முற்றுப் பெறாத உரையாடல்கள் – 04: முற்போக்கு தேசியத்தை முன்வைத்து: மக்கள் கலை பண்பாட்டு களம் தோழர்களுடன் ஓர் உரையாடல்!

கொஞ்சம் தாமதமான பதிவு. ஆயினும் இதனை இங்கு பதிவிடாமல் இந்த உரையாடல் வெளியினை கடந்து செல்ல முடியாது. கடந்த மாத இறுதியில் 30.06.2018 சனிக்கிழமையன்று மக்கள் கலை பண்பாட்டுக் களம் அமைப்பினரின் சார்பில் ஒரு நிகழ்வு ஒன்று இலண்டன் தெற்குப் பகுதியில் அமைந்திருந்த நியூ மோல்டன் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பறையிசை, பாடல்கள், கவிதா ஆற்றுகை போன்ற பல்வேறு கலை நிகழ்வுகளுடன் புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சியின் பொதுச்செயலாளரும் ‘புதிய பூமி’ பத்திரிகையின் ஆசிரியருமாகிய சி.கா. செந்தில்வேல் எழுதிய ‘வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை’ என்ற நூல் அறிமுகமும் நடைபெற இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.கொஞ்சம் தாமதமான பதிவு. ஆயினும் இதனை இங்கு பதிவிடாமல் இந்த உரையாடல் வெளியினை கடந்து செல்ல முடியாது. கடந்த மாத இறுதியில் 30.06.2018 சனிக்கிழமையன்று மக்கள் கலை பண்பாட்டுக் களம் அமைப்பினரின் சார்பில் ஒரு நிகழ்வு ஒன்று இலண்டன் தெற்குப் பகுதியில் அமைந்திருந்த நியூ மோல்டன் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பறையிசை, பாடல்கள், கவிதா ஆற்றுகை போன்ற பல்வேறு கலை நிகழ்வுகளுடன் புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சியின் பொதுச்செயலாளரும் ‘புதிய பூமி’ பத்திரிகையின் ஆசிரியருமாகிய சி.கா. செந்தில்வேல் எழுதிய ‘வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை’ என்ற நூல் அறிமுகமும் நடைபெற இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.

மக்கள் கலை பண்பாட்டுக் களம்  அமைப்பானது மிக அண்மையில் (ஒரு சில வருடங்களுக்கு முன்பே) உருவாக்கம் பெற்ற இடது சாரி சார்பு நிலை கொண்ட ஒரு புரட்சிகர அமைப்பாகும். மக்களின் சமகால பிரச்சனைகளை,  சமூக வாழ்வியலை அவர்களின் வாழ்வியலினூடக, அவர்களின் வாழ்க்கையின் மொழியினூடாக, கலை, இலக்கிய வடிவங்களாக வெளிக்கொண்டுவருவதும் அதையே அவர்களது போராட்ட ஆயுதமாக்குவதும் தான் மக்கள் கலை பண்பாட்டு களத்தின் நோக்கமாகும்.

அவர்கள் கடந்த காலங்களில் நடாத்திய நிகழ்வுகள் அனைத்தையும் மற்ற அமைப்பினர்களைப் போல் அல்லாமல் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் குறித்த நேரத்தில் நடாத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது. அந்த எண்ணத்தில் நானும் குறித்த நேரத்திற்கு முன்பே சமூகமளித்திருந்தேன். ஆனால் இந்த தடவை அவர்களது நிகழ்வும் ஒரு கொஞ்ச நேரம் தாமதமாகவே ஆரம்பமாகியது என்பதினையும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். 

ஒரு நிமிடநேர மௌன அஞ்சலியுடன் ஆரம்பமாகிய அந்நிகழ்வானது நேரிடையாகவே தோழர் சி.கா.செந்தில்வேல் இன் ‘வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை’ நூல் அறிமுகத்திற்குள் நுழைந்தது.

