) மண்டபத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும்.

கருத்துரை
இலங்கையிலிருந்து வருகைதந்துள்ள எழுத்தாளரும் சமூகப்பணியாளரும் செங்கதிர் கலை, இலக்கிய இதழின் ஆசிரியருமான திரு. ‘செங்கதிரோன்’ த. கோபாலகிருஷ்ணன் “கிழக்கிலங்கை கலை, இலக்கியச் செல்நெறி” என்னும் தலைப்பில் உரையாற்றுவார். அதனைத்தொடர்ந்து அவருடனான கலந்துரையாடல் இடம்பெறும்.

வாசிப்பு அனுபவப்பகிர்வு
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கம் தொடர்ச்சியாக நடத்திவரும் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியில் இம்முறை நான்கு நூல்கள் இடம்பெறுகின்றன.

1. வானத்தைப்பிளந்த கதை ( செழியன் எழுதியது) ஈழப்போராட்ட நாட்குறிப்பு – விமர்சனஉரை: எஸ். கிருஷ்ணமூர்த்தி.
2. நைல்நதிக்கரையோரம் ( நடேசன் எழுதியது) பயண இலக்கியம் – அறிமுகவுரை சாந்தி சிவக்குமார்.
3. பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை – (பெருமாள்முருகன் எழுதியது ) நாவல் – மதிப்பீட்டுரை : நடேசன்.
4. காட்டில் ஒரு மான் – (அம்பை எழுதியது) சிறுகதைத்தொகுப்பு அறிமுகவுரை: விஜி இராமச்சந்திரன்

Continue Reading →