நிகழ்வினை தோழர் வேலு அவர்கள் நெறிப்படுத்தினார். முதலில் புதியதிசைகள் ஒருங்கிணைப்பாளர் மாசில் பாலன் அவர்கள் உரையாற்றினார். இது போன்ற வரலாற்று ஆவணங்கள் வெளிவரவேண்டியத்தின் அவசியத்தை வலியுறித்தி வரவேற்று பேசிய அவர் அதற்குமப்பால் இந்நூல் குறித்தும் புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சியின் செயற்பாடுகள் குறித்தும் பல்வேறுவிதமான காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார். ஈழ விடுதலைப் போரை முற்று முழுதாக நிராகரிக்கும் அவர்கள் அந்த முப்பது வருட காலத்தில் வெறும் அறிக்கைகள் விட்டதற்கும் அப்பால் செய்த நடவடிக்கைகள் என்ன என்றும், முற்போக்கு தேசியம் குறித்தும், அப்படி ஒரு தேசியம் உருவானால் அதனுடன் இணைந்து பயணிப்பதாகவும் இப்போது குறிப்பிடும் இவர்கள் கடந்த காலங்களில் ஒரு முற்போக்கு தேசியத்தின் உருவாக்கத்திற்கு என்ன நடவைக்கைகளை மேற்கொண்டார்கள் என்ற கேள்வியையும் எழுப்பினார். 

Continue Reading →

இரு-மொழி இரணைக் கவிதைகள் 2: வழியைத் தெளியக் காட்டும் (Show Me The Way)

வழியைத் தெளியக் காட்டும்

- பேராசிரியர் கோபன் மகாதேவா  ( Prof. Kopan Mahadeva ) -எனது மனத்தினிலுள்ள கோவிலிலென்றும் காவலிருக்கும் கடவுளரே,
தினமும் உம்மைப் பற்பல தடவை தலைவணங்கி நான் வேண்டுகிறேன்.

நாளாந்தம் நானும்மைப் பலதடவை துதிக்கையிலே சொல்வதெல்லாம்
வாழ்வதற்கு வழிகாட்டும், தயைசெய்து, பேரீசா, என்னும் சொல்லே.

நடப்பதுவும் நிற்பதுவும் காவுவதும் கடத்துவதும்
கடகடந்து கருமத்தில் களைப்பதுவும் துடைப்பதுவும் 
படிப்பதுவும் பார்ப்பதுவும் மேய்ப்பதுவும் மனமுடைந்து 
கடிவதுவும் வேண்டுவதும் எல்லாமே நான் செய்வேன், காட்டித்தாரும்,
அடியேனுக்கு, ஒன்றே, நீர், படிப்படியாய் – நான் போகும் பாதை ஒன்றே.

நீரே என் வழிகாட்டி, வேறே யார் என் துணைக்கு உள்ளார், ஈசா?
சீராகச் செவிசாய்த்து நீரே என் பிழையெல்லாம் திருத்திச் செல்லும்.
நேரான பாதை தனில் தவறாமல் செல்வதற்கும் சொல்லித் தந்து
கூரான சிந்தனையும் தாரீர், நீர், என் மனத்தில் குடியிருக்கும் பேரீசா.

எனது மனத்தினிலுள்ள கோவிலிலென்றும் குடியிருக்கும் கடவுளரே !
தினமும் நான் என் தலைவிதி படியே பார்த்துச் செல்ல வழி சொல்லும் !!

Continue Reading →

ஆய்வு: இலக்கியங்கள் காட்டும் வீரக்கற்கள்

- முனைவா் செ. செயந்தி, விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, சங்ககிரி, வீராச்சிபாளையம். 637 303 -தமிழில் கிடைத்துள்ள இலக்கியங்களில் காலப்பழமை வாய்ந்தது சங்க இலக்கியமாகும். சங்க இலக்கியங்களின் பின் எல்லையை கி.பி. 300 எனக்கூறுவா். சங்க இலக்கியங்களுக்குப் பின்னா் தோன்றிய நூல்களிலும் செய்திகள் பேசப்படுகின்றன.  தமிழ் இலக்கியங்கள் வீரக்கற்கள் எழுப்பப்பட்ட இடங்களையும் அக்கற்களில் வீரரது உருவம், பெயா், பெருமை ஆகியவற்றைப் பொறித்து வைத்திருந்த தன்மைகளையும் அக்கற்களை வழிபட்ட தன்மைகளையும் பெரும்பாலும் காட்டுகின்றன. 

இலக்கிய நூல்கள் 
தெலுங்கு மொழியில் இலக்கிய வளா்ச்சி பிற்பட்ட காலங்களில்தான் ஏற்பட்டது. இருப்பினும் கி.பி. 11 – ம் நூற்றாண்டிற்குப் பின்பு தெலுங்கு இலக்கியங்கள் தோன்றியிருக்க வாய்ப்புண்டு. கி.பி. 800 க்கும் கி.பி. 1000 க்கும் இடைப்பட்ட காலங்களில் வாழ்ந்த புலவா்களைப் பற்றியக் கருத்துகளும் உண்டும். 

முதல் கல்வெட்டு
கி.பி. ஆறாவது நூற்றாண்டில் தோன்றிய கல்வெட்டுகளில் தான் தெலுங்கு மொழியினை முதன் முதலாகக் காணமுடிகிறது. கடப்பா மாவட்டத்திலுள்ள கலமல்லா என்னும் இடத்தில் கண்டெடுக்கபட்ட கல்வெட்டே முதல் கல்வெட்டாகும். கி.பி 848 – ல் அதங்கி என்ற இடத்தில் கீழைச்சாளுக்கியா்களின் தலைவா்களான பாண்டுரங்காவில் அமைந்த முதல் தடவையாகத் தெலுங்கு கவிதை பொறிக்கப்பட்டுள்ளது. 

வீரக்கற்கள் நடப்பட்ட இடம்
வீரக்கற்கள் பாலை நில வழிகளில் உள்ளுரிலும் நடப்பட்டமையை இலக்கியங்கள் குறிக்கின்றன. உள்ளுரில் கற்கள் நடப்பட்டதற்கான சான்றுகள் குறைவாக இருக்க பாலை நில வழிகளில் இறந்தவா்கள் நினைவாக அமைக்கப்ட்ட நினைவுக்கற்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதற்கான சான்றுகள் கிடைக்கின்றன. 1

பாலைநில வழிகளில் வீரக்கற்கள்
பாலை நில வழிப்போவோரைக் கொன்று பொருள் பறிப்பது மரவா்களது பழக்கமாக இருந்தது. அவ்வாறு கொல்லப்பட்டோரின் உடல்களைத் தழையிட்டு மூடி அதன்மேல் கற்களைக் குவித்து மேடுபோல் செய்வா். இதனை “பதுக்கை“ என சங்க இலக்கியப் பாடல்கள் பகா்கின்றன. இத்தகு பதுக்கைகளின் அச்சமூட்டும் வருணனையை சங்கப் பாடல்கள் காட்டுகின்றன.

Continue Reading →

ஆய்வு: தொல்தமிழர் கொடையும் மடமும்

முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 113செவ்விலக்கியங்களில் பல வள்ளல்கள் பற்றியக் குறிப்புகள் பரந்த அளவில் இடம் பெற்றுள்ளன. அவர்கள் வாழ்ந்த காலத்தைக் கணக்கில் கொண்டு வள்ளல்கள் முதலேழு, இடையேழு, கடையேழு என்று பகுத்துள்ளனர். ஆனால் முதலேழு மற்றும் இடையேழு வள்ளல்களுடைய பெயர்கள் அவ்வளவு எளிதாக யாருக்கும் தெரிந்திருப்பதில்லை, கர்ணனை தவிர்த்து. அவர்களைப் பற்றியத் தரவுகள் கூட மிகவும் அரிதாக இருக்கின்றன. பழங்காலத்தில் ஈகையையும் கொடையையும் ஒன்றாகப் பார்த்தனர். உண்டாட்டுக் கொடையென (தொல். பொ 58). இல்லான் கொடையே கொடைப்பயன் (நாலடி,65). என்கிறது பாடல். நுணுகிப் பார்க்கும்போது பொதுவாக ஈகையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது கொடையாகும். இக்கட்டுரையில் தொல்தமிழ் மன்னர்களின் கொடைமடச் செயல்களைச் சற்று ஆராய்வோம்.

கொடை பற்றிய விளக்கம்

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறிஎதிர்ப்பை நீரது உடைத்து (குறள்.221)

ஈகை என்பது இல்லாதார்க்குக்கு ஒன்று கொடுப்பதே; பிற எல்லாக் கொடையும் எதிர்பார்த்துக் கொடுப்பது. கொடை என்ற சொல்லிற்குத் தியாகம், புறத்துறை, திருவிழா, வசவு, அடி என்றும் ஈகைக்கு – கொடை, பொன், கற்பகம் என்றும் சென்னை பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி. (பக்.236 ) பொருள் தருகின்றது. தமிழ்-தமிழ் அகரமுதலி கொடை என்ற சொல்லிற்கு ஈகம், தியாகம், கொடை, கைக்கொண்ட ஆநிரையை இரவலர்க்கு வரையாது கொடுக்கும் (புறத்துறை), ஊர்த்தேவதைக்கு மூன்று நாள் செய்யும் திருவிழா, வசவு, அடி(ப.- 387) என்று பொருள் சுட்டுவதைக் காணலாம்.

கொடைமடம்
கொடைமடம் என்பது மடைமை குணங்களில் ஒன்றாகும். ‘மடம்’ என்பதற்கு ‘அறியாமை’ என்ற பொருள். இன்னாருக்கு இன்னது கொடுக்க வேண்டும் என்பதை எண்ணாமல், கிடைத்ததை நினைத்தபோதே கொடுப்பதைக் ‘கொடை மடம்’ என்று சொல்வார்கள். இது சரியா, தவறா என்று ஆலோசிக்க அறிவுக்கு இடம் கொடுக்காமல், உள்ளத்தில் கொடுக்கத் தோன்றியபோதே ‘கொடை மடம்’ உடையவர்கள் கொடுத்துவிடுவார்கள்.

‘மடைமை’ என்பது போற்றப்பட வேண்டிய குணங்களில் ஒன்றாக இல்லையெனினும், ‘கொடைமடத்தை’ அவ்வாறு கூற இயலாது. கொடைக் கொடுப்பதென்பது ஒரு மாபெரும் நற்செயல். நாம் பெற்ற செல்வங்கள் எல்லாம் மற்றவர்களுக்கு கொடுப்பதற்கே. ஈகையை தவிர, பிற எல்லா கொடுத்தலும், திரும்பி பெறக்கூடிய நோக்கத்தில் மட்டும் தான் தரப்படும். இதனை வள்ளுவர் கூறுவது,

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் 
குறியெதிர்ப்பை நீர துடைத்து. (குறள்.221)

இத்தகைய கொடையை, கண் மூடித்தனமாக கொடுப்பதில் தவறொன்றுமில்லையே? சங்க காலத்தில், இந்த ‘கொடைமடத்தைப்’ போற்றி, கபிலர் போன்ற பல புலவர்கள், அரசர்களின் கொடை வள்ளல்களைப் பாடியது சிறப்பிற்குரியது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 292: கலைஞர் கருணாநிதியின் வரலாற்றுப்பங்களிப்பு!

வாசிப்பும், யோசிப்பும் 292: கலைஞர் கருணாநிதியின் வரலாற்றுப்பங்களிப்பு!\கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் பன்முக ஆளுமைகளைக் கொண்டவர்கள். கலையுலக, அரசியலுலக வாழ்வினுள் காலடி வைத்தவர்கள். வரலாற்றில் இவர்கள்தம் வாழ்க்கையானது அரசியலில் மட்டுமல்ல  கலையுலகிலும் வைத்து நோக்கப்பட வேண்டியதொன்று.

அரசியலைப்பொறுத்தவரையில் கலைஞரைப்பற்றிய விமர்சனங்கள் பல இருப்பினும்  ஏனைய கலை, இலக்கியத் துறைகளில் இவர் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மிகுந்த பாதிப்பினை ஏற்படுத்தியவர். ஒரு காலத்தில் பாடல்களால் நிறைந்திருந்த தமிழ்ச்சினிமா உலகை இளங்கோவனின் வசனங்கள் திரும்பிப் பார்க்க வைத்தன. அதன் பின்னர் கலைஞரின் வசனங்கள் தமிழ்த் திரையுலகில் ஐம்பதுகளில், அறுபதுகளின் ஆரம்ப காலகட்டங்களில் கோலோச்சின. பராசக்தி, மருத நாட்டு இளவரசி, மனோஹரா , பூம்புகார், ராஜா ராணியென்று கலைஞரின் வசனங்களின் சிறப்பினை, தாக்கத்தை வெளிப்படுத்த பட்டியலொன்று உண்டு. கலைஞரின் திரைப்படப்பாடல்கள் குறைவாக இருப்பினும் அவற்றுக்கும் முக்கியத்துவமுண்டு. தமிழ்த்திரைப்படத் தயாரிப்பிலும் அவருக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புண்டு,

தமிழ் இலக்கியத்துறையிலும் கலைஞர் நாவல், சிறுகதை, நாடகம், கட்டுரையென்று அவரது இலக்கியத்துறைக்கான பங்களிப்பு பன்முகத்தன்மை வாய்ந்தது. இருபதாம் நூற்றாண்டுத்  தமிழ் இலக்கிய வரலாற்றில் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றோரின் அடுக்கு மொழி நடைக்கும் ஒரு காலகட்டப்பங்களிப்புண்டு. சமூகச் சீர்கேடுகளை, மூட நம்பிக்கைகளைக்கடுமையாகச் சாடி மக்கள்  மத்தியில் மிகுந்த விழிப்புணர்வை அவை ஐம்பதுகளில், அறுபதுகளில் ஏற்படுத்தின. அதன் மூலம் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப்பிடிக்கும் அளவுக்கு முன்னேறியது வரலாறு.

கலைஞரின் குறளோவியம், சங்கத்தமிழ் போன்ற தொகுதிகள் முக்கியமானவை.

என்னைப்பொறுத்தவரையில் கலைஞரைப்பற்றி முதன் முதலில் அறிந்துகொண்டது 1968இல் சென்னையில் நடைபெற்ற உலகத்தமிழ்த் மகாநாட்டு மலர் மூலமேதான். அப்பா திமுகவினர் மேல் மதிப்பு மைத்திருப்பவர். அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றோர் மீது மதிப்பு வைத்திருந்தவர். அதன் காரணமாகவே அம்மாநாட்டு மலரையும் வாங்கியிருந்தார். மிகவும் சிறப்பாக வடிவமைக்கட்டிருந்த மலர் அது. இதுவரை நடைபெற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சி மலர்களில் மிகவும் சிறப்பான மலராக அம்மலரே கணிப்பிடப்படும் என்று கருதுகின்றேன். அம்மலரில் கலைஞரின் ‘பூம்புகார்’ நாடகமிருந்தது. அதன் மூலமே அவரைப்பற்றி முதலில் அறிந்து கொண்டதாக நினைவு. அதன் பின் அறிஞர் அண்ணாவின் மறைவினையடுத்து அவர் பாடிய இரங்கற்பா மூலம் என்னை அவர் மீண்டும் கவனிக்க வைத்தார். கேட்பவர் நெஞ்சங்களை உருக்கும் இரங்கற்பா அது. அவ்வகையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரங்கற்பாவாக அவ்விரங்கற்பா அமைந்து விட்டது.

அடுத்து என்னைக் கவனிக்க வைத்தது குமுதம் சஞ்சிகையில் ஆரம்பமான அவரது ‘ரோமாபுரிப்பாண்டியன்’ தொடர் நாவல். வரலாற்று நாவல். அத்தொடரை அக்காலகட்டத்தில் முழுமையாகப் படிக்கவில்லை. ஆனால் வெளியான ஆரம்ப அத்தியாயங்கள் என்னை அவ்வயதில் கவர்ந்தன. ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களுடன் வெளியான தொடர் அது. அக்காலகட்டத்தில் ராணிமுத்துப் பிரசுரமாக வெளியான அவரது நாவலான ‘வெள்ளிக்கிழமை’யும் என் கவனத்தைச் சற்றே அவர்பால் ஈர்த்த படைப்புகளிலொன்றே.

Continue Reading →

சிறுகதை: புண்ணியாத்மா.

சிறுகதை: புண்ணியவாத்மா.இங்கே வந்தவர்களில், இந்த இருபது வருசங்களில் எத்தனை பேர்கள் கழன்று போய் விட்டார்கள்..இப்ப, இவனும்? நினைக்க, நினைக்க ‌மனசு. கனக்கிறது.

வந்த புதிதில் தேவன் வேலை செய்து கொண்டிருந்த உணவகத்திலேயே இவனும் வலது காலையை எடுத்து வைத்து “வேலைக்கு ஆட்கள் எடுக்கிறீர்களா?”என்று கேட்டுச் சேர்ந்திருந்தான் .உணவகத்தின் இயக்குனர் ‘பில்’ நல்லவர் ,கறுப்பினத்தவர் ! , கறுப்பர்களும் ஈழத் தமிழர்கள் போல‌. அடக்குமுறை களில் சதா சீரழிந்தவர்கள்.அவருக்கு ஈழத்தமிழர் மீது அனுதாபம்அந்த மாதிரி இருந்தது.  .அவனின் சமூக எண்,மற்றும் வதியும் விலாசம்,தொலைபேசி எண் முதலானவற்றைக் குறித்து வைத்து ஒரு -ஃபைலைத் திறந்து அவனை வேலையில் சேர்த்து விட்டிருந்தார்,

“நாளையிலிருந்து நீ வேலைக்கு வரலாம், என்ன‌ சொல்கிறாய் “என்று சிரித்தார்.அன்றைக்கே சேர்த்திருக்கலாம்.அவன் உச்சியைப் பிளக்கிற வெய்யில் சென்றது. தோல் எரிய‌, .களைச்சுப் போன முகத்துடன் இருந்தான். சுத்தம் முக்கியம்.அன்றன்றைக்கு வெளுத்த வெள்ளை சேட்,வெள்ளைக் நீள் கால்சாராய்க்கு மாறிக் கொண்டு, தலை மயிருக்கு நெட் தொப்பி போட்டுக் கொண்டு தான் வேலையை தொடங்குவார்கள். நண்பகல் வேளை வேர்வையில் குளித்திருந்தான் .ஃபிரஸ்ஸாக தொடங்க வேண்டும்  என்று நினைத்தாரோ?

அடுத்த நாள் தான் அவனுக்குத் தெரிந்தது நுழைந்திருப்பது குட்டி யாழ்ப்பாணம் என்பது.எல்லாருமே கிட்டாரடியில்  சேர்ந்தே, பிறகு பல்வேறு சமையல் பிரிவுகளிற்கு தரம் உயர்த்தப்பட்டு வேலை செய்துகொண்டிருப்பவர்கள்.தேவனுக்கு கோழிகளை நீளக் கம்பிகளில் கொளுவி ‘அவனி’ல் செருகி ,வெந்ததும், மெசின் மணி அடிக்க,எடுத்து பிளாஸ்டிக் கூடையில் கொட்டுற ‘குக்’ வேலை. வெக்கையிலே அவனும் கூட‌ கிடந்து வெந்து கொண்டிருந்தான்.

தேவ‌னுக்கு சிரிச்ச முகம்.தோழமையுடன் கதைக்கிறதால்.அவனை பார்த்தவுடனேயே பிடித்து விட்டிருந்தது.

‘கிட்டார’டியில் இருந்த சூரி அவனுக்கு வேலையை கற்றுக் கொடுத்தான். சிறிய வண்டிலில். மேல்,கீழ் தட்டுகளில் வைத்துள்ள பிளாஸ்டிக் கூடைகளில் ,வந்தவர்கள் சாப்பிட்டு விட்டுப் போகிற …தட்டுக்க ளை,கிளாஸ்களை வெவ்வேறாக எடுத்து  மெசினடிக்கு ஓட்டி வர வேண்டும்.

Continue Reading →

படித்தோம் சொல்கின்றோம்: அந்த்வான் து செந்த் – எக்சுபெரி எழுதிய ‘குட்டி இளவரசன்’ கதை! அற்பாயுளில் காணாமல்போன விமானியின் படைப்பூக்கத்தின் வெளிப்பாடு! ஜூலை 31 ஆம் திகதி நினைவு தினம்!

படித்தோம் சொல்கின்றோம்:  அந்த்வான் து செந்த் - எக்சுபெரி எழுதிய 'குட்டி இளவரசன்' கதை! அற்பாயுளில் காணாமல்போன விமானியின் படைப்பூக்கத்தின் வெளிப்பாடு! ஜூலை 31 ஆம் திகதி நினைவு தினம்!முருகபூபதிபேசும் குழந்தைகளிடம் பெரியவர்கள் அலட்சியமாக இருப்பதற்கு என்ன காரணம்? அவர்கள் பேச்சை அவதானித்து, சரியான -தெளிவான பதில் சொல்லவேண்டிவரும் என்பதனாலா?  குழந்தைகளிடம் கேள்விகள் இருந்துகொண்டே இருக்கும். அதற்குச்சரியான பதிலை சொல்வதற்கு பெரியவர்களிடம் சாமர்த்தியம் வேண்டும். நான் சந்தித்த குழந்தைகளின் மழலை மொழியில் சொக்கிப்போயிருந்தாலும், பல சந்தர்ப்பங்களில் பதில் சொல்ல முடியாமல் திணறியிருக்கின்றேன். எமது வாழ்வை எழுதுபவர்களும் தீர்மானிப்பவர்களும் குழந்தைகள்தான். அதனால்தான் மேதை லெனின் கூட நல்லவை யாவும் குழந்தைகளுக்கே என்று சொன்னார். நாமும் ஒரு பருவத்தில் குழந்தைகளாக இருந்து வளர்ந்தவர்கள்தான். ஆனால், அதனை பலரும் மறந்துவிடுகிறார்கள்! தனிமையிலிருப்பவர்களை சிந்திக்கவைப்பவர்களும் சிரிக்கவைப்பவர்களும் குழந்தைகள்தான் என்பது எனது அவதான அனுமானம். எமக்குள் நாம் கேட்டுக்கொள்ளவேண்டிய பல கேள்விகளை வாழ்நாளில் கேளாமலேயே உலக வாழ்விலிருந்து விடுபட்டுவிடுகிறோம். அதற்கான சந்தர்ப்பம் அதன்பின்னர் கிடைப்பதேயில்லை.

ஒரு விமான ஓட்டி, எதிர்பாரதவிதமாக சகாரா பாலைவனத்தில் தனித்துவிடப்பட்ட தருணத்தில், சுற்றிலும் மணல் தரையும் மேலே வானமே கூரையாகவும் தென்படும்போது அமானுஷ்யமாக கேட்கும் ஒரு குரல் அந்தக்குட்டி இளவரசனிடமிருந்து வருகிறது.அந்த விமான ஓட்டியின் பெயர் அந்த்வான் து செந்த் – எக்சுபெரி. உச்சரிக்க சிரமமாக இருக்கிறதா? அவர் இன்று உயிரோடு இருந்தால் அவரது வயது 118. பிரெஞ்சு இலக்கியத்தில் நூற்றாண்டு கொண்டாடப்பட்ட , நினைவு முத்திரையூடாகவும், குட்டிஇளவரன் கதையூடாகவும் வாழ்ந்துகொண்டிருக்கும் அந்த்வான் து செந்த் – எக்சுபெரி இரண்டாம் உலகமகா யுத்த காலத்தில் விமானத்தை செலுத்திக்கொண்டிருந்தபோது அது விபத்துக்குள்ளாகி காணாமல் போனவர்.  

தனது 21 வயதில் பிரான்ஸ் விமானப்படையில் இணைந்து, விமானம் செலுத்துவதற்கு பயிற்சிபெற்று விமானியாகிறார். தனது தொழில் அனுபவங்களை பின்னணியாகக்கொண்டு நூல்களும் எழுதுகிறார். அவருக்கு எழுத்தாளன் என்ற அடையாளமும் கிடைக்கிறது. 1944 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் திகதி கார்ஸிகாவில் போர்கோ என்ற இடத்திலிருந்து விமானத்தை ஓட்டிச்சென்ற அவர், அன்றிலிருந்து காணாமல் போய்விட்டார். இதுவரையில் அவரது உடல்பாகங்கள் கண்டுபிடிக்கப்படாது போனாலும், அவர் புறப்பட்டுச்சென்ற அந்த விமானத்தின் சில பாகங்கள் தீவிர தேடுதலுக்குப்பின்னர் கிடைத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் மறைந்து, 74 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள இந்த மாதம் -இந்தத்தருணத்தில், மெல்பன் வாசகர் வட்டம் அவரது ‘குட்டி இளவரசன்’ நாவல் பற்றிய வாசிப்பு அனுபவப் பகிர்வை ஏற்பாடு செய்திருப்பது தற்செயல் நிகழ்வுதான்.

அற்பாயுள் மரணம்கூட மேதாவிலாசங்களின் அடையாளமோ என்ற சாரப்பட சுந்தரராமசாமி தனது ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ நாவலின் தொடக்கத்தில் சொல்லும்போது , பாரதி, புதுமைப்பித்தன், மு. தளையசிங்கம், அல்பர்ட் காம்யூ பற்றிச்சொல்வார். ஆனால், நாம் இன்று அந்த மேதாவிலாசம், அந்த்வான் து செந்த் – எக்சுபெரி அவர்களுக்கும் உரியதுதான் என்று பேசுவோம்.

Continue Reading →

கவிதை: காயத்தால் பயிர் செய்.

- தம்பா (நோர்வே) -அரசனும் மந்திரியும்
வாள்களை வீசி விளையாட
வழியெங்கும் வலிகளை
ஊமைகளும் குருடர்களும்
சுமக்க வேண்டி இருக்கிறது.

பகைவனைச் சுடுவதற்கே
சுருங்கிக் கொண்ட
சுண்டு விரல்கள்
சுருள்வாளைச் சுழற்றி
சுழலவிட்டுச்
சுருண்டு கிடக்கின்ற
சுற்றத்தானை
சுற்றி ஓடவிடும்
சூட்சுமத்தை
சூறையாடிக் கொண்டன.

குவளைத் தண்ணீரில்
குதிக்கப் பயந்தவன்
அரபுக்கடலை ஆறுதடவை
அளந்து வந்தானாம்.

Continue Reading →

முகநூல் பதிவு: வாஜ்பாயின் ராஜ்குமாரி கவுல்!

முகநூல் பதிவு: வாஜ்பாயின் ராஜ்குமாரி கவுல்!நான் மௌனமாகவும்
இல்லை
உரத்த குரலில்
பாடலும் இல்லை
மனதுக்குள் ராகம் ஒன்றை
முணுமுணுக்கிறேன்.”  (வாஜ்பாய் எழுதிய கவிதை வரிகள்)

இந்த வரிகளுக்குள் அம்மனிதன் வாழ்ந்தான், வாழ்ந்து கொண்டிருக்கிறான். இப்போதும் நினைவுகளின் ஈரத்தில் அந்த மனிதனின் நாட்கள் .. அந்த ராகம் அபூர்வ ராகம் தான். குடும்பம் காதல் கற்பு இப்படியான சமூக எல்லைக்கோடுகளுக்குள் வரையறுக்க முடியாமல் வாழ்ந்து முடிந்த வாழ்க்கை … இதோ உடல் தளர்ந்து நடை முடங்கி படுக்கையில் ஒதுங்கி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் இன்றைய பொழுதுகளில் அந்த மனதுக்குள் ராகமாக ஓடிக்கொண்டே தான் இருக்கும்.

அவருடைய ராஜகுமாரியும் அவரும் குவாலியர் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். வாஜ்பாய் புத்தகத்தில் வைத்து அனுப்பிய காதல் கடிதத்தின் சொந்தக்காரி. ஆனால் காதலை அவள் ஏற்றுக்கொண்டதும் அவள் எழுதிய கடிதமும் வாஜ்பாயால் வாசிக்கப்படாமல் புத்தகத்தின் பக்கங்களிலேயே முடிந்துப் போனது.

1947 இந்திய சுதந்திரம் மட்டுமல்ல, இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் சோகம் டில்லியைச் சுற்றி ஓலமிட்ட போதுதான் ராஜ்குமாரியின் காதலும் பிரிவினையில் தன்னை துண்டுகளாக்கி கொண்டது. எல்லைக்கோடுகள் வரையப்பட்டன. இந்தியாவும் பாகிஸ்தானும் எதிரி நாடுகளாகிப்போயின.

“உங்கள் நண்பர்களை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம், ஆனால் உங்கள் அண்டைநாடுகளை மாற்றிக்கொள்வது சாத்தியமில்லை”

வாஜ்பாய் சொல்லிய கருத்துதான். காதல் திருமணத்தில் முடியாமல் போகலாம்… ஆனால் காதலர்கள் அதனாலேயே முடிந்துப் போய்விடுவதில்லை” (இது என்னுடைய வரிகள்!!) வாழ்க்கை இருவரையும் வெவ்வேறு திசைகளை நோக்கி பயணிக்க வைத்தது. ராஜ்குமாரி திருமணத்திற்குப் பின் ராஜ்குமாரி கவுல் ஆனார். வாஜ்பாய் அரசியலில் முழுமூச்சுடன் ஈடுபட்டு நாடாளுமன்றத்தை நோக்கி பயணப்பட்டுவிட்டார். விதி அவர்களுடன் புதிதாக விளையாடியது. மீண்டும் டில்லியில் அவர்கள் சந்திக்கிறார்கள். மீண்டும் மீண்டும் மீண்டும்.. நினைவுகளில் வாழ்ந்தவர்கள் .. தங்களைப் புதுப்பித்துக் கொள்கிறார்கள். சந்திப்புகள் தொடர்கின்றன… காத்திரமான உரையாடல்களுடன், கவிதைகள் அவர்கள் தோட்டங்களில் பூத்துக்குலுங்குகின்றன. கணவர் தன் இரு பெண் குழந்தைகள் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் ராஜ்குமாரி கவுல் அவர்களின் வீட்டில் நிரந்தர உறுப்பினராகிவிடுகிறார் வாஜ்பாய்.

Continue Reading